Tuesday, March 6, 2012

இந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவா இலங்கையுடன் சீனா நெருக்கம்


உலக நாடுகள் மத்தியில் இன்று நிலவும் பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகள் கடும் சிக்கல் நிலைக்கு உள்ளாகியுள்ளன . ஒரு நாட்டின் இயக்கத்துக்கு உலகின் ஏனைய நாடுகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பு மிக்க அவசியமானதொன்றாக மாறியுள்ளது.

இலங்கையின் இன்றைய அரசியலில் சர்வதேச சமூகம் என்ற வார்த்தை பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் சர்வதேச சமூகம் என்ற வார்த்தை யாரை அடையாளப்படுத்துகிறது என்பதை எம்மில் பெரும்பாலானோர் அறிந்திலர். உலகின் சகல இன மக்களையும் உள்ளடக்கிய மக்கள் கூட்டமே சர்வதேச சமூகம் என்றாகிறது. இதைவிடுத்து குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது சில நாடுகளையோ மட்டும் சர்வதேச சமூகம் என்ற பெயரால் அடையாளப்படுத்த இயலாது. அந்த வகையில் இலங்கையர்களாகிய நாமும் கூட சர்வதேச சமூகத்துள் உள்ளடக்கமே. சர்வதேச சமூகம் என்ற கோட்பாட்டை நிர்வகிக்க, ஏற்கப்பட்ட பொதுச் சட்டக்கோவையொன்று நடைமுறைப்படுத்தப்படாத போதிலும்  பெரும்பாலான இனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாய நடைமுறைகளால் அது நிர்வகிக்கப்படுகிறது.
 
குறிப்பிட்டதொரு அமைப்பு வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட வேண்டுமானால், அதன் உறுப்பினர் அவ்வமைப்பின் நோக்கங்களை எட்டுவதற்காக தம்மிடையே ஒன்றி ணைந்து செயற்பட்டாக வேண்டும். அமைப்பின் பொது நோக்கங்களைப் புறம்தள்ளி உறுப்பினரொருவர் செயற் படுவாரானால் குறிப்பிட்ட அந்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை அந்த அமைப்புக்கு உள்ளது. அதேபோன்று ஏற்கப்பட்ட உலகப் பொதுநோக்கமொன்றுக்கு எதிராக ஒரு நாட்டின் அரசு செயற்படுமானால் குறிப்பிட்ட அந்த உறுப்பு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை சர்வதேச சமூகம் என்ற பெயருக்குள் அடங்கும் ஏனைய நாடுகளின் அரசுகளுக்கு உள்ளது. அத்தகைய நடவடிக்கை "தடை" என்ற விதத்தில் அடையாளப்படுத்தப்படும்.
 
சர்வதேச சமூகம் என்ற பெரும்  ஜலசமுத்திரத்தில் இலங்கை ஒரு நீர்த்துளிக்கு ஒப்பானதே. எனவே இலங்கை  சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளைப் பேணும் அ÷தவேளை, எமது அண்டை நாடான இந்தியா அதில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இந்தியா ஒரு பெரு விருட்சம் எனக் கொண்டால் இலங்கை அந்த விருட்சத்தில் பூத்திருக்கும் ஒரு மலரை ஒத்ததே. விருட்சத்திலிருந்து மலர் உதிர்ந்து விழும் வேளை அது தன் முக்கியத்துவத்தை இழப்பது போன்று இந்தியாவுடனான இணக்கப்பாடு அற்றுப்போகுமானால் இலங்கை தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும்.
இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்திய சகல துறைகளிலும் தன்னிறைவு மட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைப் பொதுமக்களது முக்கிய உணவுப் பாவனைப் பொருள்களில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகின்றன. இலங்கையில் பாதுகாப்புப் படையினரின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய யுத்த உபகரணங்களில் பெரும்பாலானவை இந்தியத் தயாரிப்புக்களே. யுத்த வலுவிலும்கூட இந்தியா அணுத்திறன் கொண்ட பல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை பூகோள ரீதியில் இந்தியாவுக்கு மிக அண்மையில் இருப்பதால் தேவையானால் இந்தியாவால் இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வாய்ப்பும் உள்ளது.
 
இலங்கை சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளைப் பேணும் வேளை இந்தியாவுடனும் நட்புறவைப் பேண வேண்டியுள்ளதன் அவசியம் இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை ஒருபோதும் பக்கச்சார்பான வகையில் அமைதல் ஆகாது. அந்த வகையில் இலங்கை, வெளியுறவுக் கொள்கை விடயத்தில் நடுநிலைத் தன்மையைப் பேண வேண்டியது முக்கியமானதாகும். குறிப்பிட்டதொரு முக்கியமான சர்வதேசச் சிக்கலொன்றில் இலங்கை ஒரு தரப்புச் சார்ந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் குறிப்பிட்ட சிக்கலுடன் சம்பந்தப்பட்ட மறு தரப்பின் பகையைத் தேடிக்கொள்ள நேர்வது இயற்கையே. அந்த நிலையில் தேவைப்படுபவை கிட்டும்  வேளை, வேறு சிலவற்றை இழக்கும் நிலை உருவாகும். சர்வதேச ரீதியிலான தொடர்புகளைப் பேணும் வேளையில் நாட்டின் ராஜதந்திரிகள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் இவையேயாகும். இத்தகைய வேளைகளில் ஆகக் குறைந்த அளவில் நட்டத்தை எதிர்கொண்டு அதியுச்ச இலாபத்தை ஈட்டும் விதத்திலான ராஜதந்திரச் செயற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவது பயன்விளைவிக்க வல்லதாகும்.
குறிப்பிட்டதொரு நாடு எமக்குச் சார்பானதா? அல்லது எதிரானதா? என்பதை ஒரு தரப்பால் மட்டும் தீர்மானித்து விட இயலாது. சம்பந்தப்பட்ட நாட்டின் விருப்பமும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணம் குறித்து முடிவெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் வழங்கப்படுமானால் சகல ஆண்களும் ஐஸ்வர்யா ராயையே மணப்பதென முடிவெடுக்கக் கூடும். ஆதலால் முடிந்த அளவுக்கு இரு தரப்பு உறவுகளைப் பேணுவதன் மூலம் பிற நாடுகளுடனான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டியது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அரசுகளுக்கு மிக அவசியமாகும்.
 
இன்றைய அரசியலரங்கில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு முக்கிய விடயம் இலங்கையுடனான சீனாவின் நெருக்கமாகும். சீனாவின் இலங்கை மீதான தலையீடு குறித்து ஆராயும் போது சீனா அரசியல் இலாப மீட்டும் நோக்கில் இலங்கையுடன் கடும் நெருக்கத்தைப் பேணுவதாகக் கருத முடியாதுள்ளது. பிராந்திய நல்லிணக்கம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே சீனாவும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகக் கருதமுடிகிறது. அந்த நோக்கத்தின் உள்ளக எத்தனம் சில வேளை பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடும்.
 
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க உதவி வழங்கிய சீனா, பாகிஸ்தானின் துறை முக நிர்மாணத்துக்கும் உதவி வருகிறது. இதன் மூலம் சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றி வளைத்து தனது கடற்பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. இதன் விளைவு கடைசியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பெரும் போர் ஒன்றுக்கும் வழிவகுக்கலாம். ஆதலால் இலங்கை பின்பற்றும் வெளியுறவுக் கொள்கை நடுநிலையானதாக அமைய வேண்டியுள்ளது என்பது பல சர்வதேச அரசியல் விமர்சகர்களது கருத்தாகும்.
 
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளால் ஐம்பது ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி அடைந்த  நிலையை எட்ட முடிந்தது. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடைமொழியுடன் இருந்து வருகிறது. இன்னமும் அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையை இலங்கையால் எட்டமுடியவில்லை. இந்தப் பின்னடைவுக்குக் காரணமாக நாடு சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை பதவியிலிருந்த அரசுகள் பின்பற்றி வந்த தவறான வெளியுறவுக் கொள்கையைக் குறிப்பிட இயலும். எனவே நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் நாட்டின் ராஜதந்திர விற்பன்னர்களின் உதவியுடன் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்ததொரு நாடு என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்குடனான வெளியுறவுக் கொள்கையை வகுத்து  செயற்படவைக்க முயலவேண்டும். அத்தகைய நோக்கத்தை எட்டும் விதத்தில் சர்வதேச சமூகத்துடனான நல்லிணக்க, நட்பு ரீதியிலான தொடர்புகளைப் பேண வழி வகை செய்யப்படுதல் இன்றைய காலத்தின் தேவையாகும். ஆட்சி யாளர்கள் இது குறித்து அக்கறை காட்டிச் செயற்பட முன்வருவார்களா?                                  

நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே


ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்க - 56 பேர் கொண்ட பெரியதொரு பட்டாளத்தை கொண்டு போனது அரசாங்கம். அவர்களில் தமிழர்கள் பலரும் அடக்கம். பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, அங்கே வசந்தம் வீசுவதாக பிரசாரம் செய்தவர்களும் அரசுக்கு ஆதரவு தேட ஓடிப் போனார்கள். இப்படியான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கி நின்று கொண்டது. நாங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி விட்டோம் என்று கூறித் திருப்திப்பட்டுக் கொண்டது கூட்டமைப்பு. “தற்போதுள்ள நிலையற்ற சூழல் தொடருமேயானால், அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. “ இந்தக் காரணங்களால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டதாக, கடந்தவாரம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

ஜெனிவா கூட்டத்துக்குச் செல்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவும் சரி, அதற்காக சொல்லப்பட்ட காரணமும் சரி, தமிழர்களில் பலராலும் நியாயமானதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய நிலை தொடருமேயானால் வன்முறைகள் தோன்றலாம் என்றும், அதனால் குடிமக்கள் பாதிக்கப்படலாம் என்றும், அமைதி காக்கப்படுவதே அவசியம் என்றும் கூறப்பட்டுள்ள நியாயம் எந்தளவுக்கு சரியானது என்பது சந்தேகம் தான். இன்றைய சூழலில் எந்தவொரு வன்முறைகள் வெடித்தாலும், அது சர்வதேச அளவில் தமிழருக்கு சாதகமாக அமையுமே தவிர, ஒருபோதும் அரசுக்குச் சார்பாக அமையாது. இதை அரசாங்கமும் சரி, சிங்களப் பேரினவாத சக்திகளும் சரி நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. 

இன்னொரு 58, 77, அல்லது 83 கலவரத்தை சிங்களப் பேரினவாதிகள் எத்தகைய வடிவத்தில் தோற்றுவித்தாலும், அது தமிழர் தரப்புக்கு தனி ஈழத்தை தங்கத்தட்டில் கொண்டு போய்க் கொடுத்தாகவே அமையும். அதனால் தான் புலிகளின் காலத்தில், சிங்களத் தேசியவாதம் தூண்டிவிடப்பட்ட பல சந்தர்ப்பங்களில் கூட, இனமோதல்கள் பெரிதாக வெடிக்கவில்லை. இந்தநிலையில், இரா.சம்பந்தனின் அறிக்கையில் வன்முறைகள் என்றும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்றும், அமைதி காக்கப்படுவது அவசியம் என்றும் கூறப்பட்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாத- யதார்த்தமற்ற கருத்தாகவே உள்ளது. ஏதோ ஒரு காரணத்துக்காக முடிவை எடுத்து விட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக- எங்கேயோ தேடிப்பிடித்துச் சொல்லப்பட்டுள்ள நொண்டிச்சாட்டாகவே இது கருதப்படுகிறது. 

இலங்கை இன்று சர்வதேச சமூகத்தினால், உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இனவன்முறைகள் பற்றி சிந்திக்க எந்தத் தரப்பும் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்வதால் வன்முறைகள் வெடிக்கும் என்றால், அது எந்தவகையில் என்பது சாதாரண மக்களால் புரிந்து கொள்ள கூடிய விளக்கமாக இல்லை. என்னதான் காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொன்னாலும், ஜெனிவாவில் சர்வதேச சமூகத்தின் முன்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை சொல்லுகின்ற வாய்ப்பை அது தவறவிட்டுள்ளது என்பதே உண்மை. இதற்கு எத்தனை நியாயங்களை அவர்கள் கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்க முடியாது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எடுக்கப்படவில்லை என்பதை சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறிய கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று கூறினார்கள். பின்னர், ஒருவருக்கு மட்டும் தெரியாது என்று கூறினார்கள். இன்னொரு கட்டத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன் நாடு திரும்பியதும் அதுபற்றி விளக்கமளிக்கப் போவதாக கூறினார் இரா.சம்பந்தன். 

இதிலிருந்து சுரேஸ் பிறேமச்சந்திரனுக்குத் தெரியாமல் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இந்த முடிவு விடயத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே, ஒற்றுமையில்லாத நிலையில், தமிழ்மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது தவறானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் எதற்காக இந்த முடிவை எடுத்தது என்பதை வெளிப்படுத்தவில்லை. அதைவிட, செய்தியாளர்கள் துருவித்துருவி கேள்வி எழுப்பினால், “எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறிக் கொண்டிருக்க முடியாது“ என்று நழுவிக் கொள்ளும் போக்கு இரா.சம்பந்தனிடம் காணப்படுகிறது. அதுபோலவே தான் இதற்கும் பதிலளித்துள்ளார் அவர். அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கும் கூட்டமைப்பு, இந்த முடிவை எடுத்ததற்கு காரணம் யார் என்பதை அல்லது என்ன என்பதை வெளியே சொல்லாத வரை பல்வேறு கேள்விகளும் வதந்திகளும் உலா வரவே செய்யும். 

இலங்கை அரசாங்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எப்படியெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருக்க, கூட்டமைப்பினால் எப்படி அமைதியாக இருக்க முடிந்தது என்பது கேள்வி தான். 

எல்லாவற்றையும் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்ற அசட்டைத்தனமா? 

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் கேள்விகளுக்கு எந்த வகையிலும் நியாயம் கூறவோ தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவோ முடியாது. 

எதிர்காலத் தேர்தல்களில் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் எச்சரிக்கைக்கு பயந்து கூட்டமைப்பு ஒதுங்கிக் கொண்டதா அல்லது இந்தியாவின் ஆலோசனைப் படி ஒதுங்கிக் கொண்டதா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைய ஒதுங்கிப் போனதா என்று தான் பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தக் கட்டத்தில் கூட்டமைப்பு சொல்லும் நியாயங்களை எவரும் பெரிதாக எடுத்தாளவில்லை. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக இரா.சம்பந்தன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கச் சென்றது சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அது தெரிவுக்குழு சார்ந்த சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், அது கூட்டமைப்பு ஜெனிவா செல்லும் முயற்சிகளைக் கைவிட வைப்பதற்கான சந்திப்பு என்றே பலரும் சந்தேகிக்கின்றனர். 

அரசதரப்பில் மகிந்த ராஜபக்ஸவுடன், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் மட்டும் தான் பங்கேற்றிருந்தார். வழக்கமாக, தனிப்பட்ட சந்திப்பு என்றால் உதவியாளர் இன்றியே நடக்கும். ஆனால், இரா.சம்பந்தன் தனியாகச் சென்று சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை, தனிப்பட்ட சந்திப்புக்கு அழைத்து விட்டு மேலும் இருவர் ஜனாதிபதியுடன் பங்கேற்ற போது அதற்கு இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

ஜெனிவா செல்லும் முடிவை முன்னதாகவே கைவிட்டிருந்தால், இந்தச் சந்திப்பை அவர் தவிர்த்திருக்கலாம். 

அது விமர்சனங்களில் இருந்து அவரையும் கூட்டமைப்பையும் காப்பாற்றியிருக்கும். 

கூட்டமைப்பு எந்தக் காரணத்தை முன்வைத்து இதை நியாயப்படுத்தினாலும் அது தமிழ் மக்களின் காதுகளில் ஏறும் போலத் தெரியவில்லை. 

இராஜதந்திர நகர்வுகளில் இரகசியம் பேணுதல் எந்தளவுக்கு முக்கியமோ அதுபோலவே வெளிப்படைத் தன்மையும் முக்கியமானது. நம்பிக்கை உள்ளவரை தான் இரகசியம் முக்கியத்துவம் பெறும். நம்பகத்தன்மை இழக்கப்படும் நிலை தோன்றினால், அங்கே வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் எழும். இப்போது வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் கேட்பது போல, கூட்டமைப்பிடமும் தமிழ்மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்து விடப் போகிறது. 

புத்திசாலித்தனமும், புத்திசாதுரியமும் தமக்குத் தான் உள்ளது என்று கருதிக் கொள்ளக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால், அது தமக்குத் தாமே சூடு வைத்துக் கொண்டது போலாகி விடும். கடும் நெருக்கடி உருவான நிலையில் தான், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதினார். அதுகூட முன்னரே திட்டமிட்டிருந்தபடி எழுதப்பட்டதா அல்லது சுமந்திரனின் உருவபொம்மை யாழ்.பல்கலைக்கழகத்தில் தொங்கிய பின்னர் எழுதத் தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.  எவ்வாறாயினும், இந்தக் கடிதத்தின் மூலம் தமது கறைகளை கழுவிக் கொள்ளலாம் என்று கூட்டமைப்பு கருதுவது தவறானதொரு முடிவாகவே இருக்கும்.

நன்றி இன்போதமிழ்

ஜெனிவா - திணிக்கப்படும் நாட்டுப்பற்று - பொங்கியெழும் மக்கள் கூட்டம்


ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடர் அமர்வுகள் இடம்பெற்று வரும் வேளையில் இலங்கை அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது எனலாம். குறிப்பாக அமெரிக்காவின் பிரேரணை தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதும் விசனம் அடைந்துள்ளது. அது இலங்கைக்கு எதிரான  சதி எனச் சித்திரித்து சென்ற மாதம் 27 ஆம் திகதி கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருந்தது. அன்று வடக்கு, கிழக்கிலும் குறிப்பாக யுத்த பூமியாக  இருந்த வன்னியிலும் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கியிருந்தனர் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ மகிழ்ச்சி தெரிவித்தது பெரியளவில் பிரசாரம் செய்யப்பட்டது. யுத்த காலத்தில் குறிப்பாக இறுதிக் கட்டங்களில் வன்னி மக்கள் சந்தித்த இமாலய அவலங்கள் மற்றும் வரலாறு காணாத உயிர் , உடைமை அழிப்புகளை அடுத்து ஆயிரம் ஆயிரம் பெண்கள் கதறியழுத வண்ணம் நடைப்பிணங்கள் போலுள்ள நிலையில் அத்தகையோரும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர் என்று சொன்னால் அது எவ்வாறு நடந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அரச ஊழியர்கள் மற்றும் மாணவ சமூகத்தினர் ஆங்காங்கே பலவந்தமாகவே ஈடுபடுத்தப்பட்டனர். 
அரசாங்கத்தின் பகீரதப் பிரயத்தனம் 

அடுத்ததாக மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவரும் பெருந் தோட்டத் துறை அமைச்சருமான மகிந்த சமர சிங்க தலைமையில் வெளிநாட்டு அமைச்சர், போராசியர் ஜீ.எல்.பீரிஸ் அடங்கலாக 52 அமைச்சர் பிரதானிகள் ஜெனீவா படை எடுத்தனர். அங்கிருந்து வேறு பல நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக குறிப்பாக அமைச்சர் பீரிஸ் தென்னாபிரிக்கா, உகண்டா போன்ற நாடுகளுக்கு விரைந்தார். இவ்வாறாக அமெரிக்காவின் பிரேரணையைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடுவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதைக் காணலாம்.உண்மையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்தச் செய்வதே அமெரிக்காவின் நோக்கம் என அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளராகிய ரோனர் என்பவர் தெரிவித்துள்ளார். அதாவது தற்போது நடவடிக்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதைக் கருத்திற் கொண்டே இராஜாங்கத் திணைக்களம் செயற்படுவதாக ரோனர் கூறியுள்ளதைக் காணலாம். உண்மையில் அமெரிக்காவின் பிரேரணையானது பதில் கூறும் கடப்பாடு மற்றும் போர்க் குற்றங்கள் சம்பந்தமாக எதுவுமே உள்ளடக்கப்படாத நிலையில் வலுவற்றதாயிருப்பதால் அது திருத்தப்பட வேண்டும் என  குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் நிலைப்பாடு எடுத்திருந்ததாகவும் சில அறிக்கைகள் தெரிவித்தன. 

2010 மே மாதம் முன்னாள் சட்ட மா அதிபர் சீ. ஆர்.டி. சில்வா தலைமையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நியமிக்கப்பட்ட போது அதற்கு இட்ட ஆணையும் அதன் நம்பகத் தன்மையும் கேள்விக் குறியாகியிருந்தன. அவ்வாறான ஐயப்பாடுகளை ஆணைக்குழு நிச்சயமாக உள் வாங்கியிருக்கும் எனலாம். அந்த வகையில் அரசாங்கத்தையும் சங்கடங்களுக்கு உட்படுத்தாமல் தமது நம்பகத்தன்மையையும் நிலை நாட்டுவதற்காகவும் சில வரவேற்கத்தக்க பரிந்துரைகளையும் செய்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் அவை தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவ தரப்பினரது தலையீட்டினை நீக்குவதாகும்.  அதேவேளை பதில் கூறும் கடப்பாடு மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்களைப் பொறுத்து ஆணைக் குழு நழுவியுள்ளது தெளிவு. 

நிற்க, அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ அமெரிக்காவின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ஆவார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சென்ற வாரம் தோன்றி உரையாற்றுகையில் நல்லிணக்கம் மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு இன்றி சமாதானத்தை வென்றெடுக்க முடியாது என்று முதற்கண் கூறினார். விடுதலைப் புலிகளை அழித் தொழித்தல் என்ற  பேரில் தமிழர் சொல்லும் தரமற்ற அழிப்புகளுக்கு ஆளாக்கப்படுவதற்கு அன்று அமெரிக்கா வெகு இலாவகமாகக் கை கொடுத்ததை நோக்குகையில் இது சாத்தான் ஓதும் வேதம் போல் இருக்கிறதல்லவா? மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வரும் பல நாடுகளை மேற்கோள் காட்டி சிரியா தொடர்பாகவும் ஒட்டேரோ விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார். சிரிய மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒன்று பட்டு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வாரம் அந்த நாட்டின் நிர்வாகம் கொடூரமான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை இப் பேரவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கண்டித்துள்ளனர் என்று அவர் கூறிவைத்தார். உண்மையில் சிரியாவில் இடம்பெறுவதைக் காட்டிலும் அதிகப் பன்மடங்கு துன்ப துயரங்களுக்கு இலங்கையில் குறிப்பாக வன்னி மக்கள் ஆளாக்கப்பட்டது நிதர்சனம். 

ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் இடத்து இலங்கை அரசாங்கமானது சீனா,ரஷ்யாவின் ஆதரவை நாடாதிருப்பதற்காக சர்வதேச நாணய நிதியம்  உலக வங்கி  மற்றும் உலக வர்த்தகஸ்தாபனம் ஆகிய  மும்மூர்த்திகள் மூலம் தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அமெரிக்கா சற்று உளைச்சலைக் கொடுக்கிறதே ஒழிய தமிழர் நலன் கருதிய செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பதல்ல. 

அமைச்சர் சமர சிங்க உரையின் வீச்சு 

மேலும், அமைச்சர் சமர சிங்க தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் 27.02.2012 ஆம் திகதி ஆற்றிய உரையில் இலங்கை அரச தரப்பினர் அடிக்கடி கூறிவருவது போலவே ஐ.நா. மனித உரிமைகள் சபையோ, சர்வதேச சமூகமோ விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சங்கள் வெளி நாடுகளில் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை விழுங்கி விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் மேற்குறித்த பிரசாரங்களுக்கும் வேறு சில நிர்ப்பந்தங்களுக்கும் குறிப்பாக பல நாடுகளில் வதியும் புலம் பெயர் தமிழரின் வாக்குப் பலத்துக்கும் வளைந்து கொடுத்து வருவதாகவும் சமர சிங்க சாடியுள்ளார். தனித் தமிழ் நாடொன்றினை உருவாக்குவதற்கு அவர்கள் பாடுபடுவதாகவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிக்குப் பங்கம் விளைவிப்பதற்குக் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என்றும் சமர சிங்க கூறியுள்ளார்.
தமிழர் தரப்பிலான  தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு சிங்கள பேரினவாத மேலாதிக்க அடக்கு முறையும் அரச பயங்கரவாதமும் தான் அடிப்படைக் காரணம் என்பதை வெகு நய வஞ்சகமாக மூடி மறைத்து சமர சிங்கவின் வாதம் அமைகிறது. அவர் சொரிந்து விட்ட இன்னொரு முத்து என்ன என்பதையும் பார்த்து விடுவோம். அதாவது இலங்கைக்குப் புத்துயிரளித்துக் கட்டியெழுப்புவதற்காக ஆக்கபூர்வமான பங்குதாரர்களாக முன் வருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக  இப் போராட்டங்கள் மூலம் தமது தாய் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு தமது நேர காலத்தையும் வளங்களையும் பயன்படுத்துவதோடு எல்லா இலங்கை மக்களினதும் சமாதானம், அபிவிருத்தி மற்றும் சுபிட்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற் கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்க மாசு கற்பிக்கும் விதத்தில் செயற்படுவது கவலைக் குரியதாகும் என்று சமர சிங்க கூறியுள்ளார். மாறாக தமிழர் இந்த நாட்டின் அபிவிருத்தியில் சமாதானத்தில் மற்றும் இறைமையில் பங்குதாரர்கள் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ இதய சுத்தியாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதற்கில்லை. 

நிற்க , அமைச்சர் சமர சிங்க தனதுரையின் உள்ளடக்கத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக எண்ணுவாராயின் அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்யலாம்? ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த  நிபுணர் குழு அறிக்கையைத் தூக்கியெறிந்து விட்டு நல்லிணக்க  ஆணைக் குழு அறிக்கையானது காத்திரமானதும் முழுமையானதும் என  சமர சிங்க வர்ணித்துள்ளார். ஒரு புறத்தில் ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை, எதிர்வரும் ஒக்டோபர் வரை பொறுத்திருங்கள் என்று அமைச்சர் பீரிஸ் ஏற்கனவே அறிக்கை விடுத்திருக்கிறார். மறு புறத்தில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ராஜபக்ஷ  அரசாங்கம் ஏற்கனவே உருப்படியான நடவடிக்கைகள் எடுத்துள்ள படியால் அமெரிக்கா முன் வைக்கும் பிரேரணைக் கு அவசியமோ, அவசரமோ இல்லை என்பது சமர சிங்க முன்வைத்துள்ள வாதமாகும். கடந்த 6 வருடங்களாக ராஜபக்ஷ அரசங்கம் நியமித்தா பல்வேறு குழுக்கள் சர்வ கட்சி மாநாடு, நிபுணர் குழு மற்றும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்த அறிக்கைகள் யாவும் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட வரலாற்றினைப் பார்க்கும் இடத்து ராஜபக்ஷ  அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகள் என்று சமர சிங்க குறிப்பிடுவது சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்று வித்தை கற்பிக்கும் நயவஞ்சகத் தந்திரோபாயமாகும். அந்த வகையில் சர்வதேச கண்டனங்கள் என்று வரும் போது அதெல்லாம் நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்கு நாட்டுப் பற்று என்றொரு சூழ்ச்சியானது தென்னிலங்கையில் தாராளமாக விதைக்கப்படுகிறது.
சென்ற மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச்சர்கள் விமல் வீர வன்ச மற்றும் சமர்ப்பிக்க ரணவக்க இருவரையும் அலரி மாளிகைக்கு அழைத்து விலைவாசி உயர்வுகள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்நோக்க வேண்டிய நெருக்கடிகள், உள் நாட்டு எதிர்ப்பு அலைகள் ஆகிய விடயங்களை ஆராய்ந்த பின் நாட்டுப் பற்று என்ற துரும்பைத் தான் விளையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மக்களை அணி திரட்டி நாட்டுப் பற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான வேலைத் திட்டத்தினை முன்னின்று நடத்துமாறு இரு அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ  அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேற்கத்தைய நாடுகளின் சதி என்று 2 அமைச்சர்களும் கருத்துத் தெரிவிக்க  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டிலும்  இணைந்து கொள்ளுமாறு இருவரையும் ஜனாதிபதி வேண்டிக் கொண்டார். வேறு பல அமைச்சர்களும் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரும் பங்கு பற்றிய பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மக்களை வீதிக்கு அழைக்க வேண்டும் என்று பகிரங்க  அறிக்கை விடுக்கப்பட்டது.  ராஜபக்ஷ அரசாங்கம் கூறும் நாட்டுப் பற்று எதுவோ அது தான் நாட்டின்  அனைத்து பிரச்சினைகளுக்குமான  சர்வரோக நிவாரணி என்று சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுமளவுக்கு வங்கு ரோத்துத்தனம் மற்றும் கையாலாகாத் தனம் அரசாங்கத்துக்குள் புகுந்து விளையாடுவதைக் காணலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு 

19 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் முடி வெடுத்ததாயினும் இறுதி நேரத்தில் அது கை விடப்பட்டது. இதன் காரணமாக ராஜபக்ஷ அரசாங்க தரப்பின் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. மறு புறத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதையும் மூடி மறைத்து விட முடியாது. ஜெனீவாவில் அரச தரப்பினரோடு முட்டி மோதுவதற்கல்லா விட்டாலும் 6 தசாப்தங்கள் வரலாற்று ரீதியாக தமிழர் பிரச்சினைகள் எல்லா அரசாங்கங்களாலும் திட்டமிட்டுப் புறந்தள்ளப்பட்டு வந்தன. அவர்கள் அரசின் அனுசரணையுடன் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் அதன் காரணமாக வெடித்த யுத்தம் கால் நூற்றாண்டு காலமாக ஏற்படுத்திய பாரிய அழிப்புகள், அவலங்கள் யுத்தம் முடிவுற்று 3 வருடங்கள் கழியும் கட்டத்திலும் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமாகவோ இதய சுத்தியாகவோ அரசாங்கம் நடவடிக்கையில் இறங்குவதை விடுத்து இழுத்தடிப்பு நாடகம் நடத்தி வருகிறது என்பதை துலாம்பரமாகச் சித்திரிப்பதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமானது தவற விடக் கூடியதல்ல.

நன்றி தினக்குரல்

Monday, March 5, 2012

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், கற்பனையில் கட்டும் MP பதவியும்!


ஜெனீவாவின் ஐ.நா முன்றலில் கூடி நின்று தமிழர்கள் நடாத்தும் சாத்வீகப் போராட்டமும்ஐ .நாவின் உள் அறைகளில் இருந்து கொண்டு நடந்து முடிந்த வரலாற்றுப் பின்னடைவுகளிற்கு உயிர்கொடுத்தும் -சாயம் பூசியும் தப்பித்துக்கொள்ள முயலும் கூட்டத்திற்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் தர்ம யுத்தம் உலகளாவிய ரீதியாக தமிழரின் வாழ்வியல் இருத்தல்களை அசைவு காண வைத்திருக்கப் போகின்றது என்பது பலரின் எதிர்பார்ப்புக்கள். இதனிடையே சண்டைக்குள் சாக்குவிரிக்கும்‘ நிலையைப் போன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நானொருபக்கம் நீயொருபக்கம்‘ மாக நின்று கைறிழுக்கும் போட்டியை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இலங்கை அரசின் கழுகுப் போக்கு மிகப் பெரிய அதிர்வலையையும்மாற்றத்தையும் உண்டு பண்ணலாம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மிட்டாய் வாங்கப் போகும் குழந்தை அடம்பிடிப்பது” போன்று ஐ.நா கூட்டத்தொடருக்கு வரமாட்டேன் என்றொரு பக்கம்,போகவேண்டும் என்பவர் இன்னொருபக்கமாகவும் வெட்டவெளிச்சமாய் சமர் புரிட்ந்துவிட்டு, ‘இன்னமும் நாங்கள் ஒற்றுமையாய்த்தான் முடிவெடுக்கின்றோம்என ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் மேதாவித் தன்மையை எண்ணும்போது தமிழர் காதுகளில் இன்னமும் பூ சுற்றலாம் என இவர்கள் நினைப்பது இன்றைய நகைச்சுவையின் உச்சம்

தமிழ்த்தேசியக் கூட்டமமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தன்னிச்சையான முடிவு என ஏனையோர் தப்பித்துக் கொள்ள முயல்வது சுயநலமாகும்இலங்கை ஜனாதிபதியை இரா சம்பந்தன் தனியே சந்தித்ததற்கும்ஜெனீவா பயணம் இரத்தானதற்கும் தொடர்புகள் இருக்கலாம்இல்லாமலும் இருக்கலாம்இது ஒரு பெரிய விடயமல்லகூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஏகோபித்த முடிவு எதுவாயினும் அதுவே அமுல்படுத்தப் பட்டிருக்க வேண்டும்

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் தனிப்பட்ட ஒவ்வாத முடிவை மாற்றுவதற்கு அல்லது நடைமுறைப் படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்களுக்கு திராணி இல்லாமல் போய்விட்டதென்றால் இவர்களின் முதுகெலும்பின் பலத்தையும்அடுத்ததாகத் தலைமை தாங்கக் கூடிய இயல்பையும் கூடவே இவர்களது சுயநலத்தையும் பகுத்தாய்ந்து முடிவெடுப்பதற்கு தமிழ்மக்களினால் முடியாததொரு காரியமல்லதமிழ்த்தேசியத்தில் பற்றுறுதி இருப்பின் செயற்பாட்டிலும் ஓர்மம் இருக்கும்தனியவே பாராளுமன்ற கதிரைகளை நம்புபவர்களுக்கு ஓர்மத்தை விட சுயநலமே மிகுதியாக இருக்கும்

கடந்தகால சில நிகழ்வுகளை புரட்டும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்கிஷோர்தங்கேஸ்வரிகஜேந்திரன்ஸ்ரீகாந்தா போன்றவர்களின் நிலைகள் நினைவுக்கு வருகிறதுஇராசம்பந்தன் அவர்களோடு பகைத்துக்கொண்டால் அல்லது முரண்பட்டுக்கொண்டால் எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடுமோ என்ற பயம் தற்போதைய உறுப்பினர்களுக்கு மிதமிஞ்சி நிற்பதைக் காணலாம்தமிழ்த்தேசியம் பெரிதாஅல்லது நிலையற்ற சிங்கள அரசுக்குள் போலி மேட்டுமை நிலையோடு வாழும் பாராளுமன்ற கதிரை அவசியமாஇதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தமிழ்மக்களின் பகுப்பாய்வுத் தன்மை எனலாம்.

இது ஒருபுறமிருக்கதமிழ்மக்களின் வாக்குகள் கதிரைக்காக விழுந்தவைகள் அல்ல‘ அவை தேசியத்தைப் பெறுவதற்காகவே கிடைத்தவை என உணர்த்துதலுமாகும்அடுத்த தேர்தலுக்கு போட்டியிடும் வாய்ப்பை இழந்தாலும் அல்லது இரா சம்பந்தன் அதற்கான வாய்ப்பை வழங்காமல் இருந்தாலும் இவை எவற்றையும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசிய நலன் கருதி ஜெனீவா மாநாட்டில் தற்போதைய MP க்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவா பயணம் பற்றி நோக்கின் இராசம்பந்தனின் முடிவை மீறி,தமிழ்த்தேசியத்தின் அடைவை இலக்காகக் கொண்டு இப்போதைய உறுப்பினர்கள் இயங்கி இருப்பார்கள் எனின் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்திருக்கவும் மாட்டாதுசிங்கள ஊடகங்கள் கூட்டமைப்புக்குள் குத்து வெட்டு‘ என்று பாடித்திரிந்திருக்கவும் மாட்டார்கள்

உண்மையான தமிழ்த்தேசியத்தை எவர் நெஞ்சில் பதித்துள்ளார்களோ அதுவே அவர்களின் கொள்கையாக இருக்கும்சுயநலம் என்பதற்கு இடமிருக்காதுஎதில் பிறழ்வு ஏற்படுகிறதோ அதில் தெளிவு இருக்காதுஆக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தேசியம் சார்ந்த உறுதி குன்றியதே இந்நிலைக்கு காரணமென கருத இடமுண்டு.

இன்னமும் பிந்தவில்லைஜெனீவா மாநாட்டுடன் தமிழ்த்தேசிய வரலாறு முற்றுப்பெறப் போவதில்லைதொடரப் போகும் சாத்வீகப் போராட்டங்களில் தமிழருக்கான நிலை எடுப்புக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தேசியம் சார்ந்ததாக எடுத்தாக வேண்டும்தேசியத்தின்பால் எதையும் தூக்கி வீசலாம்.சம்பந்தர் போன்ற எத்தனையோ தலைவர்களின் வரலாறுகளை கடந்தகாலம் கற்பித்துச் சென்றுவிட்டதுதேசியக் கடமைப்பாட்டிலிருந்து இதுவரை தமிழ்மக்கள் விலகவில்லைஉறுப்பினர்களும்அமைப்புக்களும் தடம் மாறிவிட்டன.எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியொரு சம்பந்தன் போன்ற தலைவர்களை வைத்தோகட்சியை வைத்தோ முடிவெடுக்காமல் தமிழ்த்தேசியத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும் என்பதே உணர்வுகளுடன் கொப்பளித்துக் கொண்டிருக்கும் தமிழ்மக்களின் உள்ளக் குமுறல்கள் ஆகும்

மலையூர் பண்ணாகத்தான்
malaiyoor.pannakaththan@yahoo.com

"அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது"


ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியானதொன்றாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐ.நா மற்றும் மேற்குலகின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்தவாரம் அரசாங்கமே பேரணிகளை ஒழுங்கு செய்திருந்தது. தெற்கில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கில் கூட அரசதரப்பின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. ஆனால் இவையெல்லாம் ஜெனிவாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காத்திரமானவையாக இருக்கவில்லை. இத்தகைய பேரணிகளை நடத்தப் போவதாக அரசதரப்பு அறிவித்தபோதே அதைக் கேலிக்கூத்து என்று விமர்சித்திருந்தது ஐதேக. அரசுக்கு எதிராக சர்வதேச நகர்வுகள் அமையும் போது இதே தந்திரத்தை கையாள்வது அரசாங்கம் அல்லது அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வழக்கமான தந்திரோபாயம் தான். இதன்மூலம் ஜெனிவா தீர்மானத்தை தடுத்து விடலாம் என்றோ அல்லது தோற்கடித்து விடலாம் என்றோ அரசாங்கம் கருதியிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறானதொரு எண்ணம் இருந்திருந்தால், அதை இராஜதந்திர வங்குரோத்து நிலை என்று துணிந்து கூறலாம்.

இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் விடயத்திலும் சரி, மனிதஉரிமைகள் நிலையை பேணிக் கொள்ளும் பொறுப்பிலும் சரி அரசாங்கம் தெளிவான நிலையில் இல்லை என்பதே உண்மை. இதனால் தான் மிகச்சுலபமாகவே, அது பொறி ஒன்றை நோக்கித் தள்ளப்படும் நிலை உருவானது. போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டு விட்டது, மனிதஉரிமை நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளது என்றெல்லாம் அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் இவற்றை எந்த வகையிலும் அரசினால் நிரூபிக்க முடியவில்லை. மனிதஉரிமைகள் நிலைமை குறித்து சர்வதேச அளவில் வருடாந்தம் வெளியிடப்படும் அறிக்கைகள் இலங்கையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையிலும், ஜெனிவாவில் நெருக்கடிகளை கொடுக்கும் வகையிலும் ஏராளமான சம்பவங்கள் நடதேறியுள்ளன. 

குறிப்பாக ஆட்கடத்தல்கள், பொதுமக்களின் போராட்டங்களின் மீது ஏவி விடப்படும் வன்முறைகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள், பெண்கள், சிறார்கள் மீதான வன்முறைகள், இவற்றில் மிகவும் முக்கியமானவை. 

ஆட்கடத்தல்கள் விடயத்தில் இலங்கை மோசமானதொரு நாடாகவே பதிவாகியுள்ளது. 

போர் நடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவது என்ற பெயரில், ஆட்கடத்தல்கள் இடம்பெற்றதாக சர்வதேச அறிக்கைகள் பலவும் கூறியுள்ளன. 

வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மிகமோசமாகவே இடம்பெற்றன. 

போர் முடிவுக்கு வந்த பின்னர், குறைந்து போன போதும், மீண்டும் ஆட்கள் கடத்தப்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் ஜேவிபி மாற்றுக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் காணாமற்போய் மாதக்கணக்காகி விட்டது. 

இன்னமும் அவர்கள் எங்கே என்று கண்டுபிடிக்கப்படவில்லை. 

கொழும்பில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கைதி ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். 

இப்படி ஆட்கடத்தல்கள் தொடர்கின்றன. 

போர் நடந்த காலத்தில் வர்த்தகர்கள் கப்பம் கோரிக் கடத்தப்பட்டனர். கப்பம் கொடுக்காதவர்கள் கொல்லப்பட்டனர், புலிகள் என்றும் புலி ஆதரவாளர்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டனர். இவற்றின் பின்னால் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆயுதக்குழுக்களே இருந்தன என்பது எவருக்கும் தெரியாத இரகசியம் அல்ல. இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ்சில் வெளியான அமெரிக்க இராஜாங்க செயலக தகவல் பரிமாற்ற குறிப்புகளிலும் கூட கூறப்பட்டுள்ளன. சிறிது காலம் ஓய்ந்திருந்த இத்தகைய கடத்தல்கள் இப்போது மீண்டும் அதிகரித்துள்ளதானது ஒரு புறத்தில் மக்களை மிரள வைத்தாலும், இதன் விளைவுகள் அரசாங்கத்துக்கே நெருக்கடி கொடுப்பதாக அமையும். ஜெனிவாவில் இவையெல்லாம் புள்ளி விபரங்களாக மாறும் போது அரசின் மீதான சுருக்குக் கயிறு மேலும் வலிமை பெறும். 

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, ஐதேக நடத்திய பேரணி மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகள் என்பன ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மீது ஆயுத வன்முறை பிரயோகிக்கப்படுவதை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் அரச ஆதரவில் நடத்தப்பட்ட, ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பேரணிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. யாரும் சுடப்படவில்லை, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்படவில்லை. தடியடி நடத்தப்படவில்லை. இது ஒன்றே எதிரணியினர் மீது ஏவி விடப்படும் வன்முறைகளுக்குப் போதுமான சாட்சியாகும். ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிராகரிக்கின்ற, ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போக்கு அரசிடம் தலைதூக்கியுள்ளதையே இது வெளிப்படுத்தியுள்ளது. 

அரசுக்கு முண்டு கொடுக்கும் சிங்கள நாளேடு கூட, போரினால் பெற்ற மதிப்பைக் காப்பாற்ற அரசாங்கத்துக்குத் தெரியவில்லை என்று சினந்து கொண்டிருக்கிறது. சிங்கள ஊடகம் ஒன்றே இப்படிப் பார்க்கின்ற போது, மனிதஉரிமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் ஜெனிவா கூட்டத்தொடரில் இது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்குகின்ற போக்கில் இலங்கை அரசாங்கம் இருப்பதாக ஜெனிவாவில் பட்டியல் போடுவதற்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருப்பதே அரசாங்கமும் அரசபடைகளும் தான். 

போர்க்குற்ற விவகாரங்களை, சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிரான ஆயுதமாக வஞ்சக நோக்கில் பாவிப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. ஆனால் அதற்கும் அப்பால், சர்வதேச சமூகம் பரந்துபட்டளவிலான மனிதஉரிமை மீறல்களை பட்டியலிடுவதற்கு சிங்களம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இலங்கை மீது ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் தென் படத் தொடங்கி பல மாதங்களாகி விட்டன. ஆனாலும் அரசாங்கம் இத்தகைய ஆட்கடத்தல்களை தடுப்பதற்கோ, ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளைத் தவிர்ப்பதற்கோ முனையவில்லை. தனியே வெளிநாடுகளில் போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரசாரங்களைச் செய்தால் மட்டும் போதும் என்றே கருதியது. 

போருக்குப் பின்னர், மனிதஉரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆட்கடத்தல்களில் இருந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்தாவது இருக்க வேண்டும். இவற்றைச் செய்து சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில், மேற்குலகமும், புலம்பெயர் தமிழர்களும், புலி ஆதரவாளர்களும் செய்யும் சதி என்று கூறி அரசாங்கம் நிலைமையின் தீவிரத்தை திசை திருப்ப முனைகிறது. இது உள்நாட்டில் பேரணிகளை நடத்துவதற்கு வேண்டுமானால் கைகொடுக்கலாமே தவிர, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உதவப் போவதில்லை.

நன்றி இன்போதமிழ் 

Sunday, March 4, 2012

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் தடம்புரளலாம்?


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஆரம்பமாகியுள்ளது. நீண்ட காலமாகவே சர்வதிகார ஆட்சியாளர்களாக விளங்கிய எகிப்தின் அதிபர் முபாராக், லிபிய அதிபர் கேணல் கடாபி ஆகியோரின் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட அதேவேளையில் சிரிய அதிபரின் ஆட்யைக் கவிழ்க்கப் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இன்னும் பல மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டங்கள் சர்வதிகார ஆட்சிகளுக்கு எதிராக இடம்பெற்று வருகின்றன. இப்படியான சர்வதிகார ஆட்சிகள் இடம்பெறும் நாடுகளில் மனித உரிமைகளும் ஏனைய சுந்திரங்களும் பறிக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் தொடரும் இவ்வேளையிலே மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரை ஆரம்பித்து உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை தமது உரையில் சிரியாவில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாகவும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் காரசாரமான கண்டனங்களைத் தெரிவித்தார். இலங்கையில் போரில் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் தொடர்பாகவும் தனது உரையில் குறிப்பிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும் அவர் அவை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. எனினும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரமே சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைப் பின் தள்ளிவிட்டுத் தற்சமயம் முக்கிய பிரச்சினையாக வெளிப்பட்டு நிற்கிறது. 

சகல நாடுகளும் அதாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்க தகுதி பெறாத சில நாடுகள் உட்பட இலங்கை விவகாரத்தில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்படுகின்றன. இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி உரையாற்றினார். அதையடுத்து தாய்லாந்து பிரதிநிதியும் இலங்கைக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்த போதிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தத் தவறவில்லை. மேலும் ரஷ்யப் பிரதிநிதி இலங்கைக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத போதிலும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் சிறிய நாடுகளில் உள் விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடினார். 

இலங்கைக் குழுவினர் அந்தப் பேச்சு தமக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட கருத்து என்றே கூறிக் கொண்டனர். 

கியூபா தனது ஆதரவைப் பூரணமாக இலங்கைக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை கியூபா ஏற்றுக்கொண்டு வழங்கும் ஆதரவு என நாம் கருதிவிட முடியாது. மூன்றாவது உலக நாடு ஒன்றின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற அடிப்படையிலேயே கியூபா இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி எப்போதுமே அமெரிக்காகவுக்கு எதிராகக் கியூபாவும், கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவும் நிலைப்பாடுகளைக் கொண்டவை என்பதும் ஒரு முக்கிய விடயமாகும். இப்படியாகக் கூட்டத் தொடரில் உரைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் கூட்டத் தொடருக்கு வெளியே ஒரு பெரும் ராஜதந்திரப் போர்க்களம் விரிவடைந்துள்ளது. இலங்கைத் தரப்பும் அமெரிக்கத் தரப்பும் தமக்கு ஆதரவு திரட்டுவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும் விவாதங்களும் மாறி மாறி தீவிரமாகவும் அடிக்கடியும் இடம்பெற்று வருகின்றன. இலங்கைக் குழுவினர் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து தங்கள் விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். குறிப்பாகச் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். அதேபோன்று ஆபிரிக்க நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். அல்ஜீரியா, மனித உரிமைகள் பேரவையில் ஒரு உறுப்பு நாடாக இல்லாத போதும் ஏனைய முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு ஆதரவாகத் திரட்ட முயற்சிகளைச் செய்வதாக இலங்கைக்கு வாக்களித்துள்ளது. அதேவேளையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு ஆதரவு தேடி வருகிறார். தற்சமயம் தென்னாபிரிக்காவில் தங்கியுள்ள அவர் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார். இதுவரை அவருக்கு எவ்வித சாதகமான பதிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இலங்கைக் குழுவில் சென்றிருந்த போதிலும் அவர்கள் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை

மறுபுறத்தில் இலங்கைக்கு எதிராக நாடுகளை அணிதிரட்டுவதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் நோக்குடன் அமெரிக்காவிலிருந்து 15 பேர் கொண்ட ஒரு குழுவும் பிரிட்டனிலிருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெனிவா வந்திறங்கியுள்ளனர். இந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு மிகத் தீவிரமான முறையில் ஆதரவு திரட்டி வருகின்றனர். ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த தாய்லாந்து உட்படச் சில நாடுகள் எதிர்ப்பக்கம் மாறக் கூடிய வாய்ப்புக்கள் தோன்றக் கூடும் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக இலங்கைத் தூதுக்குழுவினர் மீண்டும் அந்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்க முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அதேவேளையில் இந்தியா, ஜோர்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இன்னும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஜோர்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கடைசி நேரத்தில் அமெரிக்காவின் பக்கமே நிற்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்வது சம்பந்தமாக அமெரிக்காவின் கசப்புணர்வைச் சந்தித்த இந்தியா மீண்டும் ஒரு முறை அமெரிக்காவுடன் இலங்கைக்காக முரண்படும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இந்தியா வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதெனவே எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஜெனிவாவுக்கான இந்தியத் துணைத்தூதுவர் கேவாபட்டாச்சார்யா அமெரிக்க அழுத்தம் காரணமாக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் தடம்புரளலாம் எனவும் இலங்கைக்குழு அதற்கேற்ற வகையில் வியூகங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். 

அவரது ஆலோசனையில் பிரதிநிதிகளைச் சந்திப்பதைவிட அந்தந்த நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதே பயன்மிக்கது எனக் கூறப்படுகிறது. இன்னொரு புறம் புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மனித உரிமை நிறுவனங்களும் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்து தமிழ் மக்கள் தொடர்பான நியாயங்களை விளக்கி வருகின்றனர். 

அதாவது இன்று ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வளாகம் ஒரு பெரும் ராஜதந்திர யுத்தகளமாக மாறியுள்ளது. இலங்கை ஒரு புறமும், இலங்கையில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பவர்கள் மறுபுறமுமாக வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்கா அமைதியாகவும் தந்திரமாகவும் தனது காய்களை நகர்த்த இலங்கை அதற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான பிரச்சினை என்னவெனில் போரில் பாதிக்கப்பட்ட, பேரழிவுகளைச் சந்தித்த இலங்கைத் தமிழர்களாகிய எம்மைக் கருவூலமாகக் கொண்டே இந்தக் களம் விரிந்திருக்கிறது. போரின் இறுதி நாள்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படுவது தொடர்பாகவே இந்த ராஜதந்திரப் போர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகிறது. இதைக் கொண்டு வருவதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முன்னின்று உழைக்கின்றன. அவர்களைப் பொறுத்த வரையில் பொதுவாகவே மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினையே! ஆனால் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு ஜீவாதாரப் பிரச்சினையாகும். 

இந்தப் போரின் இறுதி நாள்களில் கொல்லப்பட்ட 40,000 மக்களின் உறவுகள், விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள், உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாகி விட்டவர்கள் ஆகியோர் தொடர்பான நியாயங்களைக் கோரும் ஒரு நடவடிக்கையாகும். அதுமட்டுமன்றி போர் முடிந்த பின்பும் இலங்கை அரசால் தொடரப்படும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அம்பலத்துக்குக் கொண்டு வரும் ஒரு அத்தியாவசிய முயற்சியாகும். மனித உரிமைகள் பேரவையில் இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிபெறுமானால் தமிழ் மக்கள் மேல் நடத்தப்பட்ட பேரழிவுக்கு இலங்கை பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து இன ஒடுக்குமுறையைத் தொடர முடியாத ஒரு நிலையும் ஏற்படும். ஆனால், இந்தக் கண்டனப் பிரேரணை தோல்வியடையுமானால் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகள் மூடி மறைக்கப்படும். இலங்கை அரசு புதிய உற்சாகத்துடன் மேலும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தொடரும்.

எனவே இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிபெற ஒவ்வொரு தமிழனும் தன்னால் இயன்ற முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தநிலையில் தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் கடமையை உணர்ந்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவைத் தொடரில் பங்குகொள்ள வேண்டும். அங்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து எமது நிலையைத் தெளிவுபடுத்துவதுடன் இலங்கை அரசின் பொய்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்தக் கடமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யத் தவறினால் ஒரு முக்கிய கடமையைச் செய்ய வேண்டிய தருணத்தில் செய்யத் தவறிய வரலாற்றுத் தவறைச் செய்த பழிக்கு ஆளாக வேண்டி வரும்.

நன்றி இன்போ தமிழ் 

சுயநிர்ணய உரிமையும் சிறுபிள்ளை வேளாண்மையும்! - வி.ரி. தமிழ்மாறன்


சுயநிர்ணய உரிமை யாருக்கு உரியது, யாரால் பிரயோகிக்கப்படலாம், யாருக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது பற்றி எல்லாம் ஆயிரக்கணக்கில் நூல்கள் வெளிவந்துள்ளன. வெறுமனே ஓர் அரசியற் கருத்தேற்பாக இருந்து இன்று உரிமையாக மாறிவிட்ட இது தற்போது சட்டக் கோட்பாடாக நிலை பெற்றுள்ளது. இன்று சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை எல்லோரும் உச்சரிக்கக் கற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் அதனது அத்தனை பரிமாணங்களையும் உணர்ந்து செயற்படுகின்றார்களா என்பது வினாக்குறியாக உள்ளது.

சுயநிர்ணய உரிமை என்பது இன்று ஆட்சிமுறைமை ஒன்றின் நெறிமுறைத் தன்மைக்கான அளவுகோலாகவே பாவிக்கப்படும் நிலையிலுள்ளது. இதில் குறைபாடு காணப்பட்டால் ஜனநாயக அம்சங்களை மேம்படுத்தும்படி சர்வதேச சமூகம் கோரிக்கை வைக்க முயலும்

முதலாம் உலகப்போர் முடிவில் மேற்கு நாடுகள் இந்தக் கருத்தேற்பினைப் பாவித்து பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த முற்பட்டனர். ஆயின், சோசலிஸ நாடுகள் இது (ஒடுக்கப்படும்) மக்களின் உரிமை என்பதால் மக்களே இது பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்றனர். ஆனால் உண்மையானதும் சுதந்திரமானதுமான முறையில் மக்கள் தீர்மானிக்க வழியுண்டா என்பது பற்றி பின்னையவை கவலைப்படவில்லை. 1960களில், குடியேற்ற நாடுகள் சுதந்திரம்கோரி நின்றபோதும் சுயநிர்ணய உரிமை பற்றியே பேசப்பட்டது. .நா பொதுச்சபையில் பெரும்பான்மைப் பலம் மேற்கத்தைய நாடுகள் அல்லாதவைக்குக் கிடைத்தமையினால், இந்த உரிமையானது குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுதற்கான உரிமை மாத்திரமே என்றளவில் குறுகிப் போயிற்று. மூன்றாம் உலக நாடுகள் எல்லாமே இந்த நிலைப்பாட்டை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டன.

ஆனால், 1980 களிலிருந்து நிலைமை பழைய நிலைக்குத் திரும்பலாயிற்று. அதாவது ஆரம்ப காலத்தைய மேற்குலக நிலைப்பாட்டைத் தழுவிய 'பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கான மக்களின் உரிமையே' என்ற பொருள்கோடலே தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. ஆகவே இன்று சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நிற்போர் ஜனநாயக நிறுவனங்களில் பங்குபற்றும் தமது உரிமை மறுக்கப்படுவதை உலகுக்குக் காட்டி நிற்கவேண்டும். இதற்கு மறு பெயராகவே 'உள்ளக சுயநிர்ணய உரிமை' என்ற சொற்றொடர் பாவனைக்கு வந்து சேர்ந்தது.
 
குறிப்பாக, ஐரோப்பிய யூனியனின் திட்டவட்டமான அணுகுமுறை இன்று இவ்வாறாகவே உள்ளது. இதை ஓரளவுக்கேனும் உணர்ந்து கொண்டுதான் விடுதலைப் புலிகளின் ஆலோசகர், ஒஸ்லோ பிரகடனத்தின் உள்ளடக்கத்தை 'உள்ளகச் சுயநிர்ணய உரிமை'க்குள் நின்று விளங்கப்படுத்த முற்பட்டார்.

பிரகடனத்தின் முக்கிய பகுதி வருமாறு அமைகின்றது:
'விடுதலைப் புலிகளின் தலைமையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குப் பதிலளிக்கையில்தமிழ்ப்பேசும் மக்களது வரலாற்று ரீதியான வசிப்பிடப் பிரதேசங்களில் 'உள்ளகச் சுயநிர்ணய உரிமை'க் கோட்பாட்டின் மீதமைந்ததான தீர்வொன்றினை, ஐக்கிய இலங்கைக்குட்பட்ட கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையில் ஆராய்வதற்குத் திறத்தவர்கள் உடன்பட்டுள்ளனர்…’

இரு தேசங்கள் இணைந்து மத்திய அரசாங்கத்தை உருவாக்குதல் என்றெல்லாம் அவர்கள் பேச முற்படவில்லை. எது விளையும், எது விளையாது என்பதை உணர்ந்தவர்கள் அப்படித்தான் பேசியிருப்பார்கள்.
விடுதலைப் புலிகளின் 2003 ஆம் ஆண்டைய 'இடைக்கால தன்னாட்சி அதிகார அமைப்பு' யோசனையில் சுயநிர்ணய உரிமை பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் தேசங்கள் இணைதல் பற்றிய பிற்காலச் சிந்தனை பற்றி எதுவுமே கூறியிருக்கவில்லை.
 
வெளியிலுள்ள தேசங்கள் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்தல் என்றவாறான சுயநிர்ணய உரிமைப் பிரயோகத்தை குடியேற்ற ஆட்சிகள் முடிவுக்கு வந்த 1970களின் பின்னர் எந்த அரசுமே வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதில்லை. வெளிநாட்டின் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உட்பட்டிருக்கும் மக்களின் உரிமை எனப் பின்னர் சிலர் இதற்கு நீட்டிப்பு விளக்கம் கொடுத்தாலும் அது ஒரு நாட்டின் ஆள்புலத்திலுள்ள எல்லா மக்கள் மீதானதுமான ஆக்கிரமிப்பாகவும் அடக்குமுறையாகவும் பார்க்கப்பட்டதே தவிர ஒரு நாட்டுக்குள் உள்ள ஒரு பகுதி மக்கள் மீதான அடக்குமுறைக்கும் விஸ்தரிக்கப்படலாம் என்று எந்த அரசுமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னையதை சிறுபான்மையினர் உரிமைகள் என்றளவில் முடக்கிவிடவே புதிய அரசுகள் விரும்பின.

ஆயினும், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையானது மிக மோசமாகப் போகுமிடத்து இனப்பாரபட்சமானது உள்ளக குடியேற்றவாதமாக மாறிவிடும் என்றளவில் உள்ளக சுயநிர்ணய உரிமைப் பிரயோகம் சிறுபான்மையினருக்கும் பொருந்தும் என்ற வாதம் பிரான்ஸ் போன்ற நாடுகளால் முன்வைக்கப்பட்டது.

1966 இல் .நா ஆக்கிய இரு கட்டுறுத்துக்களையும் 1960, 1970 இன் பொதுச்சபைப் பிரகடனங்களையும் சேர்த்து வாசிப்பின் ஆள்புல ஒருமைப்பாட்டில் சர்வதேசம் கொண்டிருக்கும் விடாப்பிடியான அழுத்தம் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படலாம். இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகையில் இந்தியாவும் பிரான்ஸூம் எங்ஙனம் நேரெதிர் நிலைப்பாடுகளை எடுத்திருந்தன என்பதையும் கவனிக்க வேண்டும். .நா வைப் பொறுத்தளவில் ஆள்புல ஒருமைப்பாட்டைச் சட்டரீதியில் கட்டிக்காப்பதில் இந்தியாவின் தலைமையிலேயே ஆபிரிக்க, ஆசிய நாடுகள் செயற்பட்டு வெற்றிகண்டன என்பதையும் மறக்கக் கூடாது. இதே இந்தியா, பங்களாதேஷை உருவாக்கியபோது அதனைக் கண்டித்து இலங்கை .நா பொதுச்சபையில் கூறிய விளக்கத்தையும் ஞாபகத்தில் கொண்டால் அரசுகள் எங்ஙனம் ஆள்புல ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் உறுதியாக உள்ளன என்பது பெறப்படும்.

நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது அதே அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை என்பது அக்குறிப்பிட்ட மக்கள் பிரிவானது ஆட்சியில் பங்குபற்றுதலை அடியோடு மறுப்பதாக இருக்கையில், ஜனநாயக மறுப்பு என்றளவில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டத் தொடங்குகின்றது. ஆனால் அதற்காக அந்த அரசின் ஆள்புல ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் முயற்சியில் அவை ஈடுபடமாட்டா. இனப்பாரபட்சத்தை ஒழிக்கும் சமவாயத்தின் விசேட குழு 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் இது அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது

ஜனநாயக மறுப்பினைச் சரிசெய்ய வேறு எந்த மார்க்கமும் இல்லையெனில் கடைசியில், சர்வதேச சமூகம் ஆட்சிமாற்றத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிக்கலாம். இது சர்வதேச அரங்கில் அப்பிரச்சனை தொடர்பான ஆதரவுத் தளத்தைப் பொறுத்து அமைவதாகும்.

இப்படி நான் கூறுகையில், ஈஸ்ரிமோர், கொசோவோ மற்றும் தென் சூடானில் என்ன நடந்தது என்று சிலர் கேட்க முற்படுவர்.

ஈஸ்ரிமோர் நிலைமை மிக அண்மைக் காலத்தைய குடியேற்ற நாட்டு ஆட்சிமுறைமையின் ஒரு விளைவாகப் பார்க்கப்பட வேண்டும். அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாகவும் பார்க்கப்படலாம். உண்மையில், .நா இதனை சர்வதேசச் சட்டத்தை மீறிய இந்தோனேசிய ஆக்கிரமிப்பாகவே பார்த்தது. அதாவது, குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்புக்கும் இதற்கும் இடையில் அவ்வளவாக வித்தியாசம் பார்க்கப்படவில்லை.

90% அல்பேனிய இனத்தவரைக் கொண்ட சேர்பிய மாகாணம் ஒன்றாக இருந்த கொசோவோவைப் பொறுத்தளவில், 1999 இல் நேட்டோ நாடுகளுக்கும் யூகோஸ்லாவியாவுக்கும் இடையிலான இராணுவ மோதலை அடுத்து, அது .நா வின் மேற்பார்வை அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. கணிசமான சுயாட்சியுடனான தன்னாட்சி அதிகாரமே முதலில் முன்வைக்கப்பட்டாலும் பின்னர் அது பூரண சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால் இன்றும்கூட அதனை ஓர் அரசாக ஏற்பதற்கு இலங்கை உட்படப் பல அரசுகள் பின்னிற்கின்றன.

தென்சூடானில், முதலில் சுயாட்சி அதிகாரம் முன்வைக்கப்பட்டு அது செயற்படுவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டு அதன் பின்னரே சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. ஆக, ஜனநாயக வழிமுறைகள் பரீட்சிக்கப்பட்டன. பேரினவாதிகளின் ஆட்சிமுறைகள் என்று கூறிவிட்டு எவருமே அந்தரத்தில் பந்தல் போட்டுக் கொண்டிருக்கவில்லை.

சுயநிர்ணய உரிமைப் பிணக்குகளைத் தீர்ப்பதில், பொஸ்னியா-ஹேசேகொவினா சுயாட்சி தொடர்பான Dayton உடன்படிக்கைகள், சூடான், மாசிடோனியா தொடர்பாக பாதுகாப்புச் சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட சுயாட்சி உடன்படிக்கைகள், ஜோர்ஜியாவிலுள்ள அப்ஹாஸியா மாகாணத்துக்கான சுயாட்சி யோசனைகள் போன்றவையும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான ஒவ்வாமையைச் சரிப்படுத்த சர்வதேச சமூகம் கைக்கொள்ளும் வழிமுறையையே சுட்டிநிற்கின்றன.

ஐரோப்பிய யூனியனால் தாபிக்கப்பட்ட யூகோஸ்லாவியக் கமிட்டியானது (1992) குரோஷியா, பொஸ்னியா ஹேசேகொவினா என்பவற்றுக்குள் வாழும் சேர்பியர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டா என்பதைத் தீர்மானிக்கையில், அவர்களின் மனித உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பதை அளவுகோலாகக் கொண்டு தீர்மானமெடுக்கத் தலைப்பட்டனர்.

மேற்சொன்ன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரு தேசங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக்குள் மத்திய அரசாங்கத்தை உருவாக்குதல் என்ற வழிமுறையை சர்வதேச சமூகம் ஒருபோதுமே ஊக்குவிக்கவில்லை.

ஒற்றையாட்சி முறைமையை ஒருபோதுமே ஏற்றக் கொண்டிராத தமிழ் மக்கள் என்றளவில், மாற்று முறைமையைக் கோரிநிற்றலில் இருக்கும் நெறிமுறைத் தன்மையும் ஆதரவுச் சூழ்நிலையும் வெளிவாரி சுயநிர்ணய உரிமையைச் சுட்டிநிற்பதான சந்தேகத்தை ஏற்படுத்தவல்ல தேசங்கள் இணைதல் என்ற நிலைப்பாட்டில் இருக்க முடியாது.

தேசங்கள் இணைதல் என்ற நிலைப்பாட்டில் நின்று பேச்சுவார்த்தை நடாத்துவதாயின் பின்வரும் இரண்டு நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று எமக்குச் சாதகமாக இருக்க வேண்டும்

(1) குடியேற்ற ஆட்சியிலிருந்து நாம் சுதந்திரம் பெறுகின்ற காலகட்டத்தில் இருக்க வேண்டும். அல்லது
(2)   ஏற்கனவே பௌதீக ரீதியில் முற்றாக விலகி நிற்கின்றோம் என்று காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். (இதனையே விடுதலைப் புலிகள் நிரூபிக்க முற்பட்டார்கள்). ஆதரவுப் பின்புலம் என்று இதனையே கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இன்றைய எமது நிலையில் மேற்சொன்ன இரண்டுமே எமக்குப் பொருந்தாது. பங்குபற்றல் மறுக்கப்படுகின்றது என்ற விளக்கம் மட்டுமே எம்மால் கொடுக்கப்பட முடியும்.
1990 இல் யுனெஸ்கோவினால் கூட்டப்பட்ட நிபுணர்கள் கூட்ட அறிக்கையில் 'மக்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் மக்கள் குழும உரிமையைப் பெறுவதானால் கொண்டிருக்க வேண்டிய' பிரதான விடயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் நான்காவதாக அவர்கள் குறிப்பிடுவது:

'அம்மக்கள் குழுவானது தனது பொதுவான சிறப்பியல்புகளையும் அடையாளத்துக்கான விருப்பையும் வெளிப்படுத்துவதற்கென ஏதேனும் நிறுவன அமைப்புக்களை அல்லது வேறு ஏதேனும் வழிவகைகளைக் கொண்டிருக்க வேண்டும்.'

இத்தகைய நிறுவன அமைப்புக்கள் ஒரு நாட்டுக்குள் இருப்பதால் மட்டும் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமை பாதிக்கப்பட்டுவிடாது.

தேசங்கள் இணைந்து ஓர் அரசாக அமைவதென்றால் முதலில் அந்த இரு தேசங்களும் எங்கே இருக்கின்றன என்ற கேள்வி எழும். சுதந்திரத்துக்குப் பிந்திய அரசொன்றைப் பொறுத்தளவில் தேசங்கள் வெளியில் இருக்க முடியாது. அவை ஒரே நாட்டுக்குள்ளேதான் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இதுதான் சர்வதேச சமூகம் ஏற்றிருக்கின்ற நியதி. இருக்கின்ற அரசில் குறைபாடுகள் உள்ளன என்பதற்காக அப்படியோர் அரசே இல்லையென வாதிடுதலைச் சட்ட அறிஞர்கள் ஏற்றிட முன்வர மாட்டார்கள்.

கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்தமை, வடக்கு யேமனும் தெற்கு யேமனும் மீண்டும் இணைந்தமை என்பனவும் சுயநிர்ணய உரிமைப் பிரயோகமே என்றாலும் அவை 'வெளியில் இருந்த' தேசங்களின் இணைவு என்பதை மறக்கக் கூடாது

'ஒரு நாட்டுக்குள்' என்று வந்தவுடனேயே எல்லைகள்தான் முதலில் வரும். அப்படி வருகையில் அதற்குட்பட்டவர்கள் யாவருக்குமான உரிமை என்றே சுயநிர்ணய உரிமை முதலில் பார்க்கப்படும். அப்படியில்லை, இதுவொரு குறிப்பிட்ட மக்கள் கூட்டஞ்சார்ந்த பிரச்சனை என்று வாதிடுவதானால் ஜனநாயக மறுப்புக்கான ஆதாரம் காட்டப்பட வேண்டும்.

ஆள்புலத்தைவிட மக்கள் தான் முக்கியம் என்று வாதிட்டாலும் அரசுகளின் நடைமுறை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சர்வதேசச் சட்டம் என்பது அரசுகளால் அரசுகளுக்காக அவற்றின் நடைமுறைகளால் ஆக்கப்பட்டது மட்டுமே என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். .நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி இது விடயத்தில் வருமாறு கூறியிருக்கின்றார்

'இன, மத அல்லது மொழிக்குழு ஒவ்வொன்றும் அரசுத் தன்மையைக் கோரினால் அரசுகள் சிதறுண்டு போவதற்கு அளவே இருக்காது. அது மட்டுமன்றி எல்லா மக்களுக்குமான சமாதானம், பாதுகாப்பு, பொருளாதார சேமநலன் என்பவற்றை ஈட்டுதல் இன்னும் கடினமாகிவிடும்.' 
 
இதை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், இன்றைய காலகட்டத்தில் இறைமைமிக்க அரசின் மீதான தலையீடு என்பது சர்வதேச சமூகத்தினால் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும் என்பதை வலியுறுத்தவே. அதாவது, அரசின் கீழுள்ள அத்தனை மக்களும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுவதான அடக்குமுறை ஆட்சி. மற்றையது, குறிப்பிட்ட இனக்குழுமம் ஒன்று மீதான திட்டமிட்ட அழிப்புமுறை. இந்த இரண்டையும் நிவர்த்திக்கவே சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டும். ஆனால் அங்ஙனம் தலையிடும்போதெல்லாம் அரசை மீளுருப்படுத்த வேண்டும் என்ற அவசியமும் சர்வதேச சமூகத்துக்குக் கிடையாது.

முள்ளிவாய்க்கால் காலத்தில் காட்டாத அக்கறையை அதே சர்வதேச சமூகம் இப்போது ஏன் காட்டுகின்றது என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கும் அப்பால் மீறிச் செயற்படுவதனால் அதற்கான இராணுவ பலம் தேவைப்படும். இதை வைத்துத்தான் சுயநிர்ணய உரிமை என்பது might is right' என்றவாறாகப் பயன்படுவதாக முன்பொரு தடவை எழுதியிருந்தேன். அதற்கு உதாரணமாக பயாவ்ஃரா, மற்றும் 'கட்டாங்கா' பிரிவினை நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்து புதிய அரசொன்று உருவாகுவதைச் (ஆள்புல ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதால்) சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொள்ளாத அதேவேளை அதனைத் தடுக்கவும் இல்லையென கியூபெக் வழக்கில் (1995) கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை might is right' என்பதை உறுதிசெய்வதாகவே இருந்தது.

எப்படிப் பார்க்கினும் சட்ட அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளும் விடயம் சுயநிர்ணய உரிமையில் இரண்டு அம்சங்கள் மட்டுமே உள்ளன என்பதையே. உள்ளக, வெளிவாரி என்ற இந்த இரண்டுக்கும் அப்பால் மூன்றாவது அம்சம் என்று எதுவுமில்லை.

சுயநிர்ணய உரிமையை இருக்கின்ற அரசுக்குள் மட்டுமே பாவிக்க வேண்டும் என்று கட்டாயமில்லைத்தான். ஆனால், அதற்கும் அப்பால் பாவிக்கலாம் எனக் கருதுதல் நிச்சயமாக உள்ளக சுயநிர்ணய உரிமையன்று. அப்படியானால் அது என்ன பிரயோகம்? கியூபெக் வழக்குத் தீர்ப்பின் திரிபடைந்த வியாக்கியானம் இது.

இது விடயத்தில் இன்னுமிரு விடயங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஈட்டிய இறைமை (earned sovereignty) மற்றும் நிவர்த்திப்பு பிரிவினை (remedial secession) என்ற இரு கோட்பாடுகள் தற்போது சட்டவாளர் மத்தியில் விவாதிக்கப்படுகின்றன.

ஈட்டிய இறைமை என்பது Michael Scharf என்பவரின் பிரசித்திபெற்ற நூலொன்றில் வாதிடப்பட்டுள்ள விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் விடயமாகும். குறிப்பிட்ட ஆறு கட்டங்களைத் தாண்டி இறைமைமிக்க அரசொன்றாகத் தன்னை நிலைநிறுத்தும் தகுதியை நிரூபித்தல் என்று இதனைப் பொருள் கொள்ளலாம். இது சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடைபெற வேண்டிய விடயமாகும். கொசோவோ மற்றும் ஈஸ்ரிமோரில் சர்வதேசம் செயற்பட்ட விதத்தை வைத்தே இந்த வாதம் முன்னெடுக்கப்படுகின்றது

சுயநிர்ணய உரிமை, மனிதாபிமானத் தலையீடு என்பன ஒருபுறத்திலும் இறைமையும் ஆள்புல ஒருமைப்பாடும் மறுபுறத்திலுமாக முரண்படும் நலன்களுக்கிடையில் ஒத்திணக்கம் செய்வதற்கு சர்வதேச சமூகத்துக்கு வழிசமைக்கும் விதத்தில் இக்கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் இடைக்கால நிருவாகத்தைக் கோரியபோது அதற்கான சர்வதேச அங்கீகாரத்தை இதன் அடிப்படையிலேயே எதிர்பார்த்திருந்தார்கள். சர்வதேசத்தின் ஆதரவுத் தளம் அந்தளவுக்குச் செல்லாது என்பதை நன்கறிந்திருக்கின்றோம்.

அரசொன்றுக்குள்ளான மக்கள் குழுமம் ஆட்சியில் பங்குபற்றலிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுமாயின், பிரதிநிதித்துவ முறையிலமையாத அந்த அரசிலிருந்து விடுபட உதவுவதே நிவர்த்திப்பு பிரிவினை எனலாம். உண்மையில் 1776 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் இதனையே பறைசாற்றியது

ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் சர்வதேசச் சட்டக் கடப்பாட்டின் உட்கிடையாக இந்த உரிமை உள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் நடைமுறையில் இதற்கு ஆதரவை நாடுகளோ, சர்வதேச நிறுவனங்களோ வழங்கவில்லை. கியூபெக், ரட்டாஸ்ரன், செச்சென்யா ஆகிய மூன்று வழக்குகளும் இதற்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தன. 1986 இல் சர்வதேச நீதிமன்றம் Burkina Faso/Mali எல்லை வழக்கிலும் இதே கருத்தையே தெரிவித்திருந்தது.

உரிமையின் உள்ளமை என்பது வேறு. அதன் பிரயோகம் என்பது வேறு. எமக்குள்ள பிரச்சனை இரண்டாவதேயாகும். இது தனிப்பட்ட கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கப்படாமல் யதார்த்த நிலைநின்று பார்க்கப்பட வேண்டியதாகும். இந்த யதார்த்த நிலையில் 2009 மே மாதத்தின் பின்னர் வேறுபாடுண்டு என்பதை உணராதவர்கள் உள்ளதையும் கோட்டைவிட்டு அடுத்த சந்ததிக்கும் தவறிழைக்கின்றனர் என்பதே எனது கருத்தாகும்.

நன்றி - பொங்குதமிழ்