வன்னிப் போரில் வெடித்த குண்டுகள், தாக்கிய டாங்கிகள், சுற்றிய போர் விமானங்கள், வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இவற்றுக்கெல்லாம் நிதி எங்கிருந்தது? இப்படி சிங்கள மக்கள் கேட்டிருப்பார்களாயின், எரிபொருட்களின் விலை இந்த மாதிரி எகிறியிருக்காது. இது தவிர 2009ஆம் ஆண்டு ஏ9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் பல இலட்சக்கணக்கான தென் பகுதி மக்களை வட பகுதிக்கு அனுப்பி, பார்... அரச வெற்றியைப் பார்... என்ற காட்டாப்புக்கெல்லாம் ஏன்தான் நிதியைக் கொட்டி தள்ளுகிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதிகள் முணுமுணுத்து இருந்தால் கூட 30 ரூபாய் கடந்து எரிபொருளுக்கு விலையேறும் மிகப் பெரும் அநியாயம் நடந்திருக்காது.
என்ன செய்வது! நானே ராஜா! நானே மந்திரி! நான் இட்டதே சட்டம். ஆகையால் யார் பற்றியும் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. எரிபொருளுக்கு 30 ரூபாய் என்ன 300 ரூபாயைக் கூட்டினாலும் எவரும் கேட்க முடியாது- கேட்கவும் கூடாது. இப்படியான நிலை இலங்கையில் ஏற்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்காக கொட்டிய கோடிகளின் இழப்பை ஈடாக்குவது என்பது இப்படித்தான் சாத்தியமாகும். இதுதான் நடக்கும்.
நான் சுகபோகமாக இருக்கின்றேன் என்பதற்காக எல்லா மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பிருந்தால் அன்றி இப்படியாக எரிபொருளின் விலையை ஏற்ற எவரும் துணியமாட்டார். எரிபொருள் என்பது அதிஅத்தியாவசியப் பொருள். அதனுடைய விலையேற்றம் என்பது அடுப்படி தொடக்கம் ஆகாய விமானம் வரை எங்கும் எதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிலும் அத்தியாவசியப் பொருளான எரிபொருளின் விலை ஏறியவுடன் அதன் வழியாக போக்குவரத்துச் செலவு, வாழ்க்கைச் செலவு என எல்லாமும் ஏறிக் கொள்ள, ஏழை மக்களும் நடுத்தர வருமானம் உடையவர்களும் அதனால் பெரும் பாதிப்பை அனுபவிப்பர். நாளாந்தம் மண்ணெண்ணெய் விளக்கெரித்து சீவியம் நடத்துவோர், பஸ் ஏறிப் பயணம் செய்வோர், அன்றாடம் கூலி வேலை செய்து சீவனோபாயம் போக்குவோர் இவர்களின் நிலைமை எப்படியென்று ஒரு கணம் சிந்தித்திருந்தால் இப்படியொரு விலையேற்றத்தை எரிபொருளுக்கு செய்திருக்க மாட்டார்கள். என்ன செய்வது! சர்வாதிகாரப் போக்கில் நாடு நகரத் தொடங்கி விட்டது.
மக்களை வதைத்து -மிதித்து சிங்கள பெளத்தத்தைக் காப்பாற்றுவோம் என்கின்ற கோவம் வானை முட்டிவிட்டது. அதில் நான், நீ, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று எந்தப் பேதமும் கிடையாது. எல்லோருமாக வதைபடுவோம். மிதிபடுவோம். மீட்சி இன்றி உயிர் விடுவோம். ஆனால், இனப்பிரச்சினையைத் தீர்த்து இலங்கையை இந்திரலோகமாக மாற்றுவோம் என்று மருந்துக்கும் நினையோம். சிங்கள மக்களே! இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் போரை நடத்திய வின்ஸ்டன் சர்ச்சில் தோற்றுப் போனார் என்ற செய்திக்குள் அர்த்தங்கள் இருப்பதாக நீங்கள் எண்ணியிருந்தால்...வேண்டாம் வீண் வம்பு.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment