என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...


இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை தாயகம் இழந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடக்கின்றன. பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேற வில்லை.

தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்லை. 
 
காந்திய தேசம், அஹிம்சாவாதிகளின் தேசம் என்று தங்களைத் தாங்களே மார் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் சுயரூபத்தை உலகுக்கே தோலு ரித்துக் காட்டித் தன்னையே ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் விடைபெற்ற நாள் இன்று. நல்லூரில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் தமிழ் கடவுள் முருகனையே கண்ணீரில் மிதக்க வைத்தது திலீபனின் சாவு.
 
எம் தொப்புள் கொடி உறவுகள் என்று இந்தியாவுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு எப்போ துமே ஈழத் தமிழர்களுக்கு விருப்பம். இதனால்தான் இந்திய  இலங்கை உடன்படிக்கையையும் வேறு வழியின்றி எம் தேசம் ஏற்றுக் கொண்டது. இந்தியர்கள் எமது உறவுகள் என்பதால் அவர்கள் எம்மைக் காக்க எதையாவது செய்வார்கள் என்பது ஈழத்தவர்களின் நம்பிக்கை.
 
இதற்குச் சான்று பகரும் விதமாக, 1987 ஆம் ஆண்டு "ஒபரேஷன் லிபரேஷன்' இராணுவ நடவடிக்கையை இலங்கைப் படைகள் முன்னெடுத்திருந்த காலத்தில் ஈழத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தனர். இந்தக் காலத்தில் வான் வழியாக தாயகப் பரப்புக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொட்டலங்களை அள்ளி, அள்ளிக் கொட்டின. இது ஈழத் தமிழர்கள் இந்தி யாவை முற்று முழுதாக நம்பக் காரணமாயிருந்தது. 
 
இதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கை இந்திய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியத் துருப்புக்கள் தமிழீழ தேசத்தில் நிலை கொண்டிருந்தன. வந்திருப்பது பசுத்தோல் போர்த்திய புலி என்பதை ஈழத்தவர்கள் அறியவில்லை. 
 
இந்த நேரத்திலேயே தியாக தீபம் திலீபனின் புதிய பயணம் ஆரம்பித்தது. இந்தியப் படைகளின் உண்மை முகத்தை தோலுரிப்பதற்கு சமராடப் புறப்பட்டான் திலீபன். கையில் "ஏ.கே 47' இல்லை, வோக்கியும் இல்லை மனஉறுதி எனும் ஆயுதத்தைத் தரித்துக் கொண்டு அவன் புறப்பட்டான். 
காந்திய தேசம், வெள்ளையர்களுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை வென்றெடுத்தவர்கள். அஹிம்சையின் பிறப்பிடம் தாங்கள்தான் என்று வரலாற்று நூல்களில் கறுப்பு மையால் வாசகங்களை பதித்திருந்த இந்திய தேசத்துடன் சமராட திலீபன் எடுத்துக் கொண்டதும் அஹிம் சையைத்தான். முள்ளை முள்ளால் எடுப்பது இப்படித்தான்.
 
அஹிம்சையின் வழி நின்று உயரிய இலட்சியத்துடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் தனது உண்ணா நோன்பினை 15.09.1987 இல் ஆரம்பித்தான். மக்கள் திரளின் ஆதரவுடன் தனது உண்ணா விரதத்தை நடத்திக் கொண்டிருந்தான். மறுபுறம் இந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியப் படையுடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
 
உண்ணாவிரதத்தில் ஒவ்வொரு நாளும் திலீபன் செத்துக் கொண்டிருக்க அதைப் பற்றி அக்கறை கொள்ளாத இந்திய அமைதிப்படை காந்திய தேசத்தின் புதல்வர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களைப் பறிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர். 
 
ஐந்து அம்சக் கோரிக்கைகளும் நிறைவேற்றும் உறுதி மொழிகளை வழங்காது திலீபனின் உண்ணாவிரதத்தை தடுக்க முழுமூச்சாக இயங்கியது இந்திய அமைதிப்படை. 
இருந்தும் இலட்சியத்தில் சற்றும் தளராத திலீபன் இறுதி வரையில் கோரிக்கைகள் நிறை வேறாமல் உண்ணா விரதத்தை கைவிடமாட்டேன் என்று உறுதியாக இருந்து விட்டான். ஒரு மனிதன் உண்ணாமல்  நீராகாரம் கூட அருந்தாமல் எத்தனை நாள்கள் இருக்க முடியும். 
 
திலீபனின் அஹிம்சைப் போராட்டம், அஹிம்சாவாதிகள் என்று சொல் லிக் கொள்ளும் இந்திய தேசத்தால் 12 நாள்களின் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறி அஹிம்சைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. மெழுகாக உருகி ஈழ தேசத்துக்காக தனது உயிரைத்  திலீபன் ஆகுதியாக்கியதன் மூலமே முடிவு கட்டப்பட்டது. 
 
நிறைவேறாத கோரிக்கைகளுடன் அந்த ஆன்மா இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டது. அஹிம்சாவாதி திலீபனின் முன்னால் காந்தியின் அஹிம்சை கூட தோற்றுப் போய்விட்டது. 
 
இன்றும் இந்தியா தனது தொப்புள் கொடி உறவு என்று ஈழத் தமிழர்களுக்கு உதவுவதாகச் சொல்லிக் கொள்கிறது. வீட்டுத் திட்டம் முதல் வீதித் திருத்தம் வரையில் பல்வேறு வடிவில் இந்தியா ஈழத் தமிழர்களின் காயத்தை ஆற்றிக் கொள்ள முற்படுகின்றது. அத்துடன் தமிழகத்தில் ஈழத்தின் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவகிக்கின்றன. சிங்களவர்களை கலைத்து கலைத்து விரட்டுவது முதல் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவது வரை தீர்மானங்கள் அனல் பறக்கின்றன.
 
மறுபுறத்தில் திலீபன் வழியில், இந்திய தேசத்தில் உண்ணாவிரதம் இருக்கிறான் ஈழத்தவன் செந்தூரன். அவன் ஒரு கோரிக்கையை முன் வைத்தே உண்ணாவிரதத்தில் இருக்கிறான். இந்தியாவில் ஈழ அகதிகளை தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுங்கள் என்று கோரியே அவனது உண்ணாவிரதம் தொடர்கின்றது. செந்தூரன் ஈழத்தவன் ஆதலால் இன்று வரையில் தனது முடிவை மாற்றாமல் உண்ணாவிரதத்தில் இருக்கின்றான். ஒரு கட்டத்தில் தனது தேசத்தில் தனக்கே சவால் விடுகிறான் என்று ஈழத்தவனை தூக்கிச் சிறையில் போட்டார்கள்.
 
 பிணையில் வெளியில் வந்தான். ஆனால் இலட்சியத்தை விடவில்லை. மீண்டும் தொடர்கின்றான் உண்ணாவிரதத்தை. அவனது கோரிக்கைகளை இன்றும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்திய தேசம். 
 
ஓர் உயிர் ஈழத்தில் வைத்துப் பறிக்கப்பட்டு விட்டது. மற்றைய உயிர் இந்திய தேசத்தில் ஊசலாடுகின்றது. 
 
உதயன்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment