அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதை தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா பவுண்டேசனில் நேற்று இடம்பெற்ற “தேசிய பாதுகாப்புக்கான எதிர்கால சவால்கள்“ என்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வருவதாக சில குழுக்கள் கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர்இ நிலையான சமாதானத்தையும்இ நல்லெண்ணத்தையும் உருவாக்கவே பாதுகாப்புப் படைகளை சிறிலங்கா அரசு பலப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத அச்சுறுத்தலில் இருந்து நாடு இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பல குழுக்களும்இ வெளிநாடுகளில் உள்ள தனிநபர்களும் சிறிலங்காவைப் பிரித்து தனிநாடு ஒன்றை உருவாக்கும் ஒரே கொள்கையுடன் செயற்படுகிறார்கள்.
சிறிலங்காவில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் அந்த அமைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக அளவில் மீளமைக்க முனைகின்றனர்.
இந்தநிலையில் பலம்வாய்ந்த பாதுகாப்புப் படைகளை கொண்டிருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது.
நாட்டில் எந்தவொரு தீவிரவாத முயற்சிகளையும்இ புலனாய்வுப் பிரிவுகளின் துணையுடன் முறியடிக்கின்ற திறன் சிறிலங்கா படைகளுக்கு உள்ளது.
இதற்காக சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவை முழுமையாகப் பலப்படுத்தவுள்ளது.
பொருத்தமான இடங்கள் எனக் கருதக் கூடிய எந்த இடத்திலும் இராணுவ முகாம்களை அமைகின்ற உரிமை சிறிலங்கா அரசுக்கு உள்ளது.
புலிகள் ஆதரவு சக்திகளிடம் உள்ள பெருந்தொகை நிதி சிறிலங்காவை சீரழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் ஜனநாயக ஆட்சியை உறுதி செய்யும் முழுப்பலத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இருக்கிறது.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வர முடியாத கட்சிகள் எகிப்து, துனிசியா, லிபாயா போன்று ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளில் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றன.
ஆனால் சிறிலங்காவில் அது சாத்தியமாகப் போவதில்லை.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment