ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் அனுசரணையில் கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து கொண்டுவர ஆலோசிக்கப்படும் இத்தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இத்தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா மற்றும் அல்ஜீரியா போன்ற பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் நிதி மற்றும் பணியாளர்கள் நியமனங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்தவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதியில் 80 சதவீதமான நிதியை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளே வழங்கி வருகின்றன. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெளிவிவகார சேவைகளில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு மிகவும் கவலையளிப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்ரம்பர் மாதம் இடம்பெற்ற போதும், இத்தகைய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் பல நாடுகளின் கோரிக்கையை அடுத்து அம்முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது.
ஆயினும், இக்கூட்டத்தொடரில் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம் ஐ.நா. சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. ஐ.நா. சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையிலேயே அரசாங்கம் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment