இஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்லாததும்


1967ம் ஆண்டு அரபுநாடுகளின் படை எடுப்பைத் தொடர்ந்து யூத இனம் பொருளாதாரம் இராணுவம் அரசியல் தந்திரம் என பல்வேறு முனைகளிலும் தம்மை தற்காத்து கொள்ளும் பொருட்டு ஓர் உசார் நிலையை அடைந்தது. ஏற்கனவே ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிகாலத்தில் தாம் பட்ட வதைகளை மீன்டும் நினைவிற்கொண்டு அதேநிலை அரபுநாடுகளால் சூழப்பெற்ற இஸ்ரேலில் தமக்கு ஏற்பட்டுவிட கூடாது என்பதில் மிக கவனமாக செயற்பட ஆரம்பித்தனர். 


இதன் பலனாகவே தமது எதிர்காலத்தை நிர்ணயிக்ககூடிய பலதிட்டங்களை வகுத்து அதற்கு ஏற்றாற்போல் கருத்தாதரவு மையங்களை உருவாக்கி. மேலைத்தேய வல்லரசுகளின் அரச பதவிகளில் ஊடுருவி உலகின் ஒழுங்கை தீர்மானிக்கும் ஓர் இனமாக யூத இனம் மாற்றம் பெற்றுள்ளது. 


அனைத்து எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சுமார் 200 வரையான அணுவாயுத ஏவுகணைகளை தன்வசம் வைத்திருப்பதுடன், மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில் தனித்த ஒரு பலம் வாய்ந்த எதிரிநாடாக இஸ்ரேல் உள்ளது. உலகம் பூராகவும் யூத இனத்தவர்கள் மிகப்பெரிய வணிகங்களில் ஈடுபட்டு பெரும் முதலாளிகளாக தமது நிதிநிலைமைகளை வலுப்படுத்தி வந்திருக்கின்றனர். 


இவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்காவிலும் உலகின் எழுபது பிறநாடுகளிலும் எண்ணைவள ஆய்வும் செய்து வரும் Halliburton> போன்ற நிறுவனங்களும் Kellogg Brown & Root> Microsoft போன்ற நிறுவனங்களும், பாரிய சில்லறை வர்த்தக தொடர் நிறுவனங்களும், உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களும் கூட யூத இனத்தவர்களின் கைகளிலேயே உள்ளன. 


பொதுவாக உலகின் பல நாடுகளின் உள்நாட்டு வருமானத்திலும் பார்க்க அதிக வருவாயை கொண்ட மிகவும் பலம் வாய்ந்த நிறுவனங்கள் பல யூதர்களின் கைகளிலேயே உள்ளன. 


அதேவேளை இவ்வாறு பலம் வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் எந்த ஒரு சிறிய நாட்டில் தாம் வாழ்ந்தாலும் தமது இருப்பை மிகவும் சுதந்திரமாகவும் மரியாதையுடனும் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ற வகையில் தந்திரமான நேர்மையுடன் தமது வாழ்வை நாடாத்தி வருகின்றனர்.


குறிப்பாக இவர்கள் வாழும் நாடு தமது போக்கிற்கு முற்றிலும் எதிரான போக்கை கொண்டதாக இருக்கின்றபோதிலும் தமது இனத்தின் தனித்துவத்தை பேணுவதில் எவரும் தவறுவதில்லை. ஒருசில கொள்கை முரண்பாடுகள் யூதர்களிடம் இருந்த போதிலும் தமது வேற்றுமைகளை ஆராய்வதற்கு முக்கிய இடம் கொடுத்து தமது இனத்தின் பிரச்சனைகளை தனிச்சிறப்பான முறையில் தீர்த்து கொள்கின்றனர். 


மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஈரானில் தான் அதிமான யூதர்கள் வாழ்ந்து வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. 1979 க்கு முன்பதாக ஈரானில் யூதர்களின் வாழ்வு மிகவும் செழிப்பானதாக இருந்து வந்தது. ஆனால் இஸ்லாமியப் புரட்சியின் பின்பு யூதர்கள் ஈரானை விட்டு ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்று மிகச்சிறிய அளவிலான யூதர்கள் மட்டும் கடுமையான இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக வாழ்ந்து வருகின்றனர். 


இங்கு ஈரானின் இஸ்லாமிய சட்ட திட்டங்களை மதிப்பிடுவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல, ஆனால் இத்தகைய கடுமையான சட்ட திட்டங்களின் மத்தியிலும் சுமார் இருபத்தையாயிரம் யூதர்கள் மிகவும் தாழ்ந்த விட்டு கொடுப்புகளுடன் தமது வாழ்வில் தாம் சேர்த்த சொத்துகளையும் நிலத்தையும் பண்பாட்டையும் விட்டு கொடுக்காது வாழ்ந்து வருகின்றனர் என்பது முக்கியமாகும். 


யூதர்கள் மத்தியிலான கருத்து முரண்பாடுகள் மிக முக்கியமானதாகும். அமெரிக்காவிலும் மேலைதேய போக்கை கொண்ட நாடுகள் மத்தியிலும் வாழும் யூதர்கள் தமக்கிடையில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் மத்தியில் இருக்ககூடிய சில யூத கருத்தாதரவு நிறுவனங்கள் மத்திய கிழக்கில் பலஸ்தீனம், இஸ்ரேல் என்று இருஅரசுகள் இருக்கவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துவனவாக உள்ளன. 


இங்கே இஸ்ரேலிய அடிப்படை வாதிகளுக்கும் பாலஸ்தீனத்தில் மக்களுக்கு வாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் இருந்த வண்ணமே உள்ளன. 


ஆனால் இம்முரண்பாடுகள் எவையும் யூதர்களின் அடிப்படை மரபான தமக்குள் ஏற்படும் முரண்பாடுகள் யாவும் பேசி தீர்த்து கொள்ளவேண்டும் என்ற பண்பிலிருந்து விலகிக் கொண்டதில்லை. 


தமிழர்கள் மத்தியில் இந்த பண்பு இன்னமும் ஊக்குவிக்கப்படாதது பல்வேறு விடயங்களில் கவனிக்க கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு எமது பண்பாட்டை வளர்ப்பதிலே எமது கோவில்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால் அந்த கோவில்களை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்டு இருக்ககூடிய கோவில் சபைகளை எடுத்து கொள்ளுவோமாயின் அது எந்த நாட்டிலாக இருக்கட்டும்… மிகுதி கூறத்தேவையில்லை. 


இன்று சிறிலங்கா அரசை நிர்வகித்து வரும் பேரினவாத சக்திகள் ஒன்றிணைந்து தமது உச்ச நிலையில் எதேச்சாதிகாரப் போக்கிலே திளைத்து நிற்கின்றன. தமது எதிர்கால வெற்றிகளுக்கொல்லாம் ஒரே கருவி தமிழ் இனத்தை எதிரியாக சித்தரிப்பதே என்ற கொள்கையை விடாது கைகொள்கின்றன. 


நாட்டின் அரசாட்சியில் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமாயின் சிறிலங்கா பெரும்பான்மை சமுதாய அரசியல் அமைப்பை பொறுத்த வரையில், சிங்களத்தின் மத்தியிலே பிளவு ஏற்படாத வகையில் வைத்திருக்க வேண்டும். 


ஓட்டு மொத்த சிங்களத்தையும் ஒரு மயப்படுத்தி பிளவுபடாது எப்பொழுதும் வெற்றி மனப்பாங்குடன் வைத்து இருப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கையில் பழைய சோசலிச கொள்கை போன்ற விடயமோ அல்லது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த கூடிய வரையறுக்கப்பட்ட பொருளாதார முன்னெற்ற திட்டங்களோ எதுவும் கிடையாது.


அதுமட்டுமல்லாது எதிர்கட்சிகளின் கைகளிலும் அவ்வாறு அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையில் எதுவும் இல்லை. சிறிலங்காவை பொறுத்தவரையில் வெறும் இனவாதத்தின் ஊக்குவிப்பை கொண்ட எந்த கட்சியும் ஆட்சிக்கதிரையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் பண்புதான் உள்ளது. 


இனவாதப்போக்கின் உச்சத்தின் நிலையில் இருக்கும் சிறிலங்கா அரசுடன் பேச்சுகள் நடாத்தி தமிழர்களின் தேசியப்பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படும் என்று கூறுவது வெறும் கனவாகவே இருக்க முடியும். 


கொழும்பில் உள்ள தற்போதைய சிறிலங்கா உயர் அரச ஆலோசகர்களும் கூட இனவாதத்தை நியாயப்படுத்தி அந்த வட்டத்திற்குள் நின்று கொண்டு புலம்பெயர் மக்களின் பொருளாதாரத்தை நேரடிமுதலீடாக மாற்றுவதற்குரிய வழிவகைகளைத்தேடி தனிநபர் ஊழல்களில் சிக்கிக்கிடக்கும் நாட்டினை சரி செய்யப் பார்கின்றனரே தவிர காத்திரமான அரசியல் சீர்திருத்தங்களை பற்றி சிந்திப்பவர்களாக தெரியவில்லை. 


இந்த நிலையில் அரசுக்கு ஆதரவாகவோ அல்லது அரசின் பேச்சுகளுக்கு இசைந்தோ செயற்படகூடிய எந்த தமிழ் குழுவின் நிலையும் தனது அடையாளத்தை விரைவில் இழக்க கூடிய நிலைக்கே இட்டு செல்வதாக அமையும் என்பதில் வேறு கருத்து இருக்கமுடியாது. 


இதற்கும் மேலாக தமக்கு ஏற்றாற்போல் காரணங்கள் கூறி பதவிகளுக்கும் பணத்துக்கும் அடிமைப்படுவது யானை தன் தலையிலே தானே மண்னை அள்ளி வாரியது போல தமிழினத்தின் அழிவை நிர்ணயிக்கும் குழுக்களாக அவை மாறுவதற்கான சாத்தியங்களே உள்ளன.


அதேவேளை இதுதான் இலட்சியம் இவ்வாறுதான் தமிழர்கள் தமது இலட்சியத்தை அடையப்போகிறார்கள் என்ற கூட்டு திட்டமிடல் ஒன்று தாயகத்திலும் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் மக்களின் அமைப்புகள் மத்தியிலும் தற்போது இல்லை என்பது தமிழர்தரப்பில் இருக்கக்கூடிய தற்போதைய நடைமுறைப் பலவீனமாகும். 


இந்த பலவீனம் யூதர்கள் மத்தியில் எந்த ஓரு நிமிடத்தில் கூட இருந்ததில்லை என்பது தான் உண்மை. ஏதோ ஒரு பகுதியில் தமது இலட்சியம் நோக்கிய திட்டமிடலிலும், தெளிவிலும், அது நோக்கிய கருத்தாதரவிலும் அவர்கள் ஈடுபட்டே வந்திருந்தனர். 


இன்று சனநாயகத்தின் அடியார்களாகவும் மனித உரிமையின் விசுவாசிகளாகவும் தம்மை இனங்காட்டி நிற்கும் மேலைத்தேய நாடுகளின் அரசியல் புலம்பெயர் இனங்கள் மத்தியில் பரந்து விரிந்து கிடக்கிறது. 


எந்த ஒரு இனமாக இருந்தாலும் இந்நாடுகளில் தனக்கென ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி கொள்வதற்கும், அந்த கருத்து தொடர்பாக தமது பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளை தொடர்பு கொள்வதற்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தொடர்பு கொள்வதற்கும் சந்தர்ப்பங்கள் நிறைந்து கிடக்கின்றன. 


அனுதாபத்தை பெற்று கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் உள்ளனர். கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு அமைப்வுகளும் உள்ளன. வளங்களும், அதீத லட்சியமும் கொண்ட எந்த குழுவும் ஒரு மேலை நாட்டு கொள்கை வகுப்பாளர்களின் எண்ணக்கருத்துகளை மாற்றகூடிய வகையில் அணுகுவதற்கு பல வழிகள் உள்ளன. 


இந்நிலையில் புலம் பெயர்தமிழ் சமுதாயம் ஒரு பயங்கரவாத கட்டமைப்பு எனும் பாரிய ஒடுக்குமுறை மனக்கருத்தை உலகம் பூராகவும் உருவாக்கி மீண்டும் ஒரு தலைமை அற்ற முடக்க நிலைக்கு தமிழ் மக்களை தள்ளுவதற்கு சிறிலங்கா அரசு தயார்ப்படுத்தலில் உள்ளது. 


இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோரையும் பயங்கரவாத ஆதரவாளர்களாக சிறிலங்கா அரசு சித்தரிக்க முயல்வதை எடுத்து கொண்டால், மேலைதேய நாடுகளில் கருத்தாதரவு யுத்தத்தில் இறங்கி இருக்கும் தமிழர்களை அரசியல்வாதிகளோ மாநகரசபை உறுப்பினர்களோ, கொள்கை வகுப்பாளர்களோ அல்லது சிந்தனைக் குழுக்களோ ஏற்று கொள்ள முடியாதவாறு தடுப்பதே நோக்கம் என்பதை புரிந்து கொள்ளலாம்.


யூத இனத்தின் பொருளாதார பலமும் ஊடக பலமும் மிகவும் பலம் வாய்தது. தமது பலங்கள் அனைத்தையும் தமது இனம் சார்ந்தாக யூதர்கள் சட்டபூர்வமாகவும் வெளிப்படையாகவும் கௌரகமாகவும் நிலைநாட்டிவருவது மிகவும் முக்கியமாக கவனிக்கதக்கதாகும். 


தமிழர்கள் மத்தியில் அனைத்துலக நிலையில் சட்டபூர்வமான இனம் சார்ந்த நிதி வழி செயற்பாடுகளின் ஆர்வம் இன்னமும் முழுமையாக எழாத நிலையில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. 


கருத்தாதரவு போரில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் சமுதாயத்தின் பொருளாதாரம், அறிவியல், மற்றும் செல்வாக்கு வளங்களில் முற்று முழுதாக தங்கி உள்ளன. 


இதற்கு தமிழ் மொழி பேசுவோர் எல்லோரும் தமது வளங்களை பெருக்குவதும் பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதும் அதேவேளை தமது மொழி சார்ந்த அறிவுபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது முக்கியமானது. 


குறிப்பாக ஓர் உதாரணத்திற்கு உலகில் எந்த நாட்டிலும் தனது கோரிக்கைகளை முன்வைத்து கருத்தாதரவு தேடிவரும் எந்த ஒரு குழுவும் தமது கருத்துகள் குறித்த பொது விளக்கப்பேருரைகளில் மேலாதிக்கம் செலுத்துதல் முக்கிய விடயமாகும். 


தமது அடிப்படை கொள்கைகளும் தமது நலன்களும் ஒவ்வொரு இடத்திலும் பேணப்படுதலை கண்காணிப்பது முழு இனத்தினதும் பொறுப்பாகும். 


யூத இனத்தவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமானவர்களாக உள்ளனர் தாம் அமெரிக்க நலன்களில் இருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி அமெரிக்க மக்களினதும், தலைவர்களினதும் செல்வாக்கைப்பெறும் தந்திரத்தில் இவர்களை விட வேறு எந்த கருத்தாதரவு குழுவும் இல்லை எனலாம். 


அதுட்டுமல்லாது பொது விளக்கப்பேருரை நிகழ்வுகளில் யாராவது இஸ்ரேலிய கொள்கையை ஓரம் கட்ட முனையுமிடத்தது அவரது குரல் அவரது கருத்து பெரியளவில் எடுபடாத வகையில் இடைமறித்து குறுக்கு கேள்விகள் எழுப்பி இஸ்ரேலிய நலனைகாப்பதுடன் அந்தப் பேச்சாளரை ஓரம் கட்டிவிடுவதிலே முனைந்து நிற்பர். 


மேற்கூறிய செயற்பாடுகளுக்கு தமது செல்வாக்குகளை பயன்படுத்தி இத்தகைய பேச்சாளர்களை கையாள்வதற்கு என்றே பல யூதர் அல்லாத நண்பர்களை தம்முடன் இனைத்து கொண்டு யூத எதிர்ப்பு பேச்சாளர்களை எதிர் கொள்வது பொதுவான விடயமாகும். 


இந்த தந்திரத்தை Dominating Public Discourse என அவர்கள் அழைத்து கொள்கின்றனர். 



இந்த தந்திரம் ஒரு இனம் தனது கோரிக்கைகளையும் நலன்களையும் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் பொதுமக்கள் கருத்துகளால் ஏற்று கொள்ளதக்கதாக வடிவமைத்து கொள்வதற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 


சிறீலங்காவில் ஆட்சியில் உள்ள மகிந்த அரசாங்கம் தனது வெளிநாட்டு இரசதந்திரிகள் எல்லோரையும் அழைத்து மேலைநாடுகளில் தமிழ்மக்கள் நடாத்திவரும் கருத்தாதரவுகளை மழுங்கடிப்பதற்கு ஆலோசனையும் பயிற்சிகளும் நடாத்தி வருகிறது. 



இதிலே தமிழினத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்கு மேலாக 



•திட்டமிட்ட அரச இனஅழிப்பை மனிதஉரிமை மீறல்களாக சித்தரித்து, மனித உரிமை மீறல்களை ஒருசிலரின் குற்றமாக மாற்றுதல். 



•வெளிநாடுகளில் சிறிலங்காவின் தோற்றப்பண்பை பயங்கரவாதிகளே கெடுக்கிறார்கள் என சித்தரித்தல். 



•இனகட்டமைப்பை சிதைக்கும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவாக தென்பகுத் மக்களிடையே உள்ள இடநெருக்கடியும் மானிட பரம்பலின் அவசியம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என பல்வேறு காரணங்களை கூறி தமிழரின் பாரம்பரீய நிலகொள்கையை சிதறடித்தல். 



•நிலப்பறிப்பை வெளிநாடுகள் நிறுத்திவிடாத வகையில் இறையாண்மை மீதான தலையீடாக சித்தரித்தல். 



என பல்வேறு பதில் விவாதங்கள் தயாரிக்கப்பட்டு புலம்பெயர் தமிழ் இனத்தின் செயற்பாடுகளை முடக்ககூடியதாக வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுக்கும் தூதர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. 



மேலை நாடுகளில் இடையூறுகள் அற்ற வகையில் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டு சிங்கள பௌத்தத்தின் இனவாத நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்றவாறு கருத்தாதரவுகள் தேடப்பட்டுவருகிறது. 



இந்த வகையில் தமிழினத்திற்கும் யூத இனத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளன என்று கூறிவரும் நாம் எம்மத்தியில் இருக்க கூடிய பலவீனங்களை நன்கு புரிந்துகொண்டு உலக ஓட்டத்தின் பால் கவனம் செலுத்தி சனநாயக விழுமியங்களில் இருந்து வழுவாது நேர்மையாக செயலாற்றுவது மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. 



*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk


 நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment