ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவை நோக்கிய அமெரிக்காவின் தீர்மானம் என்ன என்பதான எதிர்பார்ப்பு, பலமட்டங்களில் தோன்றியுள்ள நிலையில், தீர்மானம் தொடர்பிலான சில விடயங்கள் கசிந்துள்ளன. சிறிலங்கா - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தையே, ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்க கொண்டுவரவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான ஆதரவினை இந்தியாவிடம் அமெரிக்கா திரட்டியுள்ளது.
இலங்கை சென்றுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரியான மரியா ஒட்டேரா தலைமையிலான இராஜதந்திரக்குழுவினர், இத்தீர்மானம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த போது, தெரிவித்துள்ளதாக யாழ் உதயன் நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா-இந்தியா
சிறிலங்கா-நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என, இந்திய அரசு வெளிபடுத்தி வந்துள்ளது. பரித்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய காலவெளி, சிறிலங்காவுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியிருந்தது.இந்நிலையில, அமெரிக்காவின் முன்வரைவும், இந்தியாவின் இந்த நிலைப்பாடும் ஒரு புள்ளியில் சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவின் நகர்வுக்கு இந்தியா ஆதரவினை வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
கடந்த வாரம், அமெரிக்க சென்ற இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம், அமெரிக்கா அரச தரப்பு இது குறித்து பேசியுள்ளது. இதேவேளை, சிறிலங்கா அரச தரப்பால் இந்தியாவுக்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளில் இருந்து, சிறிலங்கா தவறியுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு கடும் அழுத்தத்தை கொடுப்பதற்குரிய கருவியாக, அமெரிக்காவின் இந்த முன்னகர்வினை இந்தியா கையாள்வதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை சென்றுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரியான மரியா ஒட்டேரா, சிறிலங்காவைப் பயணத்தின் அடுத்த இடமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
சிறிலங்கா-அமெரிக்கா
தீர்மானம் குறித்தான நகர்வினை, ஏற்கனவே சிறிலங்காவுக்கு தெரிவித்திருந்த அமெரிக்கா, இதுபற்றி கலந்துரையாட சிறிலங்காவினை அழைத்திருந்தது. இந்த அழைப்பினை ஏற்று, சிறிலங்கா அரச தரப்பு அமெரிக்காவுக்கு சென்றுள்ளனரா என்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் இல்லை. மறுபுறம், சிறிலங்காவுக்கு நோக்கிய எந்த தீர்மானத்தையும், சிறிலங்கா எதிர்கொள்ளத்தயார் என சிறிலங்கா ஆளும் தரப்பு தொடர்சியாக தெரிவித்து வருகின்றது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகளில், அரேபிய – ஆபிரிக்க நாடுகளின் ஆதரவினைத் சிறிலங்கா திரட்டி வருகின்றது.கடந்த ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டதோடு, சிறிலங்காவுக்கு ஆதரவராக பல நாடுகளைத் திரட்டியவருமான மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமெட்நசீத்தின் பதவி துறப்பு, சிறிலங்கா பெரும் இழப்பாகவே கருதப்படுகின்றது.
மாலைதீவில் பதவியேற்றுள்ள புதிய அதிபருக்கு, அமெரிக்கா தனது ஆதரவினை வழங்கியுள்ளமையானது, சிறிலங்காவின் ஆதரவுத் தளத்துக்கு கிடைத்த பெரும் இழப்பாகவுள்ளது. மறுபுறம், சிறிலங்காவுக்கு ஆதரவாக உள்ள இன்னுமொரு நாடாகவுள்ள இந்தோனேசியாவுக்கு ,அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரியான மரியா ஒட்டேராவுக்கு செல்லவுள்ளார். தற்போது இலங்கையில் உள்ள அவர் இந்தியினைத் தொடர்ந்து இந்தோனேசியாவுக்கு செல்கின்றார்.
சிறிலங்காவை நோக்கிய அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும்நோக்கிலேயே, இவரது இந்தோனேசிய பயணம் அமைவதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழர் தரப்பு
சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சிறிலங்கா – நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்தும் அமெரிக்காவின் தீர்மானம் எத்தகைய காத்திரமான பங்கினை வகிக்கும் என்பது முக்கிய விடயமாக உள்ளது. அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்ற தீர்மானம், எவ்வளவு தூரம் வலிமையுள்ளதாக இருக்கும் என்பது பற்றி கவலை தமிழர் தரப்பு இராஜதந்திர செயற்பாட்டாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
இத்தகைய புறச்சூழலை கருத்தில் கொண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கூறிய கூற்றினை இங்கு பொருத்திப் பார்பது பொருத்தமாக இருக்கும். ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நாம் சிறிலங்கா மீது அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
தீபெத் தொடர்பாக ஐ.நா சபையில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோதும் அவற்றையெல்லாம் சீனா தொடர்ச்சியாகத் தடுத்து வருகிறது. ஆனாலும் உலகின் அபிப்பிராயங்களை மாற்றுவதற்கு இத்தகைய தீர்மானங்கள் அவசியம் என்பதை தீபெத் புரிந்து கொண்டுள்ளது. ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடர் மூலம் மட்டும் எமது இலட்சியத்தை வென்றெடுத்துவிட முடியாது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். ஆனாலும் அது ஒரு முக்கியமான படி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
இன்று சர்வதேச சமூகத்தில் சிறிலங்காவை ஆதரிப்போர் ஒரு பிரிவாகவும் தமது சொந்த நலன்களுக்காக சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்து அதனை திசை திருப்புவோர் ஒரு பிரிவுமாகவும் உள்ளனர். இதில் எந்தப் பிரிவும் தமிழர் நலனுக்காக நிற்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் எமது நலனும் சர்வதேசத்தின் நலனும் ஒருகோட்டில் சந்திப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment