"தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது"?

ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற திடமான நம்பிக்கையில் இன்போ தமிழ் இந்தக் கருத்துக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது.

தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது? தெளிந்த புத்தியால் மக்களை வழி நடத்தலாமே!

தமிழ் நெற் தொடர்ந்தும் தன் அறிவுக்குப் பொருந்தாத வகையில் செயற்பட்டு வருகிறது. அதன் ஆசிரியர் குழு எமது அறிவுச் சமூகத்தில் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ள நபர்களைக் கொண்டிருப்பதால் தான் பல வெளி நாட்டு ஊடகங்களின் வரவேற்பையும் சிங்கள அரசுகளின் வெறுப்பையும் பெற்றதோடு தமிழ் மக்கள் சார்பாக உள்ள நியாயப் பாடுகளை உலகறியச் செய்து வந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமை வன்னியிலிருந்து மறைக்கப் பட்ட நாளில் இருந்து தமிழ் நெற் தனது நிதானத்தையும் நேரிய விமர்சனப் பார்வையையும் இழந்து விட்டது போன்ற தோற்றப்பாடு தெரிகிறது. உண்மையைச் சொல்வதானால் இது போன்ற பிறழ்வுகள் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர் அமைப்புகளில் ஏற்பட்டுவிட்டன:

நல்ல வேளையாக பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலைமை ஓரளவு சீர்செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சுவிஸ் உட்பட ஏனைய நாடுகளில் நிலைமை கவலை தருவதாக உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் தமது விருப்பு வெறுப்புகள் மற்றும் மன முரண்பாடுகளை வெளிப்படுத்தும் ஆர்வமும் அவசரமும் முட்கம்பி முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்ல முடியாத அளவு அவலங்களைச் சந்தித்து வரும் நிலை பற்றிய கரசனையில் எள் அளவும் காட்டுவதில்லை.
தமிழ் மக்களுக்கு எல்லாவித உரிமைகளும் அடிப்படை வசதிகள் வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை இந்திய அரசுகளும் அவற்றின் பிரச்சார முகவர்களும் தென்னாபிரிக்காவில் இடம் பெற்றது போன்ற நல்லெண்ணம் நல்லிணக்க ஆணைக் குழு பற்றிப் பேசும் அநியாய அவலம் அரங்கேறுகிறது.

இவை எதுவும் தமிழ் மக்களுக்காகப் போராடிய போராடிப் பல்லாயிரம் மாவீரர் செய்த தியாகங்களுக்கு உரிமை கோரும் அமைப்பின் உள்ளுர் தலைமைகளுக்கு தெரியாத அளவுக்கு அவர்களின் கவனம் உட்பூசல் குளறுபடிகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது. தாமே தமிழினத்தின் ஏக போகப் பிரதிநிதிகள் என உலக நகர வீதிகளிள் தாமும் கூவி எம்மையும் கூவ வைத்தவர்கள் இன்று ஈழத்து மக்கள் அவலத்தை தமக்கிடையே உள்ள பதவிப் போட்டிகளால் கேட்பாரற்ற நிலைக்குத் தள்ளிவிட்டனர்.

கே.பி கைதாவதற்கும் இவர்களுக்குள் உள்ள பூசலே காரணம் என்ற செய்திகளும் இன்று அவரால் நியமிக்கப் பட்ட உருத்திரகுமாரன் மீது காட்டப்படும் சிலரது வெளிப்படையான வெறுப்புகளும் கண்டனங்களும் உலகின் தலைசிறந்த விடுதலை அமைப்பின் தலைகீழ் நிலையைப் படம் போட்டுக் காட்டுகின்றன.

இவை போன்ற செயற்பாடுகள் ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் நிறைவே உண்டு. கடந்த அரச அதிபர் தேர்தலில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்காது புறக்கணிக்கச் செய்தது மகா தவறு எனப் புலிகளின் தயவால் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக வந்த சம்பந்தன் கூறினார். இது போன்றே 1930ல் யாழ்பாண வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் அன்றைய தேர்தலைப் புறக்கணித்தனர்.

அதனைத் தவறு என ஜீ.ஜீ. 1947ல் 50க்கு 50 என்ற குரல் எழுப்பி தேர்தலில் வெற்றியும் பெற்றார். அவரது கொள்கை மூலம் சிறுபான்மை மக்களும் பெரும்பான்மை மக்களுக்குச் சமமான அளவு அங்கத்துவம் பெற்று சிங்கள இனவெறியைக் கட்டுப் படுத்த முடியும் எனவும் நம்பப் பட்டது. ஆனால் அமைச்சுப் பதவி ஆசையால் 50யும் விட்டு இந்திய வம்சாவழித் தமிழரையும் நடுக் கடலில் விட்டார்.

சமஷ்டி ஆட்சி கேட்டுச் செல்லவா ஜீ.ஜீ.விட்ட குறையை தொட்டுத் தூக்கி அதன் மூலம் தமிழருக்கு ஒரு சம வாழ்வு கிடைக்கும் எனப் போராடினார். ஆனால் அப்போதும் ஜீ.ஜீ. சமஷ்டி ஆட்சி முறையைக் கடுமையாக எதிர்த்தார். ஏன் என்றால் அது எவருடைய சரக்கு அல்ல என்பதால். அதுமட்டும் அல்ல தமிழருக்குச் சமஷ்டி கிடைப்பதானாலும் அதுவும் தன்னாலே மட்டுமே முடியும் என மேடைகளிலும் முழங்கினார்.

ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே ஜீ.ஜீ. செல்வாவோடு சேர்ந்து தனித் தமிழ் ஈழத்துக்கான வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் இணைந்தது விவேகமா?விதியின் சதியா?
1952 முதல் 1976 வரை ஜீ.ஜீ. செல்வாவை எதிர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டு அதன் மூலம் தமிழினம் படு மோசமான நிலைக்கு உள்ளாகக் காரணமாக நடந்தார். இத்தனைக்கும் அறிவு புலமை ஆளுமை என்பவற்றில் அவருக்கு ஈடாக ஒரு சிலரைக் கூட எவராலும் அடையாளப் படுத்த முடியாத அளவு உயர்ந்தவர். ஆயினும் யாருக்கு என்ன பயன்?

இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என எவராலும் சரியாகக் கூற முடிந்தால் நாம் தமிழ் நெற் ஆசிரிய குழுவுக்கும் அதனது சார்பான அறிவு ஜீவிகளின் செயற்பாடுகளுக்கும் காரணம் கண்டு பிடித்து விடலாம். இங்கே காரண காரியமல்ல எமது முக்கிய கவனிப்பு. எதை இழந்தோம் எதைப் பெற்றோம் என்பதே பார்க்கப்பட வேண்டும்.

1905 முதல் யாழ் வாலிபர் சங்கம் தமிழீழத்துக்கான விடுதலைக் குரலைச் சிங்களத்துக்கு முன்னரே எழுப்பியது. முதலில் விழித்துக் கொண்ட எமது இனம் படிப்படியாக ஏமாற்றப்பட்டு இன்று எழுதப்படாத கொத்தடிமைகள் ஆக்கப் பட்டுவிட்டோம் என்பதே எமது அரசியல் வரலாறு. இந்த உண்மையை தமிழ் நெற் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் உணராத வரை எம் இனத்துக்கு மீட்சியே கிடையாது.

அன்று சமஷ்டியா சமத்துவமா என்ற கூச்சலில் சுந்தரலிங்கம் எழுப்பிய ஈழ தேசக் குரல் அடங்கி அழிந்தது. பின்னர் வ.நவரத்தினம் எழுப்பிய சுயாட்சிக் கோரிக்கையின் குரல்வளை நசுக்கப்பட்டது. இவற்றின் பின்னணியில் இருந்தது சிங்கள அரசு அல்ல தமிழரின் பட்டிமன்ற முறை அரசியல் பகைமைகளே.

அதே வழியில் இன்று வட்டுக் கோட்டையா தேசம் கடந்த அரசா என்ற முரண்பாடு காரணமாக தேசம் கடந்த தமிழீழ அரசம் அதன் செயற் பாட்டாளர்களும் சில தமிழ்ப் புத்தி(?) ஜீவிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பது நமது இனம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பதையே காட்டுகிறது.

15.01.10ல் தமிழ் நெற் தேசம் கடந்த தமிழீழ அரசின் அறிஞர் குழுவின் அறிக்கை பற்றி இரு கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த விமர்சனம் நேர்மை அற்றது என்பதைப் பார்க்கும் முன்னர் ஒன்றைத் தெளிவு படுத்துவது நல்லது எனக் கருதப்படுகிறது. தூர நின்று விமர்சிக்கும் உரிமை கொண்ட எவருக்கும் உள்ளே சென்று சரியாகச் செயற்பட உதவ வேண்டிய விடையமாக இது பார்க்கப்பட வேண்டும்.

விடுதலைப் போராட்டம் ஈழத்தில் பிறந்த எந்த ஒரு இஸ்லாமிய, கிருஸ்தவ இந்து மற்றும் இறை நம்பிக்கை மத நம்பிக்கை இல்லாதவனுக்கும் சொந்தமானது. எனவே எதுவாயினும் சேர்ந்து செயற்பட உரிமை உண்டு அதனை எவரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அதனை ஆதாரத்துடன் மக்கள் முன்வைத்து நீதி கேட்கும் உரிமையும் உண்டு. இதனைப் பயன்படுத்த தமிழ் நெற் குழுமத்துக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் என்ன தடை என்பதை மக்கள் முன் வைக்க வேண்டும்.

அறிக்கைக்கு எதிராக முதலாவதாக வைக்கப்பட்ட விமர்சனம் அது ஒரு வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயற்பட எத்தனிக்கிறது என்பதாகும். மக்களால் வாக்குப் பதிவு மூலம் தெரிந்தெடுக்கப் படுபவர் மக்களின் ஆணைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ள சபை எப்படி வெளிச் சக்திகளின் கைப்பாவையாக முடியும்?

வெளிநாட்டுச் சக்திகளின் நல் மதிப்பையும் ஆதரவையும் பெறும் வகையில் இயங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி கைப்பாவை என்பதாக அமையும்?
வெளி நாடுகளில் இயங்கும் இந்த அமைப்புக்கு இந்த இரண்டும் அடிப்படைத் தேவைகள் என்பது புரிய வில்லையா? இரண்டாவது கண்டனம் ஒரு உத்தேச மாதிரி அரசமைப்பை கொடுத்து அதனைப் பிரதிநிதிகளை ஏற்கப் பணிக்காமல் அவர்களிடமே விட்டுள்ளமை ஏற்க முடியாது என்கிறது. எந்த நாட்டிலும் பிரதிநிதிகள் அடந்கிய அரசமைப்புச் சபைதான் மூல வடிவை உருவாக்கும். அதற்கான சட்ட வடிவம் சட்ட வரைஞர்களால் மேற் கொள்ளப் படும். இதுவே ஜனநாயக நடைமுறை.

இலங்கையில் மட்டும் ஸ்ரீமாவும் ஜே.ஆரும் தாமே தமக்கேற்றபடி அரசமைப்பை வரைந்து விட்டு அதனைப் பொம்மைப் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றினர். அதன் பலாபலன்கள் பரம்பரை பரம்பரையான குளறு படிகளுக்கும் அழிவுகளுக்கும் வழி செய்துள்ளதை நாம் காண்கிறோம். இத்தகைய நடைமுறையையா தமிழ் நெற் குழுமம் விரும்புகிறது?

யாரும் கரம் கொடுத்து தேரை இழுக்க முன்வாருங்கள் கட்டை போட்டுக் கடையாணியை உடைக்காதீர்கள்.

- த.எதிர்மன்னசிங்கம் -
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. உருத்திரகுமாரின் "ஊருக்கு உபதேசம் உனக்கில்லை" புதினப்பலகை கண்ணே ?http://tamilthesiyam.blogspot.com/2010/01/blog-post_9326.html
    # படங்கள் சொல்லும் செய்தி என்ன ?
    # எம் மீதான இன்போதமிழ் குழுமத்தின் வன்மம் பகுதி 2 -இப்போது வலைப்பூவில் தொடர்கின்றது
    # கனடிய வட்டுக்கோட்டை வாக்கெடுப்பும் துரோகங்களும்
    # எம்மீது இன்போதமிழின் இப்படியும் ஒரு வன்மம்

    இவற்றையும் அலசினால் தமிழ்நெட் எழுதுவதில் தவறில்லை என்று புரியும்

    நாடு கடந்த அரசில் புரியாத பல் புதிர்களும் சதிகளும் இருக்கின்றன என்பதும் புரியும்

    ReplyDelete