சிறிலங்காவின் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல, பெளத்த தேரர்களின் அரசியல் தலையீட்டை அறவே வெறுத்தவர் என்ற பெருமைக்குரியவர். அத்தகையவர் தொடர்பில் ஒரு கதை கூறப்படுவதுண்டு. ஒருமுறை சேர் ஜோன் கொத்தலாவல அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். அவரின் வருகைக்காக அங்கொடை வைத்தியசாலை விழாக்கோலம் பூண்டிருந்தது. கொத்தலாவலவுக்கு பிரமாதமாக வரவேற்பு வழங்குவதற்காக அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மனநோயாளர்களை வைத்திய சாலை வளாகத்தின் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி, பிரதமருக்கு வரவேற்புக் கொடுக்க ஏற்பாடாகி இருந்தது.
பிரதமர் வந்தாயிற்று. வரவேற்கக் காத்திருக்கும் மனநோயாளர்களுக்கு கூப்பிய கரத்துடன் ‘நான் தான் இந்த நாட்டின் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர். அங்கு நின்றவர்களில், ஒரு பகுதியினர் அதைக் கேட்டு புன்சிரிப்புடன் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர் பேசாது நின்றனர். பிரதமரோ தன்னை அறிமுகப்படுத்தியவாறு நடந்து செல்ல, மனநோயாளி ஒருவர் சேர் ஜோன் கொத்தலாவலவை தன் பக்கம் அழைத்தார்.
பிரதமரும் அவரின் அழைப்புக்கு மதிப்பளித்து அருகில் சென்றார். குறித்த மனநோயாளியோ, பிரதமருக்கு இரகசியம் சொல்வது போல காதைக் காட்டுமாறு சைகை செய்ய, சைகையை உணர்ந்த சேர் ஜோன் சம்பந்தப் பட்ட மனநோயாளிக்கு அருகில் சென்று காதைக் கொடுத்தார்.அந்த மனநோயாளி இப்போது, மெதுவாகக் கூறுகிறார். ‘நானே இந்த நாட்டின் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல என்று எங்கள் ஊரில் நான் கூறியதால்தான் என்னை இந்த வைத்தியசாலையில் கொண்டுவந்து விட்டார்கள். நீங்களும் நான் சொன்னதைப் போலவே சொல்கிறீர்கள்.
விரைவாகச் சென்று விடுங்கள். இல்லையென்றால் என்னைப்போல் உங்களையும் இவர்கள் பிடித்து வைத்தியசாலையில் கட்டிப்போட்டு விடுவார்கள்’என்றார். இதைக்கேட்ட கொத்தலாவலவுக்கு நிலைமை விளங்கிற்று. இந்தக் கதையைக் கூறும்போது இது எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் எங்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்காகத்தான். இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு விசர் பிடித்து விட்டதாக அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். அட! இராமா! ராஜீவ் காந்தியைத் தாக்கியவனுக்கு விசர். தமிழ்ச் சிறைக்கைதிகளைத் தாக்குபவர்களுக்கு விசர். பிடிபட்ட கிறீஸ் பூதத்திற்கு விசர்.
பாலியல் வல்லுறவில் கையும்மெய்யுமாக அகப்பட்ட படையினருக்கு விசர். இப்படிக் கூறி வந்த இலங்கை அரச பண்பாட்டில், இப்போது அமைச்சர் மேர்வின் சில்வா, ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு விசர் என்கிறார். ஓ! உள்நாட்டு விசர் வெளிநாட்டுக்கு மாறிவிட்டது போலும். அங்கொடை வைத்தியசாலையில் சேர் ஜோன் கொத்தலாவலவைப் பார்த்து அறிவுரை கூறியவர் போல, பிளேக்கிற்கும் கூறப்பட்டுள்ளது. இதுதான் சிறிலங்காவின் தொடர்வினையோ?
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment