வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த.தே.கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது!


தமிழ் சிவில் சமூகத்தைச் சோ்ந்த 76 போ் அறிக்கை
வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், மாணவர்கள் உட்பட பலர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேற்படி அறிக்கை தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கை மற்றும் கையெழுத்திட்டவர்கள் விபரம் பின்வருமாறு:-
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:
1. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு தொடர்பிலானது:
அ) பல சுற்றுத் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்டபோதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எழுத்து வடிவில் விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 04 ஓகஸ்ட் 2011 அன்று நீங்கள் எடுத்திருந்தீர்கள். உங்களது அறிக்கையில் அது வரையிலான பேச்சுவார்த்தைகளை 'ஏமாற்றும்' தன்மையானவை –‘seceitul process என வர்ணித்திருந்தீர்கள். இந்நிலைப்பாட்டை த. தே. கூ.எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது என்பது சிவில் சமூகத்தினர் என்ற வகையில் நாம் அறிந்துள்ளோம்.
இது இவ்வாறிருக்க 14 செப்டம்பர் 2011 அன்று திடீரென பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து வந்த போது நாம் பெருவியப்படைந்தோம். பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது இந்தத் தீர்மானமானது தங்களது ஓகஸ்ட் 4 திகதியிட்ட அறிக்கையை முற்றிலும் அர்த்தமற்றதாக்கிய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
குறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் - அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் - பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்துவிட்டதாக நியாயமான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது தார்மீகக் கடமையாகும்.
அண்மையில் டிசம்பர் 1 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு த.தே.கூ பெயர்களைப் பிரேரிக்கத் தவறியமையால் பேச்சில் விரிசல் நிலை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்தைகள் டிசம்பர் 6 அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்பதாகக் கூறப்படுகின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது கடமையாகும்.
ஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில் இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் 'தேசியம்'' சுயநிர்ணயம்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் த.தே.கூ சார்பில் பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று.
இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடக்கப்படுவதை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் த.தே.கூ வில் அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். (இந்த வார்த்தைப் பிரயோகங்களை எதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா அணியும்) ஈ.என்.டி.எல்.எஃப்பும்.). மேற்சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டமை யாவரும் அறிந்தது.
த.தே.கூ வின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுமிடத்து அவர்கள் த.தே.கூ. வின் அடிப்படை அரசியற் கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டிய கடப்பாட்டை அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களது நிலைப்பாட்டுக்கான விளக்கத்தை கேட்டிருக்கவேண்டும். த.தே.கூ அவ்வாறான வலியுறுத்தலை மேற்கொள்ளாமல் போனதை அல்லது அவர்களின் விளக்கத்தை கோராது விட்டதை அவர்களது கொள்கை நிலைப்பாட்டை நீங்களும் - த.தே.கூ. - ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது. இலக்கற்ற ஒற்றுமை என்பதில் அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்கவேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.
இ) த.தே.கூ. வினது அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான சர்வதேச தொடர்பாளர்களுமாகிய சம்பந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது வெளிப்படுத்தல்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்;.
தீர்வு'தேசியம்' 'சுயநிர்ணயம்' என்ற அடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர் சம உரிமைகள் தேவை என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும் தெரிவிக்கப்படுகின்றது. (உதாரணமாக: சுமந்திரனினால் 26 ஏப்ரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் நினைவுப் பேருரை சம்பந்தனின் 04ஒக்டோபர் 2011 திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய அறிக்கை போன்றவை)
சிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொழி மற்றும் கலாசார உரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற மக்களைக்கொண்ட ஒரு தேசிய இனத்துக்கே தன்னாட்சி உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது. தமிழர்களாகிய நாம் எம்மை ஒரு தேசமாகக் கருதியே எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை கோருகின்றோம்.
அதே போன்று சமவுரிமைகளைக் கேட்பதானது சுயாட்சியைக் கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law)  நல்லாட்சியும் (Goos Governance)  பூர்த்தி செய்யப்படும் ஒரு நாட்டில் சகலரதும் 'சமவுரிமைகள்' பாதுகாக்கப்படும். தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதினூடாகவே எமது அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.
தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில் 1976 லும்1977 லும் தமிழ்த்தேசம் சுயநிர்ணய உரிமை சுயாட்சி என்ற அரசியல் கோட்பாடுகளை தமது அரசியல் அபிலாஷைகளாகக் கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர். பின்னர் வந்த எமது 30 வருட வாழ்வும் அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது. இப்போது ஒரு சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ அல்லது மறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம் தொடரமுடியாது.
தேசியம் சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக் கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லத தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக்கொள்ள முடியாததாகி விடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல் தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும்.
தமிழர் ஒரு தேசிய இனம் தமிழர் ஒரு தேசம் எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும். இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும். தனியே இவற்றை கோஷங்களாக முன்வைப்பதனூடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது உண்மையே. அரசியல் உபாயங்கள் மிகவும் அவசியம். ஆனால் அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல் அடிப்படைகளை அபிலாஷைகளை விட்டுக் கொடுத்துவிட முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல. விட்டுக்கொடுப்போமெனின் எதற்காக நாம் அரசியல் செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடைகூற வேண்டியிருக்கும்;.
2. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக
எதிர்வரும் 2012 ல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இத்தேர்தலை த.தே.கூ சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ளவேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பின் ஓரங்கமான 13ம் திருத்தத்தின் நடைமுறைவடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாத அரசாங்கம் 13ம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற த.தே.கூ வை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவைத்து அத்தேர்தலில அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல. மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது.
அமெரிக்க இந்திய அரசாங்கங்களும் 13 ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதிலிருந்து இவ்வரையறைக்கப்பால் செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச் சுட்டுவதாக கருதமுடியும். ஆகவே மாகாண ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது. 13வது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பிரயாணிக்க முடியாது என்பதை சட்ட அறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில் வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள் சொல்லவேண்டியதில்லை.
கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் மேற்சொன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது. 13ஆவது திருத்தத்தை அல்லது அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு தீர்வுப்பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும் முடியாது. மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வுகளைத் தர முடியாத இவ்வகை இடைக்காலத் தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த வடக்குக் கிழக்கில் த. தே. கூ போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில்கொள்ள வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை த.தே.கூ. இந்திய அமெரிக்க அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டுமே அன்றி இந்த அழுத்தங்களுக்கு பயந்து தமிழ்த் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வு தொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை த.தே.கூ கைப்பற்றும் தறுவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு ஈற்றில் முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக் கடமை த.தே.கூ. விடமே இன்று உள்ளது.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தத் தறுவாயில் மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் தேவையற்றதெனவும் த.தே.கூ நிலைப்பாடெடுக்கவும் அதை பேச்சுவார்த்தை மேசையிலும் சர்வதேசத்திடமும் வலியுறுத்தவும் தேவையான நியாயப்பாடு த.தே.கூ. இடம் உள்ளது. அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் த.தே.கூ. தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.
அரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் த. தே. கூ.மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.
தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் த.தே. கூ வைக் கருதுகின்றார்கள். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் த. தே. கூ தொடர்ந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் த.தே. கூ. க்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தருணத்தில் இந்தவிண்ணப்பத்தை எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக உங்களிடத்து முன்வைக்கின்றோம்.இலட்சக் கணக்கில் மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே. தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றை அடைய சரியான முடிவை மக்களின் அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நிறைவு செய்கின்றோம்.
நன்றி.
அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப். மன்னார் கத்தோலிக்கப் பேராயர்.
கலாநிதி. ஆறு. திருமுருகன். தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை. நிறுவுனர் சிவபூமி அறக்கட்டளை யாழ்ப்பாணம்
செல்வி சாந்தா அபிமன்னசிங்கம். ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி சு. ரவிராஜ். சத்திரசிகிச்சை நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம். தலைவர் யாழ் மருத்துவ சங்கம்.
பேராசிரியர். க. கந்தசாமி. விஞ்ஞான பீடாதிபதி யாழ் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன். கணித புள்ளிவிபரவியற்றுறைப் பேராசிரியர். தலைவர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.
பேராசிரியர். ப. புஸ்பரட்ணம். தலைவர் வரலாற்றுத்துறை யாழ் பல்கலைக்கழகம்.
தி. இராஜன். மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு
கலாநிதி. ஆ. ச. சூசை. புவியியற்றுறை யாழ். பல்கலைக்கழகம்
நல்லைக் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரிய சுவாமிகள். யாழ்ப்பாணம்
அதி வணக்கத்துக்குரிய கலாநிதி. எஸ் ஜெபநேசன். முன்னாள் தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர்.
பேராசிரியர். சி.க. சிற்றம்பலம். ஓய்வுநிலைத் தகைசால் வரலாற்றுப் பேராசிரியர். முன்னாள் பீடாதிபதி பட்டப்பின் படிப்புகளுக்கானபீடம் யாழ் பல்கலைக்கழகம்.
பேராசிரியர்.இ. குமாரவடிவேல். சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர். முன்னாள் பதில் துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம்.
பேராசிரியர். வி.பி. சிவநாதன். தலைவர் பொருளியற்றுறை யாழ் பல்கலைக்கழகம். தலைவர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்.
க. சூரியகுமாரன். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதி வடமராட்சி வடக்கு க. தொ. கூ. சங்க சமாசப் பிரதிநிதி
வணபிதா. கி. ஜெயக்குமார். பங்குத் தந்தை ஊர்காவற்றுறை யாழ்ப்பாணம்
எஸ். அரசரட்ணம். முன்னாள் வங்கியாளர் அம்பாறை தமிழர் மகா சபை
க. ச. இரத்தினவேல். சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு. நிறைவேற்றுப் பணிப்பாளர். மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்.
வைத்திய கலாநிதி. (திருமதி). சி. உதயகுமார். பொதுவைத்திய நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி. சி. சிவன்சுதன். பொது வைத்திய நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
அ. பஞ்சலிங்கம். ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி
திருமதி. நாச்சியார் செல்வநாயகம். சிரேஷ்ட விரிவுரையாளர் இந்து நாகரிகத்துறை யாழ் பல்கலைக்கழகம்.
வைத்திய கலாநிதி. சி. குமாரவேள். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
அ. இராசகுமாரன். விரிவுரையாளர் ஆங்கில மொழி போதனை நிலையம் செயலாளர். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.
வைத்திய கலாநிதி. செ. கண்ணதாசன். சிரேஷ்ட விரிவுரையாளர் நோயியற்றுறை மருத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம்
நா. இன்பநாயகம். தலைவர் கிராமிய உழைப்பாளர் சங்கம்
வைத்திய கலாநிதி. ச. பகீரதன். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி. ஏ. கமலநாதன். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வே. அரசரட்ணம். முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர். அம்பாறை தமிழர் மகா சபை
பொ. தியாகராஜா. முன்னாள் தலைவர் பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்.
கலாநிதி. து. குணராஜசிங்கம். சிரேஷ்ட விரிவுரையாளர் உடற்றொழியல்துறை மருத்துவ பீடம் யாழ்பல்கலைக்கழகம்
வைத்திய கலாநிதி. சு. பிரேமகிருஷ்ணா. உணர்வழியியல் வைத்திய நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி. பூ. லக்ஷமன். இருதய நோய் சிகிச்சை நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வணபிதா. இ.இரவிச்சந்திரன். இயக்குநர் யாழ். மறைமாவட்ட இளைஞர் ஆணைக்குழு யாழ்ப்பாணம்
கா. சந்திரலிங்கம். ஓய்வு பெற்ற அதிபர். அம்பாறை தமிழர் மகா சபை
சி. அ. ஜோதிலிங்கம். சட்டத்தரணி அரசியல் ஆய்வாளர். பாடசாலை ஆசிரியர்
வி. புவிதரன். சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு.
பி. நி.தம்பு. சிரேஷ்ட சட்டத்தரணி கொழும்பு.
திரு. கு. குருபரன். விரிவுரையாளர் சட்டத்துறை யாழ் பல்கலைக்கழகம் சட்டத்தரணி
வைத்திய கலாநிதி. கே. இளங்கோ ஞானியர். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி. க. சுரேஷ்குமார். பெண்ணியல் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிபுணர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி. ஞா. ஹைரின் ஆர்க். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
வைத்திய கலாநிதி. ப. நந்தகுமார். சுகாதார வைத்திய அதிகாரி தெல்லிப்பளை
வைத்திய கலாநிதி. சு. மோகனகுமார். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
ஜே. தோ. சிம்சன். ஆசிரியர் மன்னார்.
து. இராமகிருஷ்ணன். முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் அம்பாறை தமிழர் மகா சபை
சு. தவபாலசிங்கம். தலைவர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
எஸ். கிருபாகரன். தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
எஸ். சிவசொரூபன். தலைவர் வணிக பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
ஏ. பிரசன்னா. தலைவர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
செ. ஜனகன். தலைவர் மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்.
அ. றொ. மதியழகு. தலைவர் மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
திருமதி. ஆ. மரியம்மா ஜெயமணி. மாதகல் மேற்கு மகளிர் அபிவிருத்திச் சங்கம்
க. செல்வரட்ணம். தலைவர் பண்டத்தரிப்பு ப.நோ.கூ.சங்கம்
கி. பவளகேசன். மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி அமைப்பு
வணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ். பங்குத் தந்தை வங்காலை மன்னார்.
வைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
திருமதி. ம. தயாளினி. மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அமைப்பு
வைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
எஸ். ஜெயசேகரம். வணிக சங்கத் தலைவர் யாழ்ப்பாணம்
வணபிதா. எஸ். எம். பி. ஆனந்தகுமார். செயலாளர் யாழ் மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.
வைத்திய கலாநிதி. ம. வாசுதேவன். போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
கி. சேயோன். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு
ஜி.ரஞ்சித்குமார். மட்டக்களப்பு மாவட்ட மீனவர் அபிவிருத்தி அமைப்பு
ச. அ. பிலிப் மோய். ஆசிரியர் யாழ்ப்பாணம்
த. நிஷாந்தன். மட்டக்களப்பு மாவட்ட விவசாயஅபிவிருத்தி அமைப்பு
அ. சிற்றம்பலம். தலைவர் மாதகல் விவசாய சம்மேளனம்
க. சவுந்தரநாயகம். தலைவர் தூய அந்தோனியப்பர் கடற்றொழிலாளர் சங்கம்
க. அருமைதுரை. தலைவர் தூய லூர்துமேரி கடற்றொழிலாளர் சங்கம்
ஆர்.ஜோன்பிள்ளை. நானாட்டான்
வணபிதா. அ. அகஸ்ரின். பங்குத் தந்தை சக்கோட்டை யாழ்ப்பாணம்
வணபிதா. அகஸ்ரின் புஸ்பராஜ். பங்குத் தந்தை நானாட்டான் மன்னார்
வணபிதா. எல். ஞானாதிக்கம். பங்குத் தந்தை வஞ்சியன்குளம்
க. சுகாஷ். சட்டத்தரணி யாழ்ப்பாணம்.
தி. அர்ச்சுனா. சட்டத்தரணி யாழ்ப்பாணம்.
அ. சந்தியாப்பிள்ளை. நீதி சமாதானப் பகுதி யாழ். மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment