ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திவரும் மனித உரிமை அமைப்புகள் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என சர்வதேச நாடுகளை வலியுறுத்தி நிற்கின்றன.
ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதில் அமெரிக்காவின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேநேரம் இந்திய மத்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இலங்கை அரசு கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. நிலைமை இவ்வாறாக இருக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறாது போனாலும், அமெரிக்க அரசு ஏதோ ஒரு வகையில் இலங்கை அரசுக்கான தனது அழுத்தத்தை பிரயோகிக்கும் என்பதை எளிதில் நிராகரித்து விடமுடியாது.
தீர்மானத்தை நிறைவேற்றவும் அதனை தடுக்கவும் என இருபக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இணக்கப்பாடு ஏற்பட்டு விடும் என சர்வதேசத்தின் காதில் ஊதுவதில் அரசு முனைப்புடன் செயற்பட்டுவருவதை இவ்விடத்தில் மறுத்து விட முடியாது. அத்தகையதோர் முயற்சிக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசரமாக அழைத்துச் சந்திப்பு நடத்தியுள்ளார்.
சந்திப்பில் தெரிவுக்குழு பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதனை சம்பந்தன் அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் தகவல். ஜெனிவாவில் தமக்கு எதிராகவரும் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட தனது விசுவாச நாடுகளுடன் இணைந்து தோற்கடிப்பதற்கு பகீதரப் பிரயத்தனம் செய்யும் அரசு, கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னிறுத்தி தன்னை நல்ல பிள்ளையாகக் காட்ட முற்படுகின்றது. இதுவிடயத்தில் கூட்டமைப்பு தெளிவாகவும் சமயோசிதமாகவும் நடந்துகொள்ள தவறுமிடத்து எங்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நாங்களே போட்டுடைத்தாக முடியும். எனவே, தெரிவுக்குழு-பேச்சுவார்த்தை என்ற காட்டாப்புக்களில் தமிழ் தரப்புகள் மயங்கிவிடாமல் பேச்சுவார்த்தை என்றால் அது சர்வதேச நாடொன்றின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறவேண்டும். கால எல்லை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை மிகவும் இறுக்கமாக வலியுறுத்துவது கட்டாயமானதாகும். இதனைச் செய்யாமல் கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டார் என்ற பூரிப்பில் ஓடிச்சென்றால், எல்லாம் படுதோல்வியில் முடியும்.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment