மிகுந்த மனத்திடத்துடன் தேர்தலை சந்திக்கத் தயாராகிறது அரசுத் தரப்பு

பல தரப்புகளிலும் எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் முற்கூட்டியே கலைக்கப்பட்டு விட்டது. இனி சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடக்கும். புத்தாண்டு பிறந்ததும் புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் சுமார் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த நாடாளுமன்றத்தின் ஆயுள் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிவரை இருந்தது. எனினும் சுமார் இரண்டு மாதங்கள் முன்கூட்டியே இந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். அதனால் தனது இயல்பான பதவிக் காலத்துக்கு முன்னரே தற்போதைய நாடாளுமன்றம் தனது பணியை முடித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகைய நாடாளுமன்றக் கலைப்புக்கான உத்தரவில் நேற்று முன்தினம் மாலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்பமிட்டிருக்கின்றார். அன்றைய நிலைமையில் நிலவிய அரசியல் சூழல் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். அதைச் சற்றுச் சீர்தூக்கிப் பார்த்தால் எத்தகைய பின்புலத்தில் இந்தப் பொதுத் தேர்தலை அரசு எதிர்கொள்ள முன்வந்திருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

கடந்த 26 ஆம் திகதி சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதினெட்டு லட்சத்துக்கும் கூடுதலான அதிகப்படி வாக்குகளால் பெரு வெற்றியீட்டியிருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்ட சூழலில் இந்தப் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றி என்ற ஊக்கச் சக்தியை வசமாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திலும் தனது வலிமையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே இந்தப் பொதுத் தேர்தலை முற்கூட்டி நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விழைந்துள்ளார் என சில நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அக்கருத்து சரியானதாகவும் இருக்கலாம். அதேநேரம் இப்படி நாடாளுமன்றம் முற்கூட்டியே கலைக்கப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்ட சமயம் நாட்டில் இடம்பெற்ற அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளையும் அரசுத் தலைமை கவனத்தில் கொள்ளத் தவறியிருக்காது என்பதும் கவனிக்கத்தக்கதே.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாகக் களத்தில் போட்டியாளராகக் குதித்தவர் அவரின் "நம்பிக்கைக்குரிய' இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா.

கடந்த எட்டாம் திகதி இரவு, தமது அலுவலகத்தில் ஏனைய எதிரணி அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஜெனரல் பொன்சேகா உரையாடிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த இராணுவப் பொலிஸாரால் அவர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, இராணுவக் காவலில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.

அதுபற்றிய சர்ச்சை தென்னிலங்கையில் மட்டுமல்லாமல் முழு இலங்கையிலும் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பரபரப்பாகப் பேசப்படும் விடயமாக இன்னும் உள்ளது. இலான்கையின் உள்நாட்டு அரசியலைப் பொறுத்த வரை பொன்சேகாவின் கைதும், அதையொட்டி எழுந்துள்ள உணர்ச்சிகரமான நிலைகளும் மக்கள் மனப் போக்கில் ஆட்சித் தலைமைக்கு எதிரான எண்ண அலைகளைப் பரவலாகத் தோற்றுவித்திருக்கும் தோற்றுவித்துள்ளன என்றே நோக்கர்கள் கருதுகின்றனர்.

எதிரணிப் பொது வேட்பாளர் இராணுவச் சட்டத் தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தென்னிலங்கையில் உணர்வு பூர்வமான சர்ச்சையைத் தோற்றுவித்து, அரசுக்குப் பாதகமான சிந்தனை ஓட்டத்தைப் பலர் மத்தியிலும் விரவி நிற்கச் செய்கையில் அந்தச் சர்ச்சை நாடு முழுவதிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை ஒரு விடயமாகவே பொருட்படுத்தாது உதாசீனப்படுத்துவதுபோல், அந்தக் கைது இடம்பெற்று 24 மணி நேரத்துக்குள் நாடாளுமன்றைக் கலைக்கும் உத்தரவை ஜனாதிபதி விடுத்திருக்கின்றார்.

அதாவது, பொன்சேகா கைது என்ற உணர்ச்சி பூர்வமான விடயத்தை உதாசீனப்படுத்தி, புறமொதுக்கி விட்டு, பொதுத் தேர்தலை முற்கூட்டியே தனக்குச் சாதகமான வழியில் நடத்தி முடிக்க முடியும் என்ற அசாதாரண நம்பிக்கை தன்னம்பிக்கை அரசுத் தலைமைக்கு இருந்ததால்தான் அது இப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்று கருதவேண்டியுள்ளது.இத்தகைய அளவுக்கதிக உறுதியுடன் பொதுத் தேர்தலைச் சந்திக்கும் மனத்திடம் இறுமாப்பு தைரியம் மஹிந்தர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருப்பதால் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளிலும் அது பிரதிபலிக்கப்படும் என நம்பலாம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. there is nothing wrong because ours politicians karuna.tamil thalai magan and chimdambram are rajapkse close firend how can put vote this magic know very well by them

    ReplyDelete