பொறுப்புக் கூறத் தவறியது நல்லிணக்க ஆணைக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு


இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் என்ற கடப்பாட்டில் இருந்து முழுமையாகத் தவறிவிட்டது அரசின் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு.
இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு கூட்டமைப்பின் கருத்துத் தொடர்பான பதில் தற்போது தயாராகிவருகிறது. அந்த பதில் அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.

105 பக்கங்களைக் கொண்டதாக இந்தப் பதில் அறிக்கை கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நாளை பொங்கல் தினத்தன்று அல்லது மறுநாள் இந்த அறிக்கையின் சாராம்சம் முழுமையாக வெளியிடப்படும் எனவும் தெரியவருகிறது. ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தனது அவதானங்களை கூட்டமைப்பு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் என்ற கடப்பாட்டை சுட்டிக்காட்டத் தவறியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூட்டமைப்பு தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த அறிக்கையின் முக்கிய உள்ளடக்கம் வருமாறு:
இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் 1018 பேர் சரணடைந்த பின்னர் காணாமற் போயிருப்பதாகவும் அதற்கான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் சரணடைந்த பின்னர் காணாமற் போனோர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். ஆணைக்குழு குறிப்பிடுவதுபோல இந்த விடயங்களை தனித்தனிச் சம்பவங்களாகக் கருத முடியாது.

2010ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நல்லிணக்க ஆணைக்குழு இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விவரங்களை வெளியிடுதல், சட்டவிரோத ஆயுதக் குழுக்களைக் கலைத்தல் ஆகிய முக்கிய விடயங்கள் உட்பட பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

ஆயினும் அந்த பரிந்துரைகள் எதுவும் இது வரை கவனத்தில் கொள்ளப்படவில்லை. இப்போது இறுதி அறிக்கையில் குறிப்பிடப்படவுள்ள பரிந்துரைகள் வரவேற்கக்கூடியவை என்றாலும் இடைக்கால பரிந்துரைகளே இது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை இவ்வாறான நிலைமையில் இறுதி பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட போகின்றன? 

இவ்வாறு கூட்டமைப்பின் பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நன்றி உதயன் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment