புலிகளின் இறுதிப்போரா?


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக 2009 மே 19ம் திகதி அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். 

இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பின்னர்- 2009 மே 19ம் திகதி வரை கேணல்கள் மற்றும் லெப்.கேணல்கள் தலைமையில் நடந்தது தேடியழிக்கும் நடவடிக்கைகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். திடீரென அவர் இவ்வாறு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடை தேட முன்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் எது என்பதை வரையறுத்தாக வேண்டியுள்ளது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை, தளபதிகள், கட்டமைப்புகள் எல்லாமே முற்றாக அழிக்கப்பட்டது 2009 மே 17, 18, 19ம் திகதிகளில் தான். 

ஆனால் அதையே இறுதிப்போராக வரையறுக்க முடியாது. 

அதேவேளை சரத் பொன்சேகா சொல்வது போல, புலிகளுக்கும், அரச படையினருக்கும் இடையிலான இறுதிப்போராக ஏப்ரல் 19ம் திகதியைக் குறிப்பிடவும் முடியாது. 

இருதரப்பும் பெரும் பலத்துடன் பொருதிய பெரும் சமரைத் தான் இறுதிப்போர் எனலாம். அப்படிப் பார்த்தால், உண்மையில் புலிகளின் இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் நடக்கவில்லை. ஆனந்தபுரத்தில் நடந்தது தான் இறுதிப்போர். புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே ஆனந்தபுரத்தில் இந்த இறுதிச்சமர் - 2009 ஏப்ரல் முதல் வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. இந்தச் சமர் தான் விடுதலைப் புலிகள் நடத்திய மிகப்பெரிய இறுதிச்சமர். இந்தச் சமரில் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன், கடாபி, மணிவண்ணன், விதுசா, துர்க்கா, நாகேஸ், கோபால் போன்ற பலரும், 600 இற்கும் அதிகமான போராளிகளும் உயிரிழந்தனர். அரசபடையினருக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த புலிகளின் அணிகளைச் சுற்றிவளைத்து நடத்தப்பட்ட இந்த அழித்தொழிப்புச்சமர், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக அமைந்தது. ஆனந்தபுரம் சமருடன் புலிகளின் மரபுவழிப் போர்ப்பலமும், அணிகளும் சிதைந்து போயின. இதற்குப் பின்னர் புலிகள் நடதியதெல்லாம் வெறும் தற்காப்புக்கான சிறு சிறு சண்டைகளைத் தான். அதையும் கூட அவர்கள், அழிவில் இருந்து தப்பிக் கொள்வதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்கே நடத்திக் கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் வரை நீண்ட தற்காப்புக்கான இந்த சண்டைகள் 2009 மே 19இல் முடிவுக்கு வந்தன. 

தற்காப்புக்காக புலிகள் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடத்திய சண்டைகளில் சில பெரியதாக இருந்தாலும் – அவை மரபுரீதியான போராயுதங்களுடனோ, ஒழுங்கமைக்கப்பட்ட அணிகளுடனோ நடத்தப்பட்டவையல்ல. ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், புலிகள் செயலற்ற நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். அவர்களால் அதன் பிறகு எதையும் செய்ய முடியாது போனது. இதை உணர்ந்து கொண்டே, அரசபடையினர் மெல்ல மெல்ல புலிகளின் கழுத்தை இறுக்கி – நெரித்து - முற்றாக அழித்தனர். இதுதான் போரின் இறுதிக்கட்டம். இந்தநிலையில் தான் சரத் பொன்சேகா, இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதன்பின்னர் நடந்தது வெறும் தேடியழிப்பு நடவடிக்கைகள் (mopping-up operation) தான் என்றும் கூறியுள்ளார். 

ஒரு சமரின் முடிவில் நடத்தப்படுவது தான் இந்தத் தேடியழிப்பு நடவடிக்கை. 

அதாவது சண்டையில் தப்பி எஞ்சியிருப்போரை தேடிப்பிடித்து அழிக்கும் நடவடிக்கையே இது. 

இதற்கு ஆட்டிலறிகள், மோட்டார்கள் தேவைப்படாது. விமானக்குண்டு வீச்சுகளும் தேவையில்லை. 

சாதாரணமான துப்பாக்கிகளுடன் படையினர் நடத்தும் தேடுதலைப் போலத் தான் இதுவும். 

சரத் பொன்சேகா சொல்வது போல, இரட்டைவாய்க்காலுடன் போர் முடிவுக்கு வந்திருந்தது உண்மையானால்- அதற்குப் பின்னர் எதற்காக பீரங்கிகள், மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன? 

தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கு அவை தேவையில்லையே. 

இரட்டைவாய்க்கால் கைப்பற்றப்பட்ட பின்னர், மே 18 வரை இடம்பெற்ற பீரங்கித் தாக்குதல்களில் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் இதை மறுத்து வந்த அரசதரப்பு இப்போது இறுதிப்போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அது எவ்வளவு என்பதில் தான் முரண்படுகிறது. சரத் பொன்சேகா சொல்வது போலவே, இரட்டைவாய்க்காலுடன் போர் முடிந்து விட்டதாகவே கருதினாலும், போர் நடக்காத - வெறும் தேடியழிப்பு நடவடிக்கைகள் மட்டும் நடந்த ஒரு மாத காலத்தில் எப்படி அதிகளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்? இந்தக் கேள்விக்கு சரத் பொன்சேகா விடை கூறுவது சிரமமானது, அதேவேளை, இரட்டைவாய்க்காலுடன் போர் முடிந்த விவகாரத்தை சரத் பொன்சேகா இப்போது வெளியே சொல்லக் காரணம் என்ன? 




போரின் இறுதி நாட்களில் அவர் கொழும்பில் இருக்கவில்லை. ஒருவார கால அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு 2009 மே 11ம் திகதி சீனா சென்றவர் மே 17ம் திகதி தான் திரும்பினார். சரத் பொன்சேகா கொழும்பு திரும்பிய போது போர் கிட்டத்தட்ட முடிந்தே விட்டது. புலிகளின் போராளிகள் சரணடையத் தொடங்கியிருந்தனர். புலிகளின் தலைமையைத் தேடியழிக்கும் நடவடிக்கை தான் மீதியாக இருந்தது. இதையே சாட்டாக வைத்துக் கொண்டு, சரத் பொன்சேகா போரின் இறுதிக்கட்டத்தை வழிநடத்தவில்லை என்ற பிரசாரத்தை பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸ கட்டவிழ்த்து விட்டிருந்தார். சரத் பொன்சேகாவே புலிகளுக்கு எதிரான போரை வென்று கொடுத்திருந்தார். ஆனாலும் அவர் இறுதிநேரத்தில் சீனாவில் இருந்ததை காரணம் காட்டி, வரலாற்றில் இருந்து அவரது பெயரை அழிக்கும் முயற்சிகள் நடந்தன-நடக்கின்றன. இந்தக் கட்டத்தில் தான் சரத் பொன்சேகா, தான் சீனாவுக்குச் செல்ல முன்னரே போர் முடிந்து விட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 

போரின் வெற்றியைப் பங்கு போடுவதில், கோத்தாபய ராஜபக்ஸவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. சரத் பொன்சேகா சிறையில் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சந்திரபிறேம என்ற உபாலி குறூப்ஸ் ஊடகவியலாளரை வைத்து கோத்தாவின் போர் என்ற நூலை எழுதி வெளியிட்டு விட்டார் கோத்தாபய ராஜபக்ஸ. மூன்றாண்டுகள் போரை நடத்திய கோத்தாபயவுக்கு, முப்பதாண்டுப் போரின் ஒட்டு மொத்த புகழும் ஒரே நூலின் மூலம் தாரை வார்க்கப்பட்டது. இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சரத் பொன்சேகா, தனது சுயசரிதையை எழுதப் போகிறார். இராணுவத் தளபதியானது வரை ஒரு நூலாகவும், அதன் பின்னர் நடந்தவற்றை வைத்து தனிநூலாகவும் வெளியிடப் போகிறார். சரத் பொன்சேகாவின் சுயசரிதை, போர் பற்றிய பல வெளிவராத தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் கூடும். சிலவேளைகளில் பல உண்மைகள் மறைக்கப்படவும் கூடும். 

சரத் பொன்சேகாவிடம் இப்போது ஜெனரல் பட்டம் இல்லை. இதனால் அவர் தனது வரலாற்றை சுயசரிதை மூலமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளை, சரத் பொன்சேகா எழுதப்போகும் சுயசரிதை பலரது வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது வெளியாகும் வரை பலருக்குத் தூக்கம் வரப்போவதும் இல்லை.

கட்டுரையாளர் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment