சிறிலங்கா கடற்படையால் மன்னாரின் முள்ளிக்குளம் கிராமமானது உயர் காப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் மீள்குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை தமது சொந்த நிலங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி இக்கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க, தமிழ் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக முள்ளிக்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து 2007லிருந்து மன்னாரில் வசித்து வரும் 140 இற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சனிக்கிழமையிலிருந்து அவர்களது சொந்தக் கிராமத்தைச் சென்று பார்வையிடுவதற்கான தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தே வாழ்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், தாம் மிகக் கடினமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முள்ளிக்குளம் கிராமத்து மக்கள் கடற்படை முகாமுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட போது, இக்குடும்பங்கள் அருகிலிருந்த கிராமம் ஒன்றில் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர்.
"இது உண்மையில் ஆத்திரமூட்டும் செயலாகும். பல ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது சொந்தக் கிராமத்தை மீட்டு அதில் மீள்குடியேறவேண்டும் என்பதே எமது நோக்காகும்" என முள்ளிக்குளத்துக்கு வெளியே மரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த நான்கு பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய அக்னெசியா றெவல் தெரிவித்துள்ளார்
காட்டு மரங்களில் 'காட்போட்' மற்றும் ஆடைகள் போன்றவற்றால் தற்காலிக கொட்டகைகள் அமைத்து அந்த மக்கள் தங்கியிருந்தனர். அருகிலுள்ள தேவாலயம் ஞாயிறன்று மீண்டும் திறக்கப்பட்டதாக அக்னெசியா றெவல் தெரிவித்துள்ளார்.
"அடிப்படை வளங்கள் எதுவுமின்றி இந்த மக்கள் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இந்த மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும். இவர்கள் தமது சொந்தக் கிராமத்தில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்" என மீனவ ஒருங்கிணைப்பு அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.ஈ.சுனேஸ் சூசை தெரிவித்துள்ளார்.
சிறிய ஒடுங்கிய நிலப் பிரதேசத்திலுள்ள முள்ளிக்குளக் கிராமத்திலிருந்து படகுச் சேவை மூலம் இந்தியாவுடன் தொடர்பை பேணிக்கொள்கின்ற கேந்திர முக்கியத்துவம் மிக்க பிரதேசமாக இருப்பதால் சிறிலங்கா இராணுவத்தினர், இங்கிருந்து 400 வரையான குடும்பங்கள் 2007ல் இடம்பெற்ற யுத்த நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்ததிலிருந்து, இதனை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற போது 4,096 கெக்கேரயர் பிரதேசமானது உயர் காப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் 2582 கெக்ரேயர் பிரதேசம் மட்டுமே உயர் காப்பு வலயமாக உள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இம்மாதம் அறிவித்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக 448,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும், இவர்களில் 6000 வரையான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாததன் காரணமாக தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி வழிமூலம் : ucanews.com reporter, Mannar
0 கருத்துரைகள் :
Post a Comment