சிறிலங்காவுக்கு ஒரு ஆண்டு காலக்கெடு - அமெரிக்கத் தூதுவர் எலீன்


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார்.  ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“ நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளைச் செய்துள்ளது என்பதை இந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்கிறது. 

எவ்வாறாயினும், சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நம்பகமான செயற்திட்டம் ஒன்றை இன்னமும் கொண்டிருக்கவில்லை. 

அல்லது, போர் முடிவுக்கு வந்த பின்னர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான மேலதிக அடி எதையும் எடுத்து வைக்கவில்லை என்றே அனைத்துலக மற்றும் உள்நாட்டு அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர். 

பிரதிபலிப்புகள் குறித்து கவனமாக ஆராயப்பட்ட பின்னர் - நீண்ட கலந்துரையாடல்களை அடுத்து - அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பொறுப்புக் கூறுவதற்குமான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். 

போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கியது. 

இந்த நோக்கத்தை அடைய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மேலதிக உதவிகளை வழங்க முடியும் என்று நம்புகிறோம். 

இந்த நகர்வுகளை சிறிலங்கா தொடர்ச்சியாக எதிர்த்தது. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானம் நியாயமற்றது- அவசரமில்லாதது என்று பேரவையின் கூட்டத்தில் கூறியது. 

எமது நோக்கம் தெளிவாக உள்ளது. 

நீண்ட ஆயுதமோதல்களுக்குப் பின்னர் அர்த்தமுள்ளதும் இறுதியானதுமான தேசிய நல்லிணக்கத்தை சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும், சிறிலங்காவின் தேசிய வாழ்வில் தமிழ்மக்களை உண்மையான முறையில் மீளக் கொண்டு வருவதற்கும், போரின் போதான நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுதலை உறுதி செய்வதும் உலகிலுள்ள நாடுகளின் தேவையாக உள்ளது. 

எல்லாப் பிராந்தியங்களினதும் பிரதிநிதிக்குழுக்களுடன் பரந்தளவிலான ஆலோசனையின் முடிவில், பல உதவிகரமான பரிந்துரைகள் ஆரம்ப வரைவுக்குக் கிடைத்தன. 

மனிதஉரிமைகள் பேரவையின் பல பங்காளர்களினது மேலதிக கலந்துரையாடல் மற்றும் கூட்டு அடிப்படையில், நாங்கள் ஒரு மிதமான – நியாயமான - நடுநிலையான தீர்மான வரைபை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட பரந்தளவிலான விவகாரங்களில் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதை இந்தத் தீர்மானம் மூலம் நாம் வலியுறுதியுள்ளோம். 

தீர்மானத்தின் ஆரம்ப வரைபு, இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவைக் கொண்டிருக்கவில்லை. பின்னர் அதில் ஒரு காலக்கெடு சேர்க்கப்பட்டது. 

இந்த ஆண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மனித உரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடரில் மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரும் காலக்கெடு சேர்க்கப்பட்டது. 

பின்னர் அந்தக் காலக்கெடு, 2013ம் ஆண்டு நடைபெறும் 22வது கூட்டதொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில், ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது. 

நீண்ட ஆயுதமோதல்களுக்குப் பின்னர் அர்த்தமுள்ளதும் இறுதியானதுமான தேசிய நல்லிணக்கத்தை சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டியதும், சிறிலங்காவின் தேசிய வாழ்வில் தமிழ்மக்களை உண்மையான முறையில் மீளக் கொண்டு வருவதற்கும், போரின் போதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுதலை உறுதி செய்வதற்கும் உலகிலுள்ள நாடுகள் ஊக்குவிப்பை செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். 

சிறிலங்காவுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது. 

சிறிலங்காவில் இறுதியான அமைதியை கொண்டு வர, அனைத்துலக சமூகம் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 

சிறிலங்கா தொடர்பான இந்தப் பேரவையின் தற்போதைய நகர்வுகள், அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பிரதிபலிப்பதாக உறுதியாக நம்புகிறொம். 

சிறிலங்கா அரசாங்கம் இறுதியான அமைதியை ஏற்படுத்துவதற்கான விதைகளை விதைக்கும் வகையில் உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எமது கரிசனையை எண்ணற்ற அனைத்துலக மற்றும் உள்நாட்டு அவதானிப்பாளர்கள் பிரதிபலித்துள்ளார்கள். 

இந்தத் தீர்மானத்தின் மூலம், சிறிலங்காவில் உள்ள மக்கள் இந்த இலக்கை அடைவதற்கு, உலக நாடுகள் தமது கரங்களையும் இணைத்து ஒத்துழைப்பை வழங்க முடியும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment