இனப்பிரச்சினைக்கு தேவை தீர்வு, ஏமாற்றுத் திட்டங்கள் அல்ல


இராணுவ நீதிமன்றத்தை அமைத்து விசாரணை மேற்கொள்ளுதல் என்றொரு நாடகத்தை அரசு இப்போது அரங்கேற்றியுள்ளது. சர்வதேச அழுத்தத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக இந்த முறையை அரசு மேற்கொண்டுள்ளது. இராணுவ நீதிமன்ற விசாரணை, அதில் கிடைக்கக்கூடிய முடிபுகள் பற்றி தமிழ் மக்கள் இம்மியளவும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்து எந்தவொரு நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை தமிழ் மக்கள் பலமாக உணர்ந்துள்ளனர்.

இருந்தும் இலங்கை அரசு இராணுவ நீதிமன்றத்தை அமைத்து விசாரணையை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை சமாளிக்க முடியும் என நம்புகின்றது. இங்குதான் இலங்கை அரசின் அறியாமை - பலவீனம் வெளிப்படுகின்றது. சர்வதேச சமூகமானது மிகத் தெளிவான முடிபுகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கொண்ட பின்பே தனது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது.அந்த வகையில் வன்னிப் போரின்போது நடந்த சம்பவங்கள் அத்தனையையும் சர்வதேசம் தெளிவாக அறிந்துள்ளது. போர்-போராட்டம் என்றால் அழிவுகளும் இழப்புகளும் எதிர்பார்க்கப்படக்கூடியவை என்பதற்கான நியாயப்பாடுகளை சர்வதேசம் அறியாததும் அல்ல.

ஆனால், திட்டமிட்ட, இன அழிப்புடன் மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றை சர்வதேச சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அத்தகைய சம்பவங்களை மூடி மறைத்தல் என்பது வெற்றியளித்ததாகவும் வரலாறு இல்லை. எனவே இலங்கை அரசு இராணுவ நீதிமன்றத்தை அமைத்து போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதானது மிகப் பெரிய ஏமாற்றுவித்தை என்பதை சர்வதேச சமூகம் தாராளமாக உணர்ந்து கொள்ளும்.

இத்தகைய உணர்தல் என்பது இலங்கை மீதான நம்பகத் தன்மையை மேன்மேலும் குறைக்கும். ஆக! சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை இலங்கை அரசு வெற்றிகொள்ள வேண்டுமாக இருந்தால், அதற்கான ஒரேயயாருவழி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தனக்கிருக்ககூடிய அதிகாரத்தையும், பாராளுமன்றத்தில் இருக்ககூடிய பெரும்பான்மை பலத்தையும் பயன்படுத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதேயாகும். ஆனால், அதனைச் செய்வது பற்றி அரசு ஒருபோதும் சிந்திக்காது என்பது தெளிவு. இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் பலமானதாக அமைவதற்கான வாய்ப்பு உண்டு.

அதேசமயம் தற்போது சர்வதேச சமூகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய இலங்கை தொடர்பான எதிர்க்கணிய கருத்து நிலையை தமிழ்த் தரப்புகள் தக்கமுறையில் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் உலகில் ஏற்பட்ட அத்தனை மாற்றங்களும் காலத்தின் அசைவில் நிகழ்ந்தவைதான். எனவே ஈழத் தமிழ் மக்களின் விவகாரங்களும் தகுந்த முறையில் நெறிப்படுத்தப்படாவிடில் கால அசைவு பெரும் இழப்புக்களை நமக்கு தந்து விடலாம்.

நன்றி வலம்புரி 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment