எமது பெண்களின் கண்ணீருக்கு நல்லிணக்க ஆணைக்குழு என்ன பதில் வழங்கியுள்ளது

ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் இந்த அவையிலே இந்த வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றுகின்ற பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணிச்சலைத் தான் பாராட்டுவதாகவும் ஒரு வார்த்தை சொன்னார். ஜனாதிபதி தன்னுடைய உரையிலே தன்னுடைய தந்தையைக் குறிப்பிட்டு அப்பொழுது தலைவர்களாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, எஸ்.ஏ. விக்ரமசிங்க, பிலிப் குணவர்தன போன்றவர்களை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுடைய கொள்கைகள் தங்களை வழிநடத்தி நிற்பதாகவும் சபாநாயகருக்கு நினைவுபடுத்தினார். அவர் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி நினைவு கூர்ந்தார். ஆனால் நான் ஜனாதிபதி குறிப்பிட்டு விட்ட இடத்திலிருந்து வரலாற்றில் சில பகுதிகளை நினைவு கூர விரும்புகிறேன்.

1920களில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து நாடு திரும்பிய எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு ஒரு சமஷ்டி அரசியல் முறைதான் சிறந்த தீர்வு என்பது குறித்து மோர்னிங் லீடர் என்ற பத்திரிகையில் நான்கு கட்டுரைகளை எழுதியதை நான் நினைவு கூர விரும்புகின்றேன். அதைவிட பண்டாரநாயக்க அங்கம் வகுத்த அல்லது தொடர்புபட்டிருந்த மிகச் சிறந்த உயர்ந்த தலைவர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டு இயங்கிய கண்டிய தேசிய கூட்டு அமைப்பு டொனமூர் ஆணைக்குழு முன்னிலையிலும் சோல்பரி ஆணைக்குழு முன்னிலையிலும் கண்டி ஒரு தன்னாட்சி அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாநிலம் ஒரு தனியான தன்ஆட்சி அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். அதைப்போல் கீழைத்தேய பிரதேசம் ஓர் அதிகார தன்னாட்சி அலகாக இருக்க வேண்டும். மற்றும் ஒன்றையொன்று தலையிடாதவாறு அந்த ஆட்சிகள் அமைய வேண்டும் என்றும் இந்த நாடு ஒரு சமஷ்டி அடிப்படையில் ஆளப்படவேண்டும் என்று பிரேரித்ததை நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

அமரர் பண்டாரநாயக்க ஜனாதிபதியால் நினைவுகூரக்கூடிய ஒரு தலைவராக இருக்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த நாட்டிலே பொருளாதாரம் இத்தனை தூரம் சீரழிந்து போய் இருப்பதற்கு அடிப்படையில் ஒரு காரணமாக இருப்பது இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றது  என்பதை தெளிவாக ஒத்துக் கொண்டால், ஜனாதிபதி தான் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர்களில் தனது தந்தையும் ஒருவராக இருந்திருக்கிறார் என்று உரிமை கொண்டாட நினைத்தால் பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் நினைவுகூர வேண்டும். அத்தகைய ஒரு கொள்கைக்காக உழைக்க வேண்டும். பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் மிகத் தெளிவானவை. அவர் சமஷ்டி முறையைக் கொண்டு வருவதற்கு அதற்கு ஆயிரம் தடவைகள் எதிர்ப்புகள் வந்தாலும் அதனை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதற்கு அவர் சுவிற்சிலாந்தை அமெரிக்காவை அவுஸ்திரேலியாவை, இந்திய நாட்டை உதாரணமாகக் காட்டினார். இவற்றை எல்லாம் இப்போதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். எனவேதான் ஜனாதிபதிக்கு அவர் விட்ட இடத்தைத் தொட்டுக் காட்டி நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் தனியே பொருளாதார விடயங்களில் மட்டும் தன்னுடைய தலைவர்களை நினைவுகூருவது பொருத்தமாக இருக்கமாட்டாது என்று நான் நினைக்கின்றேன்.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு ஜனநாயக சந்தர்ப்பத்திலும் அனைத்துப் பாராளுமன்றத் தேர்தல்கள் உட்பட இறுதியாக 2011ஆம் ஆண்டு ஜீலை மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று வடக்கு மக்களும் கிழக்கு மக்களும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள்போல் தமது தாயகத்தில் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் வாழவும் வேண்டும். ஆளவும் வேண்டும் என்று மிகத்தெளிவாக ஒரு கொள்கை அடிப்படையில் எங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். நீங்கள் திட்டமிட்டு வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்தாலும் கூட அந்த மக்களின் திடசங்கற்பத்திற்காக நாங்கள் கிழக்கு மக்களுக்கு நன்றியுடையவர்களாகவே இருக்கின்றோம். இந்த நாட்டில் சனநாயகம் இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் அவ்வாறு சனநாயக ரீதியாக ஓர் ஆட்சிக்கு வந்ததாக நீங்கள் ஒப்புக்கொண்டால் வடக்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் தங்களுடைய இறைமையை தங்களுடைய அடிப்படை அரசியல் உரிமையை இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புகளுக்கோ அல்லது அரசாங்கங்களுக்கோ ஒப்புக் கொடுக்கவுமில்லை. அதனை ஆதரித்து நிற்கவுமில்லை. அவற்றுக்கு கையெழுத்து இடவுமில்லை.

மாறாக இறைமையானது எங்களுடைய மக்களில்தான் இருக்கின்றது. அதுதான் சனநாயகத் தத்துவம். அதனை எவரும் பறித்தெடுக்க முடியாது.  மக்களுடைய விருப்பமின்றி ஓர் அரசினால் இந்த நாட்டுத் தமிழ் மக்களுடைய இறைமையைப் பெற்ற ஓர் அரசு என்று சொல்வதற்கு உரிமையில்லை. இந்த நாட்டிலே தமிழ் மக்கள் 60 ஆண்டுகளாக தங்களுடைய இறைமையை மிகத் தெளிவாகப் பேணி சரியான அரசியல் தீர்வினை ஒட்டிய அரசியலமைப்பில்லாத எதற்கும் அவர்கள் தங்களுடைய ஆதரவை வழங்கவில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த நாட்டிலே 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்துக்குப் பிறகு ஒரு (கூணூடிச்டூ – ச்t  ஆச்ணூ) நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அமிர்தலிங்கம், நவரத்தினம், துரைரத்தினம் மற்றும் கா.பொ.குரத்தினம் ஆகியோர் குற்றம் சுமத்தப்பட்டு அந்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பொழுது மிகச் சிறந்த வழக்கறிஞராகவும் வரலாற்றுத் தத்துவங்களை தெரிந்தவருமாக விளங்கிய திருச்செல்வம் வாதாடும்பொழுது தமிழ் மக்கள் ஒருபோதும் இலங்கையினுடைய அரசியலமைப்புக்கோ அல்லது அரசுகளுக்கோ தங்களுடைய இறைமையை ஒப்புக்கொடுக்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொன்னார்.
இந்த வழக்கில் இந்நீதிமன்றத்தி னால் அதற்குத் தீர்ப்பு வழங்க முடி யாமல் போனது. அவர்களால் அதனை மறுக்க முடியாமல் போனது. இன்றைக்கும் அதே நிலைமைதான் எங்களிடம் இருக்கின்றது. ஆகவே சனநாயகத்தை மதிக்கின்ற இந்த அரசாங்கமோ அல்லது இந்தப் பாராளுமன்றமோ அவ்வாறு இருக்குமானால் எங்களுடைய தமிழ் மக்கள் 60 ஆண்டுகளாக மிகத்தெளிவாக சொல்லி வருகின்ற அரசியல் தீர்வை தாங்கள் தங்களுடைய சொந்தமண்ணில் வாழவேண்டும். அங்கு மீண்டும் வீடு கட்டி வாழ வேண்டும். அந்த நிலத்தில் நாங்கள் வாழ்வதற்கும் ஆள்வதற்குமான உரிமையும் உரித்துடையவர்கள் என்பதை நீங்கள் ஏற்று அவர்களுடைய இறைமையை மதித்து அவர்கள் தங்களது ஆணையை அளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஜனாதிபதியிடம் சொன்னார். நாங்கள் இன்றைக்கும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக இருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கின்றோம். இந்த ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுடைய ஆட்சி உரிமையை ஏற்று இறைமை உரிமையை ஏற்று சனநாயக ரீதியிலான தீர்ப்புகளை ஏற்று அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பேச்சுவார்த்தையின் மூலம் ஓர் நிரந்தர அரசியல் தீர்வைக் காணுவதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். அதனை இழுத்தடிக்காமல் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் இந்த அரசாங்கம் ஓர் உறுதியான அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டும். தீர்வைக் காண வேண்டும். அதற்காக நாங்கள் எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஆயத்தமாக திடசங்கற்பம் பூண்டு இருக்கிறோம் என்பதைத் தெளிவாக இச்சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.
நான் இந்த நாட்டில் கடந்தகால வரலாறு தொடர்பாகப் பேசுவதற்கு இன்னுமொரு நிமிடத்தைச் செலவிட விரும்புகின்றேன். கடந்த காலங்களிலே இந்த நாட்டிலே எமது மக்களுக்கெதிராக எத்தனையோ கலவரங்கள் உருவாக்கப்பட்டன. அக்கலவரங்களின்போது எமது மக்களில் பெருந்தொகையானோர் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். எமது மக்களில் பெருந் தொகையானவர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற யுத்தத்தை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்று உலகம் முழுவதும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசாங் கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதனூடாக அந்த அறிக்கைக்கு ஈடான அறிக்கை யைச் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்திருப்பதாக உலகில் நாங்கள் செல்கின்ற இடங்களிலே எங்களிடம் வினவுகின்றார்கள். இலங்கை அரசாங்கம் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆணைக்குழு அறிக்கைக்குப் பதிலளிக்கக்கூடியதாக இந்த ஆணைக்குழு மூலம் தமது கடப்பாட்டை நிறைவேற்றுவது பற்றி எங்களுடைய அபிப்பிராயம் என்ன என எங்களிடம் கேட்கின்றார்கள்.
இந்த அரசாங்கம் அந்த அறிக்கைக்குப் பதில் அளிக்கும் முகமாக தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காகத் தயாரித்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். இப்பாராளுமன்றத்திலும் அந்த அறிக்கை வெளிப்படையாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றேன். அந்த அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். நாங்கள் உண்மைகளை அறிய விரும்புகிறோம். எமது தாய்க்குலத்தவர்கள் தமிழ் மக்கள் மற்றும் உலகிலுள்ள எமது புலம்பெயர்ந்த மக்கள் உலகிலுள்ள அரசாங்கங்கள் யாவும் இந்த அரசின் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யுத்தத்தின் எல்லையில் மரணித் தவர்களின் பிரச்சினை மட்டுமல்ல இந்த அவையிலே நடை பெற்ற அநாகரிகமான செயல்களை நாங்கள் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன்னர் கூட இந்தச் சபையிலே மிகவும் அநாகரிகமான நடவடிக்கைகள் நடைபெற்றதை நாங்கள் அவ தானித்துக்கொண்டிருந்தோம். ஜனாதிபதி இச்சபையிலே வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்த பொழுதும் தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன. ஒருவரையொருவர் இழுத்துக்கொண்டு அடிபட்டார்கள். அதுமட்டுமல்ல லொக்குபண்டார இந்தச் சபையிலே சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட வேளையிலே இந்த அவையிலே அங்கம் வகித்த பௌத்த பிக்குகள் கூட மிகவும் மோசமாகவே நடத்தப்பட்டார்கள். நாங்கள் இவற்றையெல்லாம் இந்த அவையிலே இருந்து கொண்டு மிகவும் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
எமது மக்கள் கொல்லப்படக்கூடாது. எமது மக்கள் பட்டினியால் வாடிச் சாகிறார்கள். போர்க் காலத்தில் எமது மக்களுக்கு உணவும் மருந்தும் அனுப்பவில்லை என்று நாங்கள் இந்த அவையிலே எத்தனையோ தடவைகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறோம் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எமது கட்சித் தலைவர் சம்பந்தன் அங்கே உள்ள எமது மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று இந்த அவையிலே குரல் எழுப்பியிருந்தார். அங்கு அரசாங்க அதிபர் அங்கே போர்முனையிலே 4 20, 000 பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் எனச் சொல்லிக்கொண்டிருந்த வேளையிலே ஜனாதிபதியும் அமைச்சர்களும் இந்த அவையிலே அங்கம் வகிக்கின்ற தமிழ் அமைச்சர்களும் கூட அங்கே 70, 000 பேர் மாத்திரம் தான் இருக்கிறார்கள் என்றார்கள். நாங்கள் நேரடியாகவே ஜனாதிபதியிடமே கேட்டோம். அந்தப் போர்முனையிலிருந்து அகதி முகாம்களுக்குத் திரும்பியவர்கள் 3,17,000 பேர் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வந்த வேளையில் இந்த அரசாங்கத்திலுள்ள தலைவரும் அமைச்சர் களும் எவ்வளவோ உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஐ.நா. சபை வரை கொண்டுசென்று சொ ன்னார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டிய விடயமா? இல்லையா? இன்று இலட்சக்கணக்கான மக்களைக் காணவில்லை என நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1,47,000 மக்களை காண வில்லை. அவர்கள் எங்கே மறைந்து விட்டார்களா என வணக்கத்துக்குரிய மன்னார் ஆயர் கேள்வி எழுப் பியிருந்தார். இக்கேள்விக்குப் பதிலளிக்கவேண்டிய கடமை இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழு வினுடைய அறிக்கை இந்த சபை யிலே சமர்ப்பிக்கப்படுமானால் அந்தக் கேள்விகளை நாங்கள் எழுப்புவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். உண்மைகள் வெளிவரவேண்டும். எங்கள் தலைவர் குறிப்பிடுவதைப்போல இந்த விசாரணைக் குழுவினாலே சமர்ப்பிக்கின்ற அறிக்கைகள் உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதற்காக இருக்க வேண்டும். இந்த உண்மைகளின் அடிப்படையில் இனிமேல் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதவாறு இலங்கையிலே இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காட்டுவதற்கு இந்த அறிக்கைகள் வழிசெய்ய வேண்டும். அதற்காகத்தான் ஆதாரபூர்வமான அறிக்கை இந்த சபையிலே சமர்ப்பிக்கப்படவேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம். அந்த உண்மைகள் வெளிக் கொணரப் படவேண்டுமென்று வேண்டி நிற்கிறோம்.
அதைவிட இப்பொழுது நான் கேட்ட வினாக்களுக்கு அப்பால் எங்களுடைய தாய்மார் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் போய் நாங்கள் எங்களுடைய கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்களுடைய பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்று கேட்பதற்கு இந்த ஆணைக்குழு என்ன பதில் சொல்லியிருக்கிறது என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
இந்த நாட்டிலே எத்தனை ஆயிரம் குடும்பத் தலைவர்கள் தொடர்பாக அவர்களுடைய பெண்கள் போய் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேட்டார்கள். எங்களுடைய கணவன்மாரை நாங்கள் உங்களுடைய இராணுவத்திடம் ஒப்படைத்தோம். அவர்கள் எங்கே என்று கேட்பதற்கு இடமிருக்கிறதல்லவா? கேட்டார்கள் அல்லவா? அதைத்தான் நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும் புகின்றேன். இந்த நாட்டிலே அந் தப் பெண்கள் அழுகின்ற கண்ணீரின் பிரதிநிதிகளாகத்தான் நாங்கள் இங்கே வந்து குரல் கொடுக்கின்றோம்.
இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி  எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?

அண்மையிலே பல்கலைக்கழக மாணவத் தலைவன் தவபாலன் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து கொண்டு வந்தவர்களால் சாகக்கூடிய அளவு தாக்கப்பட்டிருக்கின்றார். நல்லவேளை உயிர் தப்பி விட்டார். சில நாட்களுக்கு முன்னர் அதாவது 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் சித்த ஆயுள்வேத மருத்துவ பீட மாணவன் ஒருவனைக் காணவில்லை. இப்படி பலர் அங்கே காணாமல் போகின்றார்கள். இதற்கு யார் காரணம்? 27ஆம் திகதி நவம்பர் மாதம் வந்தவுடன் உங்களுடைய படையினர் என்ன செய்கிறார்கள். எங்கெல்லாம் சந்தேகம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று அங்கிருக்கின்றவர்களை எச்சரிக்கின்றார்கள். அவர்களைக் கைது செய்யப் பார்க்கின்றார்கள். விசாரிக்கின்றார்கள். தாய்மார் மற்றும் இரத்த உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களை காணவில்லை என்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நடந்தது என்ன என்று தெரியாமலோ ஒரு நாளிலாவது கண்ணீர் விடக்கூடாதா? இதைக்கூட நீங்கள் அனுமதிக்கமாட்டீர்களா? என்று நான் கேட்க விரும்புகின்றேன். இந்த நாட்டிலே அரசியல் பண்பாடு என்னவாக இருக்கின்றது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டிலே ஜனநாயகம் இருப்பதாகச் சொல்கின்றீர்கள். ஆனால் ஜனநாயக ரீதியாக எங்களுடைய மக்களின் தீர்ப்பை ஏற்று இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நீங்கள் ஆயத்தமாக இல்லை. அதேநேரம் இந்த நாட்டின் ஜனாதிபதி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபொழுது அவருக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகின. அது உண்மையா? இல்லையா? அது தப்பா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதனை நினைவூட்ட விரும்புகிறேன்.

உங்களுடைய வரவுசெலவுத்திட்டத்திலே இராணுவப் படை வீரர்கள் மூன்றாவது குழந்தையைப் பெற்றால் ஓர் இலட்சம் ரூபா தரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். இப்போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்கு நீங்கள் அப்படி தர வேண்டாம். ஆனால் மடிந்துபோன எங்களுடைய குலத்தவர், இனத்தவர்கள் மீது நஷ்டஈடு வழங்குங்கள். அவ்வாறு நஷ்டஈடு வழங்குவதாக நீங்கள் அறிவித்தீர்களா? எங்களின் இழந்த சொத்துகள் மீது நஷ்டம் கொடுக்க அறிவித்தீர்களா?

வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாக நீங்கள் கூறமுடியுமா? இங்கு முற்றுமுழுதாக இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் ஓர் அடக்குமுறைக்குள் அதாவது ஜனநாயகக் குரல் மீண்டும் அங்கு எழுந்துவிடக்கூடாது என்ற அளவில் அங்கே ஓர் இராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஓர் இராணுவத் தளபதி அங்குள்ள அரச ஊழியர்களை அழைத்துப் பேசியபோது இந்த நிலம் விடுதலைப் புலிகளிடமிருந்து எங்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த நிலத்தில் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் சொல்கின்றபடி இந்த நிலத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நீங்கள் அரசாங்க ஊழியர்களாக இருக்க வேண்டாம் என்று கட்டளையிட்டாரா? இல்லையா? என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் இதனை ஆதாரத்துடன் தான் பேசுகின்றேன். ஓர் இராணுவத் தளபதி அங்கு ஓர் அரசாங்க அதிபருக்கு எழுதுகின்றார். உதாரணமாகக் குறிப்பிடுகின்றேன். 1 778 ஏக்கர் காணியை நீங்கள் எங்களுடைய தேவைக்காகக் கொடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். இந்த இராணுவத்தினருக்கு யார் காணி அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று காணி அமைச்சுப் பொறுப்பு யாருடைய கையிலே இருக்கின்றது.

மீள்குடியேற்ற அமைச்சருக்கு 1333 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உங்களுடைய இராணுவச் செலவு இன்றைய மொத்த வருமானத்திலே 20 வீதத்தைத் தாண்டுகின்றது. அதாவது 22, 994 கோடி. யுத்தம் முடிந்ததற்குப் பிறகும் சென்ற ஆண்டைவிட அதிகமான பணத்தை நீங்கள் இராணுவத்துக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக வடக்கு, கிழக்கைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலே நாங்கள் ஒன்றாக வாழ வேண்டும். தமிழர்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று நீங்கள் சிந்தித்தால் ஆகக் குறைந்தது எங்களுடைய செத்துப் போன மக்கள் சார்பாகவாவது நீங்கள் நஷ்டஈட்டைக் கொடுக்க வேண்டாமா? அழிந்துபோன சொத்துகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் நிதியை ஒதுக்க வேண்டாமா? உங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால் நாங்கள் உங்களிடமிருந்தாவது உதவியைப் பெறலாம் என்று குணரத்னவிடம் நேரடியாகச் சொன்னேன். ஆனால் மீள்குடியேற்றத்துக்கென மொத்த வருமானத்திலே 0.06 வீதம் அங்கே ஒதுக்கப்பட்டிருந்தது.

கடன் வாங்கி எங்கள் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அபிவிருத்தி என்பது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக அல்ல தமிழ் மக்களினது உரிமைகளை வழங்குவதன் அடிப்படையில் தான் அந்த அபிவிருத்திகள் பயன்பாட்டுக்குள் வரவேண்டும். நாங்கள் அரசியல் தீர்வொன்று இல்லாமல் எங்கள் மண்ணில் வாழவும் ஆளவும் எங்களுக்கு இருக்கின்ற உரிமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் செய்கின்ற அபிவிருத்தி எங்களை அடிமைப்படுத்துவதாக இருந்தால் நாங்கள் அதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். அது அல்ல ஒரு ஜனநாயக தத்துவம். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் புறக்கணித்துவிட்டு நீங்கள் அபிவிருத்தி வேலை என்று செய்தா? எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டீர்கள். முதலாளிகளுக்கும் தனியாருக்கும் பெரும்பான்மையினத்தைச் செர்ந்தவர்களுக்கும் எங்கள் நிலங்களை விரும்பியவாறு எங்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் அவைகள் விற்கப்படுகின்றன. கையளிக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன.

அதைவிட நாங்கள் இங்கே பலமுறை இது சம்பந்தமாக  பேசியிருக்கின்றோம். 24 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தினுடைய இடைக்காலத் தீர்ப்பொன்று கிடைத்ததற்குப் பிறகும் வலிகாமம் வடக்கில் இராணுவம் நமது அரைவாசிப் பிரதேசத்தையும் மீள்குடியேற்றப்படாத இலட்சக்கணக்கான மக்களில் அரைவாசிப் பேரையும் மீளக் குடியேற்றுவதற்கு ஆயத்தமாகவில்லை. அந்த நிலங்களைக் கைப்பற்றி இராணுவ முகாம்களையும் இராணுவக் குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நினைக்கின்ற திட்டம் அதுதான். இதைத்தான் அபிவிருத்தியென்று நாங்கள் நினைக்கின்றோம்.

அடுத்ததாக வலிகாமம் வடக்கை அடுத்துள்ள மாதகல் பிரதேசம். அங்கே திருவடிநிலை தொடக்கம் மாதகலுடைய முனையிலிருந்து காங்கேசன் துறை வரைக்கும் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. எங்களில் எவருக்கும் தெரியாமல் அபிவிருத்தி என்ற பேரிலே அங்கே இயந்திரக் காற்றாடிகள் பூட்டப்படுவதற்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மலேசிய நிறுவனம் ஒன்றுடன் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றீர்கள். அதுவும் சீனர்களின் நிறுவனம் என்று நாங்கள் அறிகின்றோம். அது உண்மையோ இல்லையோ அந்த ஒப்பந்தத்தை நீங்கள் சொல்ல வேண்டும். வலிவடக்கிலே ஒ / 152 என்ற கிராம சேவையாளர் பிரிவு மக்கள் அந்த நிலங்களில் மீளக் குடியேற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டு மீண்டும் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் வெளியற்றப்பட்டிருக்கின்றனர்.
எங்களுடைய தலைவர் சம்பந்தன் சென்ற 24 ஆம் திகதி இந்த அவையிலே பேசுகின்ற போது சம்பூர் மக்களை மீளக்குடியேற்ற வேண்டுமென்று கேள்வியெழுப்பினார். பஸில் ராஜபக்ஷ இந்த விடயத்திலே அபிவிருத்திக்காக எடுக்க வேண்டிய நிலத்தைத் தவிர ஏனைய நிலங்களில் அந்த மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிப்போம் என்று ஒரு வார்த்தையைக் கூறியிருந்தார். அந்த மக்களுக்கு அது பெரும் ஆறுதலாக இருந்தது. நீங்கள் இந்த விடயத்தைச் செய்ய வேண்டும். எங்கள் மீது அந்த மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாக அந்த வார்த்தைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அதேபோல வலிவடக்கிலே இருக்கின்ற நிலங்கள் மீண்டும் எங்களுக்குத் தரப்படவேண்டும். இராtவம் அந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். நாங்கள் மிகத் தெளிவாக சொல்கிறோம். இராணுவத்தின் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கோபமும் கிடையாது. அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அரசுதான் அந்த நிலங்களை எடுத்து தமிழ் மக்களுக்கு உரித்தான அந்த நிலங்களை அவர்களிடத்தில் கொடுக்கவேண்டும். அந்த நிலத்திலே அவர்களுக்கு வாழவும் ஆளவுமான அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

இறுதி யுத்தத்தின் பொழுது முல்லைத்தீவிலிருந்து ஏராளமான தங்கங்களும் பணமும் எடுத்துச் செல்லப்பட்டன என்ற தகவல்களைக் கேள்விப்பட்டோம். இன்று உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கே.பி. இருக்கிறார். அவரிடம் கப்பல்கள் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றீர்கள். எனவே நீங்கள் எமது மக்களைத் தொடர்ந்தும் அநாதரவான நிலைக்குத் தள்ளாமல் அவர்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை நீங்கள் எங்களுக்காகச் செலவிடுவதற்கு ஆயத்தமில்லாவிட்டாலும் ஆகக் குறைந்தது நீங்கள் அங்கிருந்து எடுத்துச் சென்ற தங்கங்களினதும் பணங்களினதும் வரவு செலவுகள் எவ்வளவென்பதை எமக்குத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அதிலிருந்து எவ்வளவு தொகையை எமது மக்களுக்கு கொடுக்கப் போகின்றீர்கள். கே.பியிடம் உள்ள பணம் எவ்வளவு? நீங்கள் போர் முனையிலிருந்து எடுத்துச் சென்ற தங்கங்களினதும் பணங்களினதும் பெறுமதி எவ்வளவு? அந்தத் தொகையிலிருந்தாவது எமது மக்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

எங்களுக்கு தேர்தலிலும் சரி எங்களுடைய கட்சியிலும் சரி எங்களுக்கு உதவியும் கிடையாது. பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகின்ற போது எமது நாட்டிலிருந்து புலம் பெயருகின்ற மக்களில் சிலர் அந்தப் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகின்ற போது எமது நாட்டிலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்ற மக்களில் சிலர் அந்தப் பிச்சைப்பாத்திரத்திலே சில காசைப் போடுகின்றனர். நீங்கள் அதைப்பற்றிக்கூட பேசுகின்றீர்கள். சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரைகூட உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டீருக்கின்றது நீங்கள் எவ்வளவு பண்டங்களை மக்களுக்குக் கொடுத்துப் பார்த்தீர்கள்? இந்த நாட்டிலே ஜனநாயகம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். இராணுவம் என்ன செய்கிறது? இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமது வேட்பாளர்கள் யாராக இருக்க வேண்டுமென அடையாளம் காண்கின்றனர். மறுக்க முடியுமா? சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் 22 ஆம் திகதி இரவு வடமாகாணத்தில் வன்னியில் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று அரசுக்குச் சார்பாக வாக்களிக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்கள். உங்களுடைய ஜனாதிபதியும்கூட அங்கு சென்று முகாமிட்டிருந்தார்கள். இராணுவத்தினர் அவ்வாறு கேட்கவில்லை என உங்களால் மறுக்க முடியுமா? வீடு வீடாகச் சென்று அரசுக்குச் சார்ப்பாக வாக்களிக்கும் படி கேட்கவில்லை என உங்கயளால் மறுக்க முடியுமா? அப்படியிருந்தும் அங்குள்ள மக்கள் ஒரு கொள்கைக்காக இலட்சியத்துக்காக எங்களுடைய வீடுகளில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். வீடுகள் இல்லாவிட்டாலும் நாங்கள் எமது காணிகளில் குடிசையை அமைத்துக்கொண்டாவது வாழவேண்டும். எமது பிரதேசங்களில் வாழ்கின்ற உரிமையை எங்களுக்கு வழங்குங்கள். எமக்குரிய நிலத்திலிருந்து இராணுவத்தினர் வெளியெறி எங்களை அந்நிலங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என அம்மக்கள் விரும்புகிறார்கள். எமக்குச் சொந்தமான நிலத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

24 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் எனது சொந்த மண்ணிலிருந்து இராணுவத்தினர் வெளியெறவேண்டும் என நான் விரும்புகிறேன். இதுநாள் வரையில் நான் சுதந்திரமாக எனது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு இன்னும் இடமளிக்கவில்லை. அதேபோன்று லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய நிலத்தில் ஆள்கின்ற உரிமையை நீங்கள் அங்கீகரிக்கும் வரை நாங்கள் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி வைக்க வேண்டாம். இப்போழுது நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக உலகுக்குச் சொல்வதைத் தவிர்த்து எங்களுடைய கோரிக்கைகளை ஜனநாயகத் தீர்ப்புகளை ஏற்று இந்த நாட்டிலே ஒரு சிறந்த அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கேட்கின்றோம். நீங்கள் தொடர்ந்தும் எமது நிலங்களை அபகரிக்கக் கூடாது. இல்லாவிட்டால் நாங்கள் எமது மக்களுடன் இணைந்து தந்தை செல்வா எமக்குக் காட்டிய அஹிம்சை வழியில் ஜனநாயக ரீதியாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment