குஞ்சு தேடும் பறவைகள்




ஊரோடு ஊராக நிம்மதியாய் வாழ்ந்திருந்தோம்
ஊர்பிடிக்க வந்தவனே - எம் உயிர்
குடிக்கத் தொடங்கி விட்டான்
உயிரைக்காப்பாற்ற ஊர் விட்டு ஊர் சென்றோம்
உண்ணவும் உணவின்றி உடுத்த உடுப்புடன்
உப்புக் கடற்கரையில் உறக்கமின்றி
நாம் கிடந்தோம்
மழைபோல் வந்த எறிகணையால்
என் மன்னவனை இழந்து விட்டேன்
எஞ்சியிருக்கும் என் மகனை எப்படி நான் காத்திடுவன்
வற்றாப்பளையவளை வங்கருக்குள் நானிருந்து வாய்விட்டு
அழுது கேட்டேன் வந்தெம்மை பாரும் என்று
பல்குழல் எறிகனைகள் பரவி விழுகின்றது
பார்க்குமிடமெல்லாம்
பற்றி எரிகின்றது




வேறுவழியின்றிஉயிர் எடுக்க வந்தவனிடம்
உயிர்ப்பிச்சை நாம் கேட்டோம்
வாவென்று எமை அழைத்து வாகனத்தில் ஏற்றி
வவுனியா அனுப்பினார்கள் - அந்த எமதூதர்கள்
மூச்சுவிட இடமில்லை
அந்த முட்கம்பி வேலிக்குள்
எல்லோரையும் அடைத்து விட்டு
ஏப்பமிட்டு பார்க்கின்றார்கள்.

விடியல்காலையில் வெள்ளை வான் வந்து
வயதுக்கு வந்தவர்களை
விசாரிக்க வேண்டுமென்று பிடிச்சிட்டு போயிட்டாங்கள்
என் மகனையும்
என் போன்ற தாய்மார்கள் அவன்
கால்பிடித்து கத்தியும்
காலால் மிதித்துவிட்டு சென்றார்கள் கயவர்கள்
காவலுக்கு நின்றவனிடம் கால்பிடித்து மண்டியிட்டேன்
எம்மகனைத் தாவென்று
பிடித்தவனிடம் கேள் என்று பிணமாய் நின்று பதில் சொன்னான்
பிடித்தவனை நான எங்கு தேடுவேன்
இந்த முட்கம்பிவேலிக்குள்ளிருந்து



கடைசியாக கேட்கின்றேன்
அந்த காக்கிச்சட்டைக்காரனிடம்
அந்த காணொளிக்காட்சியின் முன்பக்க
காட்சிப்படுத்தலை காட்டுங்கள்!
அதில் என்பிள்ளை இருப்பானோ! என்று
பார்த்துவிட்டு சொல்கின்றேன்.!
Share on Google Plus

About திருமலைச்சீலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment