தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம்


பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப. வீரபாண்டியன் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.

வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.

தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.

நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது.

இதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் சிங்களர்கள்-கருணாநிதி

பின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

டெசோ பிறந்த கதை

டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.

டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment