Saturday, May 19, 2012

சிறிலங்கா போர்க்குற்ற கதைகளை வெளிக்கொணர்வதில் ஊடகர்கள் தவறிவிட்டனர் - பிபிசி முன்னாள் ஊடகர் தெரிவிப்பு

தாம் செத்துக் கொண்டிருக்கும் போது தம்மைப் பாதுகாக்காது கைவிட்டதாக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்கள் குற்றம் சாடியிருந்தனர். மனித உயிர்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது கடமையை ஐக்கிய நாடுகள் சபை செய்யத் தவறியிருந்தது என்பது உண்மையாகும். இவ்வாறு பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகர் Frances Harrison* தனது அண்மையில் எழுதிய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான இக்கட்டுரையில் குற்றஞ்சாட்டி உள்ளார். 


சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்று மூன்றாவது ஆண்டு நிறைவு நாளாகும். நான் அங்கு கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு கொல்லப்பட்ட மக்கள் எத்தனை பேர் என்பது எனக்குத் தெரியாது.


இவ்வாறு போரின் போது 7000 தொடக்கம் 147,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது உண்மையில் அதிர்ச்சி தரத்தக்க வித்தியாசமாகக் காணப்படுகின்றது.


செய்மதிகள் மற்றும் இணையத்தளச் செய்திகள் போன்றவற்றின் ஊடக சிறிலங்காப் போரில் கொல்லப்பட்ட மக்கள் எத்தனை பேர் என்பதை தெளிவாக வரையறுப்பதென்பது எவ்வாற சாத்தியமாகும். கிட்டத்தட்ட ஆயிரம் வரையான மக்களா கொல்லப்பட்டனர்?


ஊடகவியலாளர்கள் என்ற வகையில் இது தொடர்பான உண்மையை நெருங்குவதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். ஒருபுறம் சிறிலங்கா அரசாங்கமானது 2009ல் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையை மனித உயிரினங்களை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பிரடனப்படுத்தி அதேவேளையில், மறுபுறத்தில், இது ஒரு இனப்படுகொலை என பெரும்பாலான தமிழ் மக்கள் கூறுகின்றனர்.


சிறிலங்கா யுத்தமானது தீவிரமடைந்திருந்த 2009 காலப்பகுதியில், ஊடகவியலாளர்கள் போர் வலயத்துக்குள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சிறிலங்காவில் நடந்த யுத்தமானது 'சாட்சியற்ற யுத்தம்' என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் இதில் அவ்வளவு உண்மையில்லை.


சிறிலங்காவில் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, வன்னி யுத்த வலயத்துக்குள் 60 கத்தோலிக்க மதகுருமார் மற்றும் அருட்சகோதரிகள் போன்றோரும், அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 240 உள்ளுர் பணியாளர்களும், ஐந்து வைத்தியர்கள் உள்ளடங்கலாக சிறிலங்கா மத்திய அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளும் அகப்பட்டிருந்தனர். இவர்கள் உத்தியோக ரீதியாக அவர்களது தொழில் சார் தகைமைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் ஆவர்.


யுத்தத்திலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் என அனைவரையும் குறிப்பிட முடியாது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் யுத்தத்திலிருந்து உயிர் தப்பியிருந்தாலும் கூட அவர்கள் உளத்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் விரக்தியடைந்து வாழ்கின்றனர். யுத்தத்தின் இறுதி மாதங்களில், நரக வாழ்க்கை வாழ்ந்த இந்த மக்கள் சாவின் விளிம்பு வரை சென்று விட்டு வந்தவர்களாவர். எடுத்தக்காட்டாக, ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் அடுத்த நிமிடம் அவரது உயிர் பறிக்கப்பட்ட பல சம்பவங்கள் வன்னியின் யுத்த வலயத்துக்குள் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறான கதைகள் சனல் 04 தொலைக்காட்சி சேவை தவிர பெரும்பாலான ஊடகங்களில் முக்கியத்தப்படுத்தப்படவில்லை. மிக ஒடுங்கிய கரையோர, சதுப்பு நிலப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமாக இடம்பெற்றிருந்திருந்தது. இது மிகப் பயங்கரமான யுத்த அனுபவமாகும். இறுதி யுத்தத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட மக்களைப் பொறுத்தளவில் தங்கத்தை விட பால்மாவுக்கான தேவை அதிகமாக இருந்தது. அத்துடன் பெண்கள் தமது திருமண நாள் சேலையை வெட்டி அதனைக் கொண்டு பதுங்குகுழி அமைப்பதற்கான பைகளைத் தயாரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். சிறுவர்கள் பட்டினிச் சாவுக்கு முகங்கொடுத்தனர்.


மக்கள் தமது அன்புக்குரியவர்களின் இறந்த உடலங்களை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய வைத்தியர் ஒருவர், யுத்தத்தின் இறுதி நாளின் போது மரம் ஒன்றின் கீழ் 150 நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு வந்திருந்தார். இந்த நினைவை, இவ்வாறான பயங்கரமான சம்பவத்தை மனதில் தாங்கியவாறு இவ்வைத்தியர் வாழ்கின்றார். அத்துடன் இவ்வைத்தியர் நீண்ட நேரம் குருதியைப் பார்க்க விரும்பவில்லை. அவரால் அது முடியவில்லை. இதனால் சத்திரசிகிச்சை செய்வதற்கு இவரால் முன்வர முடியவில்லை.


அன்புக்குரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. தமது குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக சாவதை ஏற்றுக் கொண்டு வாழ முடியாத இந்தக் குடும்பத்தவர்கள் ஒரேநேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் மனங்களை உருக்குகின்றன. வயிற்றிலிருந்த குழந்தை ஒன்று பிறக்கும் போது தனது சிறிய காலில் துப்பாக்கி ரவை துளைத்தவாறு பிறந்த சம்பவமும் வன்னியில் இடம்பெற்றிருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலைகளில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாலூட்டும் தாய்மார் தமது பிள்ளைகளுக்கு தமது வாழ்வின் இறுதிப் பரிசாக தாம் வழங்கும் தாய்ப்பால் தான் இருக்கும் எனத் தெரிந்து கொண்டு கடும் பிரயத்தனத்தின் மத்தியில் பாலூட்டிய சம்பவங்களும் அங்கு நடந்துள்ளன.


சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் இந்த மக்கள் மீதும், இவர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்த இடங்கள் மீதும் தொடர்ச்சியாக பல்குழல் எறிகணைகள் வீசப்பட்டன. இது மட்டுமல்ல, புலிகள் தமிழ் இளையோர்களைப் படையில் இணைத்துக் கொண்டிருந்தனர். இதனால் தமது பிள்ளைகளை இழக்க விரும்பாத தாய்மார் பதுங்குகுழியில் இருந்தவாறு புலி உறுப்பினர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டனர். முதலில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் வீதம் புலிகள் தமது படையில் இணைத்தார்கள். ஆனால் யுத்தத்தின் இறுதி மாதங்களில், குடும்பத்திலிருந்து இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக இணைத்துக் கொண்டனர்.


தமது பிள்ளைகளை புலிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, வெற்று டீசல் பரல்களுக்குள் தமது பிள்ளைகளை அடைத்த வைத்தனர். இவர்கள் சுவாசிப்பதற்காக மிகச் சிறிய குழாய் ஒன்று மட்டும் பொருத்தப்பட்டிருந்தது. அந்த மக்கள் தமது வீடுகளை, உடைமைகளை இழந்தது மடடுமல்லாது, தமது அன்புக்குரிய மகன்மார் அல்லது மகள்மாரை புலிகளின் காட்டுக்குள் அமைக்கப்பட்டிருந்த முன்னணி நிலைகளுக்கு கொண்டு செல்வதை பெற்றோர்கள் விரும்பவில்லை. இதன் மூலம் தமது பிள்ளைகளை இழக்க அவர்கள் விரும்பவில்லை.


சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, உண்மையில் அந்த யுத்த வலயத்தில் என்ன நடந்ததென்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புடன், புலி உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரணடைவது தொடர்பில் வரையப்பட்ட நம்பகமான திட்டத்தை ஏற்பதற்கு புலிகள் மறுத்துவிட்டனர். இவ்வாறு புலிகள் சரணடைந்திருந்தால் இரு உயர் மட்ட புலித் தலைவர்களைத் தவிர அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும். இது தற்போது தொடரப்படும் சித்திரவதைகள், வன்புணர்வுகள், காணாமற் போதல்கள் போன்ற மீறல்கள் தொடரப்படாது தடுத்திருக்கும். ஆனால் தம்மை அரசியல் தலைவர்கள் போல் பாதுகாப்பதற்குகந்த மனிதாபிமானத் தலையீட்டையே புலித் தலைமை எதிர்பார்த்திருந்தது. இதன் விளைவாக, புலிகள் தமது சொந்த மக்கள் கொல்லப்படக் காரணமாகினர்.


புலிகள் தோற்கடிக்கப்படுவதென்பது முதலிலேயே உறுதியாகத் தெரிந்த போதிலும் கூட, புலிகள் தாம் சரணடைவதை மறுத்ததானது சிறிலங்காப் படைகளின் கைகளில் அகப்பட்டுக் கொண்ட தமிழ் மக்கள் தற்போதும் சித்திரவதைகளுக்கு உள்ளாவதற்கு காலாக அமைந்துள்ளது. புலிகளின் இத்தீர்மானமானது இனப் போர் தொடர்வதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தொடர்ந்தும் பழிவாங்கல் சம்பவங்கள் இடம்பெறக் காரணமாக அமைந்துள்ளது.


லிபியாவில், அதன் தலைவர் கேணல் கடாபி தனக்கு விசுவாசமான மெய்ப்பாதுகாவலர்களை தன்னுடன. இறுதிவரை வைத்திருந்ததுடன், சாகும் வரை போராடினார். ஆனால் தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பல பத்தாயிரக்கணக்கானவர்களின் உயிiரைப் பணயமாக வைத்துப் போராடிய அதேவேளையில், இறுதிவரை இவரை மக்கள் நம்பினர்.


உண்மையில் சிறிலங்கா ஊடகங்களில் இவ்வாறான தெரிவுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் ஆயுதப் போராட்டமானது எதனைச் சாதித்துக் கொண்டது என்பது தொடர்பாக ஆராயப்படவில்லை. படுகொலைகள் மற்றும் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்த முன்வரவில்லை.


சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களுக்கான சாட்சியங்களை ஐ.நா வல்லுனர் குழுவின் விசாரணை அறிக்கை உள்ளடக்கியுள்ளது. ஆனால் இவ்வறிக்கையை பெரும்பாலான ஊடகவியலாளர்கள் முழுமையாக வாசிக்கவில்லை.


'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் நீண்ட காலமாக அறிவித்து வந்த போதிலும், இவ்வலயங்களில் அமைக்கப்பட்ட வைத்தியசாலைகள் மீது ஆறு மாதங்களில் 30 தாக்குதல்கள் வரை இடம்பெற்றதாக மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுட்டிநிற்கின்றன. இவை அனைத்தும் தற்காலிகமாக நடந்தவை என்பதை நம்புவது கடினமானதாகும்.


கடந்த இரவு 'புறொன்ற்லைன் கிளப்பில்' சிறிலங்கா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தை 844,042 பேர் வரை பார்த்திருந்தனர். சிறிலங்காவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது சிறிலங்காப் படையானது 'கட்டுப்பாட்டுடன்' போரில் ஈடுபட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் புகழ்ந்துரைத்திருப்பதாக சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டுக்குப் பொறுப்பாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதை நான் செவிமடுத்திருந்தேன். ஆனால் அதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், தனது சக பணியாளர் ஒருவர் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குள் அகப்பட்டுக் கொண்டதாக அறிவித்திருந்தது.


உலக நாடுகள் பலவற்றில் இடம்பெற்ற பல யுத்தங்களைப் பார்த்துள்ள போதிலும், பெருமளவான மக்கள் பாதிக்கப்படக் காரணமான யுத்தத்தை சிறிலங்காவிலேயே பார்த்துள்ளதாக, சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது. 'கற்பனை செய்ய முடியாத மனிதப் பேரழிவு' என சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த அழிவு அழைக்கப்படுகின்றது.


தாம் செத்துக் கொண்டிருக்கும் போது தம்மைப் பாதுகாக்காது கைவிட்டதாக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்கள் குற்றம் சாடியிருந்தனர். உண்மையில் மனித உயிர்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது கடமையை ஐக்கிய நாடுகள் சபை செய்யத் தவறியிருந்தது என்பது உண்மையாகும். யுத்த நிலை தொடர்பாக உண்மைச் செய்திகளை வெளிப்படுத்தி வந்த உதவிப் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உண்மையை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.


சிரியாவுக்குள் ஊடகவியலாளர்கள் நுழைந்து கொண்டது போன்று புலிகளின் பிரதேசத்துக்குள் நுழைவதற்கு ஊடகவியலாளர்கள் முன்வரவில்லை. ஜனவரி 2009நடுப்பகுதி வரை சிறிலங்காவின் யுத்த முன்னணி நிலைகளின் ஊடாக பேரூந்து ஒன்று போக்குவரத்தில் ஈடுபட்ட போதிலும் கூட, ஊடகவியலாளர்கள் அங்கு செல்வதில் ஆர்வங்காட்டவில்லை.


இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பித்த போது, ஸ்கொட்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேசத்து ஐ.நா பணியாளர்கள் அதற்கு சாட்சியமாக இருந்த போதும் அவர்களின் சாட்சியங்கள் வெளிவரவில்லை. பிரித்தானியாவில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் அங்கு வாழும் தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் தொடர்பாக பிரித்தானிய அரசியல்வாதிகள் பாராட்டுவதை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள், 2001-2008 வரையான காலப்பகுதியில் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவானது சிறிலங்காவுக்கு பெருமளவான ஆயுத இறக்குமதி உரிமங்களை வழங்கியிருந்தது தொடர்பாக தயாரிக்கப்பட்ட 'சுவீடனின் ஆய்வறிக்கையை' வாசிக்கத் தவறிவிட்டனர்.


சிறிலங்காவில் 400,000 வரையான தமிழ் மக்கள் யுத்த வலயத்துக்குள் அகப்பட்டிருந்த போது, 1500 வரையான மக்கள் மட்டுமே கொல்லப்பட்ட காசா சம்பவத்தை முக்கியத்துவப்படுத்தி அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தில் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 


உண்மையில் இவ் எண்ணிக்கை சரியாக இருந்தால், புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமையானது இந்நூற்றாண்டின் அதிக இரத்தம் சிந்தப்பட்ட யுத்தநடவடிக்கையாக காணப்படும். ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் Srebrenica என்ற படுகொலை தொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறோம். பெருந்தொகையான தமிழ் மக்கள் புதைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக எத்தனை ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்துள்ளோம்? 

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment