பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் போல நடந்துகொள்கின்றனர். இவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று ஜனாதிபதி கூறுவதானது ஒரு திட்டமிட்ட ஒழுங்கில் இரு இன மக்களை ஏமாற்றும் செயல் என்று உணர முடியும். விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பை நடத்திய முறை, இலங்கை அரசுடன் வெளிநாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சமபல பராக்கிரமத்துடன் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் தெளிவான தகவலைப் பெற்றுள்ளனர்.
சிலவேளைகளில் அரசின் பார்வையில் விடுதலைப்புலிகள் இறுக்கமான போக்கை கொண்டிருந்ததாகத் தென்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் இறங்கி - விட்டுக் கொடுத்து பேச்சுவார்த்தையை தொடர முடியுமோ அந்தளவிற்கு அவர்கள் இறங்கியுள்ளனர். சுருங்கக்கூறின், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூடு கட்டப்பட்டாலும், போருக்குப் பின்பான அந்தக் கூட்டில் புலிகள் அறவேயில்லை.அங்கு மான்களும் மற்றும் சிலவுமே இருக்கின்றன. மான்களில் கூட கவரி மான்களும் இல்லை, வெறும் புள்ளிமான்கள்தான்.
நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகள் போல நடந்து கொள்கின்றனர் என ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறியிருப்பது ஆச்சரியம் தருவதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் போலச் செயற்படுகின்றனர் என ஜனாதிபதி கூறுவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆதரவைப் பெற அவர் எத்தனித்திருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள மக்களின் வெறுப்பு நிலையை நீடிக்கவும் செய்யலாம். இது அவர் பக்கம் சார்ந்தது. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் போல நடந்து கொள்கின்றனர் என ஜனாதிபதி கூறும்போது, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கை - அவர்களுக்கான ஆதரவை ஈழத் தமிழர் மத்தியிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் அதிகரிக்கச் செய்யும் என்பது திண்ணம்.
அட! என்னதான் சொன்னாலும் எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகள் போல நடந்து கொள்கின்றனர். சம்பந்தன் ஐயா இந்த வயதிலும் இறுக்கமாக நிற்கிறார் என்று புளகாங்கிதம் அடைவர். இந்த உண்மை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கோ அன்றி அவரின் ஆலோசகர்களுக்கோ தெரியாததல்ல. அப்படியிருந்தும் ஜனாதிபதி திரும்பத் திரும்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் போல் நடந்து கொள்கின்றது என ஏன் கூறுகிறார்? எதைக் கதைத்தாலும் அந்தக் கதை சிங்கள இனத்திற்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிந்த சிந்தனையுடைய ஆட்சியாளர்கள், புலிகளின் இறுக்கமான கொள்கையின் பக்கத்தாலும் செல்லாதவர்களைப் பார்த்து ‘புலிகள் போல ’ என்று கூறுவதில் ஏதோ மர்மம் இருக்கவே செய்கின்றது. ராஜபக்ஷவின் நினைவு தினத்தில் கலந்து கொண்ட சம்பந்தர் ஐயா, அரசு மீதான போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என்று உரையாற்றிய சுமந்திரப் பெரியோன் இருக்கின்ற இடத்தைப் பார்த்தா, புலி போல என்று கூறுவது? சிவசிவா! புலிகள் இதைக் கேட்டால் போரில் அடைந்த துன்பத்தை விட பெருந்துன்பம் அடைவர்.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment