2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது. எதிரியின் நகர்வை அவதானிப்பதற்காக காவலரண்களுக்கிடையில் வழமையாக ரோந்து செல்வார்கள். அப்படி ஒரு அணி ரோந்து சென்று கொண்டிருந்தபோது இடையில், ஒரு யானை குட்டியுடன் நின்றது. (யானை குட்டி ஈன்று அதை வளர்த்தெடுக்கும் வரை குட்டிக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் எடுக்கும்). அப்போது இவர்களைக் கண்டுவிட்ட யானை அவர்களைத் துரத்த, பயந்து போன அவர்கள் தாய் யானையை நோக்கிச் சுட்டனர். அதில் தாய் யானை இறந்து விட்டது.அவர்களும் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
ஆனால் இறந்த தாய் யானையை விட்டு குட்டியானை போகவில்லை. வேறு சிலர் சென்று பார்த்தபோது இறந்த தாய் யானையில் பாலைக் குடித்துக் கொண்டு அந்த இடத்திலேயே இருந்தது. இந்தத் தகவல் தலைவருக்குச் சென்றுவிட்டது. அப்போது தேசியத்துணைப்படைக்குப் பொறுப்பாக நடேசண்ணை இருந்தவர்.
நடேசண்ணையிடம் தலைவர் ‘மணலாற்றில் உள்ளவர்கள் யானையைச் சுட்டதால், அந்த நிர்வாகம் யானைக்குட்டியைப் பொறுப்பெடுத்துப் பராமரிக்க வேண்டும். யானைக்குட்டிக்கு விசேடமாக எந்தவித சிறப்பு ஒதுக்கீடும் இருக்காது. அவர்களுக்கு ஒதுக்கப்படும் வழங்கல்களையும் பால்மாவையும் வைத்தே யானைக்குட்டியை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்ற தண்டனையை சொல்லிவிட்டிருந்தார்.
ஒரு நாளைக்குப் பால் கொடுக்கவேண்டுமெனில் கிட்டத்தட்ட ஆறு ‘அங்கர்‘ பால்மா பைக்கற்றுகள் தேவைப்படும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் வழங்கல்களைக் கொண்டு அந்த யானைக் குட்டியைப் பராமரித்து வந்தனர். அந்த யானைக்குட்டி நிதர்சனம் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படத்திலும் நடித்தது. அங்கிருப்பவர்களிற்கு யானை வளர்த்த அனுபவம் இல்லையாகினும் அப்பிரதேசத்தில் இருந்த மிருகவைத்தியர் ஒருவரின் ஆலோசனையையும் பெற்று, யானையுடன் விளையாடிக் கொண்டு சந்தோசமாகவும் அன்புடனும் பராமரித்து வந்தனர். திடீரென ஒரு நாள் குட்டியானை இறந்து விட்டது. படையணிகளில் ஒருவராகப் பழகிவிட்ட அந்த யானைக்குட்டியின் பிரிவை ஏற்றுக் கொள்வது கடினமாகவே இருந்தது.
பின்னர் குட்டியானை ஏன் இறந்தது என்ற காரணத்தை தெரியப்படுத்தவேண்டியிருந்ததால், யானையைப்பற்றித் தெரிந்த ஒரு முதியவரைத் தேடிப்பிடித்து காரணத்தைக் கேட்டபோது ‘யானைக்குட்டி வளர்ந்து வரும் போது ஒரு வயசுக்குப் பிறகு ஒரு விசப்பல்லு வளரும், அந்த விசப்பல்லை நீக்காவிட்டால் அப்பல்லு மறுதாடையில் குத்தி யானைக்கு விசம் ஏறி இறந்து விடும். தாய் யானைக்கு இந்த விடயம் தெரியும் என்பதால் விசப்பல்லு வளர்ந்து வர விளாங்காய் மாதிரி கடுமையான உணவைக் குட்டியானைக்கு சாப்பிடக் கொடுக்கும். அப்போது அந்த விசப்பல் உடைந்து வயித்துக்குள்ளபோய் செமிச்சு வெளியில வந்திடும்’ என்றார்.
வாணன்
0 கருத்துரைகள் :
Post a Comment