அமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்தில்; இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றுவதில் மேற்குலகம் கங்கணம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கக் கொழும்பு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட உயர் மட்ட இராஜதந்திரக் குழுவொன்று நேற்று ஜெனிவாவில் களமிறக்கியுள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த 15 உயர் இராஜதந்திரிகளும், பிரிட்டனைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுக்கு மேலாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியான மரியா ஒரேரோவையும் வோஷிங்ரன், ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. ஒரேரோ, இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலராகப் பணியாற்றி வருகிறார். ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அவரைக் கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தது அமெரிக்கா. இலங்கை விவகாரத்தில் வோஷிங்ரன் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கொழும்பில் விளக்கியிருந்தார். 
எதிர்வரும் முதலாம் திகதி அவர் ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனக்கு எதிரான பிரேரணை குறித்து இலங்கை அரசு மேற்கு நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் எதிராகக் காட்டும் வெளிப்பாடுகள் குறித்து வோஷிங்ரன் ஆத்திரமுற்றுள்ளதாக வெளியாகும் தகவல்களின் பின்னணியிலேயே ஒரேரோவின் ஜெனிவாப் பயணமும் இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
இதற்குப் பதிலடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முதல் உலக நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி ஊடாக நேரடியாகத் தொடர்புகொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான உறுதி மொழியைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தமது நாடுகள் எதிர்க்கும் என்ற உறுதிமொழியைத் தலைவர்கள் வழங்கியுள்ளனர். அத்துடன், குறித்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள அரச குழுவிடம் இதே உறுதிமொழியை வழங்கியிருக்கின்றனர் என ஜெனிவாவிலுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பிரேரணையை எதிர்ப்பதாக கட்டார், சவூதி அரேபியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தம்மிடம் உறுதியளித்தன எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவருவதனால் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பல அமெரிக்க சார்புப்போக்கையே இறுதி வேளையில் கடைப்பிடிக்கக்கூடும் என்ற தமது எதிர்பார்ப்பை அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார். தனது பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தார். 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவே முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 5ஆம் திகதி குறித்த பிரேரணை முன்வைக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட அந்தப் பிரமுகர், அமெரிக்காவே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவதால் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவான தமது கொள்கையை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஆதரிக்கவுள்ளன என்பதை உறுதிபடச் சுட்டிக்காட்டிய அவர், எனினும் இதுவரை இலங்கைக்கு எதிரான போக்கு எல்லை மீறவில்லை என்றும் தெரிவித்தார்

நன்றி உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 கருத்துரைகள் :

  1. வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html

    ReplyDelete
  2. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete