சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த சிறிலங்காவுக்கு வாய்ப்பை அளிக்கும் நோக்கில், ஐ நாவின் மனித உரிமைச் சபைக்கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க துணைச் செயலாளர் மரியா ஒட்டேரோ அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான உதவி செயலாளர் மரியா ஒட்டேரா அவர்களுடன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் பங்கெடுத்திருந்தார்.
மரியா ஒட்டேரே அவர்கள் தனது கருத்தினைத் தெரிவிக்கையில்….
சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து தனது விருப்பத்தை தெரிவிக்கவும் நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் பொறுப்புக்கூறல், மனித உரிமை மற்றும் ஜனநாயம் தொடர்பில் பதிலளிக்கவும் இந்தத் தீர்மானம் உதவும். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நான் கலந்துரையாடினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமுல்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை தொடர்பிலான திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் நம்பகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஒட்டேரோ தெரிவித்தார்.
மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கருத்து தெரிவிக்கையில்…
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொறுப்புக் கூறலை முழுமையாக ஆராய வேண்டும் என பிரகடனப்படுத்தப்படும் ஐ.நா மனித உரிமைச் சபையின் பிரேரணைக்கு ஆதரவளிப்போம். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதியளவான விடயங்களை கவனத்திற் கொள்ளவில்லை. என்ன நடந்ததென விசாரிப்பது பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கிய பகுதியாகும். தற்போது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பிலேயே கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் நம்பகமான உள்ளூர் பொறிமுறை ஏற்படுத்தப்படும் என நாம் நம்புகின்றோம். உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்துவதில் ஏதாவது குறைகள் காணப்படுமாயின் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் நிச்சயம் இருக்கும்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையானது தேசிய பிரச்சினைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். தற்போது, அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை நல்லமுறையில் நிறைவு பெற அமெரிக்கா உதவும். அவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட முடியும் என ரொபர்ட் ஓ பிளெக் கருத்து தெரிவித்தார்.
நன்றி நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment