மெல்ல மெல்ல அரங்கேறுகிறது தடுப்பு முகாம் நிலைமைகள் - விடுவிக்கப்பட்டவர் பிரிட்டனில் அதிர்ச்சித் தகவல்


இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்று அங்கிருந்த நிலைமைகளை வெளிப்படுத்துகிறார் பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர்.

தமிழ்வாணி ஞானக்குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக மெனிக்பாம் என்ற இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக்கணக்காக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களைப் பின்னர் ஒருபோதுமே அவர்களது குடும்பத்தினரால் பார்க்க முடிந்ததில்லை என்றும் தெரிவிக்கிறார் தமிழ்வாணி ஞானக்குமார் பிரிட்டன் எஸெக்ஸைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானக்குமார் கடந்த செப்ரெம்பர் மாதமே தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், முகாம்களில் நடந்த கொடுமைகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடுவதற்கு அவர் இவ்வளவு காலமாகக் காத்திருந்தார். ஏனெனில், தான் வெளியிடும் தகவல்களால் ஆத்திரம் கொள்ளும் படையினர் முகாமில் தன்னுடன் இருந்த தனது உறவினர்களையும் நண்பர்களையும் பழிவாங்கிவிடுவார்களே என்று அவர் பயந்தார்.

சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த மாதத் தொடக்கத்தில் முகாம்களைத் திறந்து விட்டதனால் தமிழ்வாணியின் உறவினர்களும் நண்பர்களும் இப்போது தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்.முகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சீரழிக்கப்படுகிறார்கள் எனத்தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை இலங்கை அரசும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் ஏதும் இல்லை என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. அத்தோடு முகாம்களில் இருந்து மக்கள் காணாமல் போனார்கள் என்பதையும் அது முற்றாக நிராகரிக்கிறது.ஆனால், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அதனால் முடிந்த அனைத்தையும் கொழும்பு செய்கிறது என ஐ.நாவின் பேச்சாளர் குற்றஞ் சாட்டுகின்றார்.விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியிலிருந்து வெளியேறி வந்த மூன்று இலட்சத் திற்கு அதிகமான மக்கள் வதை முகாம்கள் என்று வர்ணிக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடனேயே மருத்துவப் பணியாளர் தமிழ்வாணி ஞானக்குமாரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த மருத்துவமனையில் பணிபுரிந்த தமிழ்வாணி இலங்கை அரச படைகள் முன்னேறி வந்த போது மேற்கொண்ட கடும் ஷெல் தாக்குதல்களால் காயமடைந்து உயிருக்குப் போராடிய பல நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளார்.

தடுப்பு முகாம்களில் மக்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசு தொடர்ந்து, உறுதியாக மறுத்து வருகின்ற நிலையில் தமிழ்வாணியின் குற்றச்சாட்டு கொழும்பு அரசைத் திரும்பத் திரும்ப விமர்சித்து வரும் மனித உரிமை அமைப்புக்களுக்குப் புதிய ஊக்கத்தைக் கொடுக்கும்.சிங்போர்ட்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உரையாடுகையில் அவர் இலங்கை அரசைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுகிறார். அவை வதைமுகாம்களாகத் தான் இருந்தன. அந்த வதை முகாம்கள் மிகக் கொடுமையானவை. அங்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. முட்கம்பி வேலிகளைத் தாண்டிச் செல்ல முடியாது. அவர்கள் வெளி உலகத்தில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள்.

தங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியோ தங்களுடைய உறவினர்களும் நண்பர்களுமாகப் பலர் காணாமல் போனது பற்றியோ தாங்கள் பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தப்படுவது பற்றியோ அம்மக்கள் வெளியே சொல்வதை அரசு விரும்பவில்லை. இவ்விடயங்கள் குறித்து யாரும் அறிந்து கொள்கின்றமையை அரசு விரும்பவில்லை. பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு சாதாரணமானவை. அதனை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன். விருந்தினர்கள் வரும் பகுதி எமது முகாமிற்கு மறுபுறத்தில் இருந்தது. நாங்களோ முகாமின் மறுபுறத்தில் இருந்தோம். பெண்பிள்ளைகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்காக முன்புறமாக முட்கம்பி வேலி அருகில் வந்து காத்திருப்பார்கள். அவ்வேளை களில் அங்கு வரும் இராணுவ அதிகாரிகள் அப் பெண்பிள்ளைகளில் கைபோடுகின்றமையை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.

ஆனால், அந்தப் பெண்கள் இவற்றைப் பற்றிப் பின்னர் பேசுகின்றதேயில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் அங்கு நடந்தவைகளைப் பற்றிப் பேசினால் பின்னர் என்ன நடக்கும் என்று. இது அங்குள்ள எல்லோருக்கும் தெரியும். பெண்பிள்ளைகளுடன் இராணுவ அதிகாரிகள் சேட்டை விடுகின்றமையை அங்குள்ள ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர்.தமிழ்ப் பெண்கள் தாம் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையை ஒருபோதும் வெளியில் பேச விரும்புவதில்லை. அவர்கள் இது பற்றி வாயைத் திறக்க விரும்புவதில்லை. தமது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ததும் இராணுவ அதிகாரிகள் இப்பெண்களுக்கு உணவு மற்றும் பணம் கொடுத்து அனுப்புகின்றதை நான் அறிந்திருக்கிறேன். இந்த மக்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து போய் இருக்கிறார்கள். படையினரால் தாம் நடத்தப்படும் விதம் குறித்து யாராவது முறையிட்டால் அவர்கள் படையினரால் தனிமைப்படுத் தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு தடவை அடுத்துள்ள முகாமுக்குச் செல்வதற்காக காத்திருந்த ஒரு வயதான நபரைப் படை அதிகாரி ஒருவர் உதைந்து தள்ளியமையை நான் நேரில் பார்த்தேன். அவர்களுக்கு இடையில் என்ன வாக்குவாதம் நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வயதானவரை படை அதிகாரி பின்னால் இருந்து உதைத்துத் தள்ளினான். அதே பகுதியில் சுட்டெரிக்கும் வெய்யிலில் மக்கள் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்; சில சமயங்களில் மணிக்கணக்காகக் கூட அவர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சில சமயங்களில் வெள்ளை வான்கள் முகாமிற்குள் வரும். அதில் இளைஞர்களையும் யுவதிகளையும் அவர்கள் பிடித்துச் செல்வார்கள். வெள்ளைவான் இலங்கையில் ஒரு பயங்கரத்தை உருவாக்கியிருந்தது. கொலைக் கும்பல்களால் ஆயிரக்கணக் கானோர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பங்களுடன் இந்த வெள்ளை வான்களுக்கு நிறையச் சம்பந்தம் உண்டு.

விடுதலைப் புலிகளுடன் ஏதாவது தொடர்புகள் கொண்டிருந்தவர்களை தமது பெயர்களைக் கூறுமாறு படையினர் கேட்பார்கள். அவ்வாறானவர்களை அழைத்து விசாரிப்பார்கள். பின்னர் வெள்ளைவான் வந்து குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு சென்று விடும். அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களை மக்கள் இன் னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வவுனியாவில் முகாமில் தன்னைக் கொண்டு வந்து தனக்கு முன் பின் அறியாதவர்களுடன் விட்டார்கள். முதல் இரண்டு மூன்று நாள்கள் முகாமில் நான் தனியாக இருந்தேன். முகாமைச் சுற்றி முட்கம்பி வேலியிடப்பட்டிருந்தது. இப்போது நினைத்தாலும் பீதியாக இருக்கிறது. அந்த முகாமை வந்தடைந்ததும், என் பைகளைக் கீழே எறிந்து விட்டு நான் கதறி அழுதேன். அடுத்து என்ன நடைபெறும் என்று புரியாமலிருந்தது. அந்த உணர்வுகள் என்றும் என்னை விட்டுப் போகாது. முகாமில் முதல் சில நாள்கள் நான் எதையுமே உண்ணவில்லை. உணவை எங்கு போய் பெறுவது என்று தெரியாதிருந்தது. மலசலகூட வசதிகளும் குளிப்பதற்கான வசதிகளும் மிகவும் மோசமாக இருந்தன. தண்ணீரும் உணவும் மிகவும் பற்றாக்குறையாக இருந்தது. கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைக்க மெல்லிய கூரைகளின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் நெரிசல்பட்டுக் கிடந்தனர்.

திறந்த வெளியில் மற்றவர்களின் முன்பாகவே தான் குளிக்க வேண்டும். எனக்கு அது பெரும் அசௌகரியமாக இருந்தது. எனது கூடாரம் பொலிஸாரின் காவலரண் ஒன்றிற்கு அருகே இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் நான் குளிக்கும் போது படையினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் நான் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து விடுவேன்; ஏனென்றால் அப்போது இருட்டாக இருக்கும்.

தமிழ்வாணி தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் அங்குள்ளவற்றிலேயே ஓரளவு பரவாயில்லாதது என்று சொல்லப்படுகிறது. அம்முகாமிலேயே மனிதர்கள் சீவிக்கக்கூடிய நிலை காணப்படவில்லை. உணவுக்கும் தண்ணீருக்கும் எப்போதும் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான வேளைகளில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்படும். மலசலகூடங்களோ மிகப் பயங்கர மானவை. அங்கு கூட போதிய தண் ணீர் கிடையாது. அதனால் அவற்றைத் துப்பரவு செய்கின்றமை சாத்தியமில்லை. அதனால் நோய்க் கிருமிகள் எங்கும் பரவின.

ஒருமுறை இரண்டு மூன்று நாள்கள் பெய்த மழையில் மலசலகூடக் கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து கூடாரங்களுக்குள் புகுந்துவிட்டன முழங்கால் அளவுக்கு இருந்த அந்த மலசலகூடக் கழிவுத் தண்ணீரில் தான் அனைவரும் நடந்து செல்ல வேண்டும்.முகாம்களில் நடந்த முறைகேடுகள், பாலியல் கொடுமைகள் மற்றும் தண்டனைகள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறும் இலங்கை அரசு, எனினும் அவை பெருமளவில் நிகழவில்லை என்று மறுக்கிறது.

அந்த தடுப்பு முகாம்களுக்கு உள்ளே பெருமளவு பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ் விஜேசிங்க இந்தத் துஷ்பிரயோகங்கள் முகாம்களுக்குள் இருந்தவர்களாலேயே மற்றவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார். அங்கே எதுவும் நடக்கவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் நான் அங்கு இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதனை அறியத் தாருங்கள், அவை கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா. அமைப்பு ஒன்றிடம் இருந்த கிடைத்த அறிக்கை மூலமாக தான் ஒரு சம்பவத்தை அறிந்ததாக அவர் கூறினார். சிப்பாய் ஒருவர் கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11 மணிக்குச் சென்று அதிகாலை 3 மணிக்குத்தான் திரும்பி வந்தார் என்று எமக்கு ஒரு அறிக்கை கிடைத்துள்ளது. அது இரு தரப்பினரும் மகிழ்ச்சிக்காக உறவு கொண்ட ஒரு சம்பவமாக இருக்கலாம் அல்லது, ஏதாவது தேவை கருதிய ஒரு பாலியல் உறவாகக் கூட இருக்கலாம்; அதுவும் இல்லாவிட்டால் பண்டைய கிரேக்கத் தத்துவங்கள் பற்றி அவர்கள் இரவு முழுவதும் விவாதித்தும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது என்று எகத்தாளமான பதில் சொல்கிறார் மனித உரிமைகள் அமைச்சுச் செயலாளர்.

இடம்பெயர் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக "கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை என மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.வவுனியா இடம்பெயர் முகாமில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம் பெயர் முகாம்களில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக அறிவிக்க வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வார இறுதி பத்திரிகையொன்றில் வவுனியா அகதி முகாமில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தகவல்கள் நம்பகத் தன்மையற்றவை எனவும், கடந்த காலங்களிலும் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக் கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இடம்பெயர் முகாம்களுக்கு விஜயம் செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் வேறு உள்நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருக்கு கடுமையான ஒழுக்க விதிகள் அமுல்படுத்தப் பட்டுள்ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். *
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment