Wednesday, November 30, 2011

போராட்டம் செய்யாதவன் ஜடம்! தலைவர் பிரபாகரன் பேட்டி


தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்​பாணம் மீது ஜெயவர்த்​தனாவின் விமானங்கள் வெறித்த​னமாகக் குண்டுகளை வீச... சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.
இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது.
விடுதலைப்புலிகளால் சகல வசதி​களோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்? இது போன்ற கவலைகள் வேறு மனதை நெருடின.
உண்மையில் அங்கு தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? இதுபற்றி யார் நேரடியாக நமக்குத் தகவல் சொல்வார்கள்?
திடீரென்று, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சென்னைக்கு வந்திருக்கும் தகவல் கிடைத்தது.
அவர் சென்னையில் இருக்கிறாரா, இலங்கையில் இருக்கிறாரா என்பதெல்லாம் இரகசியம் என்பதால், நினைத்ததும் சந்தித்துவிட முடியாத நிலை! தொடர்புகொண்டோம். மறுநாள் காலை சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. கூடவே, நாங்கள் வந்து அழைத்துப் போவோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
மறுநாள் காலை 9 மணிக்கு இரும்பைப் போல் உடல்வாகுகொண்ட மூன்று இளைஞர்​களுடன் ஒரு வான் நம் அலுவலகத்துக்கு வந்து நிற்க, ஏறி அமர்ந்தோம். இளம் புலிகள் சென்னை வீதிகளில், படுலாவகமாக வானை ஓட்டுகிறார்கள்!
சென்னை இந்திரா நகரில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை​மையகம்... தேதி மே 21. காலை மணி 9.30. வீட்டைச் சுற்றி விடுதலைப் புலி இயக்கத்தின் இளைஞர்கள்... உள்ளே மாடி ஹாலில் 'தம்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
சற்று பருமனான, ஆனால் வலுவான உடல்வாகு... ரொம்ப உயரம் இல்லை. வகிடு இல்லாமல் மொத்தமாகத் தூக்கி வாரப்பட்ட சீரான தலைமுடி... தீர்க்கமான விழிகள்... நேருக்கு நேர் நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார். அடர்த்தியான கச்சிதமான மீசை பிரபாகரனுக்குத் தனி கம்பீரத்தைத் தருகிறது.
நாம் அங்கே சந்தித்தபோது, ஈழத்தில் இருந்து வந்துகொண்டு இருந்த செய்திகளை அவருடைய தோழர்கள் 'டைப்’ அடித்து அவரிடம் காட்டிக்கொண்டு இருந்தனர். பிரபாகரன் அவற்றைக் கூர்ந்து படித்துவிட்டுச் சில செய்திகளை 'ஓகே’ செய்தார். அவை வெளியுலகம் அறிய பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டன.
வல்வெட்டித்துறையில் இலங்கை இராணுவம் விமானம் மூலம் குண்டு வீசிய செய்தி அப்போது வந்தது. வீராவேசமாக எதிர்த் தாக்குதல் நடத்தியதில் எட்டு விடுதலைப் புலிகள் பலியானார்கள். இந்தச் செய்தியை பிரபாகரன் நம்மிடம் படித்து காட்டிவிட்டுச் சற்று மௌன​மானார்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றிக் கவலை​யோடு கேட்டோம்.
இலங்கை இராணுவம் நடத்தும் இந்த விமானத் தாக்குதலில் மக்கள் அதிகம் இறந்து விடவில்லை. காரணம், இம்மாதிரி விமானத் தாக்குதல்களை இலங்கை அரசு நடத்தப்போவதை சில வாரங்களுக்கு முன்பே தமிழ்ப் பகுதிகளில் எச்சரித்து விட்டோம்.
ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டுள்ளன. ஆண் துணை இல்லாத வீடுகளில் எங்கள் இயக்க வீரர்கள் பதுங்கு குழிகளை வெட்டி உதவினார்கள். விமான ஓசை கேட்டவுடனேயே குழிகளில் பதுங்க, இப்போது குழந்தைகள் கூடப் பயிற்சி பெற்றுவிட்டார்கள் என்றார் பிரபாகரன்.
இலங்கை இராணுவ விமானம் மூலம் வீசப்படும் குண்டுகள் பெரும்பாலும் 'வேஸ்ட்’ என்று வர்ணித்தார் பிரபாகரன். 'வேண்டுமானால் மக்களி​டையே பீதியைக் கிளப்ப அது உதவலாம்... மற்றபடி எங்கள் இலக்குகளை அவர்களால் தாக்க முடியாது!
அவர்களிடம் 'நேபாம்’ (விஷ கெமிக்கல்) குண்டுகள் வீசுவதற்குத் தயாராக இருக்கின்றன. இன்னமும் அந்த குண்டுகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. இரக்கம் இல்லாமல் 'நேபாம்’ குண்டுகள் வீசினால், அப்பாவிப் பொதுமக்கள் துன்பம் அடைய நேரிடும்.
யாழ்ப்பாணத்தில் மக்களின் முழு ஆதர​வோடு விடுதலைப்புலிகள் ஆட்சிதான் நடக்கிறது. ''வரி வசூலே நாங்கள்தான் செய்கிறோம் என்றால் பார்த்துக்​கொள்ளுங்​களேன்'' என்றார் புன்முறுவலுடன் பிரபாகரன்.
யாழ்ப்பாணத்துக்கு நீங்கள் எப்போது போய் வந்தீர்கள்? என்று கேட்டபோது, ஒரு கணம் தயங்கி சிறு புன்னகையுடன், இடையிடையே போய் வருவேன்... யுத்த முனையில் எதுவும் எனது உத்தரவுகள்படியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கே உள்ள எனது தளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் எப்படிச் சிந்திப்பேனோ... அப்படிச் சிந்திக்கப் பயிற்சி பெற்றவர்கள்! என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் அத்தனையும் அத்துப்படியாகி இருக்கிறது. மிலிட்​டரி சயின்ஸைப் புத்தக வடிவில் தமிழில் கொண்டுவந்து இருக்கிறார்கள் இவர்கள். 'போர்க் குரல்’ என்ற இந்தப் புத்தகம் தமிழில் முதல் முயற்சி. இத்தனை போராட்டத்துக்கு நடுவில் தமிழில் இராணுவத்தைப் பற்றியும், போர் முறைகளைப் பற்றியும் விஞ்ஞானரீதியில் பல வால்யூம்களாகத் தயாரித்திருக்​கிறார்கள்.
பொதுவாக, பிரபாகரனுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம். உலக நாடுகள் முழுவதிலிருந்தும் 3 லட்சம் பெறுமான யுத்த நுணுக்கப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு, 'போர்க் குரலில்’ அவற்றின் மொழிபெயர்ப்பு தரப்படுகிறது... போர்க் குரல் லே-அவுட் எல்லாம் பிரமாதம். இருப்பினும் பிரபாகரன் திருப்தி அடையவில்லை.
என்னைத் திருப்திபடுத்துவது எளிதான காரியம் அல்ல... இன்னும் சிறப்பாகத் தயாரித்திருக்க முடியும் என்று சிரித்தார் பிரபாகரன்.
அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான 'புலி’ முத்திரைக்குச் சரியான புலித் தலையைத் தேர்ந்தெடுக்கப் பட்டபாடு சுவை​யானது. சிவகாசி பட்டாசில் இருக்கும் புலியின் படத்தில் இருந்து உலகம் முழுவதும் வெளியாகும் புலிப் படங்கள் வரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிலும் அப்படி ஒரு 'பெர்ஃபெக்ஷன்’ எதிர்பார்க்கிறார் பிரபாகரன். நாளைக்கு ஒரு புலியின் படத்தைப் பார்த்துவிட்டு, 'அடடா, இதை உபயோகித்திருக்கலாமே!’ என்று வருத்தப்​படக் கூடாதல்லவா? என்று விளக்கம் தந்தார். இந்த அணுகுமுறை அவரது எல்லாச் செயல்களிலும் எதிரொலிக்கிறது.
எங்கள் இயக்கத்தில் சேருவதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் யாரும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. தோல்வி உணர்வுகொண்டவர்களுக்கு இதில் இடம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்காது. இந்தப் போராட்ட விஷயத்திலும் விரக்திதான் அடைவார்கள். தமிழ் ஈழம் உடனே கிடைத்துவிடும் என்ற கனவோடும் வரக் கூடாது. போராட்டத்துக்குக் கால வரம்பு கிடையாது. தனி ஈழம் கிடைக்க சர்வதேச சூழ்நிலைகள்கூட அனுசரணையாக இருக்க வேண்டிய நிலை உண்டு. என்ற பிரபாகரன் சற்று உணர்ச்சி வசப்பட்டார்.
இலங்கையில் தமிழனாகப் பிறந்ததால், வாழும் நிலம் பறிக்கப்பட்டது... கல்வி பறிக்கப்பட்டது... பொருளாதார வசதிகள் மறுக்கப்பட்டன. இதை எதிர்த்துப் போராடாவிட்டால், நாம் ஒரு ஜடம்தான். பிறகு, ஒரு மனிதனாக வாழ்வதில் அர்த்தம் ஏதும் இல்லை. நாங்கள் போராடுவதை எங்கள் சரித்திரக் கடமையாகக் கருதுகிறோம். பதவிகளையோ அல்லது வேறு எதையும் எதிர்பார்த்துப் போராட்டம் நடத்தவில்லை.
சில நிமிடங்கள் அந்த ஹாலில் அமைதி நிலவியது... பேட்டி - 'டெலோ’ - விடுதலைப் புலிகள் மோதலைப்பற்றி திரும்பியது. நாங்கள் கேட்டோம்: இந்த மோதல்... சிறீ சபாரத்​தினத்தின் மரணம் ஆகியவற்றால், தமிழ் மக்கள் கசப்படைந்து இருக்கிறார்கள். தமிழர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லையா? அந்தக் காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து மோதியதில் இருந்து இந்த நிலைமைதானா?
சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து சண்டையிட்டதும் உண்மை. ஒரு கால கட்டத்தில் சோழர்கள்... சேர, பாண்டியர்களை அடக்கியதும் உண்மை என்றார் பிரபாகரன் சுருக்கமாக. பிறகு தொடர்ந்தார்.
எங்களிடம் வஞ்சகத்தன்மை இல்லை. இரண்டு எதிரிகளைச் சந்திக்க முடியாது. முதலில் கத்திக்கொண்டு இருந்தவர்களைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிரம்பத் தள்ளிப்போட்டு எடுத்த முடிவுதான் அந்த மோதல். சிறிய யுத்தமாகவே நடத்தித் தீர்வு காண வேண்டியதாயிற்று. நாட்டைக் காக்க யுத்தத்தில் இறங்கும்போது, மெத்தனமாக முடிவெடுக்க முடியாது. பகவத் கீதையும் அதைத்தான் சொல்கிறது. உற்றார், உடன்பிறப்பு, குரு, நண்பன் என்று யுத்த களத்தில் இரக்கம் பார்ப்பதற்கு இல்லை. சொந்த தந்தை, சகோதரன் போன்றவர்கள் துரோகியாக மாறினால், அவர்களை அழிக்கத் தயங்காதவர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் நிறையப் பொய்களை அவிழ்த்துவிட்டவாறு இருந்தார்கள்... உண்மை செருப்பை மாட்டிக்கொள்வதற்குள்... பொய், பாதி உலகம் உலா வந்திருக்கும் என்பதற்கு ஏற்ப, எங்களைப்பற்றிய பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. எனக்குப் பொதுவாகவே பிறரை விமரிசித்து அறிக்கைவிடுவது பிடிக்காது... அவர்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால்... குழாயடிச் சண்டைபோல, அவலங்கள் வெளிவரும்!
நாங்கள் அவர்கள் இயக்கத்தவரை உயிரோடு கொளுத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படி எதுவும் என் இயக்கத்தில் நடக்காது. அது நினைத்துப் பார்க்கவே இயலாத செயல். அப்படி யாராவது செய்தால், நான் பதிலுக்கு அவரை உயிரோடு கொளுத்துவேன். என் இயக்கத்தில் யாராவது தெரிந்து தவறு செய்தால், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஆகவே இங்கே இருப்பவர்களுக்குத் தவறு செய்ய நிறையவே துணிச்சல் தேவைப்படும்!
தமிழ்நாட்டு அரசியலில் சிலர், சிலரை தியாகி ஆக்குகிறார்கள். நான் கலைஞரைச் சந்திப்பது இல்லை என்று குற்றச்சாட்டு போல சொல்லப்படுகிறது. உண்மையில் நான் யாரையுமே சந்திப்பது இல்லை. எம்.ஜி.ஆரையும் நான் சந்திக்கவில்லை. இலங்கைத் தமிழருக்காக எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தபோதுகூட நான் அங்கே போகவில்லை. எங்கும் நான் போவது இல்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வது இல்லை.
தமிழீழம் சுதந்திரம் அடையும் விழாதான் நான் கலந்துகொள்ளும் முதல் பொது விழாவாக இருக்கும். எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்த பிறகுதான், யாரையும் எங்கேயும் சந்திப்பேன்! என்கிறார் பிரபாகரன் அழுத்தம் திருத்தமாக.
யாழ்ப்பாண மக்களிடம் விசாரியுங்கள். விடுதலைப் புலிகள் தவறு செய்வதாகச் சொல்லட்டும்... மண்டியிடுகிறேன்... சொல்ல மாட்டார்கள்! மற்ற இயக்கத்தவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் வந்து சொன்னதாலேயே, தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆகக் கூடாது என்பதாலேயே, 'டெலோ’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.
பிரபாகரன் எதிரில் ஒரு மருந்து 'குப்பி’ இருந்தது. ''அது என்ன?'' என்று கேட்டோம்! இதில்தான் எனது இயக்கத்தவர்கள் சயனைட் நிரப்பி கழுத்தில் மாட்டிக்கொண்டு இருப்பார்கள். எதிரிகளிடம் சிக்கினால், சயனைட்டை வாயில் போட்டுக்கொண்டு உயிர்த் தியாகம் செய்வார்கள். பலர் செய்தும் இருக்கிறார்கள்...'' என்று சொல்லிவிட்டு ஏதோ நினைவுகளில் மூழ்கினார் பிரபாகரன்...
ஜூனியர் விகடன்

Sunday, November 27, 2011

அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்!


இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.
என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இந்த மாவீரர்நாளிலும்...?இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம்.
வீழ்வதற்கு தயாராக நிற்கும் கண்ணீர்த்துளிகளுடன் எங்கள் தேசத்துச் செல்வங்களை நினைத்து கைகூப்பி தொழுவோம். நெஞ்சுருகுவோம். மணியடித்து எழுந்துவரும் மாவீரர் பாடல் ‘ஒளியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீதும் உறுதி’ பாடலுக்கு எல்லோரும் ஒன்றுகூடி தீபம் ஏற்றி நிற்போம்.
இத்தனையும் நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்தான். எங்களுக்காக தங்களையே அர்ப்பணித்து மரணித்த எம் மாவீரர்களுக்கான நன்றியாக இத்தனையும் செய்தே ஆகவேண்டும். ஆனால் அதன் பின்னர்.....?இத்தனையும் செய்துவிட்டு வீடு திரும்பி எல்லா நினைவுகளையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் இயந்திர வாழ்வினுள் கரைந்துவிடப் போகின்றோமா?
ஏதோ ஒரு சடங்குக்காக போய் மலர்தூவி வந்துவிட்டால் மட்டுமே போதுமா? போன மாவீரர் நாள் இதோ முந்தாநாள்தான் வந்துபோனது போல கண்ணுக்குள் நிற்கிறது. போன மாவீரர் நாளில் தூவிவிட்டுவந்த கார்த்திகைப் பூவின் வாசம் இன்னும் கைகளுக்குள் மணக்கிறது.
போன மாவீரர் நாளிலும் போனோம், வந்தோம். ஒரு வருடமாகிப் போகிறது. மாவீரரின் கனவை நனவாக்க என்ன செய்தோம் இந்த ஒரு வருடத்தில்...?எம் நெஞ்சைத்தொட்டு பதில் கேட்டால் வெறுமைதான் பதிலாக எழுகிறது.
இம்முறையும் அவ்வாறே போய்வந்து பூத்தூவி, பாப்புனைந்து மீண்டும் அடுத்த வருட மாவீரர் நாளில் சந்திப்பதாக சொல்லி வர போகின்றோமா??மாவீரர் நாள்! சொல்லும்போதே நெஞ்சு விம்மவில்லையா. இதயத்துக்குள் சுடர் ஒன்று எரியும் உணர்வு மேலிடவில்லையா.. ஒவ்வாருவராக கண்களுக்குள் மாவீரர் நினைவு வந்து போகவில்லையா...
எத்தனை உயரிய தியாகங்களின் கூட்டு நினைவு நாள் இது. எத்தனைவிதமான அர்ப்பணங்கள். சுற்றிவர எதிரி சூழ்ந்துநின்ற போதிலும் காயமடைந்த தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தப்பும்படி இறுதி நேரத்து வேண்டுகோள் விடுத்து வீரச்சாவு கண்டவர்கள்,
அதனையே நிறைவேற்ற தயங்கிய தோழனிடம் தன்னைச் சுட்டுவிட்டு தப்பும்படி உத்தரவிட்டு மரணத்தை ஏற்றுக்கொண்டவர்கள்,
எதிரிக்கு தனது முகம் தெரிந்துவிட்டால் நடக்க திட்டமிட்டு இருக்கும் செயல்பாடுகள் முடங்கிவிடும் என்பதால் கொழுந்துவிட்டெரியும் தீக்குள் தமது முகம் கருக்கி மரணித்தவர்கள்,
ஆயுதமும் சயனைட்டும் இல்லாத ஒருபொழுதில் தப்பிக்க இனி சந்தர்ப்பம் ஏதும் இல்லையென்று நிச்சயமாக தெரிந்துகொண்டு மரக்கிளையிலும்,சுவரிலும்,மருத்துவமனைக்கட்டிலிலும் தமது தலைகளை பலம்கொண்டு மோதி மரணத்தை ஏற்ற வேங்கைகள்,
கடற்பயணங்களின்போது வெடித்த படகுகளில் இருந்து தான்மட்டும் நீந்தி தப்பிக்காமல் நீந்ததெரியாத தோழனையும் காப்பாற்ற இறுதிவரை முயற்சித்து அவனுடனேயே கடலுடன் சங்கமமானவர்கள்,
வல்லாதிக்க கடற்படை சுற்றிவர நின்று சரணடை என்று எக்காளமிட்டபோது அவன் முன்னாலேயே கப்பலை குண்டுவைத்து தகர்த்து தீயுடன் கருகியவர்கள்,
சிறியதோ பெரியதோ எதுவாகினும் அது எதிரியின் காவலரண் ஆகின் அதனை மீட்கும் முயற்சியில் வெட்டவெளியில் குண்டுமழைக்குள்ளாக இரத்தக்குளியல் செய்தவர்கள்,
தப்பி ஓடும் எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்காக தான் இருக்கும் இடத்தையே குறிவைத்து எறிகணைகளை வீசும்படி கூறிவிட்டு போய்விட்டவர்கள்....
இப்படி..இப்படியாக வார்த்தைகளாலும் வர்ணிப்புகளாலும் கூறிவிடமுடியாத ஈகங்களை நினைந்து வணங்கி துதிக்கும் நாள் இது. இது வெறுமனே ஒரு திகதி அல்ல. விடுதலைக்காக ஒரு இனம் செய்துவிட்ட அளப்பெரும் தியாகங்களின் மொத்த நினைவு.
விடுதலைக்காக இந்த இனத்தின் மனிதர்கள் தமது இனிய உயிரையும் அர்ப்பணிக்க எழுந்து நின்றார்கள் என்பதன் ஒரே நிரூபணம் மாவீரர் நாள்.
பேதங்களும் கூறுகளும் நிறைந்த தமிழர் தாயகத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை ஒரே தலைமையின் கீழ் விடுதலைக்காக உயிரையும் தியாகம் தரத்தயாராக ஆயிரமாயிரமாய் தமிழினம் திரண்டது என்ற வரலாற்றுப் பதிவுதான் மாவீரர் நாள்.
எப்படியான ஒரு பொழுதில் இம்முறை மாவீரர் நாள் வந்துள்ளது. மிகவும் ஒரு அவலமான ஒரு பொழுது எங்கள் இனத்துக்கு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எங்களின் தாய்மண் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தனது தேசிய அடையாளத்தை இழந்து குறுகிக்கொண்டிருக்கிறது.
பாரம்பரிய தமிழர்நிலம் என்ற தேசியக்கூறு மிகவும் கெட்டித்தனமாக சிங்களத்தால் அழிக்கப்பட்டு வருகிறது.
எமது மக்கள் ஒருவகையான பேரின இராணுவ மேலாண்மைக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படியான வாழ்வே அவர்களுக்கு பழக்கமான ஒன்றாக ஆக்கப்பட்டும் வருகின்றது.
பெருமரத்தை பற்றிப்படர்ந்து சுற்றி வளரும் சிறுகொடிகள் போல எம் இனம் ஆக்கப்பட்டு வருகிறது.
எல்லாவற்றிலும் மேலாக எங்கும் வறுமையே கோலோச்சுகிறது.
குழந்தைகளுக்கு வயிறார உணவு கொடுக்கவும் முடியாத ஏக்கத்தில் பெற்றோர் பேதலித்து போயிருக்கிறார்கள்.
அன்றாட உழைப்புகள் ஏதுமில்லாமல் கையேந்தும் நிலையில் எம் இனம் வீதியில் நிற்கிறது.
இப்படியான ஒரு கொடும்துயரப் பொழுதில்தான் மாவீரர் நாள் வந்திருக்கிறது.
இந்த மக்களின் நிம்மதியான சுபீட்சமான வாழ்வுக்காகவே மாவீரர்கள் தங்களையே ஆகுதி ஆக்கினார்கள்.
மாவீரர்களை வணங்கிவிட்டு அவர்கள் நேசித்த இந்த மக்களை மறந்துவிடப் போகின்றோமா? மாவீரர்கள் எம்மிடம் எதிர்பார்த்தது எது?
மாவீரன் ஒவ்வொருவனும் வீழும்போதும் அவனது கனவும், அவனது விருப்பமும், அவனது எதிர்பார்ப்பும் ஒன்றே ஒன்றுதான்.  தாங்கள் நெஞ்சுக்குள் தாங்கி போரிட்ட இலட்சியக்கனவை வென்றெடுக்க நாளை நாம் ஒன்றாக கூடுவோம் என்பதுதான்.
எதிரியும் எதிரிக்கு முண்டு கொடுத்த சக்திகளும் எம்மை வென்றது ஒன்றும் பெரிதல்ல. ஆனால் இத்தனை அழிவுக்கு பின்னரும் நாம் ஒன்றுபடாமல் சிதறிப்போய் நிற்கிறோமே அதுதான் மோசமானது.
இந்த மாவீரர் தினத்துடன் அனைவரும் ஒன்றிணையும் சபதம் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும்.
எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான்.
வெறும் சம்பிரதாயமான நினைவாக நின்று திரும்பாமல் மனங்களுக்குள் உறுதி எடுப்போம்.
விடுதலைப்போரின் விழுக்காயங்களாக வறுமையுடன் அல்லல்படும் போராளிக் குடும்பங்களையும் சிறையில் வாடும் எம் உறவுகளையும் கைதூக்கி விடுவோம் என்றும், மாவீரர் கண்ட கனவான சுதந்திரவாழ்வை பெற்றுத்தர ஓயாது செயற்படுவோம் என்றும் உறுதிகொள்வோம்.-
- ச.ச.முத்து

Saturday, November 26, 2011

அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்


மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான் அவர் திகழ்கிறார்
அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக் கிடக்கின்றன.
மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காகவோ, மற்றவர்கள் தன்னை பின்பற்ற வேண்டும் என்றோ பேராடப் போனவர் அவர் அல்ல. அவர் மிகமிக இயல்பாக, அதிலும் மிக உண்மையாக தனது இலட்சியத்துக்காக தான் தேர்ந்தெடுத்த தான் நம்பிய பாதையில் சஞ்சலம் சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பவர்.
அவருடைய வாழ்வில் இருந்து இன்றைய பொழுதில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் எதுவென்றால் ‘அங்கீகாரத்துக்காக மட்டும் எதையும் செய்யாத ஒரு செயற்பாடு’ என்பதாகும்.
உயிரினங்கள் அனைத்தினதும் மிகமுக்கியமான செயல்முறையே உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஆகும். உணவு தேடுவது, காலநிலைகளின் தாக்கத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ள எத்தனிப்பது, தேவை கருதி இடம்பெயர்வது என்று அனைத்தையுமே தமது வாழ்வை, தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளாகவே அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.
இவற்றை செய்வதற்கு அவற்றுக்கு யாரும் கற்பிப்பது இல்லை. மனிதனுக்கு உயிர்வாழ்தலுக்கு அடுத்தாக அங்கீகாரம் என்பது மிகமுக்கியமான ஒன்றாக எப்போதுமே இருந்துவந்து கொண்டிருக்கிறது. தனக்கான அங்கீகாரம், தனக்கான அடையாளம், தனது கருத்துக்கான அங்கீகாரம் என்று அங்கீகாரத்துக்காகவே மனிதம் ஓய்வு ஒழிச்சல் இல்லாத செயற்பாடுகளை செய்துவந்து கொண்டிருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் என்பது 2009 க்கு பிறகு முழுக்கவே அங்கீகாரத்துக்காக மட்டுமே நடைபெறும் ஒருவித மாயவிளையாட்டுபோல இருக்கின்றது. முதலில் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற பின்னரே போராட்டமோ,அரசியலோ எதுவுமே செய்வோம் என்ற நிலைப்பாட்டையே மிகக் கூடுதலானவர்களிடம் காணக் கிடைக்கிறது.
அங்கீகாரம் என்ற மாயமானை பிடிப்பதற்கான செயற்பாடுகளாகவே இன்றைய தமிழ் சமூக செயற்பாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கான பதில் முழுதையும் தனது போராட்டம் முழுதும் தேசியத்தலைவர் கொண்டிருப்பதை இவர்கள் உள்வாங்கத் தவறியது ஏன் என்றுதான் தெரியவில்லை.
தேசியத்தலைவரின் போராட்ட ஆரம்பத்தை பாருங்கள். மிகச்சிறிய வயதிலேயே அவரை சுற்றி நிகழும் சம்பவங்களை நேரில் பார்த்தும், பாதிக்கப்பட்டவர்களின் உடைந்து நொருங்கிய குரல்களை கேட்டும் வளர்ந்த அவருக்குள் தன்னை சுற்றி அநீதியும், கொடுமையும் நிகழ்த்தப்படுவதாக உணர்ந்துகொள்ளப்படுகிறது.
இது அவருடைய நான்கு வயதிலிருந்தே நிகழ்கின்றது. தேசியத்தலைவரின் நான்காவது வயதில் 58ம் ஆண்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும், தாக்குதல்களும் நிகழுகின்றது.
அந்த காலப்பகுதியில் தலைவரின் தந்தையாரின் உத்தியோகம் காரணமாக அவரின் குடும்பம் தென் தமிழீழ நகரமான மட்டக்களப்பின் தாமரைக்கேணி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த அன்னப்பாக்கியம் என்ற பெண்ணின் கணவரான செல்லத்துரை என்பவரும் இந்த 58ல் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறியாட்டத்தில் 26.05.1958 ல் பதுளைபகுதியில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.
கணவனை சிங்கள பேரினவாத வெறியாட்டத்துக்கு பறிகொடுத்த அந்தப் பெண்மணி தினமும் தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை அம்மாவுடன் தனது கவலைகளை கதைப்பதை கேட்டுகேட்டு அதற்குள்ளாகவே அவரின் சிறுவயது வளர்ந்தது.
இதற்குள்ளாக பாணந்துறையில் எரித்து தார் பீப்பாவுக்குள் போடப்பட்ட அர்ச்சகரின் மனைவி சொன்ன கதை என்று ஆயிரம் சம்பவங்கள் அவரை பாதித்திருந்தன. அதன்பின்னர் அவர் சொந்தஊர் திரும்பிய பின்னரும் இந்த சம்பவங்களே அவரை எந்நேரமும் ஆக்கிரமித்திருந்தன.
இதற்கான தீர்வு என்ன?நான் பேசும் மொழி மூலம் நானும் எனது மக்களும் இனம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதை எப்படி நிறுத்தலாம்?தினமும் அஞ்சிவாழும் அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகளே அவர் படிக்கும் காலத்திலும் அவருக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கேள்விகளாகின.
அவர் இதற்காகவே தேடினார். தனக்கு கிடைத்த புத்தகங்கள், நண்பர்கள், பாடசாலைத் தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் இதற்கான பதிலை தேடினார். ஏறத்தாழ அவரின் 14 வயதிலேயே அவருக்கு தனது இலட்சியம் பற்றியும் அதனை அடைவதற்கான போராட்டபாதை பற்றியும் தெளிவாகி இருந்தது.
தேசியத்தலைவர் அவர்கள் இதனைப்பற்றி 1994ம் ஆண்டு தமிழீழ கலை, பண்பாட்டு பிரிவால் வெளியிடப்படும் இதழான வெளிச்சம் (சித்திரை-வைகாசி மாதத்துக்கான) புத்தகத்தில் மிகவும் தெளிவாகவே கூறயிருந்தார்.
இதனை அவரது வார்த்தையிலே தருகின்றேன். “14 வயதிலே இனத்தின் விடுதலைக்காக போராட வேண்டும் என்று நான் துடித்த துடிப்பு இருக்கிறதே அது அன்றைய எனது வயதொத்த சிறுவர்களின் அன்றாட வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்தது” என்கிறார் தேசியத்தலைவர்.
வரலாறு மிகவும் வீரியமானது. அது இப்படியான பொழுது ஒன்றுக்காகவே சிலரை தெரிவுசெய்து அதனூடாகவே எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களினூடாகவே வரலாறு முன்னகர்கிறது. அவர்களே வரலாற்றின் நாயகர்கள் ஆகிறார்கள்.
தேசியத்தலைவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்தவுடன் இதனை யாரும் அங்கீகரிக்க வேண்டும் என்றோ தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ காத்துக்கொண்டிருந்தவரல்ல. விடுதலை என்பது தனது மக்களுக்கு மிகமிக முக்கியமாக தேவை என்பதை உணர்ந்தவுடனேயே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்த சத்தியமானவர் அவர்.
அவர் போராட புறப்பட்ட 72லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்தது எல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான். யாருடயை பதிலுக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சியக் கனலுடனும் கட்டிவளர்த்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.
குழப்பவாதிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்து எடுத்தார்கள். மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரை விட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்த வேலைகளுக்கும் சென்ற அந்த பொழுதில் ஏறத்தாழ ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே தலைவருடன் நின்றிருந்தார்கள்.
அப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக்குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.
அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது.“இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்றுதன்னும் எங்கள் மக்களின் விடுதலைக்காக ஏதும் செய்துதான். போவேன்” என்றார்.
இந்த உறுதியும் விடுதலையின்மேல் கொண்ட சமரசம் அற்ற பற்றும் அவர் தனித்துநின்றபோதிலும்,அவர் கடற்படை,விமானப்படை கொண்ட மரபுவழிப்படைகளைகொண்டிருந்தபோதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.
அவருக்கு தெரிந்ததெல்லாம் விடுதலை. அதற்காக தன்னால் இயன்றதை செய்வது. மேலும் அவர் விடுதலை இத்தனை வருடங்களில் சாத்தியமாகும் என்றோ இத்தனை வருடங்களில் தமிழீழம் பெறலாம் என்றோ கற்பனைகளில் மிதந்தவரும் அல்ல.
இப்போதைய எனது வேலை விடுதலைக்கு போராடுவது. அதனை மெதுமெதுவாக நகர்த்துவதுதான் இப்போதைய போராட்டமுறை என்பதில் உறுதியானவர் அவர். 80களின் ஆரம்பத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தலைவர் திடீர் திடீர் என புதிதாக சேர இருக்கும் உறுப்பினர்களுடன் தானேசென்று கதைக்கும் வழமையை கொண்டிருந்தார்.
அச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார். இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்தற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள். கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார். “எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.
அந்த மாணவனும் “ 4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான். உடனே தலைவர் “இல்லை, இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான். 40 வருடமும் ஆகும். 400 வருடமும் ஆகலாம். இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம். அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்” என்றார்.
திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் “விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?”என்று அதற்கு தலைவர் சொன்னார்.
”விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி, சிங்கள தேசத்தின் வீழ்ச்சி, தமிழகத்தின் ஆதரவு, சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்” என்று சொன்னார்.
அவர் இன்றோ நாளையோ விடுதலை எடுத்து தருவேன் என்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டு போராட்டக்களத்துக்கு வந்தவர் அல்ல. அவரின் இந்த பிறந்ததினத்தில் ‘சரியான செயற்பாடுகள் செய்துகொண்டே போகும்போது அங்கீகாரம் கிடைத்தே தீரும்’ என்பதை அவரின் வரலாற்றினூடாக புரிந்துகொள்வோம்.
அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. அவர் போராடப் புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில். பாருங்கள்.13 வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி எந்தவித சளைப்புமின்றி போராடிய அவரின் தவம் எத்தனை உயர்ந்தது.
இந்த உயர்ந்த புரட்சிக்குணமே அவரை தேசியத்தலைவராக பல லட்சம் மக்களின் மனங்களுக்குள் எழுந்துநிற்க வைத்தது. அவரின் இந்த பிறந்ததினத்தில் இதனையே ஒரு பிரகடனமாக கொள்ளுவோம்.
அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது என்றும், அது,’நீந்தப் பழகிய பின்னரே நீருக்குள் இறங்குவது போலானது’ என்றும் கற்றுக்கொள்ளுவோம்.
ச.ச.முத்து

Monday, November 21, 2011

மாவீரர் நாள் - 2011

video
video

Friday, November 4, 2011

மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......!

கார்த்திகை 27, தமிழ்மக்களின்விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி,  மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும்.

இன்றைக்கு முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை, உங்களின் கனவை வாக்குவோம் என்றே விதைகுழிகளுக்குள் விதைத்துவிட்டோம். ஈழத்தமிழ்மக்களின் சுபீட்சமான எதிர்காலம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, கொள்கைக்காகப் போராடி மடிந்த இந்த மாவீரர்கள் தான் உண்மையான போராளிகள் என்பது தேசியத் தலைவனின் கருத்து. 2001ம் வருடம் தீச்சுவாலை எதிர்த்தாக்குதலுக்கு தயாராக இருந்தவேளை, களமுளைத்தளபதிகளுக்கான கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டிருந்தோம். அப்போது  தலைவர் பிரபாகரன் அவர்கள்  உண்மையான போராளி என்றால் யார், அவர் தான் கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும் அல்லது அந்த கொள்கைக்காக வீரச்சாவடைந்திருக்க வேண்டும், அவர் தான் உண்மையான போராளி. எனவே நான் என்னை ஒரு உண்மையான போராளி என்று சொல்லமாட்டேன். நான் என்னுடைய கொள்கையில் வெல்லவுமில்லை வீரச்சாவடையவுமில்லை என்று கூறினார்.  அந்தக் கர்மவீரனின் எண்ணத்தில் உயர்ந்து நிற்பவர்கள்தான் மாவீரர்கள்.

தமிழ்மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் முத்துக்கள் இவர்கள். அவர்களின் தியாகம், உழைப்பு, கனவு எல்லாம் விடுதலை மீதும் அதை வழிநடாத்திய தலைவன் மீதும் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடுகள். லெப் சங்கர் தொடக்கம் எத்தனை மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கியிருக்கிறது இந்த விடுதலைப்போராட்டம். துப்பாக்கிச் சன்னம் துளைத்து விழுந்த வேளையிலும் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்திட்டுப் போங்கோ எனக் கூறி வீரச்சாவடைந்த லெப் சீலன், காந்தியவழியில், நிராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து தியாகமரணமடைந்த தியாகி திலீபன், எதிரியின் குகைக்குள் கரும்புலியாய் வெடித்த கரும்புலி மில்லர், என எத்தனை எத்தனையோ தியாகங்களின் அடித்தளத்தில் வளர்க்கப்பட்டது இந்தப் போராட்டம். தமது வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லாப் போராளிகளும் நான் வீரச்சாவடைந்தாலும் எனது தலைமுறை போராடும்என்ற ஒரே நம்பிக்கையில்தானே போர்க்களம் போனார்கள். அதே நம்பிக்கையோடுதானே விதைகுழியில் தூங்குகின்றார்கள். ஒவ்வொரு போராளியையும் விதைக்கும் போது நெஞ்சு கனக்கும் தாயகக்கனவுடன் பிரிந்து செல்லும் இவனின் கனவை நனைவாக்குவோம் என விதைகுழி மீது உறுதியெடுத்துத்தானே விதைத்தோம்.

அவர்களின் தியாகங்கள் அளப்பரியவை. வர்ணிக்க முடியாதவை. தற்துணிவான வீரம்மிக்க செயல்களின் கதாநாயகர்கள் தான் மாவீரர்கள். எப்படி இவர்கள் இவ்வாறு தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார்கள். ஒரேவிடயந்தான், இனத்தின் விடுதலை வேண்டுமாயின் போராடியேதான் ஆகவேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருந்தார்கள் அதற்காக எந்தக் கடினங்களையும் தாங்கும் துணிவுடன் செயற்பட்டார்கள். சத்தியத்திற்காகச் சாகத்துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும் என்ற தலைவனின் வழியில், சரித்திர புருஷர்களாக சத்தியத்தின் வழி நின்று தமது வாழ்வை அர்ப்பணித்த அவர்களின் நினைவு எழுச்சி தினத்தின் கனதி கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

தலைவராலும் தமிழ்மக்களாலும் உன்னதமாக மதிக்கப்படும் மாவீரர்களுக்காகக் கொண்டாடப்படும் மாவீரர்தினம் வெறும் அடையாள நிகழ்வோ, கேளிக்கை நிகழ்வோ அல்ல. வணங்குதலுக்குரிய, போற்றுதலுக்குரிய நன்நாள். தலைவரால் தேசிய நாளாகவே பிரகடனப்படுத்தப்பட்ட புனிதநாள்.

தமிழீழத்தின் புனிதநாளான மாவீரர்நாள், நினைவு எழுச்சி நாளாகத் தேசமெங்கும் பரந்து நிற்கும். களமும் புலமும் ஒரே குடையில் இணைந்து நின்று அந்த நாளை வரவேற்கும். தமிழீழத்தின் ஒவ்வொரு இடமும் புனிதமாக, மாவீரர் நினைவுகளைத் தாங்கி அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  வீதிகளும் வெளிகளும் பாதாகைகளுடன் நிமிர்ந்து நிற்க, தென்றலோடு கலந்துவரும் மாவீரர் கீதங்கள் நினைவுகளை மீட்டி, உணர்வுகளை உரசிச் செல்லும். காற்றுக்கூட அவர்களின் நினைவைச் சுமந்துவரும். துயிலுமில்லங்களில், அவர்களின் கல்லறை கண்ணீரில் நனைந்திருக்கும். வித்தாகிப்போன ஒவ்வொரு ஆத்மாவின் பெயரிலும் தனது சத்திய உரையை வழங்கும் தலைவன், நெஞ்சோடு நிறுத்தி உறுதியெடுப்பார். நிசப்தமாக ஏற்றப்படும் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும் அவர்களின் கல்லறை மீது ஒவ்வொரு தமிழனும் மானசீகமான உறுதியெடுப்பான் உங்கள் கல்லறை மீது எங்கள் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். வித்தாகிப்போன அந்த ஆத்மாக்கள் அன்றைய உறுதி மொழிகளில் அமைதியாக உறங்கும்.

தற்போது ஈழத்தில் தமிழினம் கொடியவனின் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்தாலும் ஆறாத வடுக்களுடன் அவல நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இனத்தின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகூரத் தயாராகி, வரப்போகும் கார்த்திகையை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.  போற்றப்பட்டு வந்த துயிலுமில்லங்களைக் கூட இடித்தழித்திருக்கிறது போர்ததர்மமும் மனிதாபிமானாமும் அற்ற சிங்கள இராணுவம். அடக்குமுறைச்சிறையில் இருந்தாலும், ஈழமக்கள், அமைதியாக ஆத்மார்த்தமாக வீடுகளில் நினைவுகூருவார்கள் என்பதில் ஜயமில்லை. மாவீரர்களின் நினைவுக்கான எந்தச் சுவடும் தமிழீழத்தில் இல்லை என்று சிங்களம் இறுமாப்புடன் இருந்தாலும், மக்கள் தமது மனங்களில் ஏந்தி மாவீரச் செல்வங்களை வணங்குவார்கள் என்பது திண்ணம்.

ஆனால், விடுதலைப்போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தைச் சுமக்கவேண்டிய புலம்பெயர்தேசம் குழப்பங்களில் சிக்கித் தவிக்கின்றது. தலைவனின் வழிநடத்தலில் ஒன்றுபட்டு நின்ற தேசம் இன்று  பிரிவுகளாக நின்று மாவீரர் தினத்தை நடாத்துமளவிற்குப் பிளவுபட்டு நிற்கின்றது. கொள்கைகள் கோட்பாடுகளில் முரண்பாடுகள் வரலாம். எங்களுக்காக மடிந்துபோன தியாகிகளான மாவீரர்களை நினைவு கூருவதிலுமா இழுபறி? ஆளாளுக்கு ஒரு மாவீரர் தினம்அதற்கான பாரிய விவாதங்கள், உரையாடல்கள் என மாவீரர்தினம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. மாவீரர்களின் தியாகங்கள், அவர்களின் வரலாறுகள் பற்றிய உரையாடல்கள், செய்திகள் பரிமாறப்படுவதை விட, முரண்பாட்டின் விவாதங்களே மிகவும் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது தானா தலைவனிடத்தில் இதுவரையும் நாம் கற்றுக்கொண்டது. மாவீரர் தினத்தில் கூட ஒன்றிணைய முடியவில்லையென்றால் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் எமது போராட்டம் எங்கே செல்கின்றது. ஒற்றுமையாக முந்நகர்த்தப்பட வேண்டிய போராட்டம், உள்முரண்பாடுகளில் சிதைந்துபோகின்றது. இதனால் எத்தனை தமிழ்மக்கள் திசைதெரியாத குழப்பதோடு தவிக்கிறார்கள், பலர் ஒதுங்கிக் கொண்டு செல்கின்றார்கள். இழுத்த இழுப்பிற்கெல்லாம் எல்லாமக்களும் இழுபடுவார்கள் என்று நினைப்பது தவறானது.

தலைவரின் தலைமையில் பயணித்தவர்கள் இன உரிமைப் போராட்டத்தில் செலுத்தும் கவனத்தை விட விடுதலைப்புலிகளின் உரிமை யாருக்கு என்னும் தனி உரிமைப் போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப்போல தெரிகின்றது. மிகவும் கட்டுக்கோப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரால் அடையாளங் காணப்பட்டவர்கள், இன்று தங்களிற்குள்ளேயான தனிப்பட்டதாக்குதல்கள், வன்முறைகள், வசவுகள் என்ற வளையத்திற்குள் சிக்கி அமைப்பினதும் தலைவரினதும் கௌரவத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவையே மாவீரர் தின குழப்பங்களுக்கும் காரணமாகிவிட்டன. இவர்கள் யாரும் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. குடும்பத்தலைவர் இருக்கும் போது ஒழுங்காக இருப்பதை விட அவர் வீட்டில் இல்லாத போதும் ஒழுங்காக இருப்பது தான் உன்னதமான ஒழுக்கம். விடுதலைப்புலிகளின் பெயரால் செய்யப்படும் ஒவ்வொரு விடயத்தாலும் அவமானப்படுவது நீங்கள் யாருமல்ல, ’தலைவர்தான்என்பது கூடப் புரியவில்லையா?. இந்த மாபெரும் இயக்கம் பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்லின் ஆளுமையின் வெளிப்பாடு. அதைச்சுற்றித்தான் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டனர். அதை தலைவர் இலகுவாக கட்டியெழுப்பிவிடவில்லை. எத்தனையோ அர்ப்பணிப்புகள் தியாகங்களின் அடித்தளத்தில் தான் கட்டியெழுப்பினார். இதனால் அவரின் தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள் என்பதன் அடிப்படையில் அதை போட்டு உடைக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுக்காக மடிந்துபோன ஆத்மாக்களிடம், எங்களுக்காக நீங்கள் ஆகுதியானீர்கள். ஆனால் உங்களை எங்களால் ஒன்றுபட்டு வணங்க முடியவில்லை என எவ்வாறு கூறமுடியும். அவ்வாறு கூறின் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாள் குத்துவது போலாகாதா? உங்களிடம் தாழ்வான வேண்டுகோள் ஒன்றுதான். தயவுசெய்து தலைவரையும் மாவீரர்களையும் அவமானப்படுத்திவிடாதீர்கள். உங்களின் அணிப்பலத்தைக் காட்டுவதற்கான குறியீடாகவோ ஆதாரமாகவோ இந்தப் புனிதநாளைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் முரண்பாடுகளினால் மக்களைச் சோர்வடையச் செய்யாமல் ஒருமைப்பாட்டுடன் ஒரே வழியில் பயணிப்போம் என இந்த மாவீரர் தினத்திலாவது அவர்களின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்யுங்கள்.

முரண்பாடுகளில் சிதைக்கப்படும் இன்னொரு முக்கியமான புனிதம் தலைவரின் மாவீர்ர் தின உரை நேரம். வருடத்தில் ஒரு தடவைதான் தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பார். ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் தலைவர் தனது உரையில் கடந்த ஒருவருடத்தின் அடைவுகள், சிங்களத்தின்  கொடூரங்கள், தனது நகர்வுகள்தொடர்ந்து என்ன செய்யப் போகின்றேன் என்பதைப் பதிவு செய்வார். எனது தனிப்பட்ட பார்வையில், ”அந்தப்புனிதமான தினத்தில், தான் கடந்த வருடத்தில் என்ன செய்தேன், இனி என்ன செய்யப்போகின்றேன் என்பதை  ஆத்மார்த்தமாக மாவீரர்களிடம் கூறும் நிகழ்வாக அல்லது சத்தியம் செய்யும் உரையாகத்தான் தலைவர் கருதியதாகவேநான் நினைக்கின்றேன். எனவே அவர் உரையாற்றும் நேரம் முக்கியமானது, பெறுமதிவாய்ந்தது. எப்போதும் தலைவர் சொல்லுக்கு முன் செயல் இருக்க வேண்டும என விரும்புவார். வெற்று வார்த்தைகளை விட செயற்திறன்மிக்க செயற்பாடுகளைத்தான் வரவேற்பார். அதில் ஒன்றாகவே அவரது மாவீரர்தின உரையும் அமையும்.

கடந்த இரண்டுவருடங்களில், அந்த நேரத்தில் எத்தனையோ அபத்தங்கள் நடந்தேறிவிட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள், அவற்றில் முரண்பாடான கருத்துக்கள். தயவுசெய்து அந்த நேரத்தை களங்கப்படுத்தாதீர்கள். தலைவர் மாவீரர் தின உரையாற்றுவாரா! ஆற்றமாட்டாரா! என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் வருடத்தில் ஒரு தடவை மட்டுமே உரை நிகழ்த்தும் அந்த நேரம் தலைவருக்கு மட்டுமே உரியது. அவர் செய்யும் சத்திய உரை அது. தலைவரைத்தவிர யாராலும் அந்த நிமிடங்களுக்கு வலுச்சேர்க்க முடியாது. அந்த மாபெரும் தலைவன், தான் செய்தவற்றையும் செய்யப்போவதையும் தன்னை நம்பி வீரச்சரடைந்த மாவீரர்களுடனும் தன்னை நேசித்த மக்களுடனும் பரிமாறும் நிமிடங்கள்.

பெறுமதியான அந்த நிமிடங்களில் கண்டிப்பாக ஏதோ ஒரு உரையை வாசித்தே தீர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் விதிக்கப்படவில்லை. அவை சம்பிரதாயமான உரைகளை வாசிப்பதற்கான நிமிடங்களும் அல்ல. எனவே, அந்த நிமிடங்கள் தலைவருக்குரியவை என்றே விட்டுவிடுங்கள். அதுதான் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை. தலைவருக்குரிய நிமிடங்கள் மௌனமாகவே கரையட்டும். அந்த நேரத்தில் மாவீரர்களை மௌனமாக வணங்கி நிற்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் தலைவர் நிசப்தமாக வலம்வருவார். அற்புத வீரனின் நினைவுகளுடன் கலந்திருக்கும் சிறப்பு நேரமாக இருப்பதுதான் பெறுமதியானது. அந்த நேரத்தில் தலைவனின் சிந்தனைகளைக் காற்றோடு கலக்கவிடுங்கள். அதில் மக்கள் இணைந்திருக்கட்டும். அந்த உணர்வுகளுடன் அவர்கள் மாவீரர்களின் கல்லறைகளில் விளக்கேற்றி, அந்த ஆத்மாக்களோடு உறுதியெடுப்பார்கள். அதன் பிற்பாடு உங்களின் அறிக்கைகளை வாசியுங்கள்.

மாவீரர் தினம் என்ற புனிதநாளிலாவது தலைவரின் பேரால் ஒன்றிணையுங்கள் என்பதுதான் விடுதலையை வேண்டிநிற்கும் மக்களின் விருப்பம். இலக்கும் அதற்கான பாதையும் தெளிவாக இருந்தால் முரண்பாடுகள் அர்த்தமில்லாதவை. பிளவுபட்டு நின்று எந்த முடிவையும் எட்ட முடியாது. ஒருகணம் மாவீரர்களின் தியாகத்தை மட்டும் எண்ணிப்பாருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து இணைந்து நில்லுங்கள். தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் அவருடைய ஆளுமையும் தமிழினத்தை என்றைக்கும் வழிநடாத்தும். தலைவரின் இடமும் உரையாற்றும் நேரமும் அவருக்கு மட்டுமே உரியவை. இதனை மனதில் நிறுத்தி, அவரின் சிந்தனைகளை பின்பற்றிச் செயற்படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதி உச்ச கௌரவம்.

abishaka@gmail.com