Tuesday, January 24, 2012

தோல்வியையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் - அப்துல் கலாம்

கடின உழைப்பாலும் அறிவாலும் எந்தச் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்த டாக்டர் அப்துல் கலாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் சென்றிருந்தார். அங்கு குமார சுவாமி மண்டபத்தில் சிறப்புரை ஒன்றையும் ஆற்றியிருந்தார். இந்த சிறப்புரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்இ ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்து இளையோர்களே. எழுச்சியடைந்த இளைஞர்கள், யுவதிகள் அந்த நாட்டின் மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுவார்கள்.


மின்சாரம் இல்லாத வீட்டிலிருந்தே எனது கல்வியைக் கற்று வந்தேன். பகல்வேளைகளில் எனது வீட்டிலும் இரவு வேளைகளில் எனது நண்பனின் வீட்டிலும் கல்வி கற்றேன். நண்பனின் வீட்டில் மின்சாரம் உண்டு. மாணவர்களே! நான் யாராக இருந்தாலும் பரவாயில்லை நான் எண்ணுவதை அடைந்தே தீருவேன் என இலட்சியத்துடனும் விடாமுயற் சியுடனும் செயற்பட்டால் வெற்றி வந்தே சேரும். தனித் தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். வைத்தியர்கள், பொறியிலாளர்கள் யாராக வரவேண்டுமானாலும் கடின உழைப்பு இருந்தால் முடியும்.


வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருங்கள். அறிவு என்பது அழிவை வரவிடாது பாதுகாத்து காத்துக் கொள்ளும். கற்பனை சக்தி கற்றலை வளர்க்கும். கற்றல் சக்தி அறிவை வளர்க்கும். அறிவு மகானாக்கும். முடியாது என்று எல்லோரும் சொல்வதை முடியுமென்று செய்ய முற்பட வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். தோல்வியையும் தோல்வியடைச் செய்து நாட்டை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். மனதில் உறுதியிருந்தால் வெற்றியடைவீர்கள். மேலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 121 ஆண்டுகள் தமது கல்விச் சேவையை தொடர்ந்து வருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணி நேரம் செல்லும். அதேபோல் 121 ஆண்டுகள் இந்தக் கல்லூரி சுற்றி பல மாணவர்களை அறிஞர்கள் ஆக்கியுள்ளது. அதற்கு இந்தக் கல்லூரியை சார்ந்தவர்கள் அனைவருக்கும் மன மார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


உரை முடிந்தவுடன் ஆறு மாணவர்களுக்கு தன்னிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பினை டாக்டர் அப்துல் கலாம் வழங்கியிருந்தார். இதன் போது 13 வயதேயான மாணவன் ஒருவன், நான் உங்களைப்போல் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேள்வி கேட்டிருந்தான். இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் அப்துல் கலாம், இலட்சியம் வேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும்; அறிவை பயன்படுத்த வேண்டும்; கடின உழைப்பு வேண்டும். இந்த நான்கும் இருந்தால் நீ யாராக வேண்டுமானாலும் வர முடியும் என தெரிவித்தார். அதேவேளை இன்னொரு மாணவன், நீங்கள் யாராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் எனக் கேட்டபொழுது நான் விமானியாக வரவேண்டும் என ஆசைப்பட்டேன்.ஆனால் கிடைக்கவில்லை. இருப்பினும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு விமானம் ஓட்டிப் பார்த்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


நன்றி - வலம்புரி

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment