திருகோணமலை - மூதூர் பகுதியில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பச்சநூர் மலையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பௌத்த நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. சேருவெல சரணகித்தி நாயக்க தேரரின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த பௌத்த நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தத் தகவலை மாத்தறையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறிலங்க பாதுகாப்புச்செயலரே வெளியிட்டுள்ளார்.
தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடமான பச்சநூர் பிரதேசத்தில் உள்ள மூன்றாம்கட்டை மலையிலேயே இந்த பௌத்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருவதாகவும் அவை அனைத்தும் விரைவில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறந்து விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“வடக்கிலும், கிழக்கிலும் பாழடைந்த போயிருந்த பெரும் எண்ணிக்கையான பௌத்த விகாரைகள் தற்போது சிறிலங்கா அரசினால் மீளத் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இந்த வரலாற்று ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்கு பொதுமக்கள் அங்கு விரைவில் செல்ல முடியும்.
வடக்கு, கிழக்கில் உள்ள வரலாற்றுக்கால தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க ஆலயங்களுக்கு, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரின் கோரிக்கையை அடுத்து பாதுகாப்பு வழங்க, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment