போர்க்குற்ற நகர்வுகளின் முன் தமிழர்கள் எதனை வலியுறுத்த வேண்டும்?


இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன்.
அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியா, மேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதையும் விளக்கியிருந்தேன்.
தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தளவில் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம் சார்ந்து கொள்வதற்கு, இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொண்டுள்ள பிணைப்பே வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதேபோன்று மேற்குலகுடன் தமிழ்த் தேசம் சார்வதற்கும் தமிழ்த் தேசத்தினுடைய பிரதான பலங்களில் ஒன்றாகவுள்ள புலம்பெயர் தமிழர்கள் மேற்குலகில் வசித்து வருகின்றமையும் காரணமாக அமையலாம்.
இவ்வாறாகத் தமிழ் மக்கள் இந்தியாவுடனும் மேற்குலகுடனும் இயல்பாகவே சார்ந்து போகக் கூடிய உணர்வு ரீதியான சூழ்நிலைகளும் காணப்படுகின்றன. இதனால் மேற்குலகினாலும் இந்தியாவினாலும் தமிழ்த் தேசம் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை பெரியளவில் விமர்சனத்திற்கு உட்படுத்தாமலும் சாதக பாதக நிலைமைகளை முழுமையாக ஆராயாமலும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை அனேக தமிழ் மக்களிடம் உள்ளது.
இவ்வாறான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேச விவகாரங்கள் தொடர்பாக வெளியுலகினால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் தீர ஆராயாது ஏற்றுக்கொள்ள முற்படும் மனநிலையானது அனேக தமிழரிடம் காணப்படுகின்றது. இது தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானதாகவே அமையும். இம் மனநிலையானது தமிழ்த் தேசத்திற்கு வாய்ப்பாக அமையத்தக்க விடயங்களைக் கூட பரிபூரணமான முறையில் அடையாமல் செய்துவிடும்.
எமது இனத்தின் நலன்களைக் காட்டிலும் வேறு தரப்புக்களின் நன்மைகளுக்காக அவர்களின் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளது செயற்பாடுகளுக்கும் இது வாய்ப்பாக அமைந்துவிடும்.
எனவே எமது விடயங்கள் தொடர்பில் சர்வதேசத்தினால் முன்வைக்கப்படும் விடயங்களை முறையான வகையில் ஆராயாது ஏனையவர்களால் முன்வைக்கப்படும் விடயங்கள் எல்லாம் சரியென கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதில் இருந்து தமிழ் மக்கள் விடுபடவேண்டிய கட்டாயத்தேவை இன்றுள்ளது.
தமது நலன்களுக்காக பல்வேறு இடங்களில் சிக்குண்டுள்ள அரசியல் தலைமைகள் தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதிலிருந்து தமிழ் மக்கள் விடுபடுவதற்கும் தமிழர் விவகாரங்கள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற சாதக பாதக நிலைமைகளை ஆராய்வது அவசியமாகும்.
சர்வதேச சமூகம், குறிப்பாக மேற்குலகானது இலங்கைத் தீவில் நடைபெற்ற இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்கின்றது. இவ்வாறாக விசாரணையை வலியுறுத்தும் சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ள விடயமானது கடைசி மூன்று ஆண்டுகளில் மட்டும் போர்க் குற்றம் இழைத்தவர்களைத் தண்டிப்பதாகும்.
மேற்குலகினால் முன்நகர்த்தப்படும் இறுதி மூன்று வருடங்களில் மட்டும் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான விடயத்தினையும் அதனால் எவ்வாறான நிலைமைகள் தமிழ்த் தேசத்திற்குக் கிட்டும் எனவும் இப் பத்தியில் ஆராயப்படுகின்றது.
ஆகவே முதலாவதாக, உண்மையில் தமிழர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு நிர்பந்திக்கப்பட்ட மூலகாரணத்திற்குத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுப்பதா அல்லது மேற்குலகினால் முன்வைக்கப்படுவது போன்று இறுதிப் போர் இடம்பெற்ற கடைசி மூன்று வருடங்களை மாத்திரம் கருத்தில் கொள்வதா தமிழ்த் தேசத்திற்கு நன்மையானது என்பதை தமிழ் மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறானதோர் கேள்வியை நாம் இந்த இடத்தில் எழுப்ப வேண்டியுள்ளதன் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சகல தரப்புக்களும் சரியாக விளங்கிக் கொள்வதற்காகவேயாகும். மேலும், பிரச்சினைகளையும் அடிப்படைகளையும் சகலரும் சரியாக விளங்கிக்கொள்ளும் போதே பிரச்சினைக்கான சரியான தீர்வினை முன்வைக்க முடியும் என்பதினாலும் ஆகும்.
போருக்குப் பின்பாக வெளியாகிய இறுதிப்போர் தொடர்பில் விவாதிக்கும் விடயங்களை நாம் உன்னிப்பாக நோக்க வேண்டியுள்ளது. அண்மைக்காலத்தில் இறுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு விசாரணை தேவை என சர்வதேச அளவில் ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அதேசமயம் சிறிலங்கா அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஐ.நா நிபுணர் குழுவிற்கு மாற்றாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சூழலில் நாம் எவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன என்பது பற்றியும் எவை எவை நடந்தாக வேண்டும் என்பது தெடர்பிலும் பார்க்கவேண்டியுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு குழுவானது ஐ.நா செயலாளர் நாயகத்தினால் இலங்கையில் போர் நடைபெற்ற இறுதிக் காலப்பகுதியில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது. இவ் ஐ.நா நிபுணர் குழுவானது போர் நடைபெற்ற கடைசி மூன்று வருடங்களை ஆராய்வதற்காகவே நியமிக்கப்பட்டது. அந்த வகையில் ஐ.நா நிபுணர் குழுவானது போர் நடைபெற்ற கடைசி மூன்று வருடங்களை உள்ளடக்கியதாகவே தனது அறிக்கையினையும் வெளியிட்டது.
இவ் அறிக்கையில் நிபுணர் குழுவானது முதற்கட்டமாகத் தேடிப்பார்த்ததில் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் சிபாரிசுகளின் படி முக்கியமாக இது தொடர்பில் இலங்கை பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் எனவும் அவ்வாறாக இலங்கை விசாரணைகளை நடத்தும் அதேவேளை சர்வதேசமும் ஒரு பொறிமுறையினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில் சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அவசர அவசரமாக சிறிலங்கா அரசானது ஏற்படுத்தியது. இவ் ஆணைக்குழுவானது தற்போது தனது உத்தியோக பூர்வ அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் ஐ.நா நிபுணர் குழு போர் நடைபெற்ற இறுதி மூன்றாண்டுகள் பற்றி ஆராயுமாறு வலியுறுத்தியிருக்க, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது போர் நடைபெற்ற கடைசி மூன்றாண்டுகளுக்கு முக்கியத்துவமளிக்காது ஏனைய காலப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆராய்ந்து இருப்பது தான்.
இந்தக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது மேற்குலகம் தற்போது அக்கறை செலுத்துகின்ற போர்க்குற்றங்களுக்கு புலிகள் தான் காரணம் எனச் சாடியுள்ளதுடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ்த் துணை இராணுவக் குழுக்களையும் அது குற்றம் சுமத்தியுள்ளது. இவ்வாறாக ஒட்டுமொத்தமாக தமிழர்களே போர்க் குற்றத்தினை இழைத்தார்கள் என்பது போல் காட்டிக்கொள்ள இது பார்க்கின்றது.
மேலும் அரசாங்கமும் அரச படைகளும் முழுக்க முழுக்க தமிழ் மக்களின் நலன்களை நோக்காகக் கொண்டே செயற்பட்டதாகவும் தனது அறிக்கையில் இவ் ஆணைக்குழுவானது கூறியுள்ளது. 
சுருக்கமாக தரப்புக்கள் நடந்;து கொள்கின்ற போக்கினை நோக்குவோமாயின்..

சீனாவும் ஒரு சில நாடுகளும் சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி யார் பிரச்சினையைக் கிளப்பினாலும் அதனை ஆராயாது கண்னை மூடிக்கொண்டு நிராகரிப்பதாகவும் இலங்கையைக் காப்பாற்றுவதாகவும் நடந்துகொள்கின்றன.
இந்தியாவானது நடைமுறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என ஒருபக்கத்தில் சொல்லிக்கொண்டு மறுபக்கத்தில் சிறிலங்காவைக் காப்பாற்றுகின்ற போக்கினையே கடைப்பிடிக்கின்றது.
மேற்குலகானது போர் நடைபெற்ற இறுதி மூன்றாண்டு காலப்பகுதியை ஆராய வேண்டுமெனக் கூறுகின்றது.
இலங்கை அரசாங்கமானது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு தமிழ்த் தரப்பே காரணம் எனக் கூறி தப்பிக்கொள்ள முனைகின்றது.
இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில், மேற்குலகினால் முன்வைக்கப்படும் கடைசி மூன்று வருடங்களில் நடைபெற்ற போர்க்குற்ற விடயங்களை பற்றியே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறாக வாதத்தில் ஈடுபடும் இலங்கை அரசானது முப்பது வருடப் போர் இடம்பெற்ற நிலையில் மூன்று வருடப் போரில் மட்டும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி விசாரணை நடத்தப்படவேண்டுமென மேற்குலகு கூறுவதன் உள்நோக்கம் பற்றி சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கருத்து யாதெனில், கடந்த முப்பது வருடங்களாக போர் நடைபெற்றது. ஆனால், போர்குற்றத்தை வலியுறுத்துவோர், இறுதி மூன்று வருட போரில் மட்டும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்த கோருவது, உண்மையில் நீதி, நியாயங்களை அடைவதற்கல்ல. மாறாக, எனது ஆட்சியை கவிழ்ப்பதற்கே. இதனூடாக தமக்கு சார்பான ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே மேற்குலகத்தின் நோக்கம் என குற்றம் சுமத்துகின்றது.
மேலும் மகிந்த அரசு கூறிவருவதாவது, விடுதலைப் புலிகளை தோற்கடித்தவன் நான். புலிகளைக் காப்பாற்ற முயற்சித்த மேற்குலகு அதுமுடியாது போக பழிவாங்கலாக எனது ஆட்சியை கவிழ்ப்பதனூடாக புதிய ஆட்சிமாற்றத்திற்கு கங்கணம்கட்டி நிற்கிறது. அதற்காகவே, அவர்கள் போர்குற்ற விசாரணையை வலியுறுத்துகிறார்கள்.
ஆகவே, இவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நான் செயற்படப் போவதில்லை எனவும் ராஜபக்ச அரசாங்கம் சிங்கள மக்களுக்கு கூறிவருகிறது.
இக் கருத்துருவாக்கம் ஊடாக மிகப் பொரும்பாலான சிங்கள மக்களைத் தன்வசம் தக்க வைத்துக்கொள்வதற்கான உபாயமாக இதனை மகிந்த அரசாங்கம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. அதனையே, அண்மையில் வெளிவந்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும் நிரூபிக்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் போர்குற்றம் தொடர்பான சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம். ஆனால், போர் நடைபெற்ற இறுதி மூன்று வருடங்களுடனோ அல்லது போர்க்குற்றங்களுடன் மட்டுமோ விசாரணைகளை மட்டுப்படுத்த இடமளிக்கக் கூடாது.
ஏனெனில், கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற போர்குற்றமானது, நெடுங்காலமாக தமிழர்களுக்கு எதிராக தொடர்கின்ற இனப்படுகொலையின் (Genocide) ஒரு அங்கமாக மட்டுமே உள்ளது. இதில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தினை அடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னைய சிங்கள ஆட்சியாளர்களாலும் தமிழ்த் தேசத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் இழைக்கப்பட்டே வந்துள்ளன. அதுமட்டுமன்றி போர் முடிவடைந்துவிட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
இலங்கை அரசின் பலவந்தமான ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்ற தமிழ்த் தேசத்தின் தேசம் என்ற அந்தஸ்துக்கான அடையாளங்களை அழிப்பதற்கான வேலைத்திட்டத்தினையே சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு தேசம் என்னும் அந்தஸ்தினை சிறிலங்கா அரசு அழிப்பதற்கான செயற்பாட்டினையே இனப்படுகொலை என நாம் சுட்டிக்காட்டுகின்றோம். ஒரு அரசின் ஆட்புல எல்லைக்குள் அந்த நாட்டில் உள்ள தேசம் ஒன்று இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் போது அதனை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பினை சர்வதேச சட்டங்களும் ஒழுங்குகளும் சர்வதேசத்திற்கு அளித்துள்ளன.
இந்த வகையிலே தான் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமிழத் தேசத்திற்கு எதிராக சிங்கள தேசத்தினால் புரியப்பட்டது இனப்படுகொலை என்பதனை விளங்கிக் கொண்டு தமிழ்த் தேசத்திற்கு எதிராக புரியப்பட்ட மற்றும் புரியப்பட்டு வருகின்ற இனப்படுகொலைக்கு ஓர் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு சர்வதேசத்தினை வலியுறுத்த வேண்டும்.
இதுவே எமது தமிழ்த் தேசத்தின் அரசியல் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவும் அமையும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
 கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment