ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமைக்குத் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘... தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அமைதிகாக்கப்படுவதும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பிரசன்னமாகியிருக்க மாட்டாது.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்தால்இ தற்போது நாட்டின் நிலைமை சரியாக இல்லை. ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினால்-அந்தக் கூட் டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங் கேற்றிருந்தால் நாட்டில் கலவரம் ஏற்படும் என்று சம்பந்தன் அஞ்சுகிறாராம்.
வன்னியில் மிக மோசமான போர் நடந்த போது இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த என்.கே.நாராயணனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த சம்பந்தனுக்கு வன்னியில் நடந்த வன் யுத்தம்-அழிவு தெரியவில்லை. ஆனால்இ இப்போது வன்முறை வெடிக்கும் என்று அச்சமாம். அப்படியானால் எங்களுக்காக வெளிநாடுகள் ஏதாவது செய்யட்டும். நாம் ஒதுங்கிக் கொள்வோம் என்பது கூட்டமைப்பின் முடிபு. இதுதான் முடிபாக இருந்தால் நீங்கள் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.
அப்போதுதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவரும் போது தமிழர்கள் தரப்பில் கருத்து கூறுவதற்கு கூட அங்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று பேசப்படும். ஆனால் நீங்களோ! ஆ! கடவுளே! இப்படியயாரு முடிபா? கூனியை இனங்காணாத தசரதனும் உங்களை புரிந்துகொள்ள முடியாத ஈழத்தமிழ் மக்களும் மிகப்பெரும் பாவங்கள். ஆனாலும் அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் தாயகக் கோட்பாட்டின் காவலர்கள். என் செய்வோம் இறைவா!
நன்றி - வலம்புரி
தொடர்புபட்ட செய்திகள் பிபிசி
ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு
ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கு கொள்ளாது'
ததேகூ தலைவர் இரா.சம்பந்தன்
ஐநாவின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் நடைபெறும் விடயங்கள் குறித்தும் சர்வதேச சமூகம் எடுக்கின்ற நடவடிக்கைகள் குறித்தும் தமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் ஜெனீவா கூட்டத்தில் ஆராயப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் குறித்து சர்வதேச ரீதியாக தமது கட்சி விளக்கமளித்துள்ளதாகவும் அவை குறித்து சர்வதேச சமூகம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோருவதாகவும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேலும் கூறினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment