கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: தனியாக களமிறங்கும் கூட்டமைப்பு – ஆளும்கட்சியுடன் இணைகிறது முஸ்லிம் காங்கிரஸ்


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறிலங்காவின் ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரே அணியாகப் போட்டியிட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் வெளியிட்டு, பேச்சு நடத்தியது.


எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி வைப்பதை விட, சிறிலங்கா அரசுடன் கூட்டணி அமைப்பதிலேயே ஆர்வம் காட்டியிருந்தது. 


அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்கப் போவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களில் தனது பேரம் பேசும் பலத்தை அதிகரித்துக் கொண்டது.


அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய பதில் அளிக்காத நிலையில், தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளர்களை நிறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 


திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியல்களை இறுதி செய்யும் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. 


திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் கல்வி அதிகாரி எஸ்.தண்டாயுதபாணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார். 


அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றிரவு நடத்திய உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜெயந்த போன்றோருடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நடத்திய பேச்சுக்களை அடுத்து, நேற்றிரவு முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. 


இதன்போதே, ஆளும்கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இதன்படி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் 6 வேட்பாளர்களையும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 3 வேட்பாளர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் நிறுத்தவுள்ளது. 


கிழக்கு மாகாண முதல்வர் பதவி தமக்குத் தரப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டால் மட்டுமே, ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment