பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றுபவர் கலாநிதி தயான் ஜெயதிலக. அவர் இடதுசாரிக் கொள்கையின் ஊடாக, அரசியலில் ஈர்க்கப்பட்ட ஒருவர். ஆரம்பத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து தனிஈழத்துக்காகப் போராடியவர். வடகிழக்கு மாகாணசபையில், வரதராஜப்பெருமாளின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். பின்னர் கொழும்பு அரசியலுக்குள் நுழைந்து இன்று இலங்கையின் முக்கியமான- தவிர்த்து ஒதுக்கப்பட்டு விட முடியாத ஒரு இராஜதந்திரியாக விளங்குகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, அவர்களை சர்வதேச அளவில் ஓரம்கட்டுவதற்கு தயான் ஜெயதிலகவின் இராஜதந்திரமும், உத்திகளும் அரசதரப்புக்கு வலுவாகவே கை கொடுத்தன. அதுமட்டுமன்றி 2009ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிப்பதில் தயான் ஜெயதிலக முக்கிய பங்காற்றினார். இப்போது பிரான்சில் உள்ள தூதரகத்தில் அவர் பணியாற்றுகின்ற போதும், இலங்கை அரசு அவரது பணிகள் தொடர்பாக முழுமையாகத் திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.
அண்மைக்காலமாகத் தயான் ஜெயதிலக வெளியிடும் கருத்துகள், அரசின் கருத்துகளுக்கு முரண்பாடாகவே உள்ளன. அவர் ஒரு முக்கிய இராஜதந்திரியாக இருக்கின்ற போதும், ஜெனிவாவில் இருந்து அவரைத் தொலைவிலேயே வைத்திருந்தது அரசாங்கம். வெறும் அரை மணிநேரப் பயணத்தில் அவரால் பிரான்சில் இருந்து ஜெனிவா சென்றிருக்க முடியும். இந்தியாவில் இருந்து பிரசாத் காரியவசம் ஜேர்மனியில் இருந்து சரத் கொங்கககே போன்ற இலங்கைத் தூதுவர்கள் ஜெனிவாவுக்கு அழைக்கப்பட்ட போதும் தயான் ஜெயதிலக மட்டும் ஓரம்கட்டப்பட்டு பாரிசுக்குள் முடக்கப்பட்டிருந்தார். அவர் மீதான காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு ஓரம்கட்டப்பட்டாரா அல்லது அவரது ஆலோசனையைக் கேட்கும் நிலையில் அரசு இல்லாததால் அவராகவே ஒதுங்கிக் கொண்டாரா என்ற கேள்வி உள்ளது..
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தயான் ஜெயதிலக பிபிசிக்கு வழங்கிய பேட்டியில், மியான்மரைப் பார்த்து இலங்கையும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு மே மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை வெற்றிகரமாகத் தோற்கடித்திருந்தது அரசாங்கம். அதேசபையில் மியான்மருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தோல்வியடைந்து அந்த நாடு. அப்போது இலங்கையைக் காப்பாற்றிய சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகள் மியான்மருக்கும் கைகொடுத்தன. அதற்காக வாக்களித்தன. ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. இதன் பின்னர் மியான்மரால் சர்வதேச தடைகளை குறிப்பாக மேற்கு நாடுகளின் தடைகளைத் தாக்குப் பிடிக்க முடியாது போனது. சீனாவின் பலமான ஆதரவு இருந்தாலும் மியான்மரால் தாக்குப்பிடிக்க முடியாமல் தளர்ந்துபோனது. 2009இல் இலங்கையைப் போன்றே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நெருக்கடியை எதிர்கொண்ட மியான்மர், இப்போது அந்த நெருக்கடியில் இருந்து மீளும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளது. அதேவேளை, 2009இல் ஏற்பட்ட நெருக்கடியை வெற்றிகண்ட இலங்கை அரசாங்கம் இப்போது தோல்வி கண்டு நிற்கிறது. இதற்குக் காரணம், மியான்மர் 2009 தீர்மானத்தின் பின்னர், சீனாவின் வாலைப் பிடித்துக் கொண்டு சர்வதேச சமூகத்துக்கு - குறிப்பாக மேற்குலகிற்கு சவால் விடவில்லை. தன்னை திருத்திக் கொள்ள முயன்றது. மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. அதாவது சர்வதேச விருப்பங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தியது. ஜனநாயக சீர்திருத்தங்களை திரும்பிப் பார்த்தது. அரசியல் கைதிகளை விடுவித்தது. இதன்மூலம் தான் சக்திமிக்க நாடுகளின் வலுவான பொறியில் இருந்து மியான்மரால் தப்பிக்க முடிந்ததாக கூறுகிறார் தயான் ஜெயதிலக.
அவர் கூறவருவது, ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது என்பதையே.
ஏனென்றால் இது முடிந்து போய்விட்ட ஒன்றாக இருக்காது, நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மியான்மரின் பாதையில் இலங்கையும் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும் என்பதே தயான் ஜெயதிலகவின் கருத்து. இப்போதைய நிலைப்பாட்டில், அரசாங்கத்தினால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இது இருக்க முடியாது. ஏனென்றால் அரசாங்கம் இப்போது, போலியான தேசியவாதத்தை கிளப்பி விட்டு அதில் குளிர்காயப் பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மியான்மரிடம் பாடம் கற்குமாறு கூறுவது அதன் தலையில் ஏறாது. பாதையை மாற்றி- சர்வதேச சமூகத்துடன் இணைந்து நடக்குமாறு கூறுவதையும் அரசினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.. ஏற்கனவே தயான் ஜெயதிலகவை சந்தேகப் பார்வையுடன் வைத்திருந்த அரசாங்கம், சந்தர்ப்பத்தைப் பார்த்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவரது கருத்தின் யாதார்த்தத்தை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எவரும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் உணர்ச்சிபூர்வ அரசியலை நடத்த முனைகின்றனரே தவிர, யதார்த்தபூர்வமான- அறிவுபூர்வமான அரசியல் அவர்களுக்குப் புரியவில்லை.
சர்வதேச அரசியல் சூழமைவுகளையும், காலவோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு காய்களை நகர்த்தும் ஒருவரால் தான்- ஒரு நாட்டினால் தான் இன்றைய நவீன உலகில் நிலைத்து நிற்க முடியும். அது அரசாங்கத்துக்கு சரியாகப் புரியவில்லை. தயான் ஜெயதிலக போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் கூறும் அறிவுரை அரசுக்கு கசக்கிறது. இதற்கு சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் பின்புல ஆதரவு உள்ளதே என்ற கர்வமே காரணம்.
ஆனால் சீனா எத்தனை காலத்துக்குத் தான் இலங்கைக்கு முண்டு கொடுக்கப் போகிறது என்ற கேள்வி உள்ளது.
சீனாவில் அடுத்த ஆண்டு பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அங்கு புதிய அதிபர் பொறுப்பேற்கவுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் உள்ளபோது, புதிய அதிபரால், அரசின் கொள்கைகள் மாறாது என்ற வாதம் இப்போது உடைந்து போகிறது. திறமையாக ஆட்சியை நடத்த விமர்சனம் செய்யும் உரிமை தேவை, அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று இப்போதைய அதிபர், பிரதமர் போன்றோர் கேட்கின்றனர். அதைவிட சீனாவின் பொருளாதார பலம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது போனால் பேராபத்து காத்திருப்பதாக உலகவங்கி கூறியுள்ளதை சீனாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. வெளிநாட்டுக் கடன் அதிகரித்து கடந்த 27 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. இப்படி சீனாவுக்கும் தலைவலிகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைக்காக அந்த நாடு தனது பொருளாதார வளங்களை கொட்டிக் கொண்டிருக்கும் என்றோ, தன் அரவணைப்பில் வைத்திருக்கும் என்றோ முழுமையாக நம்ப முடியாது. சிரியா விடயத்தில் மேற்குலகுடன் கடுமையாக முரண்டு பிடித்த சீனா இப்போது, சிரியாவைக் கண்டிக்கின்ற நிலைக்கு வந்துள்ளது. அதுபோன்ற நிலை இலங்கைக்கு வருவதற்கு ஒன்றும் நீண்டகாலம் தேவைப்படாது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தமது பொருளாதார மற்றும் படைபலத்தினால் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. தயான் ஜெயதிலக இதனை அடிப்படையாக வைத்துத் தான் எச்சரித்துள்ளார். மேற்குலக நாடு ஒன்றில்- அதுவும் ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாட்டின் தலைநகரில் உள்ள தயான் ஜெயதிலகவினால் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது. அதன் அடிப்படையில் தான் ஜெனிவா தீர்மானத்தை அவர் ஆபத்தான அறிகுறியாக இனங்கண்டுள்ளார். ஜெனிவா தீர்மானம் குறித்து அரசாங்கமும் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் தயானின் எச்சரிக்கைக்கும், அரசின் எச்சரிக்கைக்கும் வேறுவேறு அர்த்தங்கள்.
தயான் உறக்கத்தில் இருப்பதாக நடிக்கும் அரசை தட்டியெழுப்ப முனைகிறார்.
ஆனால் அரசாங்கமோ சிங்களத் தேசியவாதத்தை இந்த எச்சரிக்கையின் மூலம் தட்டியெழுப்ப முனைகிறது.
இது தான் அந்த வித்தியாசம்.
கட்டுரையாளர் கபில் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment