Sunday, May 5, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது சட்டத் திருத்தம் - ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள்


நாம் எல்லோரும் தவறு புரிந்தவர்கள், குறைபாடுகளை உடையவர்கள், கைகளில் கறை படிந்தவர்கள் தான். எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் எமது தவறுகளுக்காக உயரிய விலை செலுத்தியவர்கள் பொதுமக்களும் சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும் இளையோருமே. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின்.

13வது சட்டத் திருத்தத்தினால் தமிழர்களுக்கு பயன் ஏதுமில்லை. எனவே அதனையும் அது சார்ந்த தேர்தல்களினையும் முற்றாக நிராகரிக்கவேண்டும்.
  • மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று மாகாணத்தின் நிர்வாக ஆட்சியதிகாரத்தினை தமிழர்களின் கைகளுக்குள் கொண்டுவரவேண்டும்.
  • தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கும் கட்சிகள் நேரடியாக தேர்தலில் பங்குபற்றாமல் ஒருபொது வேட்பாளர் தலைமையிலான குழுவினை முன்மொழிந்து அதன் மூலம் வடக்கு மாகாணத்தின் நிர்வாக அதிகாரத்தினை கட்டுப்படுத்தவேண்டும்.
  • தற்போதைய ஈழத்தமிழ்மக்களின் அரசியல் செல்நெறியில் 13வது சட்டத் திருத்தமும் எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலும் இவ்வகையானமுன்மொழிவுகளையும் முனைப்புக்களையும் வாதப்பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளன.
  • இன்னொருபுறம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிபை அரசியற்கட்சியாக பதிவு செய்து தமிழர் உரிமைக்கான அரசியலினை முன்னெடுப்பது தொடர்பான குழுநிலைப்போராட்டம். மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளத்தின் கதையாக முடிவில்லாது தொடர்கிறது.
இவை தொடர்பாகவும் தமிழ்த்தலைமைகள் இழைத்த வரலாற்றுத் தவறுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது இக்கட்டுரை. ‘புதினப்பலகை’க்காக இக்கட்டுரையை எழுதியவர் ம.செல்வின். 

13வது திருத்தச் சட்டமும் அதன் பொருத்தப்பாடும்: 

சிறீலங்காவின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத் திருத்தம் மாகாண சபைகளை உருவாக்கி அதற்கான அதிகாரங்களை கையகப்படுத்துவது தொடர்பான பல விடயங்களினை குறிப்பிட்டுள்ளது. இத்திருத்தச்சட்டம் சிறீலங்காவின் ஆட்சியாளர்களின் தற்துணிவின் அடிப்படையிலோ அல்லது சிங்கள மக்களின் பெருவிருப்பினைச் சார்ந்தோ உருவாக்கப்பட்டதல்ல. 

இலங்கைத் தீவினுள் தமிழ்மக்கள் பலபத்தாண்டுகளாக முன்னெடுத்துவரும் தன்னாட்சி உரிமைக்கான வேணவாவினையும் அதுசார்ந்த போராட்டத்தினையும் திருப்திப்படுத்துவதற்காக இந்திய அதிகாரவர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியேயாகும். இதனைச் செய்வதற்காக இந்திய வல்லரசு தனது முழுமையான அரசியல் இராசதந்திர மற்றும் இராணுவ வல்லமைகளினைப் பயன்படுத்தியது.

இச்சட்டத்திருத்தத்தினால் உருவாக்கப்படக்கூடிய மாகாண சபைகள் தொடர்பாக அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் முழுமையான உடன்பாடு இருந்ததில்லை. எனினும் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது முதலமைச்சருக்கும் ஏனைய உறுப்பினர்களுக்குமான பெயர்ப்பட்டியலினை விடுதலைப்புலிகள் சமர்ப்பித்திருந்தனர். ஆயினும் அன்றைய அதிபராக இருந்த ஜே. ஆர். ஜேயவர்த்தனாவும் விடுதலைப்புலிகளும் தங்களது இறுக்கமான நிலை காரணமாக பரஸ்பரம் முரண்பட்டு தங்களைச் சுற்றி இந்தியாவினால் போடப்பட்ட பொறியிலிருந்து விலகிக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை வரதராசப்பெருமாள் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு [EPRLF] இந்திய அமைதிப்படை இராணுவத்தின் பின்புலத்தில் மாகாணசபைக்கான தேர்தலில் வென்று ஆட்சிஅதிகாரத்தினை பெரும் எதிர்பார்ப்புடன் கையேற்றிருந்தது.

ஒரு பிராந்திய வல்லரசின் வளங்களும் பின்புலமும் அதன் இராணுவத்தின் பக்கபலமும் இருந்தும் வரதராசப்பெருமாள் தலைமையிலான ஆட்சியினால் சிறீலங்காவின் அரசியலமைப்பில் 13வது திருத்தத்தினூடாக குறித்துச்சொல்லப்பட்ட அதிகாரங்களினை முழுமையாக கையகப்படுத்தி மாகாணத்தில் வாழும் மக்களின் நலன்களினையும் மேம்பாட்டினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த முடியவில்லை. 

இதற்கு ஒரு அமைதியான நிர்வாகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு இடையூறாக விடுதலைப்புலிகளின் போராட்ட முனைப்பு ஒரு காரணமாக கூறப்பட்டாலும், சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலில் காலங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்த சிறீலங்காவின் பலம்பொருந்திய பணித்துறையாட்சிக் கட்டமைப்பு (Bureaucratic Structure) தனது முழுமையான வலுவினை வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்திற்கு எதிராக பிரயோகித்து அதனை முடக்கியது என்பதே உண்மையாகும். 

என்னதான் அரசியலமைப்பு ஆவணத்தில் வரையறுத்துக் கூறப்பட்டாலும் அல்லது பரஸ்பர ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் சிதைப்பதும் இப் பணித்துறையாட்சியினரின் கரங்களிலேயே தங்கியுள்ளது.

விரைவில் வடக்குக்கான மாகாணசபை தேர்தலினை நடாத்தும்படி பலமுனைகளிலிருந்து வேண்டுகோள்கள் அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தேர்தலினை வைப்பது தொடர்பான தீர்மானம் சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபரின் விருப்பத்தினையே சார்ந்துள்ளது.

அண்மையில் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டது போன்று சிறிலங்கா அதிபரினால் வடக்கு மாகாணத்திற்கான சபையினை உருவாக்குவதற்கான பிரகடனம் வெளியிடப்படவேண்டும். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் கணம்வரைக்கும் அதற்கான சாத்தியம் எதுவும் காணப்படவில்லை. 

அதேவேளையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தக்கூடாது என புத்த பல சேனையும், காணி மற்றும் காவற்றுறை அதிகாரங்களினை மாகாணசபைகளின் அதிகாரத்திலிருந்து மீளப்பெற்ற பின்னரே வடக்கு மாகாணசபைக்கான தேர்தலினை நடத்தவேண்டும் என அமைச்சராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணி பிரதானி விமல் வீரவன்சாவும், முதலில் சிவில் நிர்வாகம் பின்புதான் மாகாணசபைக்கான தேர்தல் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கூறுவதும் ஒரே அடிப்படைகளைத்தான் கொண்டிருக்கின்றன. 

சமகாலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைவராக கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழ்மக்களின் விடுதலை அவாவினை நிறைவு செய்யமுடியாத மாகாணசபை என்ற பொறிக்குள் தமிழ்மக்கள் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது. எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலினை புறக்கணிக்கவேண்டும், வேண்டுமானால் சுயேட்சையான பொதுவேட்பாளர் அணி ஒன்றினை களத்தில் இறக்கி அவர்களினை ஆதரிக்கலாம் என்று தமது மேடைகளிலும் பேட்டிகளிலும் கருத்துருவாக்கம் செய்கின்றனர். 

அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற அங்கத்தவர்கள் குழுவை யாழ்ப்பாண சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்ததாகவும் அப்போது ஒரு இளைப்பாறிய மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் 13வது திருத்தச்சட்டத்தினால் தமிழ்மக்களுக்கு எதுவித பலனும் இல்லை. எனவே 13வது திருத்தத்திதை அடிப்படையாக கொண்ட எதனையும் தமிழ்மக்கள் மீது திணிக்கவேண்டாம் என விநயமாக கேட்டுக்கொண்டதாக தமிழ் வலைச் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 

இத்தகைய பின்னணியில் 13வது திருத்தத்தினை தமிழ்மக்கள் சிறப்பான முறையில் புரிந்து கொள்ளல் இன்றைய அவசியமாக உள்ளது.

தமிழ் அரசியற் சிந்தனையாளர்கள் உரைப்பது போன்று 13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்படும் மாகாணசபைகள் தமிழ்மக்களின் அரசியல் விருப்புகளையோ, தமிழ்மக்களின் செழுமைக்கும் இருப்புக்குமான உத்தரவாதத்தையோ வழங்கப்போவதில்லை என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

அதேபோன்று மத்திய அரசின் இறுக்கமான வளஒதுக்கீட்டு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்துக்கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்களையோ, சமூகநல திட்டங்களையோ முன்னெடுக்கவும் முடியாது. குறைந்த பட்சம் சிற்றூழியர் தர வேலைவாய்ப்புக்களினை வழங்குவதற்கும் போராடவேண்டியிருக்கும். இந்த யதார்த்தத்தினையும் மீறி மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கட்சியும் வேட்பாளர்களும் வழங்கக்கூடிய வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வார்த்தைகளே. 

இத்தகைய மாகாணசபை நிர்வாகத்தினை தாங்கள் வென்றெடுத்தால் அரசுடன் இணைத்து வடக்கு மாகாணத்தினையே வளங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றுவோம் என அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவினை செயலதிபராக கொண்ட ஈழமக்கள் சனநாயக கட்சியினர் கூறலாம். ஆனால் தற்போதுவரை ஆளுனருடன் இணைந்து வடமாகாணத்தின் நிர்வாக பொறிமுறைகள் யாவற்றினையும் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதற்கு மேலாக அக்கட்சியினரால் மேலதிகமாக ஒரு துரும்பினைக்கூட நகர்த்தமுடியவில்லை.

தங்களது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசசபைகளில் தீர்மானங்களினை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொள்ளும் நிலப்பறிப்புக்கு அங்கீகாரம் வழங்கிவருவதே கசப்பான நடைமுறை உண்மையாகும். மாகாணசபையிலும் இது போன்ற செயற்பாடுகளினை தவிர்த்து மக்கள் நலன்சார், உரிமைசார் விடயங்களினை அவர்களால் முன்னெடுக்க முடியாது. ஏனெனில் அக்கட்சியினருக்கோ செயலதிபருக்கோ விருப்பம் இருந்தாலும் அவர்களால் அதனைச்செய்ய முடியாதவாறு தங்கத்திலான விலங்கு பூட்டப்பட்டிருக்கின்றார்கள். 

தங்களது செஞ்சோற்றுக் கடனையும் மீறி அவ்விலங்கினை உடைக்க முயற்சிப்பதனால் ஏற்படக்கூடிய இருப்புக்கான அச்சுறுத்தல்களினை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. சிங்கள தேசியவாத அரசியற் தலைமைகள் ஏனைய தேசிய இனங்களின் தலைமைகளினை இத்தகைய தங்கத்திலான விலங்குகள் பூட்டி வைத்திருக்கவே விரும்புகின்றன. 

வரதராசப்பெருமாள் தலைமையிலான மாகாண நிர்வாகத்தின் பின்பு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடக்கு கிழக்கு மாகாண சபை நேரடியாக ஆளுனரின் ஆட்சியின் கீழேயே நிர்வகிக்கப்படுகிறது. 2007 சனவரி மாதத்திலிருந்து வடக்கு கிழக்கு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்பு கிழக்கு மாகாணசபைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மத்தியில் ஆளும்கட்சியின் பதாகையின் கீழ் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் உருவாகிய கிழக்கு மாகாணசபையினால் மக்களுக்கு சார்பாக எதனையும் செய்ய முடியாமற் போனது. அதற்கு காரணம் அவர்கள் ஒரு வகையான திறந்தவெளிக் கைதிகளாகவே இருந்தனர். 

2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தன்மையான அழைப்பினையும் புறந்தள்ளி ஈற்றில் முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பினை சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கோட்டைவிட்டதும் வாய்மூடி மௌனிகளானதும் செஞ்சோற்றுக் கடனாளிகளாகவும் திறந்தவெளிக் கைதிகளாகவும் அவர்கள் இருப்பதனாலாகும். 

தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த தேசிய வாதிகளினால் தொடுக்கப்பட்ட மேலாதிக்கப்போர் பல பத்தாண்டுகளைத் தாண்டியும் பலவடிவங்களில் முன்னெடுக்கப்படுகிறது. 

ஆளும் கட்சிகளும் தலைமைகளும் மாறும், அடக்கு முறைச்சட்டங்களின் வடிவங்களும், வளங்களும், நிலங்களும் அபகரிக்கப்படும் முறைமைகள் மாறும். ஆயுதங்களும், சீருடைகளும், அணுகுமுறைகளும் மாறும். ஆனால் அவர்களின் குறிக்கோள் நோக்கிய பயணம் முன்னைய தடத்திலேயே தொடர்ந்து மேலும்மேலும் வேகமாக நடைபயிலும். 

2009 மே மாதத்துடன் இருதரப்பு யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர, ஆட்சியாளர்களின் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. மாற்றாக புதிய வடிவங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தங்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய தமிழர்களின் அரசியற்பயணம் பல எழுச்சிகள், வீழ்ச்சிகள், தளர்ச்சிகள் என பல கட்டங்களாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. 

தற்போது அனைத்துலகத்தினதும், ஐ.நா.வின் மனித உரிமைச்சபையினதும், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லாதிக்க சக்திகளின் சுயநலன்சார் சதுரங்கப் போட்டிக்குள்ளும் சிக்குப்பட்டுள்ளது.

எவ்விதமான காலவரையறையோ நம்பிக்கை தரும் குறியீடுகளோ இல்லாத திசையினை நோக்கி தமிழ்மக்கள் காக்கவைக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் புதுடில்லியினை தவிர வேறு வழியில்லை என நம்பும் இராஜவரோதயம் சம்பந்தனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒரு திசையிலும்,
  • சென்னை ஊடாக டில்லியினை அசைக்கலாம் என நம்பும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் இன்னொரு திசையிலும்,
  • சுதந்திர பிரகடனத்தை உலகெங்கும் அறைகூவி சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசு வேறோர் திசையிலும்,
  • ஆட்சிமாற்றத்தினூடாக நியாயம் கிடைக்கும் என உச்சாடனம் செய்யும் உலகத்தமிழர் பேரவையும், அமெரிக்காவும் இந்தியாவும் எமக்கு சார்பாக மாறும் காலம் என்றோ ஒருநாள் வரும் என கருத்துரைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வேறு திசைகளிலும்.
இவ்வாறு எண்திசைக்கோணத்தில் தமிழ்மக்களின் கவனம் சிதைக்கப்பட்டுள்ளது என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

இராணுவ தளபதியாக இருந்து ஆளுனராக உருமாற்றம் பெற்ற வடமாகாண ஆளுனரின் அதிகார எல்லை வானளாவி வளர்ந்துள்ளது. வடக்கு மாகாணசபையின் நிர்வாகிகள் யாவரும் சூழ்நிலையின் கைதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். ஆளுனரினதும் அமைச்சர்களினதும்; கைவிரல் அசைவுகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக முடமாக்கப்பட்டுள்ளனர். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் செயல்படுத்தும் ஆற்றல்களினை இழந்த மலட்டுத் தன்மையினராக, எந்த நேரத்திலும் பழிவாங்கப்படலாம் என அஞ்சி அஞ்சி வாழும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதே போன்று வடக்கின் கல்விச்சமூகமும் அமைச்சர்களுக்கும் அரச தரப்பு பிரதிநிதிகளுக்கும் ஆலவட்டம் எடுப்பதற்காக மாணவர்களினைப் பயிற்றுவிப்பதிலும் படிக்கும் நேரம் பறிபோவதனையிட்டு கேள்வியெழுப்ப முடியாமலும் இரு தலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு மாறியுள்ளனர். 

இத்தகைய பின்னணியில் இங்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன. 

· ஓன்று: முழுமையான அதிகாரங்களினைப் பிரயோகிக்கும் வலுவற்ற வடக்கு மாகாணசபையினை ஏன் தமிழ் மக்களின் நலன்சார் உரிமைசார் அரசியற் தலைமைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தங்களது வளத்தினையும் நேரத்தினையும் விரையம் செய்யவேண்டும்? 

· இரண்டு: தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதத்திலும் திருப்தி தராத 13வது திருத்தச்சட்டத்தினை தமிழ்மக்களும் அவர்களது அரசியற் தலைமைகளும் ஏன் தூக்கியெறிந்துவிட்டு முற்று முழுதான தன்னாட்சியுரிமையினை மட்டும் வலியுறுத்தி நிற்கக்கூடாது? 

முதலாவது வினாவுக்கான விடையினை கண்டறிவதில் எமக்கு தெளிவான வரலாற்றுப்பார்வை அவசியமாகவுள்ளது. 

இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் இன்று அடைந்துள்ள இக்கட்டான நிலைமைக்கு வெறுமனே சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினை மட்டும் குற்றம் சொல்லிவிட்டு நாம் எமது தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. 

பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் மீண்டும் சுதேசிகளுக்கு கைமாறுவதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்களின் போது கண்டிய சிங்களத் தலைவர்கள் வலியுறுத்தியது போன்று தமிழ்த்தலைவர்களும் தன்னாட்சிக்கான உரிமையினை வலியுறுத்தாமல் வர்க்க நலன் சார்ந்த பெருந்தன்மையின் பால்பட்டு பெருந்தவறினை இழைத்தனர். 

தமிழ்த்தலைவர்கள் இழைத்த வரலாற்று தவறுகள் : 

1911ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடித்தொகைக்கணக்கெடுப்பு இலங்கைத் தீவில் 528,024 இலங்கைத்தமிழர்களும், 530,983 இந்திய தமிழர்களும் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றது. அதாவது இந்திய தமிழர்கள் இலங்கைத் தமிழர்களினை விட சிறிது அதிக எண்ணிக்கையினைக் கொண்டிருந்தனர்.

1946ல் பெருந்தோட்டத்துறை வாழ் தமிழர்களின் எண்ணிக்கை 784,708 ஆக மதிப்பிடப்பட்டது. 1940களில் பண்டாரநாயக்காவும் சேனநாயக்கவும் கொண்டிருந்த சிந்தனைகளும் ஆற்றிய உரைகளும்; பெருந்தோட்டத்துறையிலுள்ள இந்திய தமிழர்களின் குடித்தொகை பலத்தை ஒட்டி எழுந்த அவர்களது அச்சஉணர்வினையும் அம்மக்களினை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றுவதற்கு கொண்டிருந்த உறுதியினையும் வெளிப்படையாக காட்டியது.

சுதந்திரத்தினை தொடர்ந்து 1949ல் சிங்கள தலைவர்களும் இந்திய தலைவர்களும் இணைந்து ஆடிய கபட நாடகத்தில் ஒத்துழைத்த இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக அமைச்சரவையில் இருந்த சி.சுந்தரலிங்கமும் சி.சிற்றம்பலமும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்திற்கு [Ceylon Citizenship Act no.18of 1948] ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சுமார் 700,000 பெருந்தோட்டத்துறை வாழ் தமிழர்களினை நாடற்றவர்களாக்கியதோடு அவர்கள் அன்றைய மக்கள்பிரதிநிதிகள் சபையில் கொண்டிருந்த ஏழு அங்தத்துவத்தினையும் பல பத்தாண்டுகளுக்கு இல்லாது ஒழித்தனர். 

இச் சட்ட மூலத்திற்கு எதிராக ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் உட்பட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஏனைய அங்கத்தவர்கள் வாக்களித்தனர். தனது தவறினை உணர்ந்து அமைச்சரவைப்பதவியினை உதறித்தள்ளிய சி.சுந்தரலிங்கத்தினைத் தொடர்ந்து கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சராக ஜீ.ஜீ. பொன்னம்பலம் பொறுப்பேற்றார். 

அதே ஆண்டில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் பிரஜா உரிமைச்சட்டம் [Indian and Pakistani Residents –Citizenship- Act of 1949] என்ற சட்டத்திற்கு ஆதரவாக மீன்பிடி அமைச்சரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் வாக்களித்ததன் மூலம் பெருந்தோட்டத்துறையில் தங்களது இரத்தத்தினையும் வியர்வையினையும் சிந்தி இந்தத்தீவின் செழுமைக்கு உரமிட்ட பல இலட்சம் மலையக மக்கள் மீண்டும் தங்கள் வாக்குரிமையினைப் பெறமுடியா வண்ணம் சிங்கள தேசியவாதிகள் போட்ட இறுதி முடிச்சிற்கு துணைநின்றார். 

அன்று மெத்தப்படித்த மூன்று தமிழ் பிரதிநிதிகளும் [சி.சுந்தரலிங்கம், சி.சிற்றம்பலம், ஜீ.ஜீ. பொன்னம்பலம்] மலையக மக்களுக்கு எதிராக வரலாற்றுத் தவறினைச் செய்திருக்காவிடில் இன்று இலங்கைத்தீவில் தமிழர்கள் உறுதியாக பேரம்பேசக்கூடிய மக்கட் தொகையுடனும் அரசியற்பலத்துடனும் கூட்டாக தம்மை நிலை நிறுத்தியிருக்க முடியும்.

1976ல் தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் [TULF] உருவாக்கத்தினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள்ஆணையினை கோரி 1977ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி களமிறங்கியது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயசூரியன் சின்னத்திற்கு அத்தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கும் ஆணையாக கொள்ளப்படும் என பிரகடனப்படுத்தப்பட்டது. 

இக்குறிக்கோளினை உறுதிசெய்வதற்காக பட்டி தொட்டியெங்கும் தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் முதியவர் என அனைவரும் ஆண் பெண் வேறுபாடின்றி இரவு பகலாக உழைத்து தேர்தல் முடிவுகள் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை மக்கள் ஆணையாக மாற்றினர். 

எனினும் மிகவும் வருந்தத்தக்க விடயம் யாதெனில் தனக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அத்தேர்தலில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் புதல்வர் குமார் பொன்னம்பலமும் அவரது சகாக்களும் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவரால் அத்தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது மட்டுமன்றி வட்டுக்கோட்டை தீர்மானத்தினை மக்கள் ஆணையாக மாற்றும் முயற்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய வாக்குகள் சிதறிப்போவதற்கும் காரணமானார். 

பிற்காலத்தில் அவர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு மிக்க சட்டவாதியாக தன்னை அர்ப்பணித்திருந்தாலும் விடப்பட்ட தவறு வரலாற்றுப் பதிவாக மாறியுள்ளது.

1977 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரை கட்சியினுள் கொண்டிருக்கக்கூடிய தலைமைத்துவ செல்வாக்கினை பலவீனப்படுத்துவதற்காக அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தினால் காசி ஆனந்தன் போட்டி வேட்பாளராக முன்மொழியப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னமும் அவருக்கு வழங்கப்பட்டது. வடக்கிலிருந்து சென்ற பெரும்பாலான அமிர்தலிங்கம் சார்பு பேச்சாளர்கள் காசி ஆனந்தனுக்காகவே பரப்புரைகளில் ஈடுபட்டனர். எனினும் செல்லையா இராசதுரை தனது முதன்மை இடத்தினை தக்கவைத்துக்கொண்டார்.

1977 நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியனுக்கு விழும் வாக்குகள் யாவும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான ஆணை எனக்கூறிய அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தனது எதிராளியான செ.இராசதுரையினை வீழ்த்துவதற்காக தமிழரசுக்கட்சி சின்னத்தை பயன்படுத்தியது மற்றுமொரு வரலாற்றுத் தவறாகும். 

1981ல் சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை முறைமைகள் அர்த்தமற்றதும் போலியான அதிகாரங்களினைக்கொண்டதும் ஆகையால் அதற்கான தேர்தலில் பங்குபற்றுவது தமிழ்மக்களின் ஒருங்கிணைந்த பலத்தினைச் சிதைக்கும் என தமிழ் இளைஞர்கள் விடுத்த வேண்டுகோளினையும் புறந்தள்ளி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் குதித்தது. 

முடிவாக மாவட்ட அபிவிருத்திச் சபைத்தலைவருக்கான சிம்மாசன இருக்கையினை வடிவமைத்து தயாரித்தது மட்டுமே இறுதி விளைவாகியது. அன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கொண்டிருந்த இறுக்கமான நிலைமையும் பிற்காலத்தில் தமிழ் இளைஞர்கள் பல பிரிவுகளாக சிதறுவதற்கு ஊக்கமளித்தது. 

2010ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகளினைத் தொடர்ந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரோடு இணைந்தவர்களும் தமிழ் தேசிய கூட்டமைபபிற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். 

தமிழர்களினைப் பெரும்பான்மையாக கொண்ட வடமாகாணத்தின் தேர்தல் தொகுதிகளில் இவ்வாறு பிரிந்து நின்று போட்டியிடுவது அதிக பாதிப்பினைத் தராது. ஆனால் மிகவும் சிறிய எண்ணிக்கையான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர்களது பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தில் இத்தகைய முயற்சிகள் மிக ஆபத்தானவை. இதனைப் புரிந்து கொள்ளும் பக்குவமற்று இராஜவரோதயம் சம்பந்தனுக்கு பாடம்படிப்பிக்கப்போகின்றோம் என்று சவால் விட்டுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் கொண்ட எதிர்அணியினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக திருகோணமலையில் நிறுத்தியமை அண்மைக்காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்ட மற்றுமொரு வரலாற்று தவறாகும். 

தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தினை வழிநடத்த முற்பட்ட கட்சிகளும் இயக்கங்களும் தமது தீர்க்க தரிசனமான சிந்தனைகளுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட்டாலும் அவ்வப்போது எடுக்கும் சில தீர்மானங்களும் மூலேபாய செயற்பாடுகளும் இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் அரசியல் இருப்பிற்கும் சமூக பொருளாதார வலுவூட்டலுக்கும் நிரந்தர அச்சுறுத்தலாக மாறிவிடுகிறன என்பதற்கு மேலே சுட்டிக்காட்டப்பட்டவை சில உதாரணங்களாகும்.

கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்த தேசியவாதிகள் இலங்கைத்தீவினுள் தமிழ்மக்களின் இனத்துவ அடையாளத்தினையும் அரசியல் இருப்பினையும் பொருளாதார ஆளுமைகளினையும் சமூககட்டமைப்பினையும் தகர்த்தெறிவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தினை சலிப்பின்றி முன்னெடுத்து வருகின்றனர். 

இன்றைய இலங்கைத் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய எதிரி அவர்கள் கொண்டிருக்கும் சனத்தொகை வளர்ச்சி வீத தேய்வும் இளைப்பாற்று சம்பள வாய்ப்புடன் கூடிய மாதச்சம்பளத்தினை வழங்கக்கூடிய அரச உத்தியோகத்தின் மீதான மாயையும் ஆகும். இவ்விரண்டு விடயங்களும் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் எனக் குறிப்பிடும் வடக்கு கிழக்கு நிலப்பகுதியினையும் அதன் வளத்தினையும் கட்டுப்படுத்தி ஆளுமை செய்வதற்கு மிகப்பெரும் இடையூறாகும். 

எனவே தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான அரசியல் விடுதலைப் போராட்டங்களினை முன்னெடுக்கும் தலைமைகள் யாவும் போராட்டத்தினை வெற்றி கொள்வதற்கும் தமிழ்மக்களின் இருப்புநிலையினை தக்கவைப்பதற்கும் இடையில் ஒரு பொருத்தமான சமநிலையினை மிகக் கவனமாக கட்டியெழுப்பி பேணவேண்டும். போராட்டத்தின் பேரால் சமூகத்தின் ஒட்டுமொத்த இருப்பினையும் அபாயத்திற்கு உள்ளாக்குவது அல்லது சமூகத்தின் நிகழ்கால இருப்பையும் நலன்களினையும் மட்டும் முன்னிறுத்தி உரிமைக்கான போராட்டத்தினை தவிர்ப்பது இரண்டுமே ஈற்றில் சமூகத்தின் அழிவுக்கே வழிகோலும். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் பல படிமுறைகளாக வளர்ந்து விரிவுபெற்று முறைசாரா அரசாக பரிணமித்தாலும், எங்கோ ஒரிடத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய மூலோபாயத்தவறு காரணமாக இன்று ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தினையுமே கையறு நிலைக்கு இட்டுத் தள்ளியுள்ளது. உரிய தருணத்தில் மேற்கொள்ளத்தவறிய அணுகுமுறை மாற்றம் சிங்கள பௌத்த தேசிய வாதிகளின் இனஅழிப்பு நிகழ்ச்சி நிரல் விரைவு படுத்துவதற்கான வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

1980கள் வரை அபிவிருத்திக் கொள்கைகளாலும் குடியேற்றத்திட்டங்களாலும் நிர்வாக பொறிமுறைகளுக்கு ஊடாகவும் அடைய முடியாத தமிழின அழிப்பு இலக்கினை 1980ம் ஆண்டிற்கு பின் இராணுவ நடவடிக்கைகளாலும் பொருண்மிய தடைகளினாலும் முழுமையான போர் அழிவுக்கு ஊடாகவும் 2009 வரை முன்னெடுத்தனர். 

அவற்றிற்கும் மேலாக தப்பிப் பிழைத்திருக்கும் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பினையும் பண்பாட்டுச் செழுமையினையும் மனிதவள ஆற்றல்களினையும் பொருண்மிய மேம்பாட்டுக்கான மூலதனத்திரட்சியினையும் சிதைத்து சின்னாபின்னமாக்குவதற்காக இராணுவ கட்டளைப் பீடத்தின் கீழ் முடக்கப்பட்ட சிவில் நிர்வாக பொறிமுறையினையும் சட்டத்திற்கு புறம்பான ஆயுததாரிகள் அணியினையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். 

இத்தகைய சூழ்நிலையில் ஆகக்குறைந்த பட்சம் தமிழ் சமூகத்தின் மீதும் அவர்களது இருப்பின் மீதும் இருப்பிற்கான வளங்கள் மீதும் ஏற்படுத்தப்படும் அழிவுகளினைக் மட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மாகாணசபையின் அதிகார கட்டமைப்பினை தமிழ்மக்களின் உரிமைசார் போராட்டத்தினை முன்னெடுப்பவர்களோ அவர்கள் சார்ந்த அணியினரோ கைப்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். 

இரண்டாவது வினா: தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதத்திலும் திருப்தி தராத 13வது திருத்தச்சட்டத்தினை தமிழ்மக்களும் அவர்களது அரசியற் தலைமைகளும் ஏன் தூக்கியெறிந்துவிட்டு முற்று முழுதான தன்னாட்சியுரிமையினை மட்டும் வலியுறுத்தி நிற்கக்கூடாது? 

சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் சிங்கள பெரும்பான்மை மக்களும் தாங்களாக விரும்பி தமிழ்மக்களினதோ அல்லது ஏனைய தேசிய இனங்களினது உரிமைகளினையோ அங்கீகரித்து வழங்கப்போவதில்லை என்பது வரலாற்றுப்பாடமாகும்.

அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களும் வலுவான வெளிச்சக்திகளின் நிர்ப்பந்தங்களும்தான் அவர்களினை பணியவைக்க முடியும்.

13வது சட்டத் திருத்தம் என்பது வெறும் அதிகாரப்பரவலாக்கலுக்கான விடயம் எனக்கொண்டாலும் இதற்கும் அப்பால் அதன் பின்னணியில் மூன்று முக்கிய விடயங்கள் அமைந்துள்ளன. 

முதலாவது, இலங்கையில் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் இலங்கைத்: தீவின் நீண்ட புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சனையின் மீதும் இந்திய பிராந்திய வல்லரசுக்கு இருக்கக்கூடிய தார்மீக கடப்பாட்டினை மீளவும் வலியுறுத்துவதற்கான ஆவணமாக 13வது திருத்தமும் அதனோடு இணைந்த இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்களும் அமைந்துள்ளது. எனவே மற்றுமொரு வலுவான அனைத்துலகத்தின் கடப்பாட்டுடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்படும் வரை இந்த 13வது சட்டத் திருத்தத்தினையும் அது சார்ந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் தமிழ்மக்கள் தூக்கியெறிய முடியாது. 

இரண்டாவது, 13வது திருத்தமும் அதனோடு இணைந்ததாக சிறீலங்கா-இந்திய தலைவர்களினால் ஒப்பமிடப்பட்ட சமாதான ஒப்பந்த சரத்துக்களில் மிகத் தெளிவாக இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியமும் அதன் தொடர்பறாத நிலமும் தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இரண்டு தேசங்களின் தலைவர்களும் எழுத்து மூலமாக ஏற்று பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே 13வது திருத்தத்தினையும் சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்களினையும் தற்போதைய நிலைமையில் புறக்கணித்தல் மேலும் சிக்கலான நிலைக்கு தமிழ்மக்களினை இட்டுச்செல்லும். மாற்றுத் தெரிவுகளுக்கு ஊடாக தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை இவ் ஆவணத்தொகுதி பெயரளவிலாவது பயன்படுத்தப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகும். 

மூன்றாவது, 13வது திருத்தத்தின் கீழ் தான் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு நிர்வாக அலகாக சிறீலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் 13வது திருத்தத்தின் மேலும் ஒரு முக்கிய விடயமாகும். தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களின் தொடர்பினை உறுதிப்படுத்தக்கூடிய புவிசார் அரசியல் நிர்வாக கட்டமைப்பு உருவாகுவதற்கு இவ்விடயம் அடித்தளமாக அமையும். 

[*கட்டுரையின் இறுதியில் இந்திய-இலங்கை உடன்பாட்டின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது]

எனவே மேற்குறிப்பிட்ட மூன்று வலிதான காரணங்களுக்காக 13வது திருத்தத்தினை தொடர்ந்து வலிதான ஆவணமாக நடைமுறையில் பேணுதல் எமக்கு அவசியமாக உள்ளது. 

தமிழர் கட்சிகளின் எதிர்காலமும் அணுகுமுறை மாற்றத்திற்கான அவசியமும் : 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாக தமிழ்மக்களின் அரசியல் நலன்களில் அக்கறை கொண்டவர்களிடம் ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளதனை இங்கு பதிவு செய்ய வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியற்கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகளும் நம்பிக்கையீனங்களும் தொடர்ந்து காணப்படுகின்றன. இதற்கான அடிப்படைக்காரணம் தற்போதைய தலைவரான இரா.சம்பந்தனுக்கு அடுத்து தலைமைப் பதவியினை கட்டுப்படுத்துவது யார் என்கின்ற போட்டியும் தமிழ் தேசியம் தொடர்பான கற்பு நிலையில் யார் உறுதியானவர்கள் என்ற சந்தேகமும் தான்.

அண்மையில் மன்னார் ஆயர் இராயப்பு அவர்களினை சந்தித்து கலந்துரையாடிய இரா.சம்பந்தனும் மதியாபரணம் சுமந்திரனும் தெரிவித்ததாக செய்திகளில் வந்த கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவேண்டியவை. 

அவர்கள் இருவரினதும் கருத்துப்படி « தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் யாவும் வன்முறை சார்ந்த வழி முறையில் வளர்ந்தவர்கள். எனவே அவர்களினை உள்ளடக்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் நிரம்ப தடைகள் இருக்கும். சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளரிடமிருந்து கட்சியாக பதிவதற்கான அனுமதியினை பெற முடியாது ». 

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தால் அவர்கள் வரலாற்றிலிருந்து படிப்பினைகள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். தமிழ் இளைஞர்கள் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்றால் அதற்குரிய முழுமையான பொறுப்பு தளபதி அண்ணன் அமிர்தலிங்கத்திற்கும் அவர்சார்ந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அதன் மூலக்கட்சியான தமிழரசுக்கட்சிக்குமே உரியது. 

“துரோகிகள் துலைக்கப்படவேண்டும்” என வீர வசனங்களினை மேடைதோறும் பேசி தமிழ் இளைஞர்களினை உருவேற்றி சொந்த இனத்தின் குடிமக்களினையும் சகோதர இயக்க அங்கத்தவர்களினையும் ஈவிரக்கமின்றி கொன்றொழித்த கொலைக்கலாசாரத்தின் விளைநிலமே முன்பு குறிப்பிட்ட அரசியற்கட்சிகள் தான். 

தளபதி அமிர்தலிங்கம் கூட தனது மூத்த மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து ஒளிப்படமெடுத்து அதனை தமிழ்த் தேசிய இராணுவத்தளபதி என இந்திய அதிகாரிகளுக்கு காட்டியதாக அரசல்புரசலாக ஒரு கதை உண்டு. 

இவ்வாறிருக்க வன்முறை சார்ந்த முன்னைய இயக்க போராளிகளின் அமைப்புக்களினை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய முடியாது என்ற வாதம் ஏற்கமுடியாதது. 

கடந்த காலத்தில் இவ் அமைப்புக்கள் எல்லாம் அரசியற் கட்சிகளாக சிறீலங்காவின் தேர்தல் சட்டங்களின் கீழ் தம்மை பதிவு செய்திருந்ததும் பல தேர்தல்களில் போட்டியிட்டிருந்ததனையும் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள அமைப்புக்கள் தங்களது கடந்தகால செயற்பாடுகளினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி தமிழ்மக்கள் மத்தியில் எழக்கூடிய சந்தேகங்களினை நிவர்த்திசெய்ய உடனடியாக முன்வரவேண்டும். அத்துடன் மிகவும் நேர்மையாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடன் மற்றவர்களின் பங்களிப்புக்களினையும் அர்ப்பணிப்புக்களினையும் ஏற்று மதிப்பளித்து கடந்தகால தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் அப்பால் அங்கீகரிக்கும் உயர் நிலைக்கு நம் அனைவரையும் உயர்த்த வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் திட்டங்கள் நிகழ்ச்சிகளை தயாரித்தல் தீர்மானங்களினை மேற்கொள்ளல் ஆகியவவை தொடர்பில் உட்கட்சி சனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் வளர்த்தெடுக்கப்படுவதோடு ஒவ்வொருவரும் தங்கள் சிந்தனைகள், செயல்கள், தொடர்பாடல்கள், உரையாடல்கள் தொடர்பான உயர்ந்த பட்ச நம்பகத்தன்மையினை கட்சிக்கு உள்ளேயும் மக்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவேண்டும். 

உணர்ச்சி வயப்பட்ட அறிக்கைகளும் மறுப்பறிக்கைகளும் தேர்தல் வெற்றியினையும் பதவி செல்வாக்கு சார்ந்த செயற்பாடுகளையும் தவிர்ப்பது ஆரோக்கியமான கூட்டுச் செயற்பாட்டிற்கு அடித்தளமாகும். 

இறுதியாக : 

கட்டியங் கூறப்பட்டுள்ள வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது நடைபெற்ற அன்று தான் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும். எனினும் தமிழ்மக்களின் இன்றைய அரசியற்தலைவர்களிடம் மக்கள் சார்ந்த பாரிய கடமைகள் கையளிக்கப்பட்டுள்ளன. அரசியல் அதிகார வலுவற்ற மாகாணசபைக்கு தலைமை தாங்குவதற்கான போட்டிக்கான நேரம் இதுவல்ல. சிறீலங்காவின் நாடாளுமன்றத்திறகுள்ளும் அனைத்துலக மட்டத்திலும் தங்களது ஆற்றல்களையும் நேரத்தினையும் முழுமையாக அர்ப்பணிக்கவேண்டியுள்ளது. 

வடக்கு மாகாண நிர்வாகத்திற்கு இன்று வேண்டியது அரசியல் தலைமையல்ல. தமிழ் மக்களின் அரசியல் வேணவாவினைப் புரிந்துகொண்டு அவர்களது ஆளுமைக்கும் தன்னம்பிக்கைக்கும் மனப்பாங்கிற்கும் வலுவேற்றக்கூடிய தலைமையே தேவை.

தனிமனித ஆளுமையும், நிர்வாகத்திறனும், பன்மொழி ஆற்றலும், சட்டத்தின் நுணுக்கங்களினை உய்த்துணரக்கூடிய வல்லமையும், கறைபடியாத கரங்களும், தேவைப்படும் போது நெற்றிக்கண்ணைக் திறக்கக்கூடியவருமான ஒருவரே இதற்கு மிகப்பொருத்தமானவர்.

செய்திகளில் குறிப்பிடுவது போல் இளைப்பாறிய நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றவர்கள் இத் தலைமையினை ஏற்க முன்வருவார்களேயானால் அது இன்றைய நிலையில் தமிழ் சமூகத்திற்கான நல்வாய்ப்பாகவே கொள்ளப்படவேண்டும். தமிழர் உரிமைக் கட்சிகள் ஒன்றிணைந்து அவருடன் ஈடுகொடுத்து பணியாற்றக்கூடிய ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களினை தங்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தேடிக்கண்டறிந்து முன்மொழிய வேண்டும். 

மாகாண சபைத் தேர்தலுக்கு பொது அணியினரை சுயேட்சைக்கட்சியினராக முன்வைப்பதில் உள்ள சாதக பாதகங்களினை விரிவாக ஆராய வேண்டும்.

இலங்கையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள அரசியற் கலாசாரம் கட்சி தாவுதல், மாற்றுக்கட்சி உறுப்பினரை கடத்திச்செல்லல், பெருந்தொகைப் பணங்கொடுத்து விலைக்கு வாங்குதல், ஊழல்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டியபின்பு அவற்றைக் காட்டி அச்சுறுத்தி பணியவைத்தல் ஆகிய விடயங்களால் செழிப்பு பெற்றுள்ளது. எனவே இத்தகைய சவால்களிலிருந்து அங்கத்தவர்களினை காப்பாற்றி கட்டுக்கோப்புடன் பணியாற்றக்கூடிய பொருத்தமான அமைப்பு வடிவத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் விரைந்து தீர்மானிப்பார்கள் என நம்புவோம். 

நாம் எல்லோரும் தவறு புரிந்தவர்கள், குறைபாடுகளை உடையவர்கள், கைகளில் கறை படிந்தவர்கள் தான். எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் எமது தவறுகளுக்காக உயரிய விலை செலுத்தியவர்கள் பொதுமக்களும் சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும் இளையோருமே. மீண்டும் மீண்டும் தவறிழைக்காமல் கூட்டாக முன்செல்வது எப்படி என்பதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கும்.

*இணைப்பாக : Indo-Sri lankan Agreement






Sunday, December 2, 2012

அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகும் தமிழர்களின் போராட்டம்


அடுத்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண அரசாங்கம் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அரசியல்தீர்வு ஒன்றை அடைவதற்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக அவர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவுமே இப்போது முன்னெடுக்கப்படாத சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியமானதொன்றாகவே கருதப்படத்தக்கது. 

ஏனென்றால், போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கழித்தும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான எந்த முன்முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் கூட, ஏதோ பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டது போலவே அமைந்துவிட்டது. உருப்படியான தீர்வு முயற்சிகளில் இருந்து விலகிச் சென்ற அந்தப் பேச்சுக்கள் முடங்கிப்போய் பலகாலமாகி விட்டது. மீளவும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்ட போதும், அவை பயனளிக்கவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்பது அரசின் பிடிவாதமாக உள்ளது. தெரிவுக்குழுவுக்குத் தாம் வர முன்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஓர் இணக்கப்பாட்டுக்கு அரசாங்கம் வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது. 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்பில் இருந்து நழுவிச் செல்லவே விரும்புகிறது. ஒரு தீர்வை முன்வைத்து சிங்களத் தேசியவாத சக்திகளின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தின் நகர்வுகள் அடுத்தடுத்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டே அமைந்துள்ளன. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள போதும், தமது அரசியல் நலன்களை புறக்கணித்து இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு காண்பதற்கான துணிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இல்லை என்பது வெளிப்படையாகியுள்ளது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போயிருந்தால், சிலவேளை அவரிடம் அந்த துணிவு வந்திருக்கக் கூடும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்தைச் செய்து, அடுத்தமுறையும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடக் கூடிய சூழலை உருவாக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு அந்தத் துணிவு வருவது கடினமானதே. இன்னொரு பதவிக்காலம் பற்றிய எதிர்பார்ப்பும் கனவும், அரசியல்தீர்வு குறித்த துணிச்சலான முடிவை எடுக்க அவருக்கு தடையாக உள்ளது. 

தமது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு சில காலங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறைவேற்று அதிகாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எல்லாமே இருந்தும், தெரிவுக்குழு என்று இனப்பிரச்சினைத் தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம். தெரிவுக்குழுவில் வைத்து, 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான ஒரு கனவிலும் அரசாங்கம் உள்ளது. இதுவும் தெரிவுக்குழு என்ற பொறியை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு ஒரு காரணம். 

தெரிவுக்குழுவில் பெரும்பாலும் ஆளும்கட்சி உறுப்பினர்களே இருக்கும் நிலையிலும், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகமாக இருக்கின்ற சூழலிலும், தமிழருக்கு சாதகமான எந்தவொரு தீர்வையும் அதன் வழியாகப் பெற முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சம். இத்தகைய சூழலில் தான், அரசியல்தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்று எட்டப்படும் என்ற உறுதிப்பாட்டைக் கொடுத்தே, அரசாங்கம் போரில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த உறுதிப்பாட்டை அரசாங்கம் காப்பாற்றவில்லை. காப்பாற்றவும் போவதில்லை. ஏனென்றால், அரசாங்கம் ஓர் அரசியல்தீர்வை எட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தால், அதை இந்த மூன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடித்திருக்கலாம். இதனால், அரசின் வாக்குறுதிகள் நம்பகத்துக்குரியதல்ல என்ற கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களிடம் உருவாகியுள்ளது. 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட அரசாங்கம், சூட்டோடு சூடாக ஓர் அரசியல்தீர்வு முயற்சியில் இறங்கியிருந்தால், தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் போர் வெற்றியின் பின்னர் தன்னையும் தனது அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொள்ளவே இந்தக் காலத்தைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய பின்னணியில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த உண்ணாவிரத எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ஓர் ஆண்டு காலக்கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காது போனால், அவரது உண்ணாவிரதப் போர் இடம்பெறுவது உறுதியாகவே இருக்கும் என்று நம்பலாம்.ஏனென்றால், ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல்கட்சியின் தலைவராக உள்ள அவர், இந்த எச்சரிக்கையை விடுத்து விட்டு சும்மாயிருந்து விடமுடியாது. அதேவேளை, அவரது இந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் ஏற்கத் துணிவார்களா என்பது கேள்விக்குரியது. அதுபற்றி யாரும் இதுவரை வெளிப்படையாக கருத்துக் கூறவில்லை. எவ்வாறாயினும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்பதையும், தொடர்ந்து ஏமாறத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தும் இத்தகையதொரு போராட்டம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது. 

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் பயங்கரவாத முத்திரை மூலம் அடக்கப்பட்ட பின்னர், அந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் ஒரு நிகழ்வாக இத்தகைய உண்ணாவிரதம் அமையும். சாத்வீக ரீதியில் முன்னெடுக்கப்படத்தக்க எந்தவொரு போராட்டத்தையும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போல அரசாங்கத்தினால், இலகுவாக அடக்கிவிட முடியாது. அதுமட்டுமன்றி, விடுதலைப் புலிகளுக்கு கிடைக்காத சர்வதேச அரசியல் அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பெற்றுள்ளது. அதன் தலைவர் ஒருவர், அரசியல்தீர்வுக்காக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக் கொண்டு சர்வதேச சமூகம் சும்மாயிருக்காது. ஷிரானி பண்டாரநாயக்கவை தலைமை நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பை விடவும், கடுமையான நெருக்கடி, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் ஏற்படுத்தப்படும். 


இப்போது ஏற்பட்டுள்ள மௌனத்தை – தேக்க நிலையை உடைப்பதற்கு நிச்சயமாக – கனமான தாக்கத்தை ஏற்படுத்தத்தக்க அரசியல் போராட்டம் ஒன்றே தமிழர் தரப்புக்குத் தேவைப்படுகிறது. இல்லையேல் காலம் இழுத்தடிக்கப்படுவதுடன், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வும் எட்டாத தொலைவுக்குச் சென்றுவிடக் கூடிய ஆபத்து உள்ளது. இந்தநிலையில், தமிழ் மக்களின் சார்பில் பேசும் சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்குமேயானால், அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும். அரசியல்தீர்வு ஒன்றுக்கு இந்த நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், அது இன்னும் வலிமையானதாக - அரசியல்தீர்வுக்கு அருகே தமிழர்களைக் கொண்டு சென்று விடத்தக்கதாக இருக்க வேண்டும். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முனைகளில் தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உணர்ந்து கொண்டுள்ளார். அதேபோன்று கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள். இது தமிழர் தரப்பின் உச்சக்கட்ட வெறுப்பில் இருந்து - ஏமாற்றத்தில் இருந்து உருவாகியுள்ள சூழல். இதனை அரசாங்கம் எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை. 

இதை சாதாரணமானதொரு எச்சரிக்கையாகக் கருதி புறமொதுக்கிக் கொண்டால், அதன் விளைவு அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே அமையும். ஏனென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அடைய முடியாத தீர்வைத் தருமாறு கேட்கவில்லை. தமிழீழத்தையோ தனிநாட்டையோ கேட்கவில்லை. நியாயமான – சாத்தியமான அரசியல்தீர்வு ஒன்றைக் கோரும் அவரது எதிர்பார்ப்பு தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரியது அல்ல. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வன்முறை, பயங்கரவாதம் என்று காரணம் காட்டி ஒதுக்கித் தள்ளியது போன்று, இத்தகையதொரு போராட்டத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், விடுதலைப் புலிகளை ஒழித்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கு ஏதோ ஒருவகையில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகமும் காரணமாக இருந்தது. எனவே, சாத்வீகப் போராட்டம் ஒன்றை சர்வதேச சமூகம் ஒதுக்கி வைக்க முடியாது. ஆதரவு கொடுக்க வேண்டியிருக்கும். இப்படியொரு போராட்டம் நடந்தால், அது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களின் மற்றொரு எழுச்சியாக அமைந்து விடும். அதை அரசாங்கத்தினால் அடக்கவும் முடியாது, அடக்காமல் இருக்கவும் முடியாது. 

அவ்வாறு அடக்கப்பட்டால், வன்முறையாக வெடிக்கும் ஆபத்தும் உருவாகும். எனவே, கத்திமேல் நடக்கும் ஒரு பயணத்துக்கு தயாராவதை விட வேறு தெரிவு ஒன்று அரசுக்கு இருக்க முடியாது. தமிழர்கள் இன்னொரு போராட்டத்துக்குத் தயாராக முன்னர், அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பது தான் புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும். அத்தகைய அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் துணியுமா என்ற கேள்விக்கான விடையை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

கட்டுரையாளர் கே. சஞ்சயன் - இன்போ தமிழ் குழுமம்

Friday, November 23, 2012

'விடுதலைப்படைப்பாளி' கப்டன் மலரவன்




போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. 

கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், 'நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை' என பதிவு செய்துள்ளார். 

எழுத்துக்களுடன் வாழ்ந்த மலரவனின் படைப்புகள், அவரது வீரச்சாவிற்குப்பின் வெளியீடுகளாக வெளிவந்தன. அவற்றில் போர் உலா என்னும் படைப்பு இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான தேர்வில் முதல் பரிசு பெற்றமை அவரது படைப்பாளுமையின் தரத்தைச் சான்று பகர்ந்து நிற்கின்றது. மேலும், எனது கல்லறையில் தூவுங்கள் (சிறுகதை,கவிதைகளின் தொகுப்பு), மலரவனின் ஹைக்கூ கவிதைகள் (இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்), புயல் பறவை (நாவல்-வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிவு பெற்றது) என படைப்புகள் பல. இவை அத்தனையும் தனது இருபது வயதிற்குள் எழுதி முடித்தவர்.

ஒவ்வொரு போராளியும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுகிறான், உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படுகிறான் என்பதற்கு கப்டன் மலரவனின் வாழ்க்கையும் அதன் பின்னணியும் மிகச் சிறந்த சான்று. மலரவனின் தந்தை ஒரு வைத்தியர். கொழும்பில் வெடித்த 1958ம் ஆண்டு இனக்கலவரத்தில் சிக்குண்ட அவர் கடை ஒன்றுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியிருந்தார். அங்கும் வந்து அவரைத்தாக்க முற்பட்ட சிங்களக்காடையர்களை சோடாப்போத்தில்களால் தாக்கி விரட்டியடித்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். பின்னர் 1977ம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது சிங்கள வைத்திய நிர்வாகம் தமிழ் வைத்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்துத் தனது வேலையை இராஐpனாமா செய்துவிட்டு, மாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1985ம் ஆண்டு கொக்கிளாய் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளான போது போராளிகளுக்கான வைத்தியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கை, வவுனியாவில் எல் 3 எடுத்த தாக்குதல் என பல தாக்குதல்களின் போது களமுனை வைத்தியராக, காயமடைந்து வந்த  போராளிகளிற்குக் களத்திற்கு நெருக்கமாக நின்று சிகிச்சையளித்த ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மலரவனின் மற்றுமொரு அண்ணன்; மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டு, தியாகி திலீபன் அவர்களுடன் தொடங்கி விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தார். தேசப்பற்றுக் கொண்ட அக்குடும்பத்தின் புறச்சூழல்கள் சிறுவயதிலிருந்தே மலரவனுக்குள் விடுதலைத்தீயை வளர்க்கத்தொடங்கின.

யாழ்ப்பாணத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான சென் ஜோன்ஸ் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணவனாக விளங்கிய அவர், உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் முதலாவது வருடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் முதல் மாணவனாகத் தேர்வாகியிருந்தார்.  அந்த வேளையில்தான், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிங்கள அரசுடனான போர் முழு வீச்சில் தொடங்கியது. மலரவன், தனது கல்வியைத் துறந்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். மணியந்தோட்டம் பயிற்சி முகாமில் தனக்கான அடிப்படைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.
  
பயிற்சியை முடித்த பின், பசீலன் மோட்டார் பிரிவில் ஒரு மோட்டார் அணியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டு மீண்டும் அதற்கான பயிற்சியை தொடங்குகின்றார். 1990களில் சண்டையின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான பணி பசீலன் அணியையே சார்ந்திருந்தது. அந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. அவற்றைக் கையாளுவதற்கும்; துல்லியமான சூட்டை வழங்குவதற்கும் துல்லியமான கணிப்பீடுகள் மிகமுக்கியமானவை. அந்தப் கணிப்பீட்டுப் பணியிலும் அதனை நேர்த்தியாக இயக்குவதிலும் பெரும்பங்கு மலரவனுக்கு உண்டு. அதற்காகக் கடுமையாக உழைத்தார். பீரங்கிகளின் வேகத்தையும் தூரத்தையும் கணிப்பது தொடர்பில் கணிதத்தில் உள்ள விதிமுறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு செல்லின் நிறையையும் கணித்து ஒவ்வொன்றும் என்ன வாசிப்பில் விட்டு செலுத்தினால் அது இலக்கைத் தாக்கும் என்பதைப்பற்றிய கணிப்பீடுகளில் தனது நேரத்தை செலவிட்டுத் துல்லியமாகக் கணித்தார். அதற்கும் மேலாக, ஏனைய மோட்டார் அணியின், எத்தரத்திலுள்ள வீரர்களிற்கும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தது.

தனக்கு தரப்படும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அதை புதிய பரிமாணத்தில் அல்லது கோணத்தல் பார்க்கும் திறனும் அதைப்பற்றி மென்மேலும் சுயமாக அறிந்து மெருகேற்றும் திறனும் அவரை சிறந்த செயல்திறன்மிக்க போராளியாக இனங்காட்டியது. அதுவே குறுகிய காலத்தில் பசீலன் மோட்டார் பிரிவின் உதவிப் பொறுப்பாளர் என்னும் நிலைக்கு அவரை உயர வைத்தது. 

யாழ்கோட்டையில் இருந்து இராணுவம் தப்பியோடியது என்றால் அதன்பின்னணியில் பிரதானமான பங்கை வகித்தது பசீலன் படையணி. அந்தக்களமுனை தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, காரைநகர், ஆனையிறவு, மின்னல் என பல களமுனைகளில் வெற்றிகளில் பசீலன் மோட்டாருடன் பங்கு கொண்ட மலரவனின் பங்குகள் பெறுமதியானவை. 
சிங்களப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிங்களப்படைக்கு புளியைக் கரைப்பது பசீலன் செல்கள் என்பதனால் பசீலன் செல் அடிக்கப்படும் போது வெளிவரும் வெளிச்சத்தை கணிப்பிட்டு அப்பகுதியை நோக்கி கடுமையான செல்தாக்குதலை நடாத்தி பசீலன் தாக்குதலைக் கட்டுப்படுத்த சிங்களப்படை முயற்சிப்பது வழமை. அவ்வாறான சமயங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான செல்த்தாக்குதல்களின் மத்தியிலும் இயல்பாகவும் தெளிவாகவும் செயற்படும் அவரது துணிச்சல் மற்றைய போராளிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்றைக்கும் சோர்ந்து போனதில்லை.

சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போது வெட்டவெளியில் விமானக் குண்டு வீச்சுக்களின் மத்தியில் எவ்வித தடையரண்களும் இல்லாமல் முகாமிற்கு நேருக்கு நேரே பசீலனை வைத்துப் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அவர், செல் தாக்குதலில் காயப்பட்டு மரணத்தின் வாசல் வரை எட்டிப்பார்த்து, களமருத்துவமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணனின் கரங்களுக்குச் சென்று மீண்டுவந்தார்.

ஆ.க.வெ சமரில் ஆனையிறவு பிரதான முகாம் தாக்கியழிப்பில் பசீலன் மோட்டார் அணிக்குத் தலைமைதாங்கி, முகாமின் மையத்திலிருந்த கோபுரத்தைத் தனது துல்லியமான கணிப்பால் தகர்த்து விழுத்தி தனிமுத்திரையைப் பதித்தார். இத்தாக்குதலில் இவரது தந்தையும் அண்ணனும் களமுனை மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். இத்தாக்குதல் மட்டுமன்றி, மணலாற்றில் நடைபெற்ற மின்னல் எதிர்த்தாக்குதலிலும் குடும்பத்தில் மூன்று பேரும் பங்காற்றியது என்பது விடுதலைப் போராட்டத்தில் இக்குடும்பத்தின் பங்களிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.

பசீலன் படையணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபின்னர் யாழ்மாவட்டத்தின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து தனது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தயிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி முந்நகர்த்தியதில் பெரும் பங்கு மலரவனுக்குண்டு. அவை, சமூகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையின் கல்வி மீதும் அவர் கொண்ட தாகத்தின் வெளிப்பாடாக விளங்கின.

பின்னர் யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பணியாற்றினார். குறிப்பாக மாவட்ட இராணுவ அறிக்கைப் பொறுப்பாளராக இருந்தார். இதன்போது ஒவ்வொரு சண்டையிலும் பங்குபற்றுபவர்களிடம் சண்டையில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து சண்டை எவ்வாறு நடந்தது, அதில் திறமையாக செயற்பட்டவர்கள், திட்டத்தில் ஏற்பட்ட சரி பிழைகள், அடுத்த சண்டையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்ற ஒரு மதிப்பீட்டு இராணுவ அறிக்கையை செய்து, தளபதிக்கு சரியான நிலவரத்தைப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார். 

அக்காலப்பகுதியில், தெல்லிப்பளையில் வேவு நடவடிக்கை ஒன்றிற்காக பணியாற்றிக் கொண்டிருந்தவேளை எதிரியின் பதுங்கித்தாக்குதலில் வேவுப் பொறுப்பாளர் காயமடைந்தபோதும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு காயமடைந்தவரை கொண்டுவந்து சேர்த்தார். இது அவரது ஓர்மத்திற்கு எடுத்துக்காட்டு. 

அந்தநேரத்தில்தான் 1992ம் ஆண்டு பலாலி வளலாய் தாக்குதலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் சு.ப.தமிழ்க்செல்வன் அவர்களின் பகுதித் தாக்குதல் தொடர்பான சகலவிடயங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதுதொடர்பான விடயங்களை தளபதியுடன் பரிமாறும் வேலைகள் உட்பட தாக்குதலுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளில் தளபதிக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டார். 

எப்போதும் சண்டை நேரங்களில் மலரவணை கட்டுப்படுத்துவது கடினம். சண்டை தொடங்கினால் உடனே அங்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோலத்தான், அன்றைக்கும் சண்டை தொடங்கும்வரை தளபதியுடன் நின்ற மலரவனை திடீரெனக் காணவில்லை. தளபதி கோபத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில், களமுனைப்பகுதிக்குச் சென்று நிலமைகளை அவதானித்துவிட்டு தன்னால் இயன்றளவு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்த சேர்ந்த மலரவனைப் பார்த்த தளபதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு பொறுமையானார். நெகிழ்வாக, தன்னுடன் நின்று சிலவேலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மேலும் சீற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்த மலரவன் அவர் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். 

தாக்குதலில் பலத்த இழப்புகளைச் சந்தித்த இராணுவம், புலிகளுக்கு இழப்புகளைக் கொடுக்கும் நோக்குடன் பின்தளப்பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து வெடித்த மூன்று செல்களில் மலரவன் படுகாயமடைந்தார். அந்த இறுக்கமான நிமிடங்களை நினைவு கூர்ந்த தளபதி 'காயப்பட்டவுடன் களமருத்துவனைக்கு அவசரமாக அனுப்பினோம். என்னோடு நின்ற ஒருவர் வந்து மலரவனுக்கு கொஞ்சம் கடுமையாக உள்ளது, கால்துண்டாடப்பட்டுவிட்டது என்று கூறினார். கால் கழற்றினாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் அவன் இன்னும் எவ்வளவோ சாதனைகளைப் படைப்பான என்;று என் உள்ளுணர்வு அடிக்கடி வேண்டிக்கொள்கின்றது. ஏனெனில் பல நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருசிலர், இப்படியான நிலையிலும் அபரிமிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்பார்கள். அந்த வரிசையில் மலரவனும் ஒருவன் என்று நன்றாகத் தெரியும். இவ்வேளையில் எமக்கு அடுத்த களமுனையில் மலரவனது அண்ணன் - அவர் மேல் உயிரையே வைத்திருந்த சகோதரன் - வைத்திய கலாநிதியும் போராளியுமான அவர், எமது மருத்துவமனையில் நின்று பல போராளிகளின் உயிர்களைக் காக்கும் கடமையில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்....... தாக்குதல்கள் முடிந்து எம் நிலைகளுக்கு நாம் வருகின்றபொழுது எங்கள் உள்ளத்தை உருகவைக்கும் பேரதிர்ச்சி தரும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள்' என்று அந்தக் கணங்களை விவரித்தார். போர்க்களத்தில் ஆயுதங்களுடன் மட்டுமன்றி பேனாவுடனும் சுழன்று கொண்டிருந்த அந்த வீரன் மண்ணுக்காக வித்தாகி விட்டான். அதேவேளை, அவரது அண்ணன் அதிகாலை மூன்று மணிக்கு தம்பியின் வீரச்சாவுச் செய்தியை அறிந்திருந்த வேளையிலும் தொடர்ந்து அங்கு காயமடைந்து வந்துகொண்டிருந்த போராளிகளிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

மலரவன் என்னும் ஒரு போராளியை தமிழன்னை அவரைப் பெற்ற மலரன்னையிடம் இருந்து பறித்து எடுத்துவிட்டாள். அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை செய்தது. தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில்

மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! - இன்று
விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய்
விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே - இன்று
கதையாகி விட்டதே உன் சரிதை.

இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும்
அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் - இந்த
மண்ணின் விடியலே உன் கனவு – நீ
விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை!

மேலும் 'மலரவனிடத்தில் குறுகியகால அனுபவத்திற்குள்ளேயே அவனிடம் ஓர் தளபதிக்கே உரித்தான திட்டமிடும் ஆற்றலைப் பார்த்தேன். அவன் கதைப்பது மிகவும் குறைவு. இதை செயல் வடிவம் நிறைவுபடுத்திற்று. இது எங்கள் தலைவரிடம் இருக்கும் தனித்துவமான ஒர் உயர்ந்த தன்மை' என சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிவு செய்கின்றார்.

ஒற்றைவரியில் மலரவன் - போர்வீரன், வேவுப்போராளி, சிந்தனையாளன், தனக்குத் தரும் பணியை மெருகேற்றும் முயற்சியாளன், களத்தின் தேவையை விளங்கிச் சுயமாகச் செயற்படும் ஒருவன், சண்டையை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளன், படைப்பாளி, தீவிர உழைப்பாளி, என நீண்டு செல்லும் அவரது ஆளுமை பன்முகத்தன்மை வாய்ந்தது.

இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மலவரன் உட்பட 57 பேருக்கும் மற்றும் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களிற்கும் நாட்டுப்பற்றாளார்களிற்கும் நினைவஞ்சலியை செலுத்துவோம். விடுதலை வீரர்களின் சுவாசமான சுதந்திர விடுதலை என்னும் அடைவை நோக்கி தளர்வில்லாமல் ஒன்றாகப் பயணிப்போம். 

'ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது'  - தலைவர் பிரபாகரன் அவர்கள்.

Monday, November 5, 2012

அகில கால ஆபத்து


சர்வதேச கட்டமைப்புகள் உலக பொது நன்மைக்காக அல்லது உலக ஒப்பனைக்காக இயங்குபவை. பொது நியாயங்களை யும் பொது சட்டங் களையும் ஒவ்வொரு நாடும் எவ்வாறு கடைப்பிடிக்கின்றன என்பது தொடர்பிலும் அவை மீறப்படின் அது தொடர்பான ஆய்வினை நடத்தவுமே அவற்றால் முடியும்.

போர் முடிந்து 3 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கான நெருக்கடி குறைந்தபாடு இல்லை. இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் விடயங்கள் குறித்து உலக நாடுகளின் கரிசனை காரணமாக இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆனாலும் அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்திய இலங்கை, அதனூடே பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதென உலக நாடுகளுக்கு உறுதியளித்திருந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஏற்பட விருந்த நெருக்கடிகள் குறைக்கப்பட்டு சர்வதேச பொறிமுறையிலிருந்து இலங்கை தப்பித்துக்கொண்டது எனலாம்.

உள்நாட்டில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை நடைமுறைப்படுத்துவதென வெளி உலகுக்கு உறுதியளித்ததன் காரணமாக சர்வதேச பொறிமுறை தேவையற்ற தாக்கப்பட்டது.
ஐ.நா.சபையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் அமைதியான, மீறல்கள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுதல் என்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டது.

அதாவது வெளி அழுத்தங்கள் குறைக்கப்படுவதற்கு காரணம் ஆக்கப்பட்டது. இருந்தாலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளால் முன்மொழியப்பட்ட கருத்துக்களையோ உள்நாட்டு பொறிமுறை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்சினைகளையோ செவிசாய்த்து நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பூகோள கால மீளாய்வில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

*  இலங்கை அரசு, உள்நாட்டு புதிய யோசனைகளையோ திட்டங்களையோ இன்றுவரை முன்வைக்கவில்லை. 

* இலங்கையில் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக்காலம் இரண்டு தடவைக்கு மேலாக நீட்டப்பட்டமை குறித்தும், அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்த இணக்கப்பாடு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.

* வடக்கு கிழக்கில் இன்னமும் இராணுவ கெடுபிடிகள் அகற்றப்படவில்லை. அங்கு இராணுவ காவலரண்கள் தொடர்ச்சியாக பலப்படுத்தப்படுகின்றன.

*அத்தோடு பொதுமக்களின் அன்றாட வாழ்விலும், பொருளாதார விவகாரங்களிலும் இராணுவத் தலையீடுகள் அதிகரித்தே உள்ளன. 

* அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு கட்டுப்படுத்தப்படுவதுடன் சுதந்திரம் வரையறுக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

* காணாமற்போதல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

*மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிகழ்வுகளில் அரசியல் தலையீடுகள் அதிகார அடக்கு முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

*அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுவதுடன் பழிவாங்கப்படுகின்றனர். 

*ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளதுடன் அவை குறித்து நம்பகமான விசாரணைகளோ, சட்ட நடவடிக்கைகளோ சரியாக எடுக்கப்படவில்லை. 

*நீதித்துறையிலும் பழிவாங்கல்கள் அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இவை எதிர்கால நீதிச் செயற்பாடுகளை இல்லாது செய்யும் செயலாகும்.

இவ்வாறு பூகோள கால மீளாய்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவால் மீண்டும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பழைய பல்லவியை பாட முற்படுவதாகவும் அது ஆரோக்கியமாக இருக்காது எனவும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் வெளி அழுத்தங்களை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பில் பல்வேறு நாடுகளிடம் ஆலோசனை பெற்று வருகிறது. அத்துடன் உள்நாட்டில் மூடி மறைப்புக்களை மேற்கொள்வதன் ஊடாக பிரச்சினைகளை வெளித் தெரியாது தவிர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. சபை கூட்டத் தொடர்கள் வெறும் ராஜதந்திர அழுத்தங்களுடன் நின்றுவிடுவதால் உள்நாட்டில் நடைபெறக் கூடிய விடயங்கள் குறித்து உண்மையான தகவல்கள் வெளிவருவதில்லை. வெளி வந்தாலும் அவை ஓரிரு நாள்களுடன் தீர்ந்து போக்கும் பிரச்சினைகளாகவே பார்க்கப்படுகின்றன.

அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துமென பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியான போதும் அது பேசப்பட்ட அளவுக்கு இலங்கையில் எந்த ஓர் மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. இது போலவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் மீளாய்வு கூட்டத்தில் உலக நாடுகளில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்த பேசும் அறிக்கையாகவே இருக்கும்.

நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்படவுள்ள நிலையில் அது இலங்கைக்கு பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக பேச்சளவில் நின்றுபோகும் இந்த அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்பது சாத்தியமற்றது. அவ்வாறு அமைந்தாலும் போருக்குப் பின்னரான நிலைமைகளை காரணம் காட்டி அவ்வாறான நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் கோரவும் இலங்கை அரசு தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் அரசு தான் வென்றுவிட்டதாக எண்ணி மீண்டு மொரு இழுத்தடிப்புக்குத் தயாராகும்.

ஊடகங்களில் பேசப்படும் விடயங்கள் போல் இலங்கைக்கு ஆபத்து ஏற்படுமா? என்பதில் துணிச்சலாக இல்லை என்றே சொல்லிவிடலாம். "பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை' என்பது போல வெளி அழுத்தங்களும் பேச்சளவிலேயே நின்றுபோவதால் துணிச்சலாக தனது செயற்பாடுகளை முன்னெடுக்க இலங்கை அரசு தவறவில்லை.

தமிழ் மக்களுக்கு  இருக்கக்கூடிய அதிகாரங்களைப்  பறித்தெடுத்துவிட்டால் அவர்கள் எதையும் பேசியோ போராடியோ பெறமுடியாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. அதாவது மாகாண சபைகளின் அதிகாரங்களை இல்லாது ஒழிப்பதன் மூலமோ அல்லது மாகாண எல்லைகளை மீள் வரையறைக்கு உட்படுத்து வதன் மூலமோ வடக்கு கிழக்கு மாகாணங்களை வேறு மாகாணங்களுடன் இணைத்து நிர்வகிக்கவும் அரசு முயன்றுவருகிறது.

இதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல என்பதை நிறுவுவதே அரசின் முயற்சியாக உள்ளது. வெளி அழுத்தங்களுக்கு அஞ்சி இலங்கை அரசு இன்றுவரை செயற்படவில்லை. வெளிப்படையாகவே இதனை ஒருமுறை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். மஹிந்த சமரசிங்கவுக்கோ, சவேந்திர சில்வாவுக்கோ நாம் நினைப்பதைப் போல் எந்த நெருக்கடியும் இல்லை.

அவர்கள் ராஜதந்திரிகள் என்ற வகையில் எல்லா மரியாதைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். மாநாடுகளின் போது சிலருக்கிடையே ஏற்படும் வாய்த்தர்க்கம், விவாதம் என்பவை சில நாள்களோடு முடிந்து போவது போல இவர்களிடமும் சில இடக்கு முடக்கான கேள்விகள் எழுப்பப்பட்டாலும் மாநாடு முடிந்து வெளியே வரும்போது கை குலுக்கி செல்கின்றனர்.

இவற்றை வைத்துக்கொண்டு இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் சர்வதேசம் முழுக்கரிசனை கொண்டிருந்தது என்பதை தீர்மானிக்க முடியாது, அல்லது கைவிட்டுவிட்டது என்றும் சொல்லமுடியாது. அவர்கள் உலக பொது நன்மைக்காக அல்லது உலக ஒப்பனைக்காக இயங்குபவர்கள். பொது நியாயங்களையும் பொது சட்டங்களையும்  ஒவ்வொரு நாடும் எவ்வாறு கடைப்பிடிக்கின்றது என்பது தொடர்பிலும் அவை மீறப்படின், அவை தொடர்பான ஆய்வினை நடத்தவுமே அவர்களால் முடியும்.

இந்த பொது விதிகளின்பால் அவர்களை முற்றுமுழுதாக நம்பி ஓர் இனம் அல்லது ஒரு நாடு இருக்க முடியாது. அவ்வாறு இருப்பதும் நியாயமானதல்ல. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ஞானியாகவும் மேதையாகவும் தன்னை காட்டிக்கொள்ள முற்படுபவர். அதாவது எதையும் சொல்ல மாட்டேன்; செய்து காட்டுவேன் என்ற சவால் விடும் எண்ணத்துடன் இயங்குபவர்.

சில ஏவலாளர்களை இதற்கென நியமித்து வைத்திருக்கும் அவர் நாட்டில் வரக்கூடிய பெரிய பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென காட்டிக்கொள்வார். அதாவது 13 ஆவது அரசியல் சீர் திருத்தம் இல்லாதொழிக்கப்படும் எனவும் ஒழிக்கப்படாதெனவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தபோதும் அது தொடர்பில் மஹிந்த மௌனமாகவே இருக்கிறார்.

மொத்தத்தில் பேச்சு வேறு செயல் வேறு என்ற அடிப்படையிலேயே எல்லா நகர்வுகளும் இடம்பெறுகின்றன. நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஓர் இனம் மட்டுமே தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கிக்கொண்டுள்ளது.  இது இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்படும் ஆபத்து என சொல்லிக்கொண்டாலும் அது தமிழ் மக்களுக்கு ஏற்படும் ஆபத்தாகவே பார்க்கப்பட வேண்டும்.

உலக நாடுகளின் நெருக்குதல்கள் ஓர் அளவோடு நின்றுபோக இலங்கை அரசின் நெருக்குதல்கள் தமிழ் மக்கள் மீது தொடருமானால் பூகோள கால ஆபத்து தமிழ் மக்களுக்கே என்றாகிவிடும். இதில் இருந்து தப்பிக்க தமிழ் மக்களுக்கென்று அரசியல் பலம் எதிர்காலத்தில் தேவையான ஒன்றாகவே இருக்கும். அதை அனைவரும் நினைவுறுத்திக் கொள்வதே கடப்பாடாகும்.       

விகேஎம்     
நன்றி - உதயன்

Sunday, November 4, 2012

இன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....?

போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்தவாரம் வங்கக் கடலில் உருவான ‘நிலம்‘ புயல் முல்லைத்தீவைத் தாக்கப் போவதாக பயமுறுத்தி விட்டு, தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து போனது. இந்தப் புயல், விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் வெளியே கொண்டு வந்து விட்டது. இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் - கடற்கரை மணலில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த 5 ஆட்டிலறிகள், ஒரே நேரத்தில் படையினரின் கண்களில் அகப்பட்டன. இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பல ஆட்டிலறிகளை இலங்கை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். 

வாகரையிலும், தொப்பிக்கலவிலும், புதுக்குடியிருப்புக்கு மேற்கேயும், ஆனந்தபுரம் சமரின் போதும், தேவிபுரம் காட்டுப் பகுதியிலும் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகளை இலங்கைப் படையினர் கண்டுபிடித்திருந்தனர். ஆனால், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் ஒரு ஆட்டிலறி கூட இராணுவத்தினரின் கைகளில் சிக்கவில்லை. 

                         
இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில், 2009 மே 17ம் திகதி விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்கள் பலவற்றை ஒரேயிடத்தில் வைத்து அழித்திருந்தனர். அவ்வாறு அழிக்கப்பட்ட பல டாங்கிகள், கவசவாகனங்கள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள் போன்றவற்றை தீயில் கருகிய நிலையில் இராணுவத்தினர் கண்டுபிடித்திருந்தனர். எனினும், அப்போது அழிக்கப்பட்ட நிலையில் கூட, ஒரு ஆட்டிலறியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. போரின் கடைசி நாட்களில் அரசபடையினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை தன்னியக்கத் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் தான். 

ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை அரசபடையினரால் பெருமளவில் கைப்பற்ற முடியவில்லை. விடுதலைப் புலிகளிடம் கணிசமானவு ஆட்டிலறிகள் இருந்ததை அரசபடையினர் அறிந்திருந்த போதும், கடைசிநேரத்தில் அவை எங்கே போயின, அவற்றுக்கு என்னவாயிற்று என்ற கேள்வி இருந்தே வந்தது. 2006ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் 85 மி.மீ ஆட்டிலறி - 01, 122 மி.மீ ஆட்டிலறி - 01, 130 மி.மீ ஆட்டிலறிகள் - 08, 152 மி.மீ ஆட்டிலறிகள் - 05 என்பனவற்றை மீட்டதாக, பாதுகாப்பு அமைச்சு கடந்த ஆண்டு வெளியிட்டHumanitarian Operation Factual Analysis என்ற அறிக்கையில் கூறியிருந்தது. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொத்தம் 15 ஆட்டிலறிகளில், 6 ஆட்டிலறிகள் அழிக்கப்பட்ட நிலையில் அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் மீட்கப்பட்டவை. எஞ்சியவை தான் பயன்பாட்டு நிலையில் இருந்தன. இந்தநிலையில் தான், முதல்முறையாக ஒரே நேரத்தில் - விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகளை ‘நிலம்‘ புயல் வெளியே கொண்டு வந்துள்ளது. 


2009 மே 18ம் திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் ஆயுதங்களையும் புலிகளின் ஏனைய பொருட்களையும் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தியிருந்தனர். குறிப்பிட்ட சில சதுர கி.மீற்றர் பரப்பளவை மட்டும் கொண்ட அந்தக் குறுகிய நிலப்பரப்பில், இந்தத் தேடுதல்கள் சுமார் 3 ஆண்டுகள் வரை இடம்பெற்றிருந்தன. இந்தளவு காலமும் படையினரின் கண்களில் அகப்படாத இந்த ஆட்டிலறிகள் புயலினால் வெளிப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் போரின் கடைசி நேரம் வரை ஆட்டிலறிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலை இருந்திருக்கவில்லை. 


அதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். 

அவர்களிடம் இறுதிக்கட்டத்தில் போதிய ஆட்டிலறிக் குண்டுகள் இருக்கவில்லை. 


கப்பல்கள் மூலம் வெளியில் இருந்து குண்டுகளை கொண்டு வரும் வசதிகள் முற்றாகவே இல்லாமல் போனதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத கட்டம் ஏற்பட்டது. 

விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவம் கைப்பற்றிய ஆயுதங்களின் பட்டியலில், கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆட்டிலறிக் குண்டுகள் மிகமிகக் குறைவு. 

அதைவிட ஆனந்தபுரம் சமரின் போது, விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள் மட்டும் படையினரிடம் சிக்கவில்லை. 


ஆட்டிலறிகளை இயக்கும் திறமையான தளபதிகள், போராளிகள் பலரும் அந்த முற்றுகைச் சமரில் பலியாகினர். 


அவர்களில் பிரிகேடியர் மணிவண்ணன், கேணல் கோபால் போன்றவர்கள் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த முக்கியமான தளபதிகள். 


அதைவிட ஆட்டிலறிப் படைப்பிரிவைக் கையாண்ட மற்றொரு தளபதியான பிரிகேடியர் பானுவும் இந்தச் சமரில் படுகாயமடைந்தார். 


போரின் இறுதி நாட்களில் ஆட்டிலறிக் குண்டு கையிருப்புக் குறைந்து போனதாலும், அவற்றை இயக்கும் திறமையான போராளிகளின் பற்றாக்குறையாலும், ஆட்டிலறிகளை முன்னரே புலிகள் புதைத்து விட்டதாக கருதப்படுகிறது. அதேவேளை மோதல் சிறிய இடத்துக்குள் குறுகிப் போனபோது ஆட்லறிகளைப் பெரிதாகப் பயன்படுத்த முடியாத நிலையும் புலிகளுக்கு இருந்தது. 


கண்ணுக்கு முன்னே நின்ற அரச படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அங்கே ஆட்டிலறிகள் தேவைப்படவில்லை. அவற்றை குறுந்தூரத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தவும் முடியாது. அதேவேளை, பின்புலப் படைத்தளங்களை அவற்றின் மூலம் தாக்குவதாலும் எதையும் சாதிக்க முடியாது என்பதால், புலிகள் முன்னரே அவற்றை பாதுகாப்பாக மறைத்திருக்க வாய்ப்புகள் உள்ளன. போரின் கடைசி நாட்களில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இந்த ஆட்டிலறிகள் புதைக்கப்பட்டிருந்தால், அவை நிச்சயம் இராணுவத்தினரின் கண்களில் சுலபமாகவே சிக்கியிருக்கும். அதேவேளை, இந்த புதைப்பு நடவடிக்கையை அறிந்த புலிகள் எவரும் அரச படையினரிடம் சிக்கவில்லைப் போலவும் உள்ளது. அப்படி எவராவது சிக்கியிருந்தால், அவர்களிடம் இருந்து இதுபற்றிய தகவல்களை படைத்தரப்பினர் விசாரணைகளின் போது கறந்திருப்பார்கள். சிலவேளைகளில் அறிந்திருந்த ஒரு சிலர் இதுபற்றி மூச்சு விடாமல் இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எவ்வாறாயினும் இந்த அட்டிலறிகள் வெளிப்பட்டதன் மூலம், புலிகளின் ஆயுதப் புதையல்கள் இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை உணர்த்தியுள்ளது. 


இந்தநிலையில், விடுதலைப் புலிகளின் இந்த ஆட்டிலறிகள் அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன? 


இவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டவையா அல்லது அரசபடையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையா என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது. அதேவேளை, விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகளை அரசபடையினரிடம் இருந்து கைப்பற்றிய சம்பவங்கள் ஒரு சில மட்டும் தான். 


முல்லைத்தீவில் இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிகள், புளுக்குணாவவில் ஒரு 85 மி. மீ ஆட்டிலறி, ஆனையிறவில் மூன்று 152 மி.மீ ஆட்டிலறிகள், மற்றும் இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிகள் என்று மொத்தம் 8 ஆட்டிலறிகள் தான் இராணுவத்தினரிடம் இருந்து புலிகள் கைப்பற்றியிருந்தனர். 


முல்லைத்தீவில் ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அரசபடையினர், தாக்குதல் களத்துக்கு வெளியே வைத்து அவற்றைப் பயன்படுத்தும், விரைவாக பின்நகர்த்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தனர். இதனால், ஓயாதஅலைகள் – 3 நடவடிக்கையின் போது படைத்தளங்கள் பல் தொடர்ச்சியாக வீழ்ந்த போதிலும், ஆனையிறவைத் தவிர வேறு இடங்களில் படையினரின் ஆட்டிலறிகள் புலிகளிடம் சிக்கவில்லை. ஆனையிறவில் கூட முற்றுகையில் இருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்டபோது தான், அவை புலிகளின் கையில் அகப்பட்டன. 


புளுக்குணாவவில் புலிகள் கைப்பற்றிய 85 மி.மீ ஆட்டிலறியை படையினர் மீளக் கைப்பற்றி விட்டனர். ஆனால், முல்லைத்தீவிலும் ஆனையிறவிலும் இழக்கப்பட்ட நான்கு 122 மி.மீ ஆட்டிலறிகளில் ஒன்றே ஒன்று தான் மீளக் கிடைத்துள்ளது. மீதமுள்ள மூன்று 122 மி.மீ ஆட்டிலறிகளும் எங்கே என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அதேவேளை, இதுவரை ஒன்பது 152 மி.மீ ஆட்டிலறிகள் படையினரிடம் சிக்கியுள்ளன. ஆனால், அரசபடையினர் புலிகளிடம் பறிகொடுத்தது மூன்றை மட்டும் தான். இவைதவிர, 130 மி.மீ ஆட்டிலறிகள் ஒன்பதும் படையினரிடம் சிக்கியுள்ளன. இத்தகைய ஆட்டிலறிகளை அரசபடையினர் ஒரு போதும் விடுதலைப் புலிகளிடம் இழக்கவில்லை. இந்தநிலையில், அரசபடையினர் பறிகொடுத்ததையும், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டதையும் வைத்துக் கணக்குப் போட்டால், ஆட்டிலறிகளை வெளிநாடுகளில் இருந்து புலிகள் இறக்குமதி செய்துள்ளனர் என்பது உறுதியாகும். எவ்வளவு ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்தன என்ற சரியான கணக்கு படைத்தரப்பிடம் இருக்குமா என்பது சந்தேகம் தான். அவ்வாறு ஒரு தரவு கிடைத்திருந்தால், முள்ளிவாய்க்காலில் மூன்றரை ஆண்டுகள் கழித்து ஆட்டிலறிகள் வெளியே கிளம்பும் நிலை ஏற்பட்டிருக்காது. 



புலிகளிடம் இருந்து அரசபடையினர் இதுவரை கைப்பற்றியுள்ள ஆட்டிலறிகள் அனைத்துமே சீனாவில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், அவற்றை சீனா நேரடியாக அவர்களுக்கு விற்கவில்லை. சீனாவிடம் இந்த ஆட்டிலறிகளைப் புலிகள் வாங்குவதற்கு ஆபிரிக்க நாடான எரித்ரியா உதவியதாக தகவல்கள் உள்ளன. எனினும் அதுதொடர்பான முழுமையான விசாரணைத் தகவல்கள் வெளிவரவில்லை. இந்தநிலையில், மீண்டும் அதிகளவு ஆட்டிலறிகள் படையினரின் கைகளில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆட்டிலறிகள் தொடர்பான சர்ச்சையும் சந்தேகங்களும் மீளவும் வலுப்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகி விட்ட போதிலும், அந்த இயக்கம் பற்றிய மர்மங்கள் பல, இன்னமும் முழுமையாக வெளிவராமலேயே உள்ளன. இதனைத் தான் இந்த ஆட்டிலறிகள் மூலம் ‘நிலம்‘ புயல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா