நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் குறைபாடுகள் - பட்டியலிடும் மனித உரிமைக் கல்வியாளர்


தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தின் நிறைவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல்,காலனித்துவம், நில அபகரிப்பு, சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிவில் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர், நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தார். இது போன்ற முக்கிய கேள்விகளுக்கு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு எந்தவொரு பதிலையும் வழங்கியிருக்கவில்லை.

இவ்வாறு சென்னயை தளமாகக் கொண்டThe Weekend Leader.com ஊடகத்தில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் Paul Newman எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

அக்கட்டுரையின் முழுவிபரமாவது

சிறிலங்காவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு வந்ததன் பின்னர், சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன. 

யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்ட வேளையில் பாரபட்சமற்ற விசாரணை தொடர்பில் தான் மிகத் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உலகிற்குக் காட்டுவதற்காக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை மிகத்துரிதமாக உருவாக்கியது. 

எவ்வாறிருப்பினும் சிறிலங்கா அதிபரிற்கு பெரும் பிரச்சினையாக இருந்து வந்த அனைத்துலக ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தின் உண்மையான நோக்கு உதவியாக அமைந்திருந்தது. 

நிரந்தர மக்கள் நீதி அமைப்பானது ஜனவரி 2010 ல் டப்ளினில் ஒன்றுகூடி சிறிலங்காவிற்கு எதிரான யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தது. இதேபோன்று மார்ச் 2010 ல் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் அறிக்கை போன்றன ஏற்கனவே யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சாட்டியிருந்தன. இது தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா செயலாளர் நாயகமான பான் கி மூன், மார்சுகி டருஸ்மனின் கீழ் மிகவும் நம்பகத்தன்மையான வல்லுனர் குழுவொன்றை நியமித்திருந்தார். 

இவ்வாறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே சிறிலங்கா அரசாங்கமானது எட்டு உறுப்பினர்களைக் கொண்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தது. இதில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக இரு உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தன. 

எவ்வாறிருப்பினும் உள்நாட்டு மட்டத்தில் நியமிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவின் விசாரணையை அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் எதிர்த்து நின்றன. அதாவது இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்தவொரு சாதகமான பெறுபேற்றையும் வெளிப்படுத்தவில்லை என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. 

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக சட்டமா அதிபராகக் கடமையாற்றிய ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் தற்போதைய அரசாங்கத்தின் பிரதம சட்ட அதிகாரியாகக் கடமையாற்றுகின்றார். 

நல்லிணக்க ஆணைக்குழுவில் அனைத்துலக தீவிரவாதத்தை ஒழித்தலிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவரும் அங்கம் வகித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினர்இ சிறிலங்காவில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற வேளையில் ஐ.நாவிற்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதியாகக் கடமையாற்றியவர் ஆவார். 

நல்லிணக்க ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடமிருந்து நம்பகமான அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியாது என வெளித்தரப்பினரும் எதிர்பார்த்தே இருந்துள்ளனர். 

இந்நல்லிணக்க ஆணைக்குழுவினர் 17 நாட்கள் மட்டுமே களத்தில் நின்று பணியாற்றியுள்ளனர். கிட்டத்தட்ட இவ் ஆணைக்குழுவினர் செயற்படத் தொடங்கி 18 மாதங்களில் ஆறு நாட்கள் மட்டுமே யுத்தம் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வாணைக்குழுவானது பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து தனது அணுகுமுறைகளை மேற்கொள்ளவில்லை. ஏதாவதொரு தமிழ்ப் பிரதேசத்திலிருந்து தமது பணிகளைத் தொடர்வதற்குப் பதிலாக நல்லிணக்க ஆணைக்குழு ஆணையாளர்கள் கொழும்பிலிருந்தே செயற்பட்டுள்ளனர். இவ் ஆணையாளர்களின் முன் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் சொல்வதற்கு உதவியாக தொழில் சார் ஆலோசகர்கள் இருக்கவில்லை. 

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது பால்நிலை சமத்துவத்தைப் பேணத் தவறியுள்ளது. யுத்தப் பாதிப்பின் 80 சதவீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறார்களாக இருந்தபோதிலும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பெண் ஆணையாளராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார். 

அத்துடன் இந்த ஆணைக்குழுவானது வெளிப்படையாகச் செயற்படவில்லை. இது என்ன செய்து கொண்டிருந்தது என்பது தொடர்பாக யாருமே அறிந்திருக்கவில்லை. இங்கு மனக்குறைகளைத் தீர்ப்பதற்கான எந்தவொரு பொறிமுறையும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. 

இதில் சாட்சியமளிப்பவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு அல்லது காப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. உதாரணமாக சாட்சியமளிக்கும் ஒருவர் மீளவும் தனக்குத் தீங்கிழைத்தவர்களுடன் அதாவது தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களில் 40 சதவீதத்தைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா இராணுவப் படைகளுடன் இணைந்து வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது போரின் போது கொல்லப்பட்டஇ காணாமற்போனவர்கள் தொடர்பான சரியான விபரங்களை அல்லது பொருத்தமான புள்ளிவிபரங்களை வழங்கவில்லை. 

ஒக்ரோபர் 2008 ல் வன்னியின் சனத்தொகை 429059 ஆக இருந்ததாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவுற்ற பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த மொத்த சனத்தொகை 282380 என யூலை 102009 ல் வெளியிடப்பட்ட ஐ.நா தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"ஒக்ரோபர் 2008 தொடக்கம் மே 2009 வரை சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஏனைய 146679 பேருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பாகவும்இ ஒக்ரோபர் 2008ன் ஆரம்பத்தில் வன்னியில் இருந்ததாகக் கூறப்படும் மக்களுக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்கள் ஜனவரி 09, 2011 அன்று கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

அத்துடன் தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தின் நிறைவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், காலனித்துவம், நில அபகரிப்புஇ சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிவில் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தார். இது போன்ற முக்கிய கேள்விகளுக்கு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு எந்தவொரு பதிலையும் வழங்கியிருக்கவில்லை. 

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ச்சியாகப் பேணப்படுவதால் யாழ்ப்பாணத்தில் 60,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வீடுகளை இழந்து வாழ்கின்றார்கள். உயர் பாதுகாப்பு வலயங்கள் எங்கும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல் போன்றவற்றிற்குத் தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்களிற்கு அப்பால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட விரும்பும் மீனவர்கள் 24 அதிகாரிகளின் கையொப்பங்களைப் பெறவேண்டிய தேவையுள்ளது. 

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆற்றுப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சிகளை வழங்க வேண்டாம் என்றும், இவ்வாறு இவற்றை வழங்குவதால் அவர்களின் 'பழைய காயங்களை' மீளவும் கிளறுவதைப் போலிருக்கும் எனவும் சிறிலங்கா அரசாங்கம், தேவாலயங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இவ்வாறான முக்கிய விடயங்களைத் தனது அறிக்கையில் சேர்த்துக் கொள்ளாததன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது நோக்கை முற்றிலும் செயற்படுத்தத் தவறியுள்ளது எனலாம். 

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்திலும்,அதற்குப் பின்னரும் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போராளிகள் என சந்தேகப்படக் கூடிய பல பெண்களின் இறந்த உடலங்கள் நிர்வாணமாகக் காணப்படும் ஆவணக் காட்சிகள் பல வெளியிடப்பட்டுள்ளன. 

இடம்பெயர்ந்தோர் முகாங்களில் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கு பணிபுரிந்த அனைத்துலக அமைப்புக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் முழுமையாகப் பதிலளிக்கவில்லை. 

யுத்தம் நிறைவுற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்போதும் தொடரப்படுகின்றது. இது தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு எந்தவொரு கருத்தையும் குறிப்பிடவில்லை. யுத்தத்தின் இறுதிப் பகுதியில் படையினரால் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக மட்டுமே நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மாறாக இவ்வாறான குற்றங்களுக்கு சிறிலங்கா அரசே பொறுப்பு என இவ் ஆணைக்குழு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. 

யுத்த வலயத்திலிருந்து செப்ரெம்பர் 2008 ல் அனைத்துலக அரசசார்பற்ற அமைப்புக்கள், மற்றும் ஏனைய தொண்டர் அமைப்புக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மௌனப்போக்கையே கடைப்பிடித்துள்ளது. இதுபோன்றே யுத்த நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவதற்கு தனியார் மற்றும் சுயாதீன ஊடகங்கள் மீது தடைவிதிக்கப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

சிறிலங்காத் தீவு முழுமையிலும் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டமை, சிறிலங்கா அரசாங்க சார் ஆயுதக் குழுக்களால் சிறுவர்கள் படையில் இணைக்கப்பட்டமை, வடக்கு கிழக்கில் வாழும் யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த 90000 பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்இ ஒரு ஆண்டிற்கும் மேலாக 282000 தமிழ் மக்கள் மெனிக் பாம் முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. 

2007 ன் இறுதிப்பகுதியிலிருந்து தமிழர் பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடை தொடர்பாகவும், யூன் 2008 இலிருந்து அங்கு வாழ்ந்த மக்களைப் பட்டினி போட்டமை, பொதுமக்களைக் குறிவைத்து வான்குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டமை, தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படும் தாமதம் போன்றன தொடர்பாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. வடக்கு கிழக்கில் நிலவும் இராணுவமயமாக்கலை நீக்கவேண்டும் மற்றும் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் ஆகிய இரு பரிந்துரைகள் மட்டுமே நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள சாதகமான விடயங்களாக உள்ளன. 

முழு உலகமும் தற்போது யுத்தத்தின் கோரத்தை வாசித்தறிந்து கொண்டுள்ளது. இதற்காகக ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை, சிறிலங்காவில் ஐ.நா பேச்சாளராகக் கடமையாற்றிய கோர்டன் வெய்சால் எழுதப்பட்ட 'கூடு' என்ற நூல் சனல் 04 ஆவணப்படமான 'சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்திய தொலைக்காட்சி அலைவரிசையான   Headlines Today  ல் ஒளிபரப்பப்பட்ட 'நான் படுகொலைக்கு சாட்சியமாக இருக்கிறேன்' போன்ற வெளியீடுகளுக்கு நன்றிகள். 

தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கப்படுகின்றமை மற்றும் தொடரப்படும் சிங்கள மயப்படுத்தல் முயற்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி லீடர் பத்திரிகையின் வார இறுதிப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவிற்கு உள்ளே' என்ற தொடர் பத்தியும் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் எவ்வாறான கடின நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ள பிறிதொரு ஆவணமாக விளங்குகின்றது. 

சிறிலங்கா அரசிற்கு முன்னுரிமை கொடுத்து, 'அரச பயங்கரவாதத்தை' அடியோடு மறைத்ததன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு தான் விசுவாசமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இவ் ஆணைக்குழு எந்தவொரு பயனுமற்றது. ஆனால் ஏமாற்றுத்தனமானது. அனைத்துலக ரீதியில் மேற்கொள்ளப்படும் விசாரணை மட்டுமே சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் நிறைந்த யுத்தத்தின் உண்மைத்தன்மையையும் அதன் பயங்கரத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும். 

*The author holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment