இலங்கையும் மேற்குலகமும் அரங்கேற்ற போகும் அடுத்த நாடகம் என்ன?

எந்தவொரு விடுதலைப்போரும் இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றையது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தால் நிகழும் போர் எனக் குறிப்பிடுவது, சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு ஆதரவான பிரசாரங்கள் இலங்கை அரசின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்து அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பிரசாரங்கள். சர்வதேசத்தில் எமது விடுதலைப் போருக்காக திரட்டப்படும் ஆதரவுகள் சர்வதேச நாடுகள் எமது விடுதலைப் போரை நசுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை இனங்காணுதல் என ஏறத்தாழ களத்தில் நிகழ்ந்த போரின் வீச்சிற்கு இணையான வீச்சைக் கொண்டதுதான் சர்வதேசத்தில் மேற் கொள்ளப்படும் போராட்டங்கள்.

இந்தச் சமரை எதிர்கொள்ள எமக்குப் பலமான ஊடகத்துறையும் சர்வதேச ஊடகத்துறையுடனான சிநேகபூர்வ உறவுகளும் ஒருங் கிணைந்த செயற்பாடுகளும் அவசியம். ஆனால் 2009ஆம் ஆண்டு மிகப் பெரும் இனப்படுகொலையுடன் தமிழ்மக்களின் ஆயுதப் போரை நசுக்கிய இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை குவித்திருப்பது புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் தேசங்களை நோக்கியே. பலமான ஊடுருவல்களுடன் இலங்கை அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி களமிறங்கியது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை களால் புலம்பெயர் தமிழ் சமூகம் பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றது. ஆனாலும் அதனை முறியடித்து மீண்டும் முன்னோக்கி நகர வேண்டிய கடமையில் இருந்து நாம் தவறிவிட முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் படைத்தளபதிகள் மீது புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் அனைத்திலும் இருந்தும் இலங்கை அரசு தப்பிப்பிழைத்துள்ளது.

அதற்கு இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தது இராஜதந்திர அந்தஸ்து என்ற ஆட்சி அதிகாரமே. தமிழ் மக்களின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு அனைத்துலக சமூகமும் அதனையே பயன்படுத்தி வருகின்றது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கையை அந்த அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரி விக்கப்பட்ட போதும், 54 நாடுகளை கொண்ட அமைப்பின் பெரும் பாலான நாடுகள் அதனை உதாசீனப் படுத்தியுள்ளன. இந்தியா வழமைபோல மெளனம் காத்துள்ளது. கனடாவும், பிரித்தானியாவும் இலங்கையில் 2013 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித் தபோதும், அதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவுகள் கிடைக்கவில்லை.

ஒரு அங்கத்துவ நாட்டை அமைப்பில் இருந்து இடைநிறுத்துவது நடைபெறாத ஒன்று அல்ல. முன்னர் பாகிஸ்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடை நிறுத்த ப்பட்டிருந்தன. 2007ஆம் ஆண்டு உகண்டாவின் தலைநகர் கம்போலாவில் இடம்பெற்ற கூட்டத் தொடரிலேயே பாகிஸ்தானை இடைநிறுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவி ப்பை வெளியிட்டதில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான்ட் முக்கிய பங்கு வகித்திருந்தார். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியமை, அவசர காலச் சட்ட த்தை தொடர்ந்து நடை முறைப்ப டுத்தியமை, ஊடக ங்கள் மீதான அழுத்தங்களை மேற்கொண்டமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் மீதான தீர்மானம் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டிருந்தது.




சுருக்கமாக கூறுவதானால் பொதுநலவாய நாடுகளின் அடிப்படை விதிமுறைகளை பாகிஸ்தான் மீறிவிட்டதாக டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார். பொதுநலவாய நாடுகளின் இந்தத் தீர்மானத்தை பாகிஸ்தானின் நெருங்கிய நண்பனான இலங்கையும் மலேசியாவும் கடுமையாக எதிர்த்தபோதும் பாகிஸ்தான் இடை நிறுத்தப்பட்டிரு ந்தது. இதே போலவே சிம்பாவே மீதும் 2002 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. பொதுநலவாய நாடுகளின் அமைப் பில் இருந்து முதலில் இடைநிறுத்தப்பட்ட சிம்பாவே பின்னர் முற்றாக நீக்கப்பட்டது. பாகிஸ் தான் மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வன் முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள், இன அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் என்பன மிக அதிகம். அது தொடர்பாக பல ஆயிரம் ஆதாரங்களும் அனைத்துலக சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையினாலோ, மனித உரிமை அமைப்பு க்களினாலோ அல்லது பிராந்திய அமைப்புக்களினாலேயோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. மறுவளமாக காலத்தை இழுத்தடித்து தனது ஆட்சியை தக்கவைத்து, சிங்களக் குடியேற்றங்கள், மொழி மற்றும் இனக்கலப்புக்கள் மூலம் தமிழர்க ளின் தாயகக் கோட்பாடுகளை சிதைத்துவிடும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது மேற்குலகம். இந்த நோக்க ங்களுக்காக இலங்கை அர சினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும், இன நல்லிணக்கமும் என்ற ஆணைக்குழுவின் அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக கூறிவரும் மேற்குலகம் கட ந்த மே மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஜெனீவாவில் இடம் பெற்ற ஐ.நாவின் மனித உரிமை மாநாடுகளையும் இலங்கைக்கு எதிராக பயன்படுத்துவதை தவிர்த்திருந்தனர்.

கடந்த வாரம் கருத்து வெளியிட்ட அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நியூலான்ட் கூட, தாம் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் இந்த அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித் துள்ளார். ஆனால் இலங்கையின் ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கை என்னவாக இருக்கும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இலங்கையில் முன்னர் அமைக்கப்பட்ட ஒரு டசினுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் எந்த முடிபையும் எட்டாது காணாமல் போயிருந்தன. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் தமது பதவி க்காலம் முடியும்வரையிலும் சில ஆணைக்குழுக்களை அமைத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற வந்திருந்தன என்பதே வரலாறு. 2006ஆம் ஆண்டு மூதுரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர் பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவராக இருந்த வரே அண்மையில் ஐ.நாவில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலை வரான இந்தோனேசியா வைச் சேர்ந்த தருஸ்மர் என்பவர். ஆனால் இலங்கையில் அன்று அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசார ணைகளை இலங்கை அரசு திட்டமிட்டே சிதைத்து வருவ தாகவும் அரசியல் அழுத்தங்கள் மேற் கொள்ளப்படுவதாகவும் அது ஒரு சுயாதீன விசாரணைக்குழு அல்ல எனவும் தெரிவித்து தருஸ்மர் அதில் இருந்து விலகியிருந்தார்.

அந்த விசாரணைக்கு உறுதுணையாக அவுஸ்திரேலியாவில் இருந்து சாட்சியம் வழங்கிய ஒருவரைக் கூட வீதி விபத்து ஒன்றை ஏற்படு த்தி படுகொலை செய்வதற்கு இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்ச­ திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனவே அடுத்த வாரம் வெளியிடப்படும் முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு சார்பான அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசை காப்பாற்றும் உத்திகள் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதனை நம்பியிருப்பது போல நாடகமாடி வரும் மேற்குலக சமூகம் அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றது என்பது தான் தற்போதைய கேள்வி. தமிழ் மக்கள் தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள கொள்கைக்கான அமிலச் சோதனையே நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை, வெளியிடப்பட்ட பின்னர் மேற்குலகம் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் வேடம் அம்பலமாகிவிடும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது, வேறு ஒரு குழுவைக் கூட பரிந்துரை செய்யலாம். அவ்வாறு மற்றுமொரு குழு பரிந்துரை செய்யப்பட்டால் அந்த குழுவும் தனது செயற்பாட்டுக்கு பல வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். வழமை போல அந்த குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக மேற்குலகம் மற்றுமொரு நாடகத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த நாடகங்கள் எல்லா வற்றையும் முறியடித்து ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமை களை அடைய வேண்டும் என்றால் தமிழகத்தின் தூய்மை யான தமிழ் அரசியல் தலைவர்களின் வலுவான பிணை ப்புக்கள் எமக்குத் தேவை. அதனை வலுப்படுத்த வேண்டிய காலத்தின் தேவை நமக்கு ள்ளது. அதன் மூலம் தான் மேற்குலக த்தின் தவறான அசைவுகளையும், ஏமாற்றுத் தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

வேல்சில் இருந்து அருஷ்






Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment