கடந்த செவ்வாய்கிழமை (31-01-2012) வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இக்கூற்றினை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் சீனாவை தங்களது நாட்டிலும் முதலீடு செய்யும்படி அழைக்கின்றன எனவும் மிகந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரொய்ரர்ஸ் செய்தி நிறுவனித்தினால் வெளியிட்ப்பட்ட செய்திப்பார்வை
ரொய்ரர்ஸ் – சிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அரசியல் கலப்பற்ற வர்த்தக ரீதியிலானதே : அடித்துக் கூறினார் மகிந்த ராஜபக்ச
சுமார் 1.4 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதியில் சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட பாரிய துறைமுகமானது, இந்தியாவின் கொல்லப்புறத்தில் சீனா தனது கடற்படைத் தளமொன்றை சந்தடியின்றி நிறுவிக்கொள்வதற்கே என்று கேட்டபோது, தனது மாபெரும் அயல் நாடுகள் இதைப்பற்றி ஏதும் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை எனச் சிரித்த படியே பதிலளித்தார் மகிந்த ராஜபக்ச.
மேலும் ‘இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது வேறு எந்த ஒரு நாடும் இதுபற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் சீனாவை தங்களது நாட்டிலும் முதலீடு செய்யும்படி அழைக்கின்றன’ என்றார்.
இந்தியாவின் தென் கரையிலிருந்து மிக அண்மித்த தூரத்தில் அமைந்துள்ள சுமார் 21 கோடி மக்களைக்கொண்ட இலங்கைத்தீவு, ஆசிய வல்லரசுகள் எனக் கணிக்கப்படும் நாடுகளுக்கிடையே நிகழ்ந்துவரும் நிழல் யுத்தத்தில் முன்னணி ஆடுகளமாக திகழ்கிறது. பரஸ்பர சந்தேகப்பார்வை, வர்த்தகப் பேராசை என்பவற்றின் கூட்டு இந்நாடுகளுக்கிடையேயான ஓர் கட்டுமானப்போட்டியைத் தோற்றம்பெற வைத்துள்ளது.
கொழும்பிலிருந்து செயற்படும் ஐரோப்பிய ராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ‘சீனா ஒரு பக்கத்தில் அனல் மின் நிலையம் அமைத்தால் மறு பக்கத்தில் இந்தியா பிறிதோர் அனல் மின் நிலையம், நாட்டின் தென்பகுதியில் சீனாவால் ஒரு துறைமுகமென்றால் வடபகுதியில் இந்தியாவால் பிறிதொரு துறைமுகம் என்ற ரீதியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல எனக் காட்ட முற்படுகின்றனர் போலும்.’ என்றார்.
இந்து சமுத்திரத்தில் பழமை வாய்ந்ததும், லாபம் ஈட்டவல்லதுமான கடல்வழி மார்க்கத்தில் சிறிலங்கா அமைந்துள்ளமை, அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தமது தந்திரோபாய, வர்த்தக, ராணுவ நலன்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு சிறிலங்கா மீது அக்கறைகொள்ள வைத்துள்ளது. சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தியாவைச் சுற்றிவளைக்கும் நோக்கில் அமைத்துள்ள ‘முத்துமாலை’ எனப்படும் சீனாவின் தந்திரோபாயத் திட்டத்திலும் அது பிரதான பங்கு வகிக்கிறது. வர்த்தக ஆதரவு என்ற போர்வையில் துறைமுகங்கள் தோறும் அனல் மின் நிலையம் அமைத்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை தக்கவைத்துக்கொள்ள சீனா திட்டமிட்டு செயற்படுகிறது.
இன்றுவரை, ஆதிக்கம் செலுத்தவல்ல ஆயுதங்களாக ‘நிதி வழங்கல்’ நிலவிவருகிறது: போருக்குப் பின்னரான நெடுஞ்சாலைகள் புனரமைத்தல், புகையிரதப்பாதைகள், துறைமுகங்கள், மின்நிலையங்கள் முதலியன செப்பனிடுதல் என 6000 கோடி அமெரிக்க டொலர் வரையிலான மகிந்த ராஜபக்சவின் திட்டங்களுக்கு இந்தியாவும் சீனாவும் நிதி வழங்கி வருகின்றன.
ஈரான் தொடர்பாக எழும் இக்கட்டான சூழ்நிலை
மகிந்த ராஜபக்சவின் வெளியுறவுக் கொள்கையானது அணிசேரா இயக்க வரலாற்றுப் பின்னணியில் வேரூன்றியுள்ளது. விடுதலைப் புலிகளுடன் மூன்று தசாப்தங்களாக நடந்த யுத்தத்தின் இறுதி ஆண்டில் மகிந்த ராஜபக்ச தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு சீனா, இந்தியா, மற்றும் மேற்குலகுக நாடுகளை ஒன்றோடொன்று போட்டிபோட்டுக்கொண்டு செயற்படும் வகையில் கையாண்டார்.
2009 ஆம் ஆண்டு இரத்தக் களரியில் முடிந்த யுத்தத்தில் நடந்தேறிய யுத்த விதிமீறல்கள் பற்றி விசாரணை வேண்டும் என்று மேற்குலகம் கேட்கும் நிலையிலும், சிறிலங்காவின் எண்ணை விநியோகத்தை முழுமையாகப் பாதிக்கக்கூடியதான எரிபொருள் தடையை ஈரான் மீது அமெரிக்கா கொண்டுவரும் நிலையிலும், சிறிலங்கா தன் உலக நண்பரகள் பற்றி புதிய கணக்கெடுப்பை நடாத்துகிறது.
‘நாங்கள் இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறோம்’ என மகிந்த ராஜபக்ச கூறினார். நியூடெல்லி அரசுடன் சிறிலங்கா தொடரும் பேச்சுவார்த்தை, மற்றும் அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தரவிருக்கும் பதில் அமெரிக்க உதவி திறைசேரி செயலர்களில் ஒருவரான லியூக் புறோனின் வருகை குறித்து மகிந்த ராஜபக்ச மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
மேலும் ‘இங்கு நீங்கள் ஈரானைத் தண்டிக்கவில்லை. எங்களைப் போன்;ற சிறிய நாடுகளையே தண்டிக்கிறீர்கள். எனவே எங்களுக்கு ஒரு மாற்றுவழி காட்டுங்கள். எங்கள் புகையிரதப் போக்குவரத்துக்கள் யாவும் ஸ்தம்பிதமடையும் நிலையிலுள்ளது.’ இவ்வாறு பேச்சுவார்த்தையின்போது கேட்பேன் என மகிந்த ராஜபக்ச கூறினார். லியூக் புறோனின் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்புடைத்தான தேர்வுகள்பற்றி அறிவுறுத்துவார் என எதிர்பாரக்கப்படுகிறது.
இதற்கான ஒரு விதிவிலக்கை அமெரிக்காவிடம் நாடுவீர்களா எனக்கேட்டபோது ‘அவ்வாறு நாடலாம். ஏனெனில் 93வீதமான எமது எரிபொருள் தேவைகளுக்கு நாங்கள் ஈரானில் தங்கியுள்ளோம்’ என்றார்.
யுத்தமீறல்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கையை சிறிலங்கா தானே எடுக்கவேண்டும். இல்லையேல் சர்வதேச விதிகளுக்கமைவான நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருக்கிறது. இந்நிலைப்பாடு போருக்குப்பின்னரான இணக்கப்பாட்டிற்கு சிறிலங்கா அரசாங்கத்தை வர வைப்பதற்கும், ஈரானுடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள முன்வர வைப்பதற்கும் நிர்ப்பந்திக்கக்கூடும்.
சிறிலங்கா அரசாங்கத்தின் பெயர் குறிப்பிடவிரும்பாத மூத்த அதிகாரியொருவர் ரொய்ரர்ஸ்குக் கருத்துத்தெரிவிக்கையில் ‘நாங்கள் எமது அரசியல் மூலதனத்தை இழக்க விரும்பமாட்டோம்’ எனக் கூறினார். ஈரான் சிறிலங்காவின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளியும், மிகப் பெரிய தேயிலை இறக்குமதியாளருமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இந்தியாவின் ‘கியூபா’அல்ல
இங்குதான் இந்தியாவும் சீனாவும் சந்தித்துக்கொள்கின்றன: சிறிலங்காவின் யுத்தமீறல்கள் தொடர்பில் வெளியார் தலையீட்டுக் கெதிராகவும், ஈரானிய எண்ணைத் தடை தொடர்பில் மாற்றுவழியொன்றைக் காண்பதிலும் இவ்விரு நாடுகளும் சிறிலங்காவிற்கு உதவ முன்வருகின்றன.
சீனா, கடந்த மூன்று வருடங்களாக தொடரந்து சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளுள் அதியுச்ச உதவி வழங்குநராக இருந்துவருகிறது. 2011ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் 784 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது மொத்தத்தில் 44 சதவீதமாகும்.
இந்தியாவால் இதே காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட உதவித்தொகை வெறும் 9 கோடி டொலர்களாகும். அதேசமயம் இந்தியத் தனியார் நிறுவனங்கள் சிறிலங்காவில் நேரடியாக முதலீடு செய்கின்றன. ஆனால் சீனாவோ, திட்டங்களுக்காகக் கடன் கொடுக்கும் அதேவேளை சீன நிறுவனங்களே திட்டங்களை செயற்படுத்தி வருவதுடன் திட்ட செயற்படுத்தலுக்குத் தேவையான இயந்திர உபகரணங்களையும் வழங்குகின்றது.
கொழும்பில் பாதுகாப்பமைச்சின் முன்பாகவுள்ள கோல்பேஸ் திடல் கடந்த இரண்டு மாதமாக சீனாவின் வணிக வேகத்தைக் காட்டும் காட்சியகமாக விளங்குகிறது. புதிதாக விநியோகிக்கப்பட்ட சீனபஸ்வண்டிகள், புல்டோசர் யந்திரங்கள், நெடுஞ்சாலைகள் செப்பனிடும் யந்திரங்கள், ஆட்டோ ரிக்ஷோக்கள் ஆகியன காட்சிப்படுத்தப்படும் வெளியக அங்காடியாக இக்காட்சியகம் பல தடவைகள் காட்சியளித்துள்ளது.
கொழும்பிலுள்ள மேற்கத்திய இராஜதந்திரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் சீனாவின் சிறிலங்கா மீதான அக்கறையானது வர்த்தக நலன்களை முன்னிட்ட ஒன்றென்றும், ‘முத்துமாலை’ கருத்தியலோடு தொடர்புடையதன்று என்றும் விளக்கினார். முத்துமாலை கருத்தியல் முக்கியமாக இந்திய சிந்தனையாளர் மனங்களில் நிலவும் கருத்தாகும் என்றார்.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் உதாரணமாக முறுகல் நிலை ஏற்பட்டால் சிறிலங்கா விரைந்து ‘தாயக இந்தியா’வுடன் கைகோர்த்துக்கொள்ளும். இது இந்தியாவின் ‘கியூபா’ ஆகிவிடாது என மேலும் அவ்வதிகாரி கூறினார்.
நன்றி - நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment