டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியல் (சரணாகதி அரசியல்) தேர்தல் வாக்குறுதிகள்?

1987 ம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் என்பது இந்தியாவால் முன்வைக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியல்தீர்வு சார்ந்த சாயலாக தோற்றமளித்தாலும் அதற்கு இந்தியா, இலங்கை, விடுதலைப்புலிகள் என்ற முத்தரப்புகளிற்கிடையில் ஒரு சீரற்ற நிலை காணப்படக்கூடியதாக இருந்தது. இருப்பினும் இந்த 13வது திருத்தச்சட்டத்தில் அதிகாரப்பரவலாக்கம் என்ற பதத்தை பாவித்து இலங்கை, தமிழ்மக்களை ஏமாற்ற முனைந்திருந்தது. அந்த ஏமாற்று வித்தைக்கு உடந்தையாவதன் ஊடாக தன் இருத்தலையும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆடுகின்ற அரசியல் கபடநாடகத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் அரசியல் தீர்வு மற்றும் 13 ம் திருத்தச்சட்டத்தின் கீழ் அதிகாரப்பரவலாக்கம் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஈபிடிபியின் கோரிக்கைகளை தாம் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்போவதாக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தக்கோரிக்கையை முன்வைத்தே ஈபிடிபி 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது என்பது யாவரும் அறிந்ததே. சிங்களப் பேரினவாதிகளின் ஊதுகுழலான இவர் வழமைபோல தமிழ் மக்களின் வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள தமிழ் மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது காலங்காலமாக நடைபெற்று வருகின்றதொன்றே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடங்காத 13 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ளாமல் செயற்படும் அமைச்சர், அரசியல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடியாமைக்கு புலிகளைக்காரணம் காட்டி வந்தார். தற்போது புலிகள் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே 17 இற்கு பிந்திய காலத்திலாவது அதை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியையும் எடுத்தாரா? என்றால் அதுவுமில்லை.

இன்று வரை சிங்களப் பேரினவாத ஆட்சிசக்திகளுடன் இணக்க அரசியல் செய்து வருவதாக கூறும் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்; ஏதாவது ஒரு அரசியல் அடைவையாவது தமிழ்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்ததா? என்று பார்த்தால் எதுவுமேயில்லை. குறிப்பாக ராஜபக்சவின் காய்நகர்த்தலில் வடக்கு கிழக்கு பிரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டபோது அதாவது தமிழர் தாயகக்கோட்பாட்டை சிதைத்த சம்பவத்தில் ராஜபக்ச அரசிற்கு முண்டு கொடுக்க முடிந்த டக்ளஸ் தேவானந்தவால் தடுத்து நிறுத்தவோ அன்றி அவ்விவகாரம் தொடர்பான முடிவை தாமதப்படுத்தி வைக்கவோ குறிப்பாக அவர் முயற்சிக்கவே இல்லை. தமிழ்மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பாக எந்த கோட்பாடுமற்று சிங்களப் பேரினவாதிகளிற்கு துணைபோகும் அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்பதையே சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றது. எனவே இவரால் தமிழினம் ஏதாவது அரசியல் விடிவு கிடைக்கும் என்பது வெறும் பகற்கனவு.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறும் இணக்க அரசியல் என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், உரிமைகள் தொடர்பாக சிங்களப் பேரினவாதத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தமிழ்மக்களிற்கு குறைந்தது அரசியல் யாப்பில் வழங்கப்பட்ட உரிமைகளையாவது பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். இதை செய்திருந்தால் தமிழ் மக்களிற்கும் பெரும்பான்மை இனத்திற்கும் இடையில் அரசியல் இணக்கப்பாட்டை உருவாக்கினார் என்று எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவரை இப்படிப்பட்ட எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை. தனது அரசியல் இருப்பிற்காக சிங்களத்தின் கைக்கூலியாகி, தமிழ்மக்களை அழித்து அச்சுறுத்தி சிங்களப்பேரினவாதத்துடன் கைகோர்த்து சுயநோக்கங்களை அடைவதற்காக தமிழ்மக்களை பயன்படுத்தும் அரசியல் போக்கை சரணாகதி அரசியல் என்றே கூறவேண்டும் அல்லது ஈபிடிபியின் சிங்களப்பேரினவாதத்துடனான இணக்க அரசியல் போக்கே தவிர தமிழ்மக்களிற்கான இணக்க அரசியல் போக்காக கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் வாக்குகளை சிங்களத்திற்கு சார்பாக சென்றடைய செய்வதனுடாக தனது சுயநல பொருளாதார, உல்லாச வாழ்க்கை பேன்றவற்றை பெற்றாரேயன்றி தமிழ்மக்களிற்கு எந்த அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவேயில்லை. 15 வருடகாலமாக தொடர்ந்து சிங்களத் தலைமைகளுடன் இணக்க அரசியலை நடத்தி வந்தள்ளார். பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிவரும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவரை தமிழ் மக்களின் பொருளாதார, அரசியல் அடைவுகளிற்காக எந்த ஒரு ஆரோக்கியமான செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை. மாறாக இவரினால் தமிழ்மக்கள் அடைந்த துன்பங்களே அதிகம் என்பதை தமிழ்மக்கள் நினைவுகொள்ள வேண்டியது தற்போதைய அரசியல் சூழலில் முக்கியமாகின்றது எனலாம்.

தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல் முடிந்தவுடன் மறந்து விடப்படுகின்றது அல்லது தேர்தலின் பிற்பாடு அது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என மக்களால் பரிசீலனை செய்யப்படுவதில்லை. நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என புத்திஜீவித் தமிழர்கள் சிந்தித்த போதும் அதன் உண்மைத்தன்மையை வெளிக்கெண்டுவருவதற்காக அமைச்சரின் அடியாட்கள் விடவில்லை. அப்படிச் வெளிக்கொண்டுவருபவர்கள் மீது புலிச்சாயம் பூசுவது அல்லது கடத்திக்கொலை செய்வது போன்ற செயற்பாடுகளை செய்வதனுடாக மக்களிற்கும் உண்மைக்கும் ஒரு திரையிடுவது அவர்களது அரசியல் தந்திரங்களில் ஒன்று. குறிப்பாக தமிழ்மக்களிற்கு சிங்களத்தால் ஏற்படும் அவலங்களை உலகத்திற்கு வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர் நிமலராஜன் உட்பட பல தமிழ்மக்களை சிங்களத்தின் அரசியல் நலனுக்காகவும் தமது அரசியல் நலனுக்காகவும் ஈபிடிபி கட்சியினர் அழித்ததும் கடத்தியதும் கடந்தகால, நிகழ்கால வரலாறு.

இந்த நிலையில் தான் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. தமிழினம் ஒரு போதும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களால் கிடைக்கும் சிறு சலுகைகளுக்காக தமிழினத்தின் தேசிய அரசியல் சிந்தனையை கருத்தில் கொள்ளாது செயற்படுவதோ, செயற்பட நினைப்பதோ தமிழினத்தின் அரசியல் விடுதலைக் கோட்பாட்டிற்கு பொருத்தமானதல்ல. தமிழ்மக்கள் இதைச் சரியாக புரிந்து செயற்படுவதே தற்போதைய அரசியல் நிலைக்கு பொருத்தமானதாகும்.

தமிழினத்தின் மீது பாரிய கொலைவெறியாட்டத்தினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்சவிற்கும், சிங்களத்தின் கைக்கூலியாக இருந்து பல தமிழ் மக்களையும் புத்திஜீவிகளையும் கொன்றொழித்ததை மறந்து விடமுடியாது. மேலும் சிங்களப்படையுடன் சேர்ந்து தமிழ்மக்களை துன்புறுத்தியும் அவலங்களுக்குள்ளாகியும் தமிழ்மக்களின் பணங்களை பறித்து பலவழிகளிலும் சூறையாடிய இவர்கள் தற்போது தமிழ்மக்களை கொன்றொழித்த ராஜபக்சவிற்கு ஆதரவாக குரல்கொடுக்கின்றனர்.

அண்மையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமென்றில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை வேண்டி போராடி போரில் வீரமரணமடைந்த மானமறவர்களை தமிழர்களின் வீரமரபிற்கேற்பவும் தமிழர்களின் பண்பாட்டிற்கேற்பவும் நினைவு கூறும் மாவீரர் தினத்தை 'கொலைகாரர் தினம்' என பழித்து கொச்சைப்படுத்தி தன் சுயரூபத்தை வெளிப்படுததியுள்ளார்.

இவரை தமிழ் மக்களின் காவலனாக ஏற்றுக் கொள்ள எந்த மானமுள்ள தமினும் முன்வரமாட்டான் என்பதை உணர்த்தும் காலம் ஈழத்தமிழர்களிற்கு வாய்ப்பாக கிடைத்துள்ளது. இந்த அரசியல் வாக்குரிமையானது இவர்களது அராஜகத்திற்கும் ஆடம்பர போக்குகளிற்கும் அடிக்கும் பேரடியாக அமையட்டும். இதுவே தமிழினத்தின் தேசியத்தையும் தமிழ்தேசிய உணர்வாளர்களையும் வலுப்படுத்தி நிற்கும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment