Thursday, August 30, 2012

இறுதியில் வெற்றி சீனாவுக்கே!


1970களின் பிற்பகுதியில் சீனாவிற்குள் அமெரிக்கா பிரவேசித்ததிலிருந்தும், 1980களின் ஆரம்பத்தில் இருந்து உலகளாவிய ஏகாதிபத்திய பாதையில் சீனா பிரவேசித்ததிலிருந்தும் உலக மயமாக்கல் ஒரு பெரும் பரிமாணத்தைப் பெற்றது. சீனாவிற்குள் அமெரிக்காவின் பிரவேசமும், உலக சந்தைக்குள் சீனாவின் பிரவேசமும் இணைந்து சீனாவை ஏகாதிபத்தியத்தினதும், உலகமயமாக்கலினதும் பிரதான பங்காளி ஆக்கியது. சீனா உலகமயமாக்கலுக்கு முதலில் உட்படத் தொடங்கிய மிகக் குறுங்காலத்திற்குள்ளேயே தன்னை உலகமயமாக்கலின் பங்காளியுமாக்கிக் கொண்டது.
 
டெங்ஷியாவோபங் தலைமையிலான சீனாவின் நால்வகை நவீனமயமாக்கல்கள் சீனாவை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய உதவியது. இந்த நவீனமயமாக்கலால் ஏற்பட்ட ஏகாதிபத்திய பாதையிலான சீனாவின் உலகளாவிய வர்த்தகப் படர்ச்சியும், தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் இந்தியாவை அதிர்ச்சிக்கும், தாக்கத்திற்கும் உள்ளாக்கியது. 
 
இதனால் இந்தியா கூட்டு (Collaboration) உற்பத்திக்கான பாதையில் கால்வைத்து, யப்பானுடன் கூட்டுச்  சேர்ந்தது. அதன் மூலம் தன்னையும் உலகமயமாக்கலில் ஒரு நேரடிப் பங்காளி ஆக்கிக் கொண்டது. இத்தகைய 
 கூட்டு உற்பத்தி முறைமூலம் இந்தியா தொழில்நுட்ப ரீதியாக சீனாவின் நால்வகை நவீனமயமாக்கலுடன்  போட்டியில் ஈடுபடக் கூடியதாய் அமைந்தது.
 
இந்த வகையில் இரு பெரும் சனத்தொகைமிக்க நாடுகளான சீனாவும், இந்தியாவும் உலகமயமாக்கலிலும், அதனது ஏகாதிபத்திய பொருளாதாரத்தினதும் நேரடிப் பங்காளிகள் ஆகின. அதைத் தொடர்ந்து உலக அரசியல் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. அதாவது இருபெரும் ஆசிய நாடுகளினதும் அரசியல் பொருளாதார 
 
மாற்றமும் இவ்விரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, அரசியல் மற்றும் ஆயுதப் போட்டிகளும் இணைந்து உலக அரசியற் போக்கில் துலாம்பரமான மாற்றத்தை ஏற்படுத்தின.
 
இந்த மாற்றம்தான் 21ஆம் நூற்றாண்டிற்கான உலக அரசியல் போக்கின் பிரதான அடித்தளமாகும். அமெரிக்க பொருளாதார முறையின் மீது சீனா மோகம் கொள்ளத் தொடங்கிய நிலையில், சீனப்பெரும் சுவரைத் தகர்த்து சீனாவிற்குள் நுழைவதற்கான ஒரு பாதையை அமெரிக்கா உருவாக்கியது. ஆனால் அந்த நுழைவாயிலுக்கு ஊடாக சீனா வெளியே பாய்ந்து உலகம் முழுவதற்கும் தன்னை விரிவாக்கத் தொடங்கியது. 
 
அமெரிக்காவால் திறந்து வழி\மைக்கப்பட்ட பரந்த உலகமயமாக்கற் பாதையில் சீனா வீறுநடை போட்டது. ஆதலால்தான் உலகமயமாக்கலுக்கு சவாலாக இருந்த சதாம் ஹூசைனின், பின்லேடன் என்போருக்கு எதிரான போர்களின் போதெல்லாம் சீனா குறைகளையோ, அன்றி விமர்சனங்களையோ கூறியதாயினும் அவற்றைத் தடுப்பதற்கு எதிராகச் செயற்படவில்லை.
 
மேற்கூறிய போர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக் கூடிய எந்தவொரு இடத்திலும், சீனா அதனைப் பயன்படுத்தியதில்லை. வாயால் விமர்சனங்களைக் கூறினாலும்  நடைமுறையில் மேற்படி போர்களுக்கு ஆதரவாகவே சீனா செயற்பட்டது. செயலில் அமெரிக்கா தன் கையில்  இரத்தங்களை பூசிக்கொண்டவேளை, சீனா அதன் பயனாக தன் கையில் பணத்தை அள்ளத் தவறவில்லை. 
 
இதில் சீன இராஜதந்திரம் இரட்டிப்பு வெற்றியைப் பெற்றது. ஒரு புதிய பாதையை திறக்கும் முயற்சியில்  அமெரிக்கா ஓரளவாவது விலை கொடுக்கிறது. ஆனால் சீனாவோ தான் சிறிதும் நட்டம் அடையாமல் அந்தப் 
 பாதையில் பயணித்து இலாபம் அடைகிறது.
 
இந்த வகையில் அமெரிக்கா முன்னின்று உருவாக்கிய சர்வதேச ஏகாதிபத்திய வர்த்தகப் பாதைக்கூடாக  அந்த சர்வதேச அரசியல் வர்த்தக பொருளாதார சட்டங்களுக்கு ஊடாக சீனா உலகளாவிய பரப்பில் தனக்கான பொருளாதார உருவாக்கத்தில் ஈடுபடலாயிற்று. 
 
சீனாவின் இந்தப் பொருளாதார விரிவாக்கமும், அதற்கான அரசியல் இராணுவ வியூகங்களும், அமெரிக்க சீன உறவில் பெரும் போட்டிகளைத் தோற்றுவித்துள்ளன. இப்போட்டியில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஒரு பாத்திரமாகியுள்ளது.
 
"சர்வதேச பயங்கரவாதம்' ஒடுக்கப்படும்வரை வளர்ந்து வந்த இப்போட்டி இரண்டாம் பட்சமானதாக இருந்தது. ஆனால் பின்லேடனின் சாம்ராச்சியம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கவனம் சீனாவை நோக்கித் திரும்பியது.
 
சீனா தனது உலகளாவிய விரிவாக்கத்திற்கு இந்து சமுத்திரத்தை இலக்காக்கிக் கொண்டது. இதில் இலங்கைத் தீவு மையப் புள்ளியில் அமைந்துள்ளதால் இலங்கையின் மீது தனது பிடியை வலுவாக்குவதன் மூலம் தனது ஆதிக்கத்திற்கான இந்துசமுத்திர வியூகத்தை சீனா வகுத்துள்ளது.
 
அமெரிக்கா முன்னின்று திறந்துவிட்டுள்ள சர்வதேச வர்த்தக ஒழுங்குப் பாதையைப் பயன்படுத்தி, இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சீனா திட்டம் வரைந்தது. தமக்கு சாதகமான ஓர் அரசு இலங்கைத்தீவில் 
 
அமையுமிடத்து எத்தகைய இராணுவ வழிகளுமின்றி, உலகமயமாக்கலுக்கான சர்வதேச சட்ட விதிகளின் கீழ் இலங்கை அரசுடன் செய்துகொள்ளக் கூடிய சட்டபூர்வ ஓப்பந்தங்களின் மூலம், சீனா தன்னை இலங்கையில் நிலைநிறுத்திக் கொள்ளவும், அதன்வழி பிராந்திய அளவில் தேவையான ஆதிக்கத்தைப் பெறவும் முடியும்.
 
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுடனான சீனாவிற்கான எண்ணை விநியோகப் பாதையின் மையத்தில் இலங்கைத்தீவு அமைந்துள்ளது. வர்த்தகம், மூலப்பொருள் விநியோகம், எண்ணை விநியோகம், இராணுவ நகர்வுகள் ஆகிய அனைத்திற்கும் இலங்கை ஒரு மையப்புள்ளி. பொருளாதார நலன்களுக்கான ஒப்பந்தங்களைச் செய்வதற்கான ஒரு திறவுகோலாக அரசியல்  இராணுவ ஆதிக்கம் அமைந்துவிடுகிறது. 
 
அதேவேளை பொருளாதார ஆதிக்கம் அரசியல், இராணுவ ஆதிக்கங்களைப் பெறுவதற்கான ஒரு களமாக அமைந்து விடுகிறது. இங்கு ஒன்றுக்கு இன்னொன்று உறுதுணையாகிறது. இந்த வகையில் தனக்குச் சாதமான ஓர் அரசு இலங்கையில் அமையுமிடத்து தனக்குத் தேவையான ஒப்பந்தங்களை சாதாரண சர்வதேச சட்டவிதிகளின் கீழ் ஏற்படுத்தி  இலங்கையில் தனக்கான அரசியல் பொருளாதார மற்றும் தேவைப்படும் இடத்து இராணுவ விரிவாக்கங்களை செய்ய சீனா தயாரானது. 
 
எனவே ராஜபக்ஷவைப் பதவிக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான வியூகத்தை சீனா அமைக்கத் தொடங்கியது. இதற்கெதிரான மாற்று வியூகத்தை அமெரிக்கா அமைத்துக் கொண்டது. 
 
இனப்பிரச்சினைப் போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி சீனா தனக்கான வியூகத்தை  வடிவமைத்துக்  கொண்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் மூலம் இவ்வியூக அமைப்பில் சீனா வெற்றி பெற்றது, பொன்சேகா வெற்றிபெறாமல் போனதன் ஊடாக அமெரிக்கா தோல்வியடைந்தது.
 
மேற்படி ஜனாதிபதி தேர்தலின்போது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தேர்தல் புறக்கணிப்பானது ராஜபக்ஷவின் வெற்றிக்கு சாதகமான காரணியாய் அமைந்ததென எண்ணும் அமெரிக்கா, அதற்காக விடுதலைப் புலிகள் மீது சீற்றம் கொள்ளலாயிற்று. ரணில் அரசாங்கத்துடனான ஒஸ்லோ பிரகடனத்தில் இருந்து புலிகள் பின்வாங்கி விட்டதாகக் கருதிய அமெரிக்கா அதன் நிமித்தம் புலிகளுக்கு சில எச்சரிக்கை சமிக்ஞைகளைக் காட்டத் தொடங்கியது. ஆனால் புலிகளோ அந்த எச்சரிக்கை சமிக்ஞைகளை மேற்குலகத்துடன் ஒத்துப்போக முடியாததற்கான காரணிகளாக்கிக் கொண்டனர். 
 
 மேற்படி தேர்தல் புறக்கணிப்புடன் மேற்குலகம் தெளிவான புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டது.  அரையும், குறையுமாக பயங்கரவாதிகள் எனக் கூறிவந்த நிலைமாறி சொல்லிலும், செயலிலும் முழு அளவில் புலிகளை மேற்குலகம் பயங்கரவாதிகள் என்ற வகைப்பாட்டில் கையாளத் தொடங்கியது.
 
"புலிகளை ராஜபக்ஷ பார்த்துக்கொள்ளட்டும் ராஜபக்ஷவை நாங்கள் பார்த்துக்கொள்வோம்'' என்ற முடிவிற்கு மேற்குலகம் வந்தது. இந்த வகையில் புலிகளுக்கு எதிரான ராஜபக்ஷவின் போரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மேற்குலகம் எடுத்துக் கொண்டது. இனப் போரின் பெயரால் இலங்கையில் சீனா அடையும் வேகமான வளர்ச்சியைத் தடுப்பதற்கு முதலில் போரை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என மேற்குலகம் கருதியது.
 
இதற்காக மேற்குலகு ராஜபக்ஷவிற்கு உறுதுணையாகச் செயற்படும் முதல் நிலை முடிவை எடுத்தது. புலிகளின் ஐந்து ஆயுதக் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்து உதவியதாக ராஜபக்ஷ பின்னாளில் வெளிப்படையாகக் கூறினார். அதாவது இலங்கையின் இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை அமெரிக்க அரசு விசாரணைக்கு உட்படுத்த எத்தனித்த நிலையில் அதனைக் கைவிடச் செய்வதற்காக ராஜபக்ஷ மேற்படி அமெரிக்காவால் புலிகளின் ஐந்து ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட இரகசியத்தை வெளியிட்டார்.
 
தமக்குச் சாதகமான ராஜபக்ஷவை பதவியில் அமர்த்துவதன் மூலமே இலங்கையை மையமாகக் கொண்ட தமது இந்துசமுத்திர வியூகத்தை வடிவமைக்கலாமென சீனா எண்ணியது. இதற்கு இலங்கையின் இனமுரண்பாட்டு போரை ஊன்றுகோலாகப் பயன்படுத்தி உயரம் தாண்டும் பாய்ச்சலில் சீனா வெற்றி பெற்றது.
 
தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்ஷவிற்குத் தன்னையும், தனது குடும்ப ஆதிக்கத்தையும், இன ஆதிக்கத்தையும் நிலை நிறுத்த போர் வெற்றி அவசியப்பட்டது. ஆதலால் ராஜபக்ஷக்களுக்கும் போர் ஒரு தெரிவானது. புலிகளைத் தோற்கடிப்பதற்கேற்ற பலமான முழுநீள உதவியை வழங்குவதன் மூலம் சிங்கள மக்களிடம் நற்பெயரைப் பெற்று இலங்கையில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளச் சீனாவிற்கும் போர் ஒரு பிரதான தெரிவானது.
 
சிங்கள மக்களின் மனப்பாங்கு என்பது எப்போதும் இந்தியாவுக்கு எதிர்ப்பானதாகவே இருந்து வந்துள்ளமை, இங்கு சீனாவிற்கு ஒரு சாதகமான புள்ளியாக மாறுகிறது.
 
ராஜபக்ஷக்கள் போர் விருப்புப் கொண்டிருந்ததால் அதைப் பயன்படுத்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கொல்லவோ, அந்தச் சக்திகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றவோ போர் உதவும் என்று இந்திய அரசும் கருதியதால் இந்தியாவின் தெரிவாகவும் போர் 
அமைந்தது.
 
சீனசார்பு அரசு பதவிக்குவர புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு உதவியதென்பதாலும், புலிகளை கட்டுப்படுத்த போர் தேவையென மேற்குலகம் கருதியதாலும், மேற்குலகின் தெரிவாகவும் போரே அமைந்தது. புலிகளை அழிப்பதற்கான போரை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம், சிங்கள இனவாத அரசியலில் தாம் முன்னரங்கிற்கு வந்துவிடலாமென ஜே.வி.பி. கருதியதால் அதன் தெரிவும் போராகவே இருந்தது..
 
தன்னைத் தோற்கடிக்க புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே பிரதான காரணமாக அமைந்ததென ரணில் விக்கிரசிங்க கருதியதால் அதன் மீதான ஆத்திரத்தை தீவிர போர் ஆதரவாக அவரும் ஆக்கிக் கொண்டார். 
 
அதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவும் போராகவே அமைந்தது. தமக்குக் கிடைக்க ஏற்பாடாகி இருந்த போதியளவு ஆயுதக் கப்பல்கள் பற்றிய எதிர்பார்க்கை, புலிகளுக்கு போர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆதலால் புலிகளின் தெரிவும் போராகவே அமைந்தது.
 
மேற்கூறிய ஒவ்வொரு தரப்பினரும், தத்தம் நிகழ்ச்சி நிரலுக்குள் ஏனையோர் அடங்குவதாகக் கணக்குப்போட்டனர். ஆனால் இறுதி அர்த்தத்தில் சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்தான் அனைத்து தரப்பினரும் அடங்கினர். தேர்தல், போருக்கு முன்னான போர் அரசியல், போரின் போதான போர் அரசியல் ஆகிய மூன்றையும் சீனா தனது அரசியல் சதுரங்கத்திற்கான வெற்றிக்காய்கள் ஆக்கியது. 
 
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் நீண்டகால அடிப்படையிலான பூகோள அரசியல் பொருளாதார  ஆதிக்கப் போட்டி, இந்தியசீன பராந்திய நலன்கள் என்பன இலங்கைத்தீவின் உள்நாட்டுக் காரணிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் போராக வெடித்தது. சிங்கள பேரினவாத நலனும், ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் ஆதிக்க நலனும் போர் வடிவம் கொண்டன. ராஜபக்ஷக்கள், தமது குடும்ப ஆதிக்க நலனை இனப்பிரச்சினையின் வடிவான போருடனும், உலகப் பெரு வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா என்பனவற்றின் தேவைகளுடனும் ஒரு நேர்கோட்டில் இணைப்பதில் வெற்றி பெற்றனர்.
 
நன்றி: பொங்குதமிழ்

Wednesday, August 29, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பப் புள்ளியாகப் போகும் இலங்கை விவகாரம்........!


போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கம் அந்த இலக்கை அடைந்துள்ளதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், அந்த போரின் வெற்றியைக் கொண்டாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் காட்டப்படும் அக்கறை, அந்தப் போருக்கான அடிப்படைக் காரணங்களை களைவதில் காட்டப்படவில்லை. 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முடித்து வைக்கப்பட்ட போரை அரசாங்கம் இரண்டு விதமாக அழைக்கிறது. 

முதலாவது- பயங்கரவாதத்துக்கு எதிரான போர். 

இரண்டாவது, மனிதாபிமானப் போர் நடவடிக்கை. 

இதனைப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது என்ற கேள்வி பலரிடம் உள்ளது. 

அரசாங்கத்தின் இந்தக் கருத்தை தமிழர் தரப்பில் உள்ள பெரும்பாலானவர்களால் ஏற்க முடியவில்லை என்பதே உண்மை. 

ஏனென்றால், இது பயங்கரவாதத்துக்கு எதிரான போராக மட்டும் இருந்திருந்தால், அந்தப் போருக்கு அப்பால் வாழ்ந்த பெருமளவு மக்களால் உயிர் பிழைத்திருக்க முடியும். இழப்புகள், அழிவுகளில் இருந்து தப்பிக்கொள்ள முடிந்திருக்கும். பெருமளவில் பொதுமக்களையும் பலியெடுத்த இந்தப் போருக்கு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று முத்திரை குத்துவது, பொதுமக்களையும் பயங்கரவாதிகளாகவே அடையாளப்படுத்துகிறது. இன்னொரு பக்கத்தில் இதனை மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்றும் அரசாங்கம் சொல்கிறது. 

மனிதாபிமான மீட்பு நடவடிக்கையாக மட்டுமே அது இருந்திருந்தால், தமிழ்மக்களின் உயிர்களுக்கு உச்சக்கட்ட மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தப் போரில் தமிழ்மக்கள் எதிர்கொண்ட இழப்புகளும், கொடுத்த விலையும் மிகமிக அதிகமானது. இதனால் தான், விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட போர் என்ற அரசாங்கத்தின் கருத்தை, தமிழர்களில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. உண்மையில் இந்தப் போரை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான போராகவே கருத வேண்டும். இந்தப் போர்க்களத்தில் தமிழர்களின் உயிர்கள் மதிக்கப்படவேயில்லை. அப்படி மதிக்கப்பட்டிருந்தால், பேரழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும். 

இந்தக் கட்டத்தில் மனிதாபிமான போர் என்பது சரியானதா என்ற கேள்வி எழுகின்றது. 

போர் எப்படி நடத்தப்பட்டது, அதில் தமிழர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டதா என்பதெல்லாம் ஒரு புறத்தில் இருக்கட்டும். 

இந்தப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட, தமிழர்கள் நியாயமாக நடத்தப்படுகின்றனரா என்ற கேள்விக்கு விடைதேடுவது முக்கியம். 

போர் முடிந்த பின்னர் வெற்றி கொண்டாடப்பட்ட விதம், தமிழர்களுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்தது. 

முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்களில் ஒரு பகுதியினர் காயங்களோடு மருத்துவமனைகளில் நிறைந்திருக்க - எஞ்சியோர் பசியோடும் பட்டினியோடும் மாற்று உடைகள் கூட இல்லாமல் முகாம்களுக்குள் அடைபட்டிருந்த போது சரணடைந்தவர்களின் கதி தெரியாமல் உறவினர்கள் கதறிக் கொண்டிருக்க, தப்பியவர்கள் யார், மாண்டவர்கள் யார் என்று தெரியாமல் உறவினர்கள் உறக்கமின்றிப் புலம்பிக் கொண்டிருந்த போது தான், பெரியளவில் வெற்றிக் களிப்புக் கொண்டாட்டங்கள் அரங்கேறின. இன்னொரு நாட்டிடம் அகப்பட்டுக் கிடந்த சுதந்திரத்தை மீளப்பெற்றது போன்று அரசாங்கம் அதனைக் கொண்டாடியது. 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்றது ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. அதேவேளை, இன்னொரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அதை தமது வெற்றியாக அவர்களால் பார்க்க முடியவில்லை என்பதே அந்த உண்மை. காரணம், அந்தப் போர் தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டதென்ற உணர்வே தமிழர்களில் பெரும்பாலானோரிடம் இருந்தது. அந்தளவுக்கு போரினால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். நாட்டின் ஒரு புறம் வெற்றிக்களிப்பில் மிதக்க, இன்னொரு பக்கத்திலோ ஒப்பாரி ஓலங்கள் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன. அரசாங்கம் வடக்கையும் தெற்கையும் இணைத்து விட்டதாகப் பிரகடனம் செய்த போதிலும், போரின் முடிவு அதைச் சாட்சிப்படுத்தவில்லை. தமிழர்களின் அவலங்களுக்காக அந்த வெற்றிக்களிப்பு மனமிரங்கவும் இல்லை. நிறுத்தப்படவும் இல்லை. 2009ம் ஆண்டுடன் வெற்றிவிழாக்கள் நிறுத்தப்பட்டு விடவில்லை. ஆண்டுதோறும் வெற்றிவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்தளவுக்கும் போர் நடத்தப்பட்டது வேறோரு நாட்டுடன் அல்ல. போரிட்டதும் ஒரே நாட்டு மக்கள் தான். அதில் மடிந்து போனதும் அவர்கள் தான். இதில் கணிசமானளவு உயிரிழிவுகளை சந்தித்து தமிழர்கள் தான். 

வெற்றிக்களிப்பும் கொண்டாட்டங்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக சொல்லப்பட்டாலும். நடைமுறையில் தமிழர்களால் அது எப்படி உணரப்படுகிறது என்று பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். இன நல்லிணக்கம் பற்றிப் பேசும் போது, இது தவிர்க்கப்பட முடியாத ஒரு ஆய்வு. ஆனால் அத்தகைய பகுப்பாய்வு ஒன்றை அரசாங்கம் செய்ததாகத் தெரியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், மூன்று ஆயுதக் கிளர்ச்சிகளை சந்தித்தது. அதில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒன்று மட்டும் தான். தெற்கில் தான் இரண்டு முறை ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சிகள் தோன்றின. தெற்கில் இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளுமே, மிகப்பெரியளவிலான உயிரழிவுகளுடன் அடக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த வெற்றிவிழாக்களும் நடத்தப்படுவதில்லை. தமிழர்களின் ஆயுதக் கிளர்ச்சியை அடக்கியதை மட்டும் அரசாங்கம் கொண்டாடுகிறது. இது இனநல்லிணக்கத்துக்கு எந்த வகையிலும் உதவக் கூடியதொன்றாக இருக்க முடியாது. 

இனங்களுக்கிடையிலான கசப்பணர்வுகள் மறைந்து நல்லிணக்கம் ஒன்று உருவாக வேண்டுமானால், எந்தவொரு இனமும் தாம் சிறுமைப்படுத்தப்படுவதாகவோ, இரண்டாம் நிலைப்படுத்தப்படுவதாகவோ உணரக்கூடாது. அத்தகையதொரு நிலையில் இருந்தே இன நல்லிணக்கத்துக்கு அடித்தளமிட முடியும். ஆனால், போர் முடிந்த பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிலையை உருவாக்க முடியவில்லை. தமிழர்களிடம் தாம் இரண்டாம் நிலைப்படுத்தப்படுகிறோம், சிறுமைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வே மேலோங்கியுள்ளது. முஸ்லிம்களிடத்தில் கூட இந்த உணர்வு முற்றாக இல்லையென்று கூற முடியாது. இந்த மூன்று ஆண்டுகளில், அனைவரும் சமம் என்ற உணர்வை உருவாக்க முடியாது போனது நல்லிணக்கத்துக்கான முயற்சிக்கு பெரும் தோல்வி என்றே கூறலாம். தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களுக்குரிய உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் அடிப்படையில் என்ன செய்துள்ளது என்ற கேள்வி உள்ளது. இதனால் தான் அரசாங்கம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவு அளித்த சர்வதேச சமூகம், நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றது. 

மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதன் அடிப்படை நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு, நிரந்தர அமைதியை உருவாக்குவதை மையப்படுத்தியவை தான். அரசாங்கம் இந்த இலக்குகளில் இருந்து விலக முற்பட்டபோது தான், போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றசாட்டுகள் தீவிரம் பெற்றன என்பது கவனிக்கத்தக்கது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், நல்லிணக்கம், அரசியல்தீர்வு குறித்த சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளது என்றே சொல்லலாம். அவ்வாறு இல்லையென்றால், நோபல் பரிசாளர் லேமா ரொபர்ட்டா குபோவீ இத்தகைய கருத்தைக் கூறியிருக்க முடியாது. அவர் மட்டுமல்ல, விரைவில் வரப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகளும் இதனையே வலியுறுத்த முற்படுவார்கள். ஏனென்றால், போருக்குப் பின்னர், நிரந்தர அமைதியை உருவாக்கத் தவறினால், அது இன்னொரு மோதலுக்கான ஆரம்பப் புள்ளியாகி விடும் என்ற கருத்து அவர்களிடம் வலுவாக உள்ளது.

கட்டுரையாளர் கே. சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்

பிரித்தானியாவின் அறிவிப்பு உண்மைக்குப் புறம்பானதா?


பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் கடந்த 14ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கை அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் சினங்கொள்ள வைத்துள்ளது. இந்த எச்சரிக்கை பிரித்தானியப் பிரஜைகளுக்கானது. இதுபோன்ற எச்சரிக்கைகளை பிரித்தானியா மட்டுமன்றி மேற்குலக நாடுகள் பலவும் கடந்த காலங்களில் வெளியிட்டவை தான். “இலங்கையில் மோதல்கள் இடம்பெறுகின்றன, போர் நடக்கும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும், அரசியல் மற்றும் இராணுவ நிலைகளை தவிர்க்க வேண்டும், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்பன போன்ற எச்சரிக்கைகள் கடந்த காலங்களில் மேற்குலக நாடுகளால் விடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. 

காரணம் போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. 

அப்போது வெளிநாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை அசாங்கத்தால் கூட உறுதி செய்ய முடியாதிருந்தது. 

எனவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் அரசாங்கம் மௌனத்தைக் கடைப்பிடித்து வந்தது. 

போர் முடிவுக்கு வந்த பின்னர், பெரும்பாலான மேற்குலக நாடுகள் தமது பயண எச்சரிக்கை குறிப்புகளின் கடினத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கத் தொடங்கின. தற்போது பல நாடுகள் அவ்வாறான எச்சரிக்கையை முற்றாகவே நீக்கி விட்டன. 

திடீரென கடந்த 15 ஆம் திகதி பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. காரணம் அதில் இலங்கையில் தேசிய வாதம் எழுச்சி பெற்றிருப்பதால் மேற்குலக எதிர்ப்பு நடவடிக்கைகள் குறிப்பாக, பிரித்தானியாவுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டவர்கள் குறிப்பாக, பெண் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது, பயங்கரவாத எதிர்ப்புக்கான அதிகாரங்களை இலங்கைப் படையினர் பயன்படுத்துவதுடன், அவர்கள் நாடெங்கும் நிலை கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது அந்த அறிக்கை. 

இந்த அறிக்கை பொருத்தமற்றது, இதை வெளியிடத்தக்க தருணம் இதுவல்ல என்றெல்லாம் இலங்கை அரசாங்கம் சொல்கிறது. பாதுகாப்பும் உறுதித்தன்மையும் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் இந்த அறிவிப்பு நியாயமற்றது என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். அதைவிட, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இன்னொன்றையும் கூறியுள்ளார்கள். இலங்கையின் களநிலவரம் தொடர்பான தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்கின்றனர் அவர்கள். அவ்வாறாயின், பிரித்தானியாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானதா? 

போர் முடிவுக்கு வந்த பின்னர், தீவிரம் பெற்றுள்ள மூன்று விடயங்களை மையப்படுத்தியே பிரித்தானியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

முதலாவது- சிங்கள பௌத்த தேசியவாதம். 

போர் முடிவுக்கு வந்த பின்னர் கொஞ்சமேனும் இதன் வீரியம் குறையவில்லை. 

சிங்கள-பௌத்த தேசியவாதிகள் போர் முடிவுக்கு வந்த பின்னர், நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. 

அண்மையில் கூட இந்தியாவில் டெசோ மாநாடு நடந்தபோது இரா.சம்பந்தனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், சிங்கள பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளும் தாராளமாகவே நடந்து கொண்டுள்ளன. இது ஏனைய இனங்கள் மற்றும் மதங்களின் உரிமைகளில் கை வைக்கின்ற அளவுக்குக் கூட சென்றுள்ளது. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோவில்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் இத்தகையவற்றில் சிலவாகும். 

சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இந்த எழுச்சி, இலங்கையில் எல்லா மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரும் வெளிநாடுகளின் மீது குறிப்பாக, மேற்குலக நாடுகளின் மீதான காழ்ப்பாகவும் வெளிப்படுகிறது. இதன் காரணமாக மேற்குலக எதிர்ப்பு வாதம் என்பது மேலோங்கி வருகிறது. இதற்கு அரசில் உள்ள, அரசஆதரவு பெற்ற அரசியல்வாதிகளும் துணைபோவது ஒன்றும் பிரித்தானியாவுக்கு தெரியாத விடயமாக இருந்திருக்காது. அடுத்து, பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளன. இத்தகைய நெருக்கடிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இத்தகைய பாலியல் குற்றங்களுக்காக கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். 

பிரித்தானியாவின் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால், அதற்குப் பின்னர் கூட ரயிலில் வைத்து பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பாதுகாப்பான நாடாக இலங்கை இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. அரசாங்கம் ஏதேதோ புள்ளி விபரங்களைக் கொடுத்தபோதும், அவற்றின் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன என்று வெளிநாடுகளை நம்பவைக்க முடியவில்லை. 

அடுத்து- வடக்கில் உள்ள படைச்செறிவும், படையினருக்கு உள்ள மிகையான அதிகாரங்களும். 

ஏற்கனவே வடக்கில் இருந்து படைகளை விலக்க வேண்டும் என்று கூறியதால் பிரித்தானியத் தூதுவரை இலங்கை அரசாங்கம் கண்டித்திருந்தது. ஆனால், பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செல்ல வேண்டியிருந்ததால், அந்த விவகாரத்துக்கு அப்போது அரசாங்கமாகவே முற்றுப்புள்ளியை வைத்தது. மீண்டும் இந்த அறிக்கையில் பிரித்தானியா படைச்செறிவை நினைவுபடுத்தியுள்ளது. படையினருக்கு உள்ள அதிகமான அதிகாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒருவகையில், படைக்குறைப்பை வடக்கில் மேற்கொள்ளத் தவறியதற்காக, அதை நியாயப்படுத்தியதற்காக, பிரித்தானியாவின் பதிலடியாகக் கூட இதைக் கருதலாம். 

நியாயமான படைக்குறைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தால், அரசாங்கம் இத்தகைய எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. மொத்தத்தில் பிரித்தானியா சுட்டிக்காட்டிய முக்கியமான மூன்று பிரச்சினைகளும் இலங்கையில் இல்லவே இல்லை என்று அரசாங்கத்தினால் அறுதியிட்டக் கூற முடியாது. இந்தப் பிரச்சினைகளின் அடிப்படையில் தான் பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதுவும் மிக அண்மையில் தான் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவொன்று இலங்கை வந்து நிலைமைகளைப் பார்வையிட்டுத் திரும்பியது. அதற்குப் பின்னர் தான் இந்த அறிவிப்பு வெளியானது. நிலைமைகளை அறிந்துகொள்ள வந்த பிரித்தானிய நாடாளுமன்றக்குழு திருப்தி வெளியிட்டுள்ளது என்று அரசாங்கம் கொண்டாடிக் கொண்டிருக்க இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் களநிலவரம் தொடர்பாக தவறான தகவல்களின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டு வலுவானதல்ல. ஏனென்றால் பிரித்தானிய நாடாளுமன்ற குழுக்கள் பல இங்கு வந்து சென்றுள்ளன.அவ்வாறாயின் அவையெல்லாவற்றையும் அரசாங்கம் சரியாக வழிநடத்தவில்லை, சரியான தகவல்களைக் கொடுக்கவில்லை என்று தான் கருத வேண்டும். ஆனாலும், பிரித்தானியாவின் அறிவிப்பு இலங்கையை கடுப்பேற்றுவதற்கு காரணம் இருக்கிறது. 

இந்த ஆண்டில் 10 இலட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கனவுடன் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1 பில்லியன் டொலரை ஈட்டும் கனவுடன் உள்ளது. அதில் பிரித்தானியா மண் அள்ளிப் போட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக பிரித்தானியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவது வழக்கம். அதைவிட, இந்த எச்சரிக்கையை அடியொற்றி ஏனைய நாடுகளும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்தால் என்னவாகும் என்ற கவலை வேறு அரசுக்கு உள்ளது. இப்படிப் பல தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் தான் அரசாங்கம் இந்த அறிவிப்பை எப்படியாவது விலக்கிக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. ஆனால் பிரித்தானியா இந்த அறிவிப்பை அவ்வளவு இலகுவில் விலக்கிக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இது ஒன்றும் இலங்கைக்கான அறிவிப்போ, எச்சரிக்கையோ கிடையாது. பிரித்தானியா தனது பிரஜைகளுக்கு விடுத்த அறிவிப்பு. இதை ஒரிரு நாட்களில் மாற்றினால், பிரித்தானிய வெளிவிவகார பணியகத்தின் நம்பகத்தன்மை உடைந்து போய்விடும். பொய்யானதாக கருதப்பட்டு விடும். பிரித்தானியாவின் எச்சரிக்கையால் சிறிலங்கா அதிர்ச்சி – சீனா, ரஸ்யா, இந்தியாவிடம் ஓடுகிறது.


ஹரிகரன் இபோதமிழ் குழுமம்

Tuesday, August 28, 2012

ஈழத் தமிழர் ஆகிப் போன தமிழ்ஈழம்

ஈழத் தமிழரைப் பலி கொடுத்தாவது ராஜபக்ஷவைத் திருப்தி செய்ய இந்தியா முனைந்தது.  தமிழரின் ரத்தக் கறைபடிந்த கரங்களுடன் இந்தியா வந்த ராஜபக்ஷவுடன் மத்திய அரசு உடன்பாடுகளைச் செய்துகொண்டதைக் கண்டிக்க தி.மு.க. முன்வரவில்லை. ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், "கிடையாது'' என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட, இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக, விரைவில் விழுப்புரத்தில் "டெசோ' மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89ஆவது பிறந்த நாளையொட்டி 3612 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார்.
 
அத்துடன் அவர் நிற்கவில்லை. 9612 அன்று திருவாரூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், "தமிழீழம் உருவாக வேண்டும்; அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். 
 
அதைக் கண்டபின் உயிரைவிட வும், காண்பதற்காக உயிரைவிடவும் விரும்புகிறேன்'' என முழங்கினார். அதற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து கருணாநிதியின் சுருதி இறங்கியது. 27-7-12 அன்று மாநாட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
 
"ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு'' என மாநாட்டுக்குப் பெயர் சூட்டப்பட்டது. "தமிழீழம்' என்ற பெயர் காணாமல் போயிற்று. விழுப்புரத்தில் நடைபெறவிருந்த மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டது. மாநாட்டில் மத்திய அமைச்சர்களான சரத் பவார், பரூக் அப்துல்லா, அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களான சரத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
 
 ஆனால், ராம்விலாஸ் பாஸ்வானைத் தவிர மற்றவர்கள் கலந்துகொள்ள வில்லை.தமிழீழத்திலிருந்து மாவை. சேனாதிராஜா உட்பட ஏழு தமிழ் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ப தாக அறிவிக்கப்பட்டது. மாநாட் டிற்கு முதல் நாள் 11-8-12 அன்று செய்தி யாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பிய வெளிநாட்டினர் அனைவருக்கும் மத்திய அரவிஸா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 
 
ஆனாலும் தமிழீழத்திலிருந்து யாரும் வர வில்லை. உலக நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க ஈழத்தமிழர்கள் ஒருவர்கூடக் கலந்துகொள்ளவில்லை. சிங்களக் கட்சியான நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணரத்ன மட்டும் கலந்துகொண்டார். 
 
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நாவை வேண்டிக்கொள்ளும் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டிருந்தது. மறுநாள் செய்தியாளர்களின் கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை கருணரத்ன மறுத்துப் பேசினார்.
 
ஐ.நாவால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்தத் தீர்மானத்தினால் எந்தப் பயனும் ஏற்படாது, வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை. 
 
ஈழத் தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும், அதற்காகவே நான் "டெசோ' மாநாட்டில் கலந்து கொண்டேன் எனக் கூறினார். இலங்கை யிலிருந்து வந்தவர் அவர் ஒருவரே என்றாலும் அவரும் மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்கவில்லை.
 
தமிழீழ விடுதலையை ஆதரித்து "டெசோ' மாநாட்டில் எத்தகைய தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசு கூறிய போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோன கருணாநிதியை மத் திய அரசு மீண்டும் குட்டியது. மாநாட்டிற்கான தலைப்பிலிருந்து "ஈழம்' என்ற சொல்லையே நீக்க வேண்டும் என வெளியுறவுத்துறை எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது.
 
 பிறகு பிரதமரிடம் நேரடியாகப் பேசி, கெஞ்சிக் கூத்தாடி அதற்கு அனுமதி கிடைத்தது. டில்லியில் கருணாநிதி யுடைய "செல்வாக்கு' எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்த மாநாடு அம்பலப்படுத்திவிட்டது.
 
2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க் கால் பகுதியில் லட்சக்கணக்கான மக்களைச் சிங்கள இராணுவம் சுற்றி வளைத்துக்கொண்டு குண்டுமழை பொழிந்தபோது அவர்களைக் காப் பாற்றும் அதிகாரம் கருணாநிதியிடம் இருந்தது. அப்போது என்ன செய்தார்? டில்லிக்கு விரைந்துசென்று, உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என சிங்கள அரசை வற்புறுத்திச் செயல்படுத்துவதோடு கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியா கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என வலியுறுத்துவதற்குப் பதில் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று "சாகும் வரை உண்ணாவிரதம்'' இருக்கப் போவதாக அறிவித்தார்.
 
அதிகாரம் படைத்த ஒரு முதல மைச்சர் செய்கின்ற வேலை இதுதானா? பிரதமரும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு கொண்டு இவரிடம் பேசினார்கள். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது இல்லை என சிங்கள அரசு அறிவித்திருப்பதாகக் கூறியதையொட்டி உண்ணாவிரதத்தைத் திரும்பப்பெற்று 6 மணி நேரத்தில் வீடு திரும்பினார்.
 
ஆனால், நடந்தது என்ன? அன்று மாலையே சிங்கள இராணுவம் பீரங்கி கள் மூலமும் விமானங்கள் மூலமும் குண்டுகளை வீசித் தாக்கி ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்தது. உண்ணாவிரத நாடகம் அம்பலமானது.
 
"டெசோ' மாநாட்டுக்கு அகில இந்தியக் கட்சிகளைத் சேர்ந்த பல தலைவர்களையும் பல நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் வரவழைக்கும் செல்வாக்குப் படைத்த கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு ஆளான போது அதைத் தடுத்து நிறுத்த இந்தத் தலைவர்களை ஒன்றுதிரட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வில்லை. 
 
ஆனால், இப்போது எல் லோரும் செத்துச் சாம்பலானபிறகு மாநாட்டைக் கூட்டுகிறார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்பார்வைக் குழுவை நியமிக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
 ஆனால், அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப் போக வைத்தது இந்திய அரசே என்பதையும் அதன் விளைவாக ஐ.நா. தீர்மானம் செயலற்றுக் கிடக்கிறது என்பதையும் அடியோடு மறைத்தி ருக்கிறார் கருணாநிதி.
 
ஐ.நா. மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. அவையை வற்புறுத்தும் மற்றொரு தீர்மானத்தையும் மாநாடு நிறைவேற்றியுள்ளது.
 
"போர்க் குற்றவாளிகள்'' என்று பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, முதலாவது குற்றவாளியான ராஜபக்ஷவின் பெயரைத் தீர்மானத்தில் குறிப்பிட மாநாடு தயங்கியுள்ளது. ராஜபக்ஷவைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என மேற்கு நாடுகள் குரல் எழுப்பியபோது இந்தியா அவரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
 
 இதற்கு எதிராகத் தமிழகக் கட்சிகள் குரலெழுப்பிய போது கருணாநிதி அமைதி காத்தார்.இலங்கையின் வடக்குகிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மரத்தடியிலும் திறந்தவெளியிலும் முடங்கிக்கிடக்கின்றனர்.
 
மீள்குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் நரகவேதனை அனுபவிக் கின்றனர். ஈழப்பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும் வீடுகளும் வன்பறிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் முயற்சிகளை ஐ.நா. மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்தியிருக்கிறது.
 
இப்போதாவது ஈழத் தமிழர்க ளின் அவல நிலை கருணாநிதிக்குப் புரிந்திருக்கிறது. ஆனால், 2009ஆம் ஆண்டில் முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவானதால் அதை நீர்த்துப்போகச் செய்வதற்காக அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பினார்.
 
 நான்கு நாள்கள் அங் கிருந்த பிறகு 14-10-09 அன்று இக் குழு சென்னை திரும்பியது. இந்தக் குழுவின் சார்பில் முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், "முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் 3 மாதத்திற்குள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்'' என உறுதியளித்தார். ஆனால், 3 ஆண்டுகள் ஆன பிறகும் அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது என்பதையும் 3 மாதங்களில் அனைவருக்கும் விடிவு கிடைக்கும் என முன்பு வெளியிட்ட அறிக்கை திசை திருப்பலான அறிக்கை என்பதையும் "டெசோ' தீர்மானத்தின் மூலம் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
 
சிங்கள இராணுவக் கொடும் முகாம்களில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலையைக் கண்டு இன்று கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, எந்த மாநிலத்திலும் இல்லாதபடி தமிழகத்தில் "சிறப்பு முகாம்கள்'' என்ற பெயரில் கொடுமையான சிறைகளை உருவாக்கி மருத்து வமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த ஈழ இளைஞர்களையும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களையும் அடைத்துவைத்து எந்த விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அவர்களை வாட விட்டிருக்கிறார். அதற்கு இவரின் பதில் என்ன?
 
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஈழவேந்தன், சிவாஜிலிங்கம் போன்ற ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமில்லா மல் தமிழகத்தைவிட்டு வெளியேற்றியதும் இவரே. உடல் நலமின்றி சிகிச்சைக்காகத் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரபாகரனின் தாயார் மூதாட்டி பார்வதி அம்மையாரைக் கொஞ்சமும் இரக்கமில்லாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியது யார்? ஈழத் தமிழர்களை பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியதில் ராஜபக்ஷவுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு?
 
இலங்கை இராணுவத்துக்கு இந்தி யாவில் பயிற்சி அளிப்பதை அறவே தவிர்க்கவேண்டும் என்று மத்திய அரசை இந்த மாநாடு வேண்டிக் கொண்டிருக்கிறது. 2003ஆம் ஆண்டி லிருந்து 2008ஆம் ஆண்டு வரை சிங் கள இராணுவத்தில் உள்ள 53 வீரர்க ளுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியா வில் இராணுவப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
 
இந்தியக் கடலோரக் காவல்படை சிங்களக் கடற்படைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து புலிகளுக்கு வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது. சிங்களப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
இந்தப் பயிற்சியின் மூலம்தான் சிங்கள இராணுவம் புலிகளோடு மோதுவதற்கு துணிந்தது. அந்தப் பயிற்சி மட்டுமல்ல, இராணுவ ரீதியான உதவிகளையும் இந்தியா செய்தது.போர் முடிந்த பிறகு இந்த உண்மை கள் வெளியாயின. போர் வெற்றி விழாவையொட்டி கொழும்பில் நடத்தப்பட்ட சிங்கள இராணுவ அணி வகுப்பில் இந்தியா கொடுத்த ராடார் கருவிகள், 40 மி.மீ. குறுக்களவு வாய் கொண்ட பீரங்கிகள், 70எம்.எம். ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆகியவை பகிரங்கமாகக் கொண்டுவரப்பட்டன.
 
 அதுமட்டுமல்ல, போரில் முக்கிய பங்கெடுத்த "சயூர', "சாகர' என்னும் இந்தியப் போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டன.
 
இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இதற்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தது. இதெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்ததா? போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒருபோதும் இலங்கையிடம் கூறவில்லை.
 
"விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தவேண்டிய போரை இலங்கை நடத்தியது'' என வெற்றி விழாவில் பகிரங்கமாக அறிவித்தார் ராஜபக்ஷ. "இந்தியா விடுதலைப் புலிகளை ஒழிக்கக் கூடுதலான ஆதரவையும் உதவிகளையும் எங்களுக்கு வழங்கிவருகிறது. 
 
எப்போதுமே இந்தியா எங்கள் பக்கமே செயல் படும்'' என இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜ பட்ச கூறினார். 10609 அன்று வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர மேனன், "இலங்கை இனப்பிரச்சினையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று இலங்கைக்குச் சொல்ல மாட்டோம். அப்படிச் சொல்வது இந்தியாவின் வேலை அல்ல.
 
 ராஜபக்ஷ என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என ராஜபக்ஷ சொன்னது சரிதான். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது'' என்று கூறினார்.
 
இந்திய அரசு வெளிப்படையாகவே சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான எல்லா உதவிகளையும் செய்த போது அதைத் தமிழக மக்களிடமி ருந்து மூடி மறைக்க கருணாநிதி உதவினார். போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தியிருப்பதாகப் பலமுறை கூறி மக்களை ஏமாற்றினார்.
 
முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்ற பிறகு 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் டில்லி வந்த ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு இரத்தினக் கம்பள வரவேற்புக் கொடுத்தது. இந்தியா வுடன் 7 உடன்பாடுகளில் அவர் கையெழுத்திட்டார். சிங்களவரின் மேலாண்மைக்கு அடங்கி அழியும்படி ஈழத் தமிழர்கள் கைகழுவிவிடப்பட்டனர்.
 
ஈழத் தமிழரைப் பலிகொடுத்தாவது ராஜபக்ஷவைத் திருப்தி செய்ய இந்தியா முனைந்தது. தமிழரின் ரத்தக் கறைபடிந்த கரங்களுடன் இந்தியா வந்த ராஜபக்ஷவுடன் மத்திய அரசு உடன்பாடுகளைச் செய்துகொண்டதைக் கண்டிக்க தி.மு.க. முன்வரவில்லை.
 
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்றால், கருணாநிதி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.
 
தமிழ் நாட்டில் அவர் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், டில்லியில் ஆளும் கூட்டணியில் அவரும் ஒரு முக்கியமான அங்கமாகத் திகழ்கிறார். மத்திய அமைச்சரவையில் அவரது மகன் உள்பட தி.மு.க.வைச் சேர்ந்த பலர் அங்கம் வகிக்கிறார்கள். ஈழத் தமிழர் துயர்துடைக்க அவர்கள் மூலம் டில்லியை வற்புறுத்தலாம்.தங்கள் கோரிக்கையை ஏற்க டில்லி தவறுமானால் தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகி வெளியேறுவது தான் அரசியல் நாணயமாகும்.
 
 முச்சந்தியில் மாநாடு கூட்டி தீர்மானம் போடுவது ஏன்? எதற்காக? யாரை ஏமாற்ற?"டெசோ' நாடகம் முடிந்துவிட்டது; கருணாநிதியின் ஈழக்காவலர் வேட மும் கலைந்துவிட்டது!     

நன்றி- உதயன்

Monday, August 27, 2012

மஹிந்தவின் வீரத்தனமும் சிங்கள மக்களும்


வீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர். இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. 
 
கறுப்பு ஜூலை கலவரத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த நாட்டின் தமிழ் மக்கள், தலை நிமிர்ந்து மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு கொடுத்ததன் மூலம் பிரபாகரன் தமிழ் மக்கள் மத்தியில் வீரபுருஷரானார். 
 
அவர் படிப்படியாக கடும்போக்குவாதியாக மாற்றமுற்ற பின்னரும், தமிழ் மக்கள் மனோ ரீதியில் பிரபாகரனின் தலைமைத்துவப் பிம்பத்தில் ஈடுபாடு காட்டி தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு நல்கினர்.
 
விடுதலைப்புலிகளின் தலைவரால் என்றோ ஒரு நாள் தமிழீழம் பெற வாய்ப்பமையும் என்ற நம்பிக்கை காரணமாக, தமிழ்மக்களது மனச்சாட்சி அற்றுப்போனதுடன் அவர்களது நாக்குகளும் பேச்சிழந்தன; ஊமை யாகின. மாயையில் மனது மயங்கி, கனவுலகில் சஞ்சரித்த தமிழ் மக்கள் பிரபாகரனின் அகோரச்செயற்பாடு களைப் பொருட்படுத்தினாரல்லர். 
 
வீரத்தனம் என்பதன் அர்த்தம் இடத்துக் கிடம், காலத்துக்கு காலம், சந்தர்ப்பத் துக்கு ஏற்றவாறு மாற்றமுறும் ஒன்று. வீரத்தனம் மற்றும் நல்லொழுக்கம் என்ற சொற்களை நீண்ட காலத்துக்கு கடும்போக்குவாதத்துக்கான அர்த்தமாகப் பயன்படுத்திக் கொண்டால், கடும்போக்குவாதத்தையே உண்மையான வீரத்தனம் என நம்பும் நிலை ஏற்படும் என கிலெம்பெரரி என்ற அறிஞர் தமது "லாங்விச் ஒவ்தேர்ட் றீச்' என்ற நூலில் விபரித்துள்ளார். வீரத்தனமும் கடும்போக்குவாதமும் ஒன்றிணைவது "நாஸி' க் கோட்பாடாகக் கூடக்கொள்ள இயலாத ஒன்று. விடுதலைப் புலிகளது நிர்வாகத்தில் தமிழ் மக்கள் இதனை அனுபவிக்க நேர்ந்தது. இன்று ராஜபக்ஷ நிர்வாகத்தில் சிங்கள மக்களும் அத்தகைய நிலைக்கு முகம் கொடுக்க வேண்டி நேர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 
 
அண்மையில் இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையே கொழும்பில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியைச் சந்திக்க நேர்ந்தமை பலரும் அறிந்ததொன்றே. குறிப்பிட்ட போட்டித் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்ததையடுத்து, இலங்கை ரசிகர்கள், பிரமுகர்களுக்கான பார்வையாளர் பகுதியிலிருந்து கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்திக் கோஷமெழுப்பிய கிரிக்கெட் ரசிகர்கள் மீது வெற்றுச் சோடா போத்தல்களை வீசித்தாக்குதல் மேற்கொண்டதுடன் தூஷண வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.
 
 அமைச்சர்கள் போன்ற அரச உயர் மட்ட ராஜதந்திரிகள் மட்டத் தரப்பின ருக்கென  ஒதுக்கப்பட்ட விசேட பார்வை யாளர் பகுதிக்குள் அனுமதியின்றி வேறெவரும் உள்நுழைய இயலாது என்பது தெரிந்த ஒன்றே. இந்த நிலையில் இத்தகைய அநாகரிகச் செயற்பாடு அரசியல் அதிகாரத் தரப்பினரின் அனுசரணையுடனேயே மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் என நம்ப இட முண்டு. 
 
குறிப்பிட்ட தாக்குதலை மேற் கொண்டோர் அரசியல் அதிகாரத்தரப்பினரின் ஆதரவாளர்கள் என்ப தாலேயே அவர்களால் இவ்விதம் இந்திய கிரிக்கெட் அணி ஆதரவாளர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் மேற்கொள்ள முடிந்ததாக நம்ப இடமுண்டு.
 
குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தின் போது, தாக்குதல்களுக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்கள், உதவி கோரி கூக்குர லிட்ட போதிலும், அவர்களுக்கு உதவ எவரும் முன்வரவில்லை. பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் உதவி கோரப்பட்டும் கூட அவர்கள் கூட கண்டும் காணாதது போன்று அங் கிருந்து விலகிச்சென்றுவிட்டனர்.
 
 இலங்கை அணி போட்டியில் தோல்வி யுற நேர்ந்த தொடரின் ஏனைய போட்டி களின் முடிவிலும் இந்திய அணியின் ஆதரவாளர்கள், இலங்கை அணி ஆதரவாளர்களின் கடும்கோபத்துக்கு உட்பட நேர்ந்தது. 
 
விளையாட்டு ரசிகர்கள், தம் தீவிர ரசிகத்தனம் காரணமாக எல்லைமீறி உணர்ச்சிவசத்தால் தவறு செய்வது வழமையே. ஆயினும், குறிப்பிட்ட சம்பவத்தில் அரசியல் பின்புல  ஆதரவுடன் சட்டம், ஒழுங்கை மீறும் விதத்தில் இலங்கை அணி ரசிகர்கள் நடந்துகொண்டமை பரபரப்பான ஒரு சம்பவமாக அமைந்தது. 
 
அரசின் மத்தியிலேயே கடுங்கோட்பாட்டு நிலை அரசோச்சுவது கவலைக்குரிய ஒன்றே. இச் சம்பவம் அதனையே தொட்டுக்காட்டி நிற்கிறது. கிழக்கு மாகாணம்  பானமபிரதேசத்தில்  அமைந்திருந்த பிள்ளையார் கோவில், பானம பௌத்த விகாரை நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஊர்காவல் படை வீரர்களும், சிவில் உடுப்பில் இராணுவ வீரர்களும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.
 
 அந்த நடவடிக்கைக்கான திட்டங் களை வகுத்ததும், செயற்படுத்துவித் ததும் அப்பகுதி விகாரைக்குப் பொறுப் பான பௌத்த பிக்கு ஒருவரே அந்த வகையில் சிங்கள பௌத்த கடுங்கோட் பாட்டாளர்கள், ஒழுக்கம் பேணுவதில் உணர்ச்சி வசப்படும் கிரிக்கெட் ரசிகர் களை விட தரத்தில் தாழ்ந்தவர்களே. 
 
இதில் கவலைக்குரியது என்னவெனில் பாதுகாப்புப் படைத் தரப்பினரும் இந்த அநாகரிகச் செயற்பாட்டில் பங்குகொண்டமையே. அரசியல் அதிகாரப் பாதுகாப்பின் பின்னணியுடன் சிங்கள கடுங்கோட்பாட்டாளர்கள் முன்னர் விளையாட்டுத்துறையில் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
 
 கிழக்கில் இந்துமதத்தவர்களுக்கு எதிராக பௌத்த கடுங்கோட்பாட்டாளர்களுடன் பாதுகாப்புப்படையினரும் இணைந்து செயற்பட்டுள்ளனர். இதனால் சிங்கள இனத்தின் இருப்புப் போன்று அதன் கலாசாரப் பெருமையும் தாழ்வுற நேர்ந்துள்ளது. சிங்கள இனத்தின் பாரம்பரிய செயற்திட்டங்களை நிலைநிறுத்தும் விதத்தில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தரப்புக்களின் அனுசரணையுடனேயே வர்க்க வாத, மதகடுங்கோட்பாட்டுவாதம் பயன்படுத்தப்படுகிறது . 
 
ராஜபக்ஷ நிர்வாகம் போரை வென்றெடுத்தமை உண்மையே.  அது மட்டுமே அத்தரப்பினரின் ஒரேயொரு வெற்றி ஏனைய சகல விடயங்களிலும் அவர்களது திறமை மழுங்கிப்போயுள்ளது. அண்மையில் மீளியக்கப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி தொகுதி மீண்டும் பழுதுபட் டுள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் ஐந்து பார தூரமான தவறுகள் இடம்பெற்றுள்ளன.
 
 ஆனால் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது பதவியைத் துறக்க முன்வரவில்லை. அவ்விதம் ஒரு துறையில் இடம்பெறும் தவறுக்குப் பொறுப்பேற்று அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது பதவியை துறக்கும் நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டிருந்திருக்குமானால், இன்றைய ராஜபக்ஷ நிர்வாகத்தில் அமைச்சரவை வெறுமையாகியிருந் திருக்கும். 
 
போரினால் இடம்பெயர்ந் தோரை  மீள்குடியமர்த்துவதில் அரசு பூரண வெற்றி கண்டிருப்பதாக பாதுகாப்பின் செயலாளர் உலகத்துக்குப் பறை சாற்று கிறார். அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்குடைய ஆனந்தசங்கரியோ அரசின் மீள்குடி யேற்றச் செயற்பாடுகள், இடம்பெயர்ந் தோரின் சிரமங்களுக்கு பரிகாரம் அளிக்கும் விதத்தில் திருப்திகரமாக அமையவில்லையெனக் குற்றம் சாட்டுகிறார் அந்த வகையில் இன்றைய ராஜபக்ஷ நிர்வாகம் உள்ளுடல் இல்லாத வெளியில் தோலால் பூசி மெழுகப்பட்ட பொருளொன்றை ஒத்ததே அண்மையில் நடந்து முடிந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கை ஒலிம்பிக்குழு ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான நுழைவுச் சீட்டுகளைக் கொள்வனவு செய்திருந்த போதிலும், அதில் கலந்து கொள்ளச் சென்ற விளையாட்டு வீரர்களை நெறிப்படுத்த எந்தவொரு பயிற்சியாளரையும் உடன் அனுப்பத் தவறியுள்ளது. 
 
கடந்த நிதியாண்டில் விளையாட்டுத்துறைக்கென 1923 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டபோதிலும், அந்த நிதி  நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த வல்லாது ராஜபக்ஷ குடும்பத்தினரின் மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் ஹம்பாந்தோட்டையில் விளையாட்டரங்கு நிர்மாணிக்கச் செலவிடப்பட்டுள்ளது. 
 
அரசின் இத்தகைய செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை மழுங்கடிக்க வீர புருஷர்களை உருவாக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. ராஜபக்ஷ நிர்வாகத்தில் தேசியத்தை கட்டியெழுப்புவது என்பதன் அர்த்தம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் தொடர்ச்சியாக மோதல்களை இடம்பெறச் செய்தல் என்பதாகும்.
 
 பெரும்பான்மையின சிங்கள மக்களே இந்த நாட்டின் உருத்தாளர்கள் எனவும் ஏனைய சகலரும் அவர்களது எதிரிகளே என்றதொரு உணர்வை சிங்களமக்கள் மனதில் நிலைநிறுத்தும் போக்கு இது. 
 
அந்த விதத்தில் மகாவம்ச சான்றிதழுடன் ராஜபக்ஷ தரப்பினால் நாட்டின் பொருளாதாரச் சிக்கல், நிர்வாகச்சீர்கேடுகள் என்பவற்றை மூடிமறைத்து எவ்வித இடையூறுமின்றி நாட்டை நிர்வகிக்க இயலும்.
 
பிரபாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கி, கட்டிவளர்த்தார் கடைசியில் முடிவில்லா அதிகாரஆசையால் ஈர்க்கப்பட்டு அதன் அழிவுக்கே வழிசமைத்தார். தமக்குக்  கீழ்படிந்த தமிழீழமே அவரது வேட்கையாக அமைந்தது. தமது கடுங்கோட்பாட்டு நிலைப்பாட்டிலிருந்து  ஓரங்குல மேனும் அசைந்து கொடுக்க முன்வர அவர் தயாராயில்லாமையால் முடி வில்லாத போர் ஒன்றுக்கு  நாடு உட்பட நேர்ந்தது.
 
 விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கிய சிற்பியே அதன் அழிவுக்கும் காரணமாக அமைந்ததால், அவர் காப்பற்ற, பாதுகாக்கமுயன்ற தமிழ் மக்களையும் பேரவலத்துக்குள் சிக்கவைத்தார்.
 
  தமிழ் இனத்துக்காக அவரது அர்ப்பணிப்பு பெறுமதிமிக்கதே ஆயினும், இனம் குறித்த அவரது பார்வை, சிங்கள எதிரி தமிழினத்துக்குச் செய்த பாதிப்பை விட அதிகமானதெனக் கொள்ளத்தக்கதே. அந்த வகையில் தமிழ்மக்கள் அபாயஎச்சரிக்கையையும் கணக்கில் எடுக்காததால் தாமே தமக்கான புதைக்குழியைத் தோண்ட நேர்ந்தது. அதே போன்று  ராஜபக்ஷ நிர்வாகமும். 
 
இனவாதம் என்ற மாயையில் சிக்குண்டு நலிவடைகின்றோம். வீர புருஷர்கள் என்ற மாயையின் பின்னால் சென்று வீழ்ச்சியையும் நாசத்தையும் சந்திக்காமல் வெளியேற முயல்வோம்.

தமிழில் : வியெஸ்ரி

மூலம்: ராவய

Sunday, August 26, 2012

எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்!!


உலகின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா நீட்டித்திருப்பது வேண்டுமானால் வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். 'அதை ஆதரிக்கும் இயக்கங்களே! தனி நபர்களே! உஷார்' என்று உதார் விடுவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாய், வெளியே ராமதாஸே வந்து பூட்டுப் போடுவதைக்கூட உணராதவர்களாய், டாஸ்மாக் உள்ளே உட்கார்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தோமென்றால், உண்மையிலேயே நாம் யார்? விடுதலைப் புலிகளை ஆதரிப்பது ஏன் - என்பதை பகிரங்கமாக இப்போது சொல்லாமல், வேறெப்போது சொல்லப்போகிறோம் நாம்? 

விடுதலைப் புலிகளை இவர்கள் தவறாகச் சித்தரிப்பது ஏன்? அவர்கள் மீதான இவர்களது குற்றச்சாட்டுகளை எதனால் மறுக்கிறோம்? புலிகளின் தமிழீழக் கோரிக்கை எவ்வளவு உன்னதமானது, உண்மையானது.... என்பதையெல்லாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்குமுன், தடை குறித்த அறிவிப்பிலுள்ள விஷமத்தனமான வார்த்தைகளை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது. வெறும் வார்த்தைகள் தானே என்று, படித்து முடித்ததும் அடுத்த பக்கத்துக்குப் போய்விட முடியவில்லை. அந்த அளவுக்கு நயவஞ்சகமான வார்த்தைகள் அவை. 


அரசின் அறிவிப்பை எழுதுகிற இடத்தில் இருப்பவர்கள், விவரம் அறியாதவர்களாக இருக்க முடியுமா? வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தி வெத்துவேட்டுகளைத் தயாரிக்க அவர்கள் என்ன கோபாலபுரத்திலா குடியிருக்கிறார்கள்? தலைநகர் டெல்லியில், சிவகங்கை 'வெற்றிவீரர்' ப.சிதம்பரத்துக்குப் பக்கத்திலேயே இருப்பவர்கள் அவர்கள். அறியாமலோ தெரியாமலோ அவர்கள் இதை எழுதியிருக்க முடியுமா? தெரிந்தே தான் இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் எழுதியிருக்கவேண்டும் என்பதால், இதை அலசுவதற்கு முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது. 


விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய மக்களுக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.. தமிழ்நாட்டிலுள்ள ஆதரவு இயக்கங்கள் மூலம் தங்களுக்கு ஆதரவு திரட்ட புலிகள் முயல்கிறார்கள்... புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இதன் பின்னணியில் உள்ளனர்... என்றெல்லாம் குற்றப்பத்திரிகை வாசிக்கிறது, அந்த அறிவிப்பு. இதெல்லாம் உப்புக்கும் உதவாத மொக்கைவாதம் என்பது அவர்களுக்குத் தெரியும். நமக்கும் அது புரிகிறது. 


அந்த அறிவிப்பு எடுத்துவைக்கும் அடுத்த வாதம்தான் ஆபத்தானது. போரில் புலிகள் தோற்றதற்கு, இந்தியத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும்தான் காரணம் என்று இணையதளங்கள் மூலம் செய்தி பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகிறது அரசின் அறிவிப்பு. மிகவும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் சாமர்த்தியமாகக் கோர்க்கப்பட்டுள்ள வாக்கியம் இது. இந்த வரியில் பிற்பாதி மெய். முற்பாதி, பிரச்சினையைத் திசைதிருப்பப் பயன்படுத்தப்படும் வடிகட்டியபொய். 


ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும்தான் காரணம் - என்பது நாம் ஒவ்வொருவரும் சுமத்தும் வெளிப்படையான குற்றச்சாட்டு. இவர்கள்தான் கருவிகளைக் கொடுத்தார்கள், இவர்கள்தான் பயிற்சி கொடுத்தார்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என்கிற வேண்டுகோளைக் காதில் வாங்க மறுத்தார்கள், தமிழ்ச் சொந்தங்களைக் கொன்றுகுவித்த பொன்சேகா தான் உலகின் சிறந்த தளபதி என்று தட்டிக்கொடுத்தார்கள், ராஜபட்சேவை உலகே கண்டித்தபோதும் கட்டிப்பிடித்தார்கள். இதனாலேயே, ஒன்றரை லட்சம் ஈழச் சொந்தங்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதற்கு இந்தத் தலைவர்களும் அதிகாரிகளும் தான் காரணம் என்று திட்டவட்டமாக - தெளிவாகக் குற்றஞ்சாட்டுகிறோம் நாம். விடுதலைப் புலிகளின் தோல்விக்குத் தான் நாங்கள் காரணமாக இருந்தோம், அதற்காகத்தான் நீங்கள் எங்களைக் கண்டிக்கிறீர்கள் - என்று பிளேட்டைத் திருப்பப் பார்க்கிறார்கள் இவர்கள். . 


நடந்தது இனப்படுகொலை - என்பதை உலகம் முழுக்க வியாபித்திருக்கிற புலம்பெயர் சொந்தங்கள் அவர்கள் இருக்கிற நாடுகளின் அரசுகளிடம் ஆதாரத்துடன் எடுத்து வைக்கின்றனர். அனைத்து நாடுகளிலும், இலங்கைக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுகின்றனர். அவர்கள் என்ன இந்தியா மீது நடவடிக்கை எடுங்கள் - என்றா போராடுகிறார்கள்? இனப்படுகொலை செய்த இலங்கை மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் போராடுகிறார்கள். உலகெங்கும் வீதிகளில் கொட்டுகிற பனியில் குளிர்க் குல்லாய்களை அணிந்திருக்கும் குழந்தைகளுடன் நின்று நியாயம் கேட்கிறார்கள். அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதுகூட தெரியாத அளவுக்கா இருளில் இருக்கிறது இந்திய உள்துறை? புரியவில்லை. 


ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் காந்தி தேசமான இந்தியா காரணமாய் இருந்திருக்கிறதே - என்று இங்கேயிருக்கிற நாம் கோபப்படுகிறோம். தமிழினப் படுகொலையைத் தடுத்துநிறுத்தத் தவறிய தலைவர்களைக் கண்டிக்கிறோம். இந்த உண்மை தெரிந்தும், ஒன்றுமே தெரியாதவர்களைப் போல், புலிகளைத் தோற்கடித்ததற்காகத்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள் - என்று ஆட்சியிலிருப்பவர்கள் போக்குக் காட்டினால், ஒன்றரை லட்சம் உயிர்களை மதிக்காத கிராதகர்களின் பிடியில்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா என்கிற வேதனையையும் வெறுப்பையும் தவிர தமிழினத்துக்கு வேறெது மிஞ்சும்? எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால், ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும்? 


இனப்படுகொலை செய்த இலங்கையைக் கண்டித்து ஐ.நா.வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடித்து இலங்கையைக் காப்பாற்றியது எங்கள் இந்திய அரசு. காமன்வெல்த் போட்டிக்கு, சூடு சுரணை வெட்கம் மானம் எதுவுமே இல்லாமல், ராஜபட்சே என்கிற மனித மிருகத்தை அழைத்து கௌரவித்தது இதே இந்திய அரசு. இந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதாக நடித்து, இனப்படுகொலை, போர்க்குற்றம் - என்கிற வார்த்தைகளே அந்தத் தீர்மானத்தில் இல்லாதபடி கூடவே இருந்து குழிபறித்து, உயிர் நண்பன் ராஜபட்சேவை மீண்டும் காப்பாற்றியிருக்கிறது இந்தியா. இதையெல்லாம் பார்த்தபிறகும் உணர்ச்சி வசப்படாதிருக்க, உப்பு போடாமலா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் அத்தனைத் தமிழனும்? ராஜபட்சேவைக் காப்பாற்ற உன்னுடைய வெளியுறவுத் துறை வேலை செய்யும், உள்துறை வேலை செய்யும், பாதுகாப்புத் துறை வேலை செய்யும்... இருக்கிற அத்தனைத் துறையும் வேலை செய்யும்......! ஒன்றரை லட்சம் உயிர்களை... எங்கள் ஒன்றரை லட்சம் சொந்தங்களைக் காப்பாற்றுவதென்றால் மட்டும் உன்னுடைய எல்லாத் துறைகளும் பஞ்சர் ஆகிவிடுமென்றால், என் வணக்கத்துக்குரிய தாயகமே, பாரதமே... எங்களுக்கு நீ யார்? 


போர்க்குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதி - என்றெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் பல ஆகிவிட்டன. அந்தத் தீர்மானம் என்ன, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலா நிறைவேற்றப்பட்டது? ஏழு கோடி தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் தீர்மானம், அந்தத் தீர்மானம். ஏழு கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தப் பேரவைக்கென ஒரு இறையாண்மை இருக்கிறதா, இல்லையா? என்ன ஆனது அந்தத் தீர்மானம்? பிரதமர் அலுவலக குப்பைத்தொட்டியில் போடப்பட்டுவிட்டதா? ஆல் இன் ஆல் அழகுராஜா நாராயணசாமியிடம்தான் கேட்கவேண்டும். அந்தத் தீர்மானம் குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்தால், ஏட்டிக்குப் போட்டியாக உள்துறையின் அறிவிப்பைக் குப்பைத்தொட்டியில் போடுவோம் என்று அறிவித்தால், இந்தியாவுக்கு அது பெருமை சேர்ப்பதாகவா இருக்கும்? 


இந்திய எல்லையிலிருந்து 26 கிலோமீட்டரில் இருக்கும் பாகிஸ்தான் பகுதியொன்றில் 100 சீக்கியர்கள் கொல்லப்பட்டிருந்தால், இந்தியா கைகட்டி வேடிக்கை பார்த்திருக்குமா? இன்னும் 100 பேர் எங்கேயென்று கண்டறிந்து கொல் - என்று ராடார் கொடுத்திருக்குமா? நூறுபேர் கொலைக்காக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தமல்லவா நடந்திருக்கும். 26 கிலோமீட்டரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மட்டும் இந்தியா வேடிக்கை பார்த்தது, கொலைகாரர்களுக்கு உதவியது, கொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டு விடாதபடி பார்த்துக்கொள்கிறது என்றால் என்ன அர்த்தம்? இந்தத் தமிழின விரோதத்துக்காகத் தான், ஓன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்ததற்காகத் தான், சுயநல அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் கண்டிக்கிறோம். இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் போல், திசைதிருப்பும் நடவடிக்கையில் மத்திய அரசின் உள்துறை இறங்குவது, தமிழினத்தின் திசையைத் திரும்பிவிட்டுவிடும். உள்நோக்கத்துடன் அறிவிப்புகளை எழுதுபவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 


குழந்தைக்கு எப்படிச் சோறூட்டவேண்டும் - என்பதை அறியாத தாய்தான், 'பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக் கொடுத்துடுவேன்' என்று மிரட்டுவாள். அப்படித்தான் பூச்சாண்டி காட்டுகிறது, ப.சிதம்பரத்தின் உள்துறை. புலிகளை ஆதரிப்பவர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்களாம். அதைவிட உன்னிப்பாக இலங்கையை ஆதரிப்பவர்களை நாங்கள் கவனிக்கிறோம் என்பதை இன்னுமா அவர்கள் அறிந்துகொள்ளவில்லை? 


மன்மத வேட்டைக்கு கஸ்டமரை ரகசியமாக அழைத்துச்செல்லும் ஏஜெண்டைப் போல், ரகசியமாகத்தான் அழைத்துவருகிறார்கள் இலங்கை விமானப் படை அதிகாரிகளையும், கடற்படை அதிகாரிகளையும். இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருந்தும், அவர்கள் மீனம்பாக்கத்தில் வந்து இறங்குவதற்குமுன்பே, தாம்பரத்திலும் குன்னூரிலும் கறுப்புக் கொடியோடு காத்துநிற்கிறார்களே எங்கள் தோழர்கள்.... அது எப்படி? நீங்கள் அரசாங்க எடுபிடிகள்.... பிழைப்புக்காகப் பணியில் இருக்கிறீர்கள்! அவர்கள் தங்கள் உறவுகளின் வாழ்க்கைக்காகக் களத்தில் நிற்கிறார்கள் - என்பதைத் தவிர இதற்கு வேறென்ன அர்த்தம்? 


உண்மையிலேயே, இது யாருக்கான மிரட்டல் - என்பது, 'தமிழ் ஈழம் வேண்டும் என்று இப்போது அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்போவதில்லை' என்று அவசர அவசரமாக 'டெசோ தலைவர்' அறிவித்தவுடனேயே அம்பலமாகிவிட்டது. அவர், தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்கிற ஓர் அபூர்வப் பிறப்பு. அவர் யார் - என்பதை, இதைவிட அழுத்தந்திருத்தமாக ஜெயலலிதாவாலேயே கூட விவரித்துவிட முடியாது. 

பச்சைத் துரோகத்துக்கும் பதவி வேட்கைக்கும் அடையாளமாய் இருக்கிற அவர் - 'ஈழம் ஒருகாலத்தில் அமையலாம்...' என்று கூழ் ஊற்றிக் குழி பறிக்கப் பார்க்கிறார். ஒரு காலத்தில் இல்லை.. இவர் காலத்திலேயே ஈழம் அமையும்..! அதை இவர் பார்க்கத்தான் போகிறார். வெறும் நம்பிக்கை இல்லை.. இதுதான் யதார்த்தம். சொந்த மண்ணுக்கு உரிமை கோரியதற்காக, மண்ணின் மைந்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொன்று புதைக்கப்பட்டார்களே... அந்த மண் எப்படி அமைதியாக இருக்கும்? வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்... வரும்போது சிங்களவன் கதை முடியும்.. என்கிற கவிதையின் வரிகள்தான் அந்த மண்ணின் எதிர்காலத்தைச் செதுக்கும். ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் உயிர்களைப் பறித்த எவருக்காவது அதற்குள் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களை வென்டிலேட்டரில் வைத்திருந்தாவது, ஈழம் மலர்வதைக் காட்டியாகவேண்டும். 


எங்கள் சொந்தங்கள் கேட்கும் தமிழ் ஈழம் என்பது, தமிழரின் தாயகப் பகுதி. அது, அவர்கள் ஆண்ட மண்... அவர்கள் வாழ்ந்த மண்.. அவர்களது உழைப்பால் செழிப்படைந்த மண்... அவர்களது அறிவால் விழிப்படைந்த மண். தங்கள் தாயகத்தைத்தான் அவர்கள் கேட்கிறார்களே தவிர, கொழும்பையும் கண்டியையுமா கேட்கிறார்கள்! இந்தப் பார்வையோடுதான் இலங்கைப் பிரச்சினையைப் பார்க்கவேண்டுமே தவிர, ராஜீவ் காந்தியின் மர்மப் பார்வையோடு.. இந்தியாவின் கள்ளப்பார்வையோடு பார்க்கக் கூடாது. உண்மையில், தமிழ் ஈழம், ஐ.நா.வின் செயலர் நாயகத்தையே 'பிம்ப்' என்று கொழுப்போடு விளிக்கும் கொழும்பின் கொத்தடிமைக் கோட்பாட்டுக்கு எதிரானதே தவிர, சிங்களவர்களின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதல்ல. சிங்களத்தின் இறையாண்மைக்கே எதிராக இல்லாத தமிழ் ஈழம், இந்தியாவின் இறையாண்மைக்கு எப்படி எதிரானதாகும்? 


விடுதலைப் புலிகளின் தமிழீழ வரைபடத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்திருப்பீர்களே.. தமிழகத்தின் எந்தப் பகுதியாவது அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதா? ஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்திலும் இடம்பெற்றிருக்கிற பிரபாகரன் என்கிற அந்த மாமனிதன், தமிழகத்தின் எந்தப் பகுதியையாவது தனது வரைபடத்தில் சேர்த்திருந்தானா? அவ்வளவு ஏன், இலங்கைக்கு நீங்கள் பிச்சை போட்ட கச்சத்தீவாவது அந்த வரைபடத்தில் இருக்கிறதா? அந்த அளவுக்கு கண்ணியத்துடன், இந்தியா மீதான மரியாதையுடன் நடந்துகொண்டவர்களை அழித்து ஒழிக்கவேண்டும், அதற்கான போரில் ஒன்றரை லட்சம் அப்பாவிகள் செத்தாலும் பரவாயில்லை, அதைக் கண்டும் காணாதவர்களாய்க் கதர்த் துணியால் கண்களைக் கட்டிக்கொள்ள வேண்டும் - என்பதுதான் உங்கள் கொள்கை என்றால், 'நவீன நயவஞ்சகர்கள்' என்பதைவிட வேறு எது உங்களுக்குப் பொருத்தமான பெயராக இருக்கமுடியும்? 


இங்கிருக்கிற மேதாவிகளுக்கும், இலங்கையின் முகமூடிகளுக்கும், இது நன்றாகத் தெரியும். தெரிந்தும், ராஜபட்சேக்களைக் காப்பாற்றுவதற்காக, 'தமிழ் ஈழம் - என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது' என்று ஒப்பாரி வைக்கிறார்கள். கோபல்லபுரத்துக் கோமான்களைவிடக் கொடுமையானவர்கள் இவர்கள். இந்தியாவுக்குத் தாலி கட்டுவது - சந்தடி சாக்கில் சீனாவுக்கு சிக்னல் கொடுப்பது - என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துக்கொண்டிருக்கிறது இலங்கை. அந்த இலங்கையைத் தோளில் தூக்கிச் சுமப்பதற்காக, இந்தியர்களாகவே வாழ்கிற 7 கோடி தமிழர்களின் உணர்வுகளைக் காலில்போட்டு மிதிக்கிறார்கள் என்றால், இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்? இலங்கை தொடர்பான விவகாரங்களை அரசின் சார்பில் கவனிக்கும் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் எவராயிருந்தாலும், அந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றபிறகு அவர்களது சொத்து மதிப்பு எக்குத்தப்பாக எகிறியிருக்கிறதா என்று முதலில் கணக்கெடுத்துப் பார்க்கவேண்டும். அது, இந்தியாவின் இறையாண்மைக்கும் நல்லது, ஒருமைப்பாட்டுக்கும் நல்லது, பாதுகாப்புக்கும் நல்லது. 


சொந்தக் குழந்தையைக் மிதிமிதியென்று மிதிக்கும் நீங்கள், பக்கத்து வீட்டுக் குழந்தையை உச்சிமுகர்ந்து கொஞ்சுகிறீர்கள் என்றால், இரண்டுவகையில் நீங்கள் அயோக்கியர்கள். ஒன்று - சொந்த மனைவியை சந்தேகப்படுகிறீர்கள். இரண்டு - பக்கத்து வீட்டுக்காரன் மனைவியை சந்தோஷப்படுத்தப் பார்க்கிறீர்கள். என்றாவது ஒருநாள் இதற்காக உங்களைக் கட்டி வைத்து மிதிப்பார்கள். அப்போது உங்கள் உடலின் எந்தப் பகுதியில் மிதிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாவது நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது அவசியம். 'தடை இருக்கிறது' என்று பூச்சாண்டி காட்டும் உங்களின் கருவிலேயே பிழை இருக்கிறது. 


ஒரு சாதாரண போராளிகள் அமைப்பு ஆறா ரணத்துடன் நம்மை அடித்து மிதித்து விரட்டியிருக்கிறதே... அதற்குப் பாடம் கற்பிக்கவேண்டாமா.. என்கிற இந்தியாவின் மனவக்கிரத்தைத் தவிர, ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நிஜமான காரணம் வேறு எது? 'இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்யவேண்டியதுதானே... ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்' என்று தம்பி முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? 


எங்களது உறவுகளை, ஒன்றரை லட்சம் சொந்தங்களைக் கொன்று குவிக்க கொல்லைப்புறம் வாயிலாக ஆயுதங்களையும் அறிவுரைகளையும் அள்ளிக்கொடுத்த உங்கள் நபும்சக அரசு, தமிழ் ஈழம் - என்கிற கொள்கையே தவறு என்கிறது, அதற்காகவே புலிகள் மீதான தடையை நீட்டிப்பதாக சொல்கிறது. நாங்களோ, தமிழ் ஈழம் - என்கிற கொள்கையில் உறுதியாக இருந்ததற்காகத் தான் பிரபாகரனையும் பிரபாகரனின் தோழர்களையும் நேசித்தோம், நேசிக்கிறோம். அதனால்தான், 'எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள் தான்' என்று உரக்கச் சொல்கிறோம். இலங்கை ஒன்றாகத் தான் இருக்கவேண்டும் - என்பது உங்கள் விருப்பமாய் இருக்கலாம். தமிழர் பகுதிகளில் அவசர அவசரமாக எழுப்பப்படும் புத்தவிகார்களைப் பார்த்தால் இலங்கை அப்படி விரும்புவதாகவா தெரிகிறது? 


சிங்கள மிருகங்களால் கற்பழிக்கப்பட்ட எங்களது அன்புச் சகோதரிகளின் வரலாற்றை முழுமையாகச் சொல்ல, பல ஆயிரம் பக்கங்களில் ஒரு புத்தகம் தேவைப்படும். மட்டக்களப்பு அருகே, தன்னுடைய அழகான கிராமத்தில் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துத் திரிந்த 13 வயதுக் குழந்தை புனிதவதியைக் கூட அந்த மிருகங்கள் விட்டுவைக்காததைத்தான், உச்சிதனை முகர்ந்தால் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருந்தேன். உங்கள் அரசால் ஆதாரப்பூர்வமான அந்த உண்மையை மறுக்கமுடிந்ததா? அந்தப் படத்தைத் தடுக்க முடிந்ததா? 


அந்த 13 வயதுக் குழந்தையை ஏழெட்டு பேர் சேர்ந்து... அவையெல்லாம் வாயால் சாப்பிடுகிற மனித ஜென்மமா... அல்லது வவ்வால் போலவா? என்ன பாடுபட்டிருக்கும் ;அந்தக் குழந்தை... எப்படித் துடித்திருக்கும்! நான் கேட்கிறேன்... மெத்தப் படித்த மேதாவிகளே... அறிவுச் சிகரங்களே... புனிதவதி உங்கள் மகளாக இருந்திருந்தால் இலங்கையின் இறையாண்மை பற்றிப் பேசியிருப்பீர்களா நீங்கள்? சேர்ந்துதான் வாழவேண்டும் - என்கிற வார்த்தைகளை வீசியிருப்பீர்களா? புனிதவதி ஒற்றைக் குழந்தையல்ல... பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளின் அடையாளம். உங்களுக்கு இதயம் இருந்தால், அங்கே எத்தனை எத்தனை புனிதவதிகள் இப்படிச் சீரழிக்கப்பட்டார்கள் என்று விசாரித்துப் பாருங்கள். அதைத் தெரிந்துகொண்டால், ஐ.ஏ.எஸ். மாதிரி உயர்ந்த பதவிகளில் உட்கார்ந்துகொண்டு, அனாமதேய அரசியல்வாதிகளுக்கு அடப்பக்காரர்களாக இருக்க சம்மதிக்க மாட்டீர்கள். 


எந்த மிருகங்களால் சிதைக்கப்பட்டார்களோ, அந்த மிருகங்களின் கண்காணிப்பில்தான் எங்கள் புனிதவதிகள் வாழ்ந்தாகவேண்டும் என்று வரையறை செய்ய நீங்கள் யார்? ஆதர்ஷில் ஆரம்பித்து பிரதீபா பாட்டீலுக்குக் கொடுப்பதாக இருந்த இடம்வரை உங்கள் இஷ்டத்துக்குக் கொட்டாய் போட்டுக்கொள்ளுங்கள், நாங்கள் குறுக்கே நிற்கவில்லை. பக்கத்து நாட்டில் போய் எங்கள் இஷ்டப்படிதான் பட்டா போடுவோம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கொல்லப்பட்ட இன்னமும், கொலை செய்த இனமும் ஒன்றாகத் தான் வாழவேண்டும் - என்று போதிப்பதன்மூலம் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? 


உங்களுக்கும் எங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். எந்த வகையிலும் புலிகளை ஆதரிக்கக்கூடாது - என்று எச்சரிக்கிறீர்கள் நீங்கள். எல்லா வகையிலும் அவர்களை ஆதரிப்போம் - என்று அறிவித்து பெருமிதத்தோடு அவர்கள் பெயரை உச்சரிக்கிறோம் நாங்கள். 


நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் 


மலையினும் மாணப் பெரிது... 


என்கிற வள்ளுவம் தெரியுமா உங்களுக்கு. பிரபாகரன் அப்படி இருந்ததால்தான், புலிகளை நாங்கள் ஆதரித்தோம். இப்போதும் அதற்காகத் தான் ஆதரிக்கிறோம். 


நீங்கள் எதற்காக அந்த மாவீரர்களைப் பற்றி அவதூறு பரப்புகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள், மற்றவர்களைப்போல உங்களது கைத்தடிகளாக இருக்க மறுத்தவர்கள். அகிம்சை முகமூடியோடு வந்து தங்களை நசுக்க முயன்ற உங்களை, லா.ச.ரா.வின் படைப்பு ஒன்றில் ஒரு நாயை எதிர்த்து சிலிர்த்து நின்று போராடுமே ஒரு பூனைக்குட்டி, அதைப்போல கிளர்ந்து எழுந்து அடித்தவர்கள். நீ எங்களுக்கு எடுபிடியாய் இருக்க மறுத்தாயே... நீ எங்களைத் திருப்பி அடித்தாயே என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கிறது, அவர்கள் மீது நீங்கள் அவதூறு பரப்ப! எங்கள் இனத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட அந்த மாவீரர்கள் மீது நீங்கள் உள்நோக்கத்துடன் தான் குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்று தெரிந்த அன்றிலிருந்துதான், நீங்கள் அம்பலமான அந்தக் கணத்திலிருந்துதான், அவர்களுக்கு ஆதரவாகப் பேசியே ஆகவேண்டும் என்கிற உறுதியான நிலையை நாங்கள் எடுத்திருக்கிறோம். 


தமிழ் ஈழம் கேட்டது பிரபாகரன் இல்லை என்பதும், காந்தியத் தலைவரான செல்வா தான் இலங்கையின் இனவெறிக்கு எதிராகத் தமிழ் ஈழத்தை அறிவித்தார் என்பதும், அந்த வரலாறெல்லாம் தெரியாமல் தன்னிச்சையாக தமிழ் மக்கள் மீது தன் விருப்பத்தைத் திணிக்க முயன்றதால்தான் ராஜீவ்காந்தி அனுப்பிய படை ஒரு கூலிப்படை அளவுக்கு அவமானப்பட்டுத் திரும்பிவர நேர்ந்தது என்பதும் இங்கிருக்கிற சுண்டைக்காய் அதிகாரிக்குக்கூடத் தெரியும். நியாயத்துக்கு எதிராக நாம் நிற்கலாமா, ராஜபட்சே என்கிற ஒரு இனப்படுகொலையாளியைக் காப்பாற்ற முயலலாமா - என்று கலகக் குரல் கொடுக்கும் துணிவு ஒரு அதிகாரிக்குக் கூட இல்லை என்பதுதான், நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது. 


இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து - என்று முக்கி முனகுகிறீர்களே.. உண்மையிலேயே அப்படியொன்று உங்களுக்கு இருக்கிறதா என்ன! உங்களுடைய இறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் நுழைந்து சுமார் ஆயிரம் மீனவர்களைச் சுட்டுக்கொன்ற ஒரு அண்டைநாட்டின்மீது உங்கள் சுண்டுவிரலைக் கூட நீட்டமுடியாதென்றால், உங்களது இறையாண்மை எங்கேயிருக்கிறது? சுவிஸ் வங்கி எதிலாவது பதுக்கிவைத்திருக்கிறீர்களா? மூச்சு விடும்போதெல்லாம் இறையாண்மை என்று சொல்ல வெட்கப்பட வேண்டாமா நீங்கள்! 


தமிழ் ஈழம் - என்பது எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தில் கலந்திருக்கும் அடிப்படை உரிமை... ஆட்சி உரிமை. தமிழ் ஈழம் கோருவதையோ... அது அமைவதையோ உங்களால் எப்படித் தடுக்க முடியும்? மிக அதிகபட்சமாக, கோபாலபுரத்திலிருந்து கேட்கிற முணுமுணுப்பை உங்களால் தடுக்கமுடியலாம்... டெசோ பேனரைக் கிழிக்க முடியலாம்... வேறெதை உங்களால் கிழிக்கமுடியும்? 


தயவுசெய்து, ஊரறிந்த மூன்று உண்மைகளை மறைக்க முயலாதீர்கள். ஒன்று - 26 கிலோமீட்டரில் உங்கள் நண்பன் இலங்கை செய்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பது உலகம் முழுக்க அம்பலமாகிவருகிறது... அதை மூடி மறைக்க முயன்றால் நீங்கள் அம்பலமாகிவிடுவீர்கள். இரண்டு - உலகெங்கும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்கள் உங்களுக்கு எதிராகப் போராடவில்லை... ராஜபட்சேவைக் கூண்டிலேற்றத் தான் போராடுகிறார்கள்... அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதன் மூலம், உங்களையும் சேர்த்துக் கூண்டிலேற்றவேண்டும் என்கிற முழக்கம் உலகெங்கும் ஒலிக்க வழிவகுத்துவிடாதீர்கள். மூன்று - விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி - தமிழ் ஈழத்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றெல்லாம் புருடா விடுவதன் மூலம் சிங்கள மிருகங்களைக் காப்பாற்ற தொடர்ந்து முயல்வதாக இருந்தால், வெளிப்படையாக அதை அறிவித்துவிடுங்கள். உங்களுடனான உறவை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதென்று நாங்களும் முடிவெடுத்து விடுகிறோம். சட்டத்தையும் நியாயத்தையும் வளைப்பதென்று நீங்கள் முடிவெடுக்கலாம்... அந்த இரண்டையும் நிமிர்த்த வேண்டுமென்று நாங்கள் முடிவெடுக்கக் கூடாதா? தடை.. எச்சரிக்கை... என்றெல்லாம் சீன் போடாமல், எது சௌகரியம் என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள்.


தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர்  புகழேந்தி தங்கராஜ்