போராடும் தேசியங்களின் மக்கள் அமைப்புக்களுடன் தமிழர்கள் கலந்துரையாட வேண்டும் - றொன் றைடெனெர்

நீங்கள் மிகக் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், உங்களது போராட்டம் நீதிக்கானதாக உள்ளதால், உங்களது அடிப்படை உளக் கோட்பாடானது இறையாண்மையை நாடி நிற்பதால் நான் உங்களது மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளேன். இவ்வாறு பொதுவுடைமை சிந்தாந்த செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான Ron Ridenour* இலண்டன் Putney Leisure Centre அரங்கில் கடந்த March 4, 2012ல் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். 


அவரது இணையத்தளத்தில் Towards Tamil Eelam: London Speech என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த உரை.

முழு உலகம் மீதும், அடக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கலாக இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலனவர்கள் மீதும் நான் மிகக் கோபமாக உள்ளதாலும், இந்த உரையை தயார் செய்து வழங்குவதானது வழமைக்கு மாறாக என்னை இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.  நான் இந்த விடயத்தை மிக ஆழமாக விளங்கப்படுத்த விரும்புகிறேன். எனது உரையை நான் உரையாகவே நிகழ்த்த முயற்சிக்கிறேன். அதாவது நான் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உரையைப் பார்த்து வாசிக்க நான் விரும்பவில்லை. ஆனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள இத்தலைப்பானது என்னைப் பொறுத்தளவில் எனக்கு சிக்கலானதாக உள்ளது. அதனால் தான் நான் இந்த உரையை முதலில் எழுதுவது எனத் தீர்மானித்தேன், அதன் பின் அதனை மீண்டும் எழுதினேன், இதனை எழுதி முடித்த போது எனது கோபம் சற்றும் தணிந்திருக்கவில்லை. 


வெள்ளை இனத்தைச் சேர்ந்த மேற்குலகத்தவனான நான் சிங்கள, தமிழ் மக்களின் கிறுக்குத்தனமான நிலைப்பாடு தொடர்பாக உரையாற்ற வேண்டும் என்பதில் ஏன் நான் ஆர்வம் கொண்டேன்?  மே 2009 இல் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு வரும்வரை சிறிலங்காவைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. கியூபா மற்றும் பொலிவாரியன் மக்கள் கூட்டமைப்பு [Cuba and the Bolivarian Alliance of the Peoples of our America - ALBA] தொடர்பாக நான் ஆழமாக விளங்கி வைத்திருந்தேன் என்பதை தமிழ்நாட்டில் உள்ள லத்தீன் அமெரிக்கர்களின் தோழமை அமைப்பானது நன்கு அறிந்து கொண்ட காரணத்தினால், அவ்வமைப்பினர் என்னிடம் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக உரையாற்றும் படி கேட்டுக்கொண்டனர். 


"அநீதி எங்காவது ஓரிடத்தில் நிலவுகின்றது என்றால் அநீதியானது எல்லா இடத்திலும் உள்ளது என்பதே கருத்தாகும்" என்கின்ற மாட்டின் லூதர் கிங்கின் கருதுகோள் ஒன்று என்னுள் ஆழமாக வேரூன்றி உள்ளது.


நீங்கள் மிகக் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், உங்களது போராட்டம் நீதிக்கானதாக உள்ளதால், உங்களது அடிப்படை உளக் கோட்பாடானது இறையாண்மையை நாடி நிற்பதால் நான் உங்களது மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளேன். தமிழ் மக்கள் துன்பப்படுவதைப் போலவே நான் பிறந்த சாத்தானுக்குச் சொந்தமான நாட்டில், கறுப்பின மக்களுக்கு எதிராக, பூர்விக மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகள், கொடுமைகளை நான் அனுபவித்துள்ளேன்.


1960-70 களில், இனவெறிக்கு எதிராக, சம உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கல்வி மற்றும் சுகாதார நலன்கள் நாட்டு மக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, வாக்களிப்பதற்கான அடிப்படை உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக, Yankees இன் அடக்குமுறைக்குள்ளிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளப் போராடிய வியட்நாமியர்கள் - கம்போடியர்கள் - லயோற்றியர்கள் போன்றவர்களுக்கு உதவுவதற்காக என பல காரணங்களுக்காக ஒன்று திரண்ட பல மில்லியன் கணக்கான எனது சகோதர, சகோதரிகளுடன் நானும் இணைந்து கொண்டேன்.


இவ்வாறான போராட்டங்களின் மூலம், முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த மக்கள் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவருவதிலும், கறுப்பினத்தவர்கள் சம உரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலும் நாம் உறுதுணையாக இருந்தோம். ஆனால் தற்போது, அதாவது பல பத்தாண்டுகளின் பின்னர், உலகமானது மிகவும் மோசமான, கடந்த காலத்தை விட பல துன்பங்களைச் சந்திப்பது போலவே தெரிகிறது.


நான் அண்மையில், டொறிஸ் லெஸ்ஸிங் என்பவரால் எழுதப்பட்ட அவரது சுயசரிதை நூலான Under My Skin என்பதை வாசித்திருந்தேன். இந்தப் புத்தகத்தை அவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது குறிப்பிட்ட எழுத்தாளர் தனது 70 ஆவது வயதில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தின் 282 ஆவது பக்கத்தில் இரண்டாம் உலக மகாயுத்தம் தொடர்பாக அவ்வது அது முடிந்த கையோடு குறிப்பிடப்பட்டிருந்த விடயத்தை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 


"தொழிலாளர் வர்க்கத்தினர் அல்லது கறுப்பினத்தவர்கள் அல்லது உரிமைகளை அனுபவிக்க முடியாத மக்கள் போன்ற எந்தத் தரப்பினர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டாலும் அவர்கள் தூய்மையான, பாரபட்சமற்ற கொள்ளைப்பாடுகளாலேயே உந்தப்படுவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆகவே நீண்ட காலத்தின் பின்னர் தற்போது இந்த உலகத்தில் நாம் எதைச் செய்ய வேண்டியுள்ளது? 


01. கறுப்பினத்தவராகத் தோற்றமளிக்கின்றவரும் உலகிலேயே அதிகார சக்தி வாய்ந்த அதிபர் அமெரிக்க வரலாறுகளில் முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது மிகக் கொடிய யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறார். இங்கு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த அரசாங்கமானது தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானில் மக்களைப் படுகொலை செய்துவருவதாக நான் வாழ்ந்து வரும் டென்மார்க் மக்கள் கூறுகின்றனர். அத்துடன் புதிய – தாரளவாத அரசாங்கம் செய்தது போன்று முதலாளித்துவத்துக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது. 



02. மக்களின் விடிவுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றிய, வெளியேறிய முன்னாள் தலைவர்கள் சிலர் தற்போது கொலை, பாலியல் வன்புணர்வு, கடத்தல், தமது சொந்த மக்களையே பணத்துக்காக கடத்துதல், கப்பம் கோருதல் எனப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தேவானந்தா, மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் நவீன உலகின் மிகக் கொடுமையான ஆட்சி நிகழ்த்துபவர்களாக உள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக படுகொலைகளை மேற்கொண்ட ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு விசுவாசமாக பல கொடுமையான செயல்களைப் புரிந்து வருகின்றனர். 



03. மாக்சியவாதிகள், சமூகவாதிகள், மாவோயிஸ்டுக்கள், பௌத்த பிக்குகள் போன்றர்களும் ஏனைய சிங்கள மக்களும் படுகொலைகளை அரங்கேற்றிவரும் ராஜபக்ச ஆட்சியில் கூட்டாளிகளாக உள்ளனர். 



04. கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராடிய கறுப்பு, மஞ்சள், வெள்ளைத் தோல் மக்கள் தற்போது தமது சொந்த மக்களுக்கு எதிராக பல மனிதப் படுகொலைகளை இனப் படுகொலை மேற்கொண்டுள்ளனர். ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் பலர் தமது இனத்து மக்களின் தமது நாட்டு மக்களின் விடிவிற்காகப் போராடியிருந்தார்கள். ஆனால் தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவத்துவம் மற்றும் பொருட் செல்வங்களை அடைந்து கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். சீனாவைப் போல தற்போது முதலாளித்துவக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்ற வியட்நாம் நாட்டுக்கு எதிராக அமெரிக்க முன்னர் படுகொலைகளை மேற்கொண்டிருந்தது. இந்த வியட்நாம் பிழையான, தவறான கம்யூனிசக் கட்சியால் தலைமை தாங்கப்பட்டிருந்தது. 



05. சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற வெற்றிகரமான புரட்சிகர நாடான கியூபாவானது சோசலிச பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பாகுபாடு மற்றும் வறுமை என்பவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராட்டத்தை மேற்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கியூபாவானது முதலாளித்துவத்தை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. கியூபாவில் தற்போது சமத்துவமின்மை அதிகம் நிலவுகின்றது. அத்துடன் மிகக் கொடிய செயல்களில் ஈடுபடும் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற வெளிநாட்டுக் கொள்கையையே தற்போது கியூபா கடைப்பிடிப்பதுடன் இதன் விளைவாக சிறிலங்காவில் துன்பப்படும், அவலப்படும் மக்களை கியூபா அசட்டை செய்து வருகின்றது. தமிழ்மக்களின் துன்பங்களை இது பொருட்படுத்தவில்லை. 



எட்டு ஆண்டுகளாக கியூபா அரசாங்கத்துடனும் கியூபா மக்களுடனும் மிக நெருக்கமாக நின்று நான் பணியாற்றியிருக்கிறேன். இந்த வகையில், கியூப அரசாங்கம் தொடர்பில், அதன் செயற்பாடுகள் தொடர்பில் நான் அதிருப்தி கொள்வதுடன், இவ்வாறான செயற்பாடுகள் என்னை மிக ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது. இதேபோன்றே சோசலிச அரசாங்கங்களான வெனிசுலா, பொலிவியா, மற்றும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் அனைத்துலக இறையாண்மைக்கான தமது சொந்த கோட்பாடுகளை சிறிலங்காத் தமிழர்களுக்காக பிரயோகிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. 



கியூபா மற்றும் ஏனைய ALBA நாடுகள் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையீடு செய்வதை எதிர்த்து நிற்கின்றன. ஆனால், உண்மையில், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா தானாகவே தனது சொந்த விசாரணைகளை மேற்கொண்டு அதற்கான உரிய தண்டனைகளை காலதாமதமின்றி வழங்கவேண்டும் என்றே அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 



இந்நிலையில் இவ்வாறான மிகத் தீவிரவாத நாடுகள் ராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 'சாத்தியப்பாடான' யுத்தக் குற்றங்கள் தொடர்பாக மிகச் சிறிதளவான விமர்சனத்தையே முன்வைத்துள்ளனர். அதாவது விமர்சனத்தின் குறியீடாக மட்டுமே அவர்கள் இதனை வெளியிட்டுள்ளனர். ஆகவே அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் இவற்றின் கூட்டணி நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கான தமது ஆதரவை வழங்குவதென்பது மனித உரிமை விவகாரம் தொடர்பிலான பூகோள – அரசியல் விளையாட்டு என்பதை ALBA நாடுகள் நன்கறிந்துள்ளன. ஆனால் இவற்றால் இந்த விடயத்தில் எந்த உதவிகளையும் மேற்கொள்ள முடியாது. அதாவது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஏனைய கூட்டணி நாடுகள் சிறிலங்காவின் பேரினவாத அரசாங்கங்களுக்கு நிதி, புலனாய்வு, கண்காணிப்பு, ஆயுத தளபாடங்கள், இராணுவப் படகுகள், வான்கலங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தன என்பதை ALBA நாடுகள் நன்கறிந்துள்ளன. 



தன்னாட்சி உரிமை, வாழ்வதற்கான உரிமை, சமத்துவம் போன்ற அடிப்படை மாக்சீயக் கோட்பாடுகளை மறக்கவேண்டிய நிலையிலேயே முற்போக்குச் சிந்தனையுள்ள அரசாங்கங்கள் உள்ளன. தற்போதைய கியூபா அரசாங்கம் எதைக் கருதி நிற்கின்றது? பிடல் கஸ்ரோ, எழுத்தாளரும் ஒளிப்படப்பிடிப்பாளருமான லீ லொக்வூட் என்பவரிடம் எதைத் தெரிவித்துள்ளார்? 



"சுரண்டப்படுபவர்கள் அனைவரும் எமது தோழர்கள், உலகில் சுரண்டுபவர்கள் அனைவரும் எமது எதிரிகள்... எமது நாடு உண்மையில் உலகம் முழுமைக்கும் சொந்தமானது.... உலகில் புரட்சி இடம்பெறும் நாடுகள் எல்லாம் எமது சகோதரர்கள்" என்கிறார் பிடல் கஸ்ரோ. 



பிரித்தானியாவில் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து அங்கேயே புதைக்கப்பட்ட கார்ல் மாக்ஸ் அயர்லாந்தின் தேசிய சுதந்திரத்துக்கு ஆதரவாக இருந்தார். அத்துடன் பிரித்தானிய தொழிலாளர்களின் சோசலிச அமைப்பின் நலன்களிலும் அதிக கவனம் எடுத்திருந்தார். மார்க்ஸ் 1870, ஏப்ரல் 09 இல் எழுதியிருந்த கடிதம் ஒன்றில் "பிரித்தானியா, அயர்லாந்தை அடக்கி வைத்திருப்பதானது ஆங்கிலேயே செயற்பாட்டு வகுப்பினரின் இரகசியமாக உள்ளது. அதாவது முதலாளித்துவ வகுப்பானது அதன் அதிகாரத்தை பேணிக்கொள்வதானது இதன் இரகசியமாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். 


உண்மையில் இவ்வாறான நிலைப்பாடே கடந்த அறுபது ஆண்டுகளாக சிறிலங்காவில் நிலவுகின்றது. சிங்கள ஆளும் வர்க்கத்தால் சிங்கள தொழிலாளர் வர்க்கம் ஏமாற்றப்பட்டு வருகின்றன. அதாவது சிறிலங்காத் தமிழ் மக்களை பாரபட்சப்படுத்துதல், சாதி, மத இன அடிப்படையிலான பாகுபாடுகள், பேரினவாத நடவடிக்கைகள் என்பவற்றை சிறிலங்கா ஆளும் வர்க்கம் தனது கோட்பாடுகளாக கொண்டுள்ளன. தமிழ் மக்கள் தமது நாட்டில் உள்ள ஏனைய இன தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து கூட்டணிகளை, தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. 



06. சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் 'விக்கிலீக்ஸ்' இணையத்தளம் அதிக இரகசியங்களை அம்பலப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் மக்கள் பல செய்திகளை அறியக் கூடியதாக உள்ளனர். தீவிரவாத அரசாங்கங்களின் தாக்குதலுக்கு உட்பட்ட யூலியன் அசான்ஜ் மற்றும் பிராட்லி மானிங் போன்ற தொடர்பாளர்களுக்கு மேலும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆகவே எமது பொது எதிரியை தோற்கடிப்பதில், வெற்றிகொள்வதில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். உண்மையில் முதலாளித்துவத்துக்கு எதிரான நடவடிக்கையில் 99 சதவீதத்தில் மிகக் குறைவானவர்களே ஈடுபடுவது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் ரீதியான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் இன்னமும் முதலாளித்துவ சார்பைக் கொண்ட அரசியற் கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பது ஏன்? 



தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்கள் என்ற ரீதியில் இதற்கான பதிலானது எமக்குள் நம்பிக்கையைக் குறைப்பதாக இருக்கமுடியும். நாங்கள் உண்மையில் மத அல்லது ஆன்மிக அல்லது அரசியற் தலைவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். 



எடுத்துக்காட்டாக, நான் அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, பல விடயங்களைக் கண்டுகொண்டேன். அதாவது இந்திய மக்கள் தற்போதும் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்களாக, அதன் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக விளங்குகின்றனர். நிறவெறிக் கொள்கை போன்றே இந்தியாவில் சாதீய முறைமை என்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த அதிகாரத்துவம் என்பது ஒரே இனம், தேசியம், மதம் என்பவற்றுக்குள் நிலவுகின்றது. தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி அவர்களைத் தோற்கடிப்பதில் முதலாளித்துவத்தால் பயன்படுத்தப்படுகின்ற மிகப் பெரிய, சக்திமிக்க ஆயுதமாக இது காணப்படுகின்றது. 



சாதீய அடக்குமுறையால் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் பிளவுபட்டு நிற்பதை சோசலிசமானது தவிர்க்கின்றது. அதாவது சோசலிசம் மூலம் ஒரே வகையைச் சேர்ந்த மக்கள் தமக்குள் பிளவுபட்டுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான ஆன்மிகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் ஆகியோர் எம்மைப் போன்று இருக்கவில்லை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எமது செலுத்தும் வரிகளில் வாழ்க்கை நடாத்துகின்றனர். அத்துடன் பொதுமக்களிடமிருந்து பெறும் கறுப்புப் பணத்தைக் கொண்டு இவர்கள் வாழ்க்கை நடாத்துகின்றனர். அவர்கள் உண்மையில் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்கமாட்டார்கள். அவர்கள் வேலையற்றவர்களாகவோ அல்லது வீடற்றவர்களாகவோ வாழவில்லை. அவர்கள் எம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற மாயையை நாம் முதலில் எம்மனங்களிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும். 



முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறிய ஸ்பெயினின் Mondragon அமைப்புக்கள் மிகச் சிறந்த, சாத்தியப்பாடான எடுத்துக்காட்டாக உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களே இவற்றின் சொந்தக்காரர்களாகவும், தீர்மானம் இயற்றுபவர்களாகவும் உள்ளனர். 



பொலிவியாவின் சுதேச கலாசார அமைப்பான Live Well என்பதும் சம உரிமைகளை வழங்கும் பிறிதொரு அமைப்பாக உள்ளது. Occupy Wall Street என்பது பிறிதொரு பயனுள்ள நகர்வாகக் காணப்படுகின்றது. OWS என்பது அமெரிக்காவில் பல நகரங்களிலும், ஏனைய சில நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 



1960-70 களில் நான் பங்குபற்றியிருந்த அமைப்புக்களை விட இவ்வாறான அமைப்புக்கள் தற்போது சற்று திறம்படச் செயற்படுகின்றன. எமது அமைப்புக்களின் நோக்கம் எப்போதும் தனியொரு இலக்கை எட்டுவதாகவே அமைந்திருக்கும். எம்மில் சிறு தொகையினர் மட்டுமே சோசலிச அல்லது கம்யூனிச இலக்கை நோக்கி நகர்வார்கள். சோசலிசத்தை நோக்கிய குறிப்பிட்ட எதனையும் எம்மால் ஒழுங்குபடுத்திச் செல்ல முடியாமல் இருக்கும். OWS ஆனது தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி அவர்களை நம்பிக்கை கொள்ள வைப்பதற்கான நகர்வுகளை இன்னமும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். 



இது போன்றே Arab Spring என்ற அமைப்பு உள்ளது. பல நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் அவர்களது வாழ்வைக் கொண்டு நடாத்துவதில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்து வருகின்றனர். ஜனநாயக வழிமுறையில் வன்முறைசாராத நடவடிக்கைகளில் இந்த மக்கள் போராடும் போது, இவர்கள் அடக்கப்படுகின்றனர். 



நான் லிபியாவை இங்கு குறிப்பிடவில்லை. லிபியாவின் போராட்டம் வித்தியாசமானது. அடக்குமுறையாளர்களின், ஆதிக்கவாதிகளின் ஆதரவுடனேயே லிபியாவில் யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. ருனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் வாழ்ந்த மக்களின் செல்வாக்குடன், அவர்களின் ஆதரவுடன் லிபியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போது அவர்களின் அவாக்கள் மிகச் சுலபமாக முறியடிக்கப்பட்டன. லிபியாவில் இரு மிகக் கொடிய சர்வதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட போதிலும், இராணுவத்தால் தலைமைதாங்கப்படும் முதலாளித்துவமும், ஒத்துழைப்பும் தற்போதும் கட்டுப்பாட்டில் உள்ளன. 



பஹ்ரெய்னில் செயற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைத் தோற்கடிப்பதில் அமெரிக்க –நேற்றோவின் முக்கிய கூட்டாளியான சவுதி அரேபியா பயன்படுத்தப்படுகிறது. இன்று சிரியாவின் நிலைப்பாடு மிகச் சிக்கலானதாக உள்ளது. சிரியாவில் பல விதமானவர்கள் செயற்படுகின்றனர். இங்கே நீதி மற்றும் சமத்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய மற்றும் அனைத்துலக சக்திகளின் தலையீடுகளை எதிர்த்துப் போராடக் கூடிய புரட்சிகர அமைப்பொன்றை தெளிவாக இனங்காணமுடியவில்லை. 



ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரை எடுத்துப் பார்த்தால், உண்மையில் தமிழ் மக்களுக்குச் சார்பாக இதில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படமாட்டாது. 



கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை யுத்த கால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய நியமித்ததாகவும், அவ் ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் அதில் பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளதாகவும் ராஜபக்ச சுட்டிக்காட்டி தன் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்வார் என அமெரிக்கா நம்புகின்றது. சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனக்குத் தேவையானவற்றை முதலில் மேற்குலக நாடுகளிடமிருந்தும், படுகொலைகளைப் புரியும் இஸ்ரேலிடமிருந்தும் பெற்றுக் கொண்டிருந்தார். 



அண்மைய நாட்களில் இந்தியா, ரஸ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து சிறிலங்கா அதிபர் ஆதரவுகளைப் பெற்று வருகிறார். தமது நாட்டு மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், 'மனிதாபிமான நடவடிக்கை' என்ற பெயரில் தமது நாட்டின் சொந்த நலனுக்காகவும் பூகோள அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மேற்குலக நாடுகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தாம் அக்கறை கொண்டிருப்பதாக காட்ட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளன. 



முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்றது போலல்லாது, அமெரிக்காவானது சிறிலங்காவின் மனித உரிமை மீறல் விடயத்தில் சற்று உறுதியான நகர்வை முன்னெடுக்க வேண்டும் என விரும்புகின்றது. அதாவது சிறிலங்காவின் திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படை முகாம் அமைப்பது தொடர்பில் அமெரிக்கா தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்த பின்னரே தற்போது சிறிலங்கா மீது அதன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அழுத்தத்தை வழங்கி வருகின்றது. 



உலக வல்லரசான சீனாவானது சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் ஏற்கனவே தனது கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ளது. இதேபோன்று சீனாவோ அல்லது ரஸ்யாவோ திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமெரிக்கா கருதுகிறது. 



ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இறுதி வாரத்தில் அமெரிக்காவானது சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளது. இப்பிரேரனை மூலம் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அமெரிக்காவானது சிறிலங்காவிடம் கோரவுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற மிக மோசமான யுத்த மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கமானது அனைத்துலக யுத்தச் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப நம்பகமான விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் அமெரிக்காவானது தனது பிரேரனையின் மூலம் கோரவுள்ளது. 



மே 2009 ல் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரின் போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் சிறிலங்காவானது தனது சொந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. 



சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையும் அதன் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட அமெரிக்காவானது இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதே தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா மீதான விசாரணைகளின் முடிவில் இப்போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட போதிலும், இதனை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. ஆகவே இதிலிருந்து உலகின் பூகோள – அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்காகவே நாடுகள் செயற்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். 



கியூபா – ALBA மற்றும் இவற்றின் 113 கூட்டணி நாடுகளும் உலகின் மிகப் பெரிய ஆதிக்க, அதிகார, வல்லரசு நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளை நன்கறிந்துள்ளதுடன், இவற்றை வழமையாக எதிர்த்துவருகின்றன. உலக வல்லரசுகளின் கோரிக்கைகளுக்கு, அழுத்தங்களுக்குப் பணிய வேண்டும் என கியூபா மற்றும் ஏனைய ALBA நாடுகள் பலாத்காரப்படுத்தப்படுகின்றன. ஆகவே இந்நிலையில், 'எனது எதிரியின் எதிரி எனது நண்பன்' என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்ற அமெரிக்கா – ஐரோப்பா – நேற்றோ நாடுகள் போல் கியூபா மற்றும் ALBA நாடுகள் தீவிரவாத நாடுகள் அல்ல. மேற்குலக நாடுகள் தீவிரவாத அரசுகளாக உள்ளன என்பதை மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் இறைமையை ஆதரிப்பதில் இந்த நாடுகள் எவ்வாறான இரட்டை நிலைப்பாட்டை, இரட்டை முகத்தைக் கொண்டுள்ளன என்பதை அடையாளங்கண்டு கொள்வதில் கியூபா, ALBA நாடுகள் தவறியுள்ளன. 



சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமன்றி முஸ்லீம்கள் மற்றும் சுதேச மக்கள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதுடன், சிங்கள தொழிலாளர் வர்க்கம், ஏழைகள், தாழ்ந்த சாதியினர் போன்றவர்களின் உரிமைகளையும் சிறிலங்கா அரசாங்கமானது சுரண்டி வருவதுடன், இவர்களுக்கெதிராக தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றது. 



"ஜெனீவாவில் இடம்பெற்று வரும் 19வது கூட்டத் தொடரில் கியூபாவானது சிறிலங்காவுக்கு தனது ஆதரவை வழங்கும்" எனத் தெரிவித்துள்ளது. கியூப அதிபரான ரவுல் கஸ்ரோவின் இந்தச் செய்தியை சிறிலங்காவுக்கான கியூபத் தூதர் தெரிவித்திருந்தார். "சிறிலங்கா அரசாங்கம் மீதான மனித உரிமை மீறல்களை கியூப அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது" என அத் தூதர் தெரிவித்திருந்தார். 



இது உண்மையில் அநீதியான செயலாகும். இவ்வாறான செய்தியை வெளியிட்டதன் மூலம் கியூபாவானது சிறிலங்காவில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களின் மனசாட்சிக்கு எதிராக செயற்பட்டுள்ளதுடன், இதனை நேரில் கண்ட சாட்சியங்களை ஒட்டுமொத்தமாக தட்டிக்கழித்துள்ளது. அத்துடன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட, அடக்கப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை கியூபா ஒட்டுமொத்தமாக ஏற்க மறுத்துள்ளது. 



இவ்வாறான மீறல்கள் தொடர்பாக ஐ.நா வல்லுனர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகள், சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட ஆவணப்படம், விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் அம்பலப்படுத்தப்பட்ட இராஜதந்திர நகர்வுகள் தொடர்பான இரகசியங்கள் என்பவற்றை கியூபா ஏற்கமறுத்துள்ளதையே இதன் சிறிலங்காவுக்கான ஆதரவு சுட்டிக்காட்டுகின்றது. 



நான் உண்மையில் சிறிலங்கா அதிகாரிகளோ அல்லது சில கியூப – ALBA கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களால் கூறப்பட்ட விடயங்களை தவறாக கற்பிதம் செய்து கொள்ள முயலவில்லை. அதேவேளையில் அமெரிக்காவுக்குச் சார்பாகவும் நான் இக்கருத்துக்களை முன்வைக்கவில்லை. கடந்த அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்கா அரசாங்கங்களை நான் ஆதரிக்கவில்லை. 



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்தே பெரும்பாலான நாடுகள் வாக்களிக்கும் என நான் எதிர்வு கூறுகிறேன். ஏனெனில் அமெரிக்காவானது உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளன. இதனை உலக நாடுகள் பல எதிர்த்துள்ளன. இதனால் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரனையை பெரும்பாலான நாடுகள் எதிர்க்கும் என நான் எதிர்வுகூறுகிறேன். 



ஆனால் அடிப்படையில், சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரனையில் அமெரிக்காவானது தோல்வியடைவதானது அதன் வெற்றியாக இருக்கும். மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் எதுவும் இடம்பெறப் போவதில்லை. ஆகவே உண்மையில் அமெரிக்கா விரும்புவதைப் போலவே அது இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறப் போகின்றது. சிறிலங்கா விவகாரத்தில் எந்தவொரு பொறுப்புக் கூறலும் இடம்பெறக் கூடாது என்பதையே அமெரிக்கா விரும்புகிறது. உண்மையில் சிறிலங்கா விடயத்தில் உண்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்காவின் மீறல்களும் வெளிக்கொணரப்படும். இந்த உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 



ஆகவே உலகின் தீவிரவாத நாடொன்று தமக்கு உதவும் என தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பியிருக்கக் கூடாது. அமெரிக்காவானது பல மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுள்ளது, சித்திரவதைப்படுத்தியுள்ளது, பல நூறு மில்லியன் மக்களை பட்டினி போட்டுள்ளது. 



இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து அமெரிக்காவானது 66 நாடுகளில் 160 தடவைகள் இராணுவ ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் அமெரிக்கா இராணுவ ரீதியான தலையீடுகளை மேற்கொண்டுள்ளது. 



தற்போது அமெரிக்காவானது ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எதியோப்பியா, உகண்டா, லிபியா ஆகிய ஏழு நாடுகளின் மக்களைக் கொலை செய்துள்ளது. லிபியாவில் தொடர்ந்தும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் கொலைகளைப் புரிந்து வருகின்றன. 



இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி புரிந்திராவிட்டால், பாலஸ்தீனியர்கள் இன்று விடுதலைக் காற்றை சுவாசித்திருப்பார்கள். பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பல இனப்படுகொலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலானது மொசாட் புலனாய்வு, பெருந்தொகையான ஆயுதங்கள் விரைவு வேகத் தாக்குதல் கடற்கலங்கள், கிபிர் விமானங்கள் போன்றவற்றை மட்டுமல்லாது சிறிலங்காவுக்கு தமிழ் மக்களைக் கொலை செய்வதற்காக விமானிகளைக் கூட வழங்கியிருந்தது. சிறிலங்காவில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர், இஸ்ரேலின் உதவியைப் பாராட்டி இஸ்ரேலுக்கான சிறிலங்காத் தூதராக, சிறிலங்காவின் இராணுவ நிர்வாகத் தலைமை அதிகாரியான டொனால்ட் பெரேரவை அனுப்பியது. 



"தீவிரவாதத்துக்கு எதிராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் இஸ்ரேலானது பங்காளியாக இருந்துள்ளது" என டொனால்ட் பெரேரா, இஸ்ரேலின் மிகப் பெரிய சியோனிசான ஜெடியத் அபோர்னத்திடம் தெரிவித்திருந்தார். 



ஆகவே தமிழர் அமைப்புக்கள் கிராமிய மட்ட அமைப்புக்களை உருவாக்கி, அவற்றுடன் உண்மையான நிலைப்பாடு தொடர்பாக விளக்கங்களை வழங்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் பொய்யான, தவறான நம்பிக்கைகள கைவிட வேண்டும். தீவிரவாத நாடுகளுடன் வெட்டிப் பேச்சுக்களை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். 



நீங்கள் தமிழ் மக்களினதும், அவர்கள் தொடர்பான பூகோள அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் லத்தீன் அமெரிக்க, பாலஸ்தீனிய மற்றும் மக்களின் இறையாண்மைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிய ஏனைய நாடுகளின் அடிமட்ட, கிராமிய மக்கள் அமைப்புக்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்களுக்கு தமிழ் மக்களின் வரலாற்றை தெளிவாக, விரிவாக எடுத்து விளக்கவேண்டும். சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்று தனிநாடொன்றை அமைப்பதற்காக ஆயுத வழியை ஏன் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் தமிழ் மக்களின் துன்பங்களை செவிமடுத்துக் கேட்கவேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் போராட்டம், தமிழீழம் என்பது ஏன் தேவை, மக்களுக்கு ஆளும் அரசாங்கங்கள் ஜனநாயக ரீதியான, அரசியல் ரீதியான அடிப்படை உரிமைகளை வழங்காத விடத்து தமிழ் மக்களுக்கு ஏன் தனிநாடொன்று தேவை என்பதை போராட்டங்கள் இடம்பெற்ற நாடுகளில் உள்ள அடிமட்ட அமைப்புக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். 



சுதேசிய மக்களுக்கு சம உரிமையைப் பெற்றுக் கொடுக்கின்ற பொலிவியா, ஈக்குவேடர், வெனிசுலா நாட்டு அரசாங்கங்கள் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, புதிய அரசியலமைப்பின் படி, நான்கு உத்தியோகபூர்வ மொழிகள் காணப்படுகின்றன. இதில் மூன்று மொழிகள் ஸ்பானிய மற்றும் சுதேசிய மொழிகளாகும். இந்த மக்கள் தமிழர்களின் பிரச்சினைகளை, துன்பங்களை அறிந்து கொள்ளும் போது சிறிலங்காவுக்கான தமது ஆதரவை வழங்காது நிறுத்திக் கொள்வார்கள். 



சிறிலங்காவுக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் நாம் உலக அளவில் புறக்கணிப்புப் போராட்டங்களை நடாத்த வேண்டும். தமது உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் இணைந்து போராடும் ஏனைய மக்களுடன் நாம் தொடர்புகளைப் பேணிக் கொள்ள வேண்டும். 

தென்கிழக்காசியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் போன்று தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக நாம் சாட்சியங்களை முன்வைத்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 



ஜனவரி 2010 ல் அயர்லாந்தின் டப்ளினில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றிடம் தமிழ் மக்கள் மீது சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கலாம். 



We have wandered over the deserts and the seas. We have been hungry and thirsty. We have been murdered and tortured. We are of the working class, of the castes; we are many races and nationalities. We share a common vision: freedom and equality; bread and water on the table; a shelter over our heads. We must fight together to live in peace and harmony. 



Che Guevara would be on our side today! 



*Ron Ridenour is an activist who has written many books on Cuba.



நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment