இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை – மீண்டும் குத்துக்கரணம் அடித்தார் மகிந்த


13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, அண்மையில் கொழும்பு வந்து சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார். 

அந்தக் கருத்தையே சிறிலங்கா அதிபர் நேற்று நிராகரித்துள்ளார்.   இந்தியாவுக்கு தாம் இத்தகைய வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடல் மட்டுமே நடத்தியுள்ளதாகவும், நேற்று அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் - " நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. 

விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல், அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். 

சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பது மேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை.  தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும, வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள். 

இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது. அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளைப் போன்று பேச்சு மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறுகின்றனர். இந்தத் தடவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுக்கு அழைத்தோம். அவர்களை எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுக்களை நடத்துகிறோம். 

செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பணிகளை செய்கிறோம். 

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்றை அமைத்து, இந்த யோசனைகளை எவ்விதம் சுமுகமாக நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆணைக்குழு தெரிவித்த சில குற்றமிழைப்பு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்ப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்ற தவறிவருவதாக சில வெளிநாட்டு சக்திகள் எங்களை கண்டிக்கின்றன. அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 24பேரை கொலை செய்த வழக்கு 7 வருடங்களுக்கு பின்னர் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதுபடுத்தி பேசுகிறார்களா? 

அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. சகல கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். 

13 திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடம் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன். இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. 

13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும். நாட்டின் அதிபராக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருமனதான முடிவை எடுப்பது அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம். 

நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும். காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல. அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல. 

ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம். சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்து வருகின்றனர். இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக்கிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பரப்புரைகளை செய்து அதில் வெற்றி காணலாம். அதை விடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல." என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி புதினப்பலகை 




Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment